under review

சிவஞான முனிவர்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 72: Line 72:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kJp7#book1/ சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்: வை. இரத்தினசபாபதி: tamildigitallibrary]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kJp7#book1/ சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்: வை. இரத்தினசபாபதி: tamildigitallibrary]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|20-Aug-2023, 12:07:18 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:01, 13 June 2024

சிவஞான முனிவர்

சிவஞான முனிவர் (முக்களாலிங்கர்) (சிவஞான யோகிகள்) (1708-1785) தமிழ்ப்புலவர், சைவ சமய அறிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரானாக இருந்தார். சைவ சமய நூல்கள், மொழிபெயர்ப்புகள் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவஞான முனிவர் பாபநாசம் விக்கிரமசிங்கபுரம் என்னும் ஊரில் ஆனந்தகூத்தர், மயிலம்மை இணையருக்கு மகனாக சைவ வேளாளர் மரபில் 1708-ல் பிறந்தார். முக்களாலிங்கர் என்பது இயற்பெயர். சிறுவயதில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சென்று நமச்சிவாய மூர்த்தியின் சிஷ்யராக ஆனார். வேலப்ப தேசிகரிடம் தீட்சை பெற்றுத் தன் ஞான ஆசிரியராக ஏற்றுக் கொண்டார். வேலப்ப தேசிகர் இவருக்கு சிவஞான யோகிகள் என்ற பெயரை இட்டார். மெய்கண்ட சாஸ்திரங்கள், பண்டார சாஸ்திரங்கள் கற்றார். திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரானாக ஆனார். இவர் காஞ்சிபுரத்தில் இருந்தபோது பிள்ளையார்பாளையம் முனியப்ப முதலியார் உதவி செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிவஞான முனிவர் ஆகமசாஸ்திரங்கள், இலக்கண இலக்கியங்கள் கற்றார். சுவாமிநாத தேசிகரின் மாணாக்கரான சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு எழுதிய விருத்தியுரையைத் திருத்தி 'புத்தம் புத்துரை' என்னும் உரை எழுதினார். 'தொல்காப்பியச்சூத்திரவிருத்தி', 'இலக்கணவிளக்கச் சூறாவளி' என்னும் இலக்கண நூல்களை எழுதினார். 'தருக்கசங்கிரகம்', தருக்கசங்கிரக தீபிகை அல்லது அன்னம்பட்டீயம், காஞ்சிபுராணம் முதலாங்காண்டம், சோமேசர் முதுமொழி வெண்பா, 'திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு', 'செப்பறைப்பதி அகிலாண்டேஸ்வரி பதிகம்', 'திருத்தொண்டர் திருநாமக்கோவை', 'பஞ்சாக்கரதேசிகர் மாலை', 'திராவிடமகாபாஷியம்' போன்ற நூல்களை இயற்றினர். சிவஞான சித்தியார் சுபட்சத்துக்குப் பொழிப்புரை செய்தார். சுலோகபஞ்சகம் முதலிய நூல்களை மொழிபெயர்ப்பு செய்தார். பஞ்சாக்கரதேசிகர் மாலை நமச்சிவாயமூர்த்தி மேல் பாடப்பட்டது. நூறு செய்யுட்கள் கொண்ட திருவேகம்பரந்தாதியையும் இவர் பாடினர். இவ்அந்தாதிக்கு இராமநாதபுரம் இராம சாமிப்பிள்ளை உரை எழுதினார்.

திருவாவடுதுறை ஆதீனத்தார் எழுதிய மரபட்டவணைக்கு எதிராக தருமபுர ஆதீனத்தார் எழுதிய மறுப்பிற்கு மறுப்பின் மேன் மறுப்பு என்னும் நிராகரிப்பை இவர் எழுதினார். சிவஞான சித்தியார்க்கு ஞானப்பிரகாசர் எழுதின உரை போலி உரை என்று விளங்கச் செய்யச் சிவசமவாத மறுப்புரையையும் எழுதினர். இம்மறுப்பை ஆட்சேபனை செய்து ஞானப்பிரகாசருடைய மாணாக்கரில் ஒருவர் மறுப்பின் மேற் கண்டனம் அல்லது வச்சிரதண்டம் எனும் பெயரில் பின்னர் மறுப்புரை எழுதினர்.

மொழிபெயர்ப்பு

'தருக்கசங்கிரகம்' அதன் உரையான 'தருக்கசங்கிரக தீபிகை அல்லது அன்னம்பட்டீயம்' அகிய நூல்களை சிவஞான முனிவர் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தார். தருக்கசங்கிரக தீபிகையில் 150 கிரந்தங்கள் உள்ளன. சமஸ்கிருதத்தில் இவற்றை எழுதியவர் தெலுங்கரான அன்னம்பட்டர். இவற்றை ஆறுமுகநாவலர் இராமநாதபுரம் ஜமீந்தாரான பொன்னுச்சாமிதேவரின் வேண்டுகோளின்படி அச்சிட்டார். சர்வாத்ம சம்பு சிவாசாரியர் செய்த 'கத்தியரூப சித்தாந்தப் பிரகாசிகை' எனும் நூலை இவர் மொழிபெயர்த்தார். இவர் காலத்தில் வாழ்ந்த பெப்பிரிசியஸ் (Rev. Fabrecius) தேசிகர் தன் ஆசிரியர் முத்தையா முதலியார் மூலமாக இவருடன் நண்பராக இருந்தார். பெப்பிரிசியஸ் தேசிகரின் வேதமொழிபெயர்ப்புக்கு சிவஞான முனிவர் உதவினார். 'சிவதத்துவ விவேகம்' எனும் நூலை மொழிபெயர்ப்பு செய்தார். இதில் பாயிரப்பாக்கள் பத்தையும் சேர்த்து எழுபது பாக்கள் உள்ளன. யாழ்ப்பாணம் நல்லூர்ச் சதாசிவம்பிள்ளை இதனை அச்சிட்டார்.

மாணவர்கள்

  • கச்சியப்ப முனிவர்
  • சிதம்பரநாத முனிவர்
  • தொட்டிக்கலைச் சுப்பிரமணியர்
  • காஞ்சிபுரம் சரவணபத்தர்
  • சிதம்பரபத்தர்
  • இராமநாதபுரம் சோமசுந்தரம்பிள்ளை
  • காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
  • காஞ்சி முத்துக்குமாரதேசிகர்
  • திருமுக்கூடல் சந்திரசேகர முதலியார்
  • காவாந்தண்டலம் அடைக்கலங்காத்த முதலியார்
  • கடம்பர்கோயில் கல்யாணசுந்தர உபாத்தியாயர்

பாடல் நடை

  • திருவேகரம்பரந்தாதி

கருமங்கை யார மருமத்த ரேத்துசெங் காந்தளைநி
கருமங்கை யார மருமத்தர் வாழ்கச்சி போலவெப்பாங்
கருமங்கை யார மருமத்தர் வாய்மை கதிர்ப்பச்சென்ற
கருமங்கை யார மருமத்த முங்கடந் தெய்தவென்றே

மறைவு

சிவஞான முனிவர் 1785-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • தொல்காப்பியச்சூத்திரவிருத்தி
  • இலக்கணவிளக்கச் சூறாவளி
  • தருக்கசங்கிரகம்
  • காஞ்சிபுராணம் முதலாங்காண்டம்
  • சோமேசர் முதுமொழி வெண்பா
  • திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு செப்பறைப்பதி
  • அகிலாண்டேஸ்வரி பதிகம்
  • திருத்தொண்டர் திருநாமக்கோவை
  • பஞ்சாக்கரதேசிகர் மாலை
  • திராவிடமகாபாஷியம்
  • சிவசமவாத மறுப்புரை
  • திருவேகம்பரந்தாதி
  • மாபாடியம்
  • திருத்தொண்டர் திருநாமக்கோவை
  • திருமுல்லைவாயில் அந்தாதி
  • குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
  • இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி
  • கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம்
  • ஆனந்தக் களிப்பு
  • காஞ்சி புராணம்
  • கலைசைப் பதிற்றுப்பத்தாந்தாதி
  • கலைசைப் செங்கழுநீர்
  • விநாயகர் பிள்ளைத்தமிழ்
  • அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ்
  • சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம்
மொழிபெயர்ப்புகள்
  • சித்தாங்க பிரகாசிகை
  • சுலோக பஞ்சகம்
  • தருக்கசங்கிரக தீபிகை அல்லது அன்னம்பட்டீயம்
  • சிவதத்துவ விவேகம்

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Aug-2023, 12:07:18 IST