under review

திருவேங்கட மாலை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 52: Line 52:


*[https://archive.org/details/acc.-no.-2847-thiruvengada-malai-1890/mode/2up?view=theater திருவேங்கட மாலை, ஆர்கைவ் தளம்]
*[https://archive.org/details/acc.-no.-2847-thiruvengada-malai-1890/mode/2up?view=theater திருவேங்கட மாலை, ஆர்கைவ் தளம்]
{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:10, 22 August 2025

திருவேங்கட மாலை (17-ம் நூற்றாண்டு) ’வேங்கடம்’ என்று அழைக்கப்படும் திருவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடேசப் பெருமாளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட நூல். அழகிய மணவாளதாசர் என்னும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அஷ்டப் பிரபந்தத்தில் ஒரு பிரபந்தம்.

ஆசிரியர்

திருவேங்கட மாலையை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.

நூல் தோற்றம்

தொன்மம்

திருவேங்கட மாலை நூல் தோற்றம் குறித்து தொன்மக் கதைகள் பலவாறு கூறுகின்றன. ”ஒரு நாள் இரவில் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் கனவில் திருவேங்கடத்தான் தோன்றி ’எம்மையும் பாடுக’ என்றனன். அப்போது ‘மாட்டேன்’ என்று சொல்லி மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு கழுத்தில் கண்டமாலை தோன்றியது உடனே தம் தவறை உணர்ந்து ’திருவேங்கட மாலை’, ’திருவேங்கடத்தந்தாதி’ என்று இரண்டு பிரபந்தங்களைப் பாடினார்; கண்டமாலை நோயும் காணாமற் போயிற்று!” என்று உரையாசிரியர் கிருஷ்ணமாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.

நூல் அமைப்பு

மாலை என்னும் இலக்கிய வகைமையச் சார்ந்த திருவேங்கடமாலையில் மூன்று செய்யுள்களைக் கொண்ட நூன் முகத்தைத் தொடர்ந்து வெண்பாக்களால் ஆன நூறு பாடல்களைக் கொண்ட நூல் இடம்பெற்றது.

உள்ளடக்கம்

திருவேங்கடமுடையானது திருவடிகளிலே சூட்டும் திருமாலை நூல், திருவேங்கட மாலை. இந்நூலில் உள்ள செய்யுள்கள் முன்னிரண்டடியில் திருவேங்கடத்தின் சிறப்பையும், பின்னிரண்டடியில் திருவேங்கடமுடையானது சிறப்பையுங் கூறுகின்றன. ’ஊர்’ என்னுந் துறை அமைய, ‘திருவேங்கடமென்பது திருமாலின் திருப்பதி’ என்னும் வாய்பாடு பொருந்த பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நூலின் பிற்பகுதியில் உள்ள ஐம்பது செய்யுள்களில், முன்னிரண்டடிகள், மேற்கண்ட தன்மையோடு ’சிலேடை’ என்னும் அணியையும் கொண்டுள்ளன. நூலில் உள்ள செய்யுள்கள் எல்லாவற்றிலும் பின்னிரண்டடிகள், பெரும்பாலும் ’திரிபு’ என்னும் சொல்லணியையும், சிறுபான்மை ’யமகம்’ என்னும் சொல்லணியையும் கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளன.

திருவேங்கட மாலையில், திருவேங்கடத்தின் சிறப்பு, அங்கு எழுந்தருளியுள்ள பெருமாளின் பெருமை, நற்குணங்கள், புகழ், அடியவர்க்கு இரங்கி அருள் செய்யும் கருணை உள்ளம் ஆகியன போற்றப்பட்டுள்ளன.

பாடல் நடை

பொன்னு மணியும் பொலிந்தோங்கிப் பார்மகட்கு
மின்னு மணிமுடியாம் வேங்கடமே - மன்னும்
பரமபத நாட்டினான் பையரவின் சூட்டிற்
கிரமபத நாட்டினான் சேர்வு

எப்பூ தலமு மிறைஞ்சித் திசைநோக்கி
மெய்ப்பூ சனைபுரியும் வேங்கடமே - கொப்பூ
ழிலகுமுண்ட கந்தரத்தா னீன்றளிக்கு மீரே
லகுமுண்ட கந்தரத்தா னூர்

அம்புலியின் வாழ்மா னதிருங் குரற்பகுவாய்
வெம்புலியைக் கண்டேங்கும் வேங்கடமே - நம்புமெனை
வீங்கூத்தைக் கண்டிருப்பார் விண்ணோர் நரர்பிறந்து
சாங்கூத்தைக் கண்டிருப்பார் சார்பு

நாகத்தின் மேற்குறவர் நன்கெறிந்த மாணிக்க
மேகத்தின் மின்புரையும் வேங்கடமே - மாகத்தின்
மாத்தாண்ட மண்டலத்தார் வாயுண் டுமிழ்ந்தளந்து
காத்தாண்ட மண்டலத்தார் காப்பு

புக்கவரு மாதவரும் பூமதுவுண் வண்டினமு
மெய்க்கவசம் பூண்டிருக்கும் வேங்கடமே - யொக்கவெனை
யன்பதினா லாண்டா ரரிவையொடுங் கானுறைந்த
வன்பதினா லாண்டார் வரை

ஆதிதிரு வேங்கடமென் றாயிரம்பே ரானிடமென்
றோதிய வெண்பா வொருநூறுங் - கோதில்
குணவாள பட்டரிரு கோகனகத் தாள்சேர்
மணவாள தாசன்றன் வாக்கு

உசாத்துணை


✅Finalised Page