under review

திரிபு அணி

From Tamil Wiki

திரிபு அணி (திரிபணி) சொல்லணிகளில் ஒன்று. மடக்கணியின் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

விளக்கம்

மடக்கணியில் ஒரு பாடல் அடியில் உள்ள சில சீர்கள் அடுத்த அடியில் ஒரே எதுகையையும், மோனையையும் கொண்டிருக்கும். திரிபணியில் மோனை மாறி வர எதுகை மட்டும் அப்படியே வரும்.

சீரின் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக்கள் ஒத்துமடங்கி வருவதும் திரிபணி எனவும் திரிபு மடக்கு எனவும் குறிப்பிடுவர். 'திரிபு அந்தாதி' என்ற சிறு பிரபந்தங்களும் திரிபணியைக் கொண்டு இயற்றப்பட்டன.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு-1 அழகர் அந்தாதி

நீராழிவண்ணனைப்பாலாழிநாதனை நின்மலனைச்
சீராழியங்கைத்திருமகள்கேள்வனைத் தெய்வப்புள்ளூர்
கூராழிமாயனை மாலலங்காரனைக் கொற்றவெய்யோ
னோராழித்தேர்மறைத்தானை யெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே.

நீராழி, சீராழி, கூராழி, ஓராழி என முதற்சீரில் எதுகை பயின்று வருவதால் இது திரிபு அணியாகிறது.

திருவருணை அந்தாதி

அன்னைக்களிக்கு மதுவுண்டாவாறொக்கு மன்னமன்னா
ளென்னைக்களிக்கு மதுவுமற்றேவரை யிந்தரதருப்
பின்னைக்களிக்கு மதுசூதனன்றொழு பிஞ்ஞகனார்
புன்னைக்களிக்கு முதல்சூழருணைப் பொருப்பவனே. 74

அன்னைக்களிக்கு, என்னைக்களிக்கு, பின்னைகளிக்கு, புன்னைக்களிக்கு என முதற்சீரில் எதுகை பயின்று வருகிறது.

கம்பராமாயணம்

இருப்புலக்கை, வேல், தண்டு, கோல், ஈட்டி, வாள்,
நெருப்பு உலக்க வரும் நெடுங் கப்பணம்,
திருப் புலக்க உய்த்தான் - திசை யானையின்
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான். (9890- யுத்த காண்டம்)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Mar-2025, 09:59:03 IST