under review

சாமி சிதம்பரனார்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 93: Line 93:
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=8852 சாமி சிதம்பரனார்-தென்றல் இதழ்]
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=8852 சாமி சிதம்பரனார்-தென்றல் இதழ்]
* [https://ulakaththamizh.in/book_all/53 சாமி சிதம்பரனார் நூல்கள் தொகுப்பு. இணையநூலகம்]
* [https://ulakaththamizh.in/book_all/53 சாமி சிதம்பரனார் நூல்கள் தொகுப்பு. இணையநூலகம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|11-Nov-2023, 14:14:27 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:இதழாளர்கள்]]
[[Category:இதழாளர்கள்]]

Latest revision as of 14:06, 13 June 2024

நன்றி: மின்னம்பலம்
சாமி சிதம்பரம்
சாமி சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு
சாமி சிதம்பரனார் களஞ்சியம்

சாமி சிதம்பரனார்(சாமி சிதம்பரம்) (டிசம்பர் 1, 1900 – ஜனவரி 17, 1961) தமிழறிஞர், ஆய்வாளர், கவிஞர், இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்கச் செயல்பாட்டாளர்.

பிறப்பு,கல்வி

சாமி சிதம்பரம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கடக்கம் எனும் சிற்றூரில் டிசம்பர் 1, 1900-ல் சாமிநாத மலையமான்- கமலாம்பாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை கடக்கத்திலும், மயிலாடுதுறையிலும் நிறைவு செய்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 1923-ம் ஆண்டு 'பண்டிதர்' பட்டம் பெற்றார். நீதிக்கட்சியின்மீதும், அதன்பின் சுயமரியாதை இயக்கத்தின்மீதும் ஈடுபாடு கொண்டார்.

தனி வாழ்க்கை

சாமி சிதம்பரனார் 1930- ஆம் ஆண்டு சிவகாமி என்னும் கைம்பெண்ணை சுயமரியாதைத் திருமண முறையில் மணம் புரிந்தார். இத்திருமணம் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டுப் பந்தலில் நடந்தது.

கல்விப் பணி

சாமி சிதம்பரனார் பண்டிதர் பட்டம் பெற்றதும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழாசிரியரகப் பணியாற்றினார். அப்போது உமாமகேஸ்வரனார், ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிமுகமும், நட்பும் கிடத்தன. அரசமடம் மற்றும் பாபநாசம் மாவட்டக்கழக உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தஞ்சாவூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றினார். பாரம்பரியமான வேட்டி, சட்டை அணிந்து பள்ளிக்குச் செல்லும் வழக்கத்தை மாற்றி கோட், கால்சட்டை அணிந்து பள்ளிக்குச் சென்றார். இலக்குவனார், சாமி சிதம்பரனாரின் மாணவர்.

சாமி சிதம்பரனார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் எழுதினார்.

அரசியல்

சுயமரியாதை இயக்கம்

சாமி சிதம்பரனார், ஈ.வே. ராமசாமியின் கொள்கைகளால் கவரப்பட்டு அவரது சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். ஈ.வே. ராமசாமி 1929-30 -இல் மலேசியா சென்ற போது சாமி சிதம்பரனாரும் உடன் சென்றார். பெரியாரின் அனுமதியுடன் அவரது வாழ்க்கை வரலாற்றை 'தமிழர் தலைவன்' என்ற பெயரில் எழுதினார். அந்நூல் பெரியாரின் வாழ்க்கையைப் பற்றிய சிறந்த ஆவணமாக அமைந்தது.

சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கமாக மாற்றம் கண்டபோது சாமி சிதம்பரனார் அதை எதிர்த்தார். 1940-களில் ஈ.வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் சாமி சிதம்பரனார் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார்.

சாமி சிதம்பரனார் சாதிப் பிரிவினைகள் ஆரியரால்தான் ஏற்பட்டன என்று திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை ஆரியர்கள் ஊடுருவிய உலகின் மற்ற பகுதிகளில் சாதிப்பிரிவினை இல்லாததைக் காரணம் காட்டி மறுத்தார். திராவிடர், ஆரியர் இருவரும் ஒரே இனம் என வலியுறுத்தினார்.

பொதுவுடைமை இயக்கம்

சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகியபின் சாமி சிதம்பரனார் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து சமூகப் பணியாற்றினார். சென்னைக்குக் குடிபெயர்ந்து சிங்காரவேலர், ப. ஜீவானந்தம், மணலி கந்தசாமி போன்றோருடன் நட்பு கொண்டார். பொதுவுடைமை இயக்கப் பணிகளுடன் ஆய்வுப் பணிகளையும், எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். பல தொழிலாளிகள், விவசாயிகள் போராட்டங்களில் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சாமி சிதம்பரனார் இலக்கியம், தத்துவம், சமுதாயம், அரசியல் என 62 நூல்கள் எழுதினார். 1921-ல் எழுதிய 'நளாயினி கதை' என்ற வெண்பா யாப்பினாலான நூல் அவரது முதல் படைப்பு. சரஸ்வதி, தாமரை, தினமணி, வெற்றிமுரசு போன்ற இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதினார். சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும் ஆய்ந்து கட்டுரைகள் எழுதினார். கம்பராமாயணத்தின் ஆகச் சிறந்த பாடல்களின் தொகுப்பை வெளியிட்டார். 'குறுந்தொகைப் பெருஞ்செல்வம்' மாணவர்களுக்கான முக்கியமான நூல்.

'இன்பசாகரன்', 'அணைந்த விளக்கு' போன்ற நாடகங்களை எழுதினார். 'சித்தர்கள் தந்த விஞ்ஞானம் தத்துவம்' என்று சித்தர் தத்துவங்களுக்குப் புதுவிளக்கம் கூறும் நூலை எழுதினார். பண்டைத்தமிழிலக்கிய நூல்களிலிருந்து தமிழர்களின் வாழ்வுமுறை, நாகரிகம், கலை, பண்பாடு போன்றவற்றைத் தெளிவுபடுத்துவதைத் தன் நோக்கமாகக் கொண்டிருந்தார்.

சாமி சிதம்பரனார் முப்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் 13 புனைபெயர்களில் எழுதினார்.

இதழியல்

சாமி சிதம்பரனார், 1930- களில் பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை போன்ற திராவிட /சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றினார். 1936-38 -ம் ஆண்டுகளில் 'அறிவுக்கொடி' என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1950- களில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆய்வுக் கருத்துகள்

சாமி சிதம்பரனார், தனது ஆராய்ச்சி கருத்துகளாக கீழ்காண்பவற்றை முன்வைத்தார்;

  • சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விஜயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு.
  • உருவ வழிபாடு தொல்காப்பியர் காலத்திலும் இருந்தது

மறைவு

சாமி சிதம்பரனார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஜனவர் 17, 1961 அன்று மறைந்தார்.

நினைவுகூரல்

சாமி சிதம்பரனாரின் படைப்புகள் 2000-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன. (இணையநூலக இணைப்பு)

சாமி சிதம்பரனாரின் நூல்கள் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தால் சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் என்னும் பொதுத்தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன

சாமி சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை டி.செல்வராஜ் சாகித்ய அக்காதமிக்காக எழுதியிருக்கிறார்

பங்களிப்பு

சாமி சிதம்பரனார் மூன்று கொள்கைகள் சார்ந்த மூன்று காலகட்டங்கள் கொண்டவர். தமிழறிஞர், பண்பாட்டு ஆய்வாளர் எனும் நிலைகளில் மூன்று காலகட்டங்களிலும் பங்களிப்பாற்றினார்.

  • சாமி சிதம்பரனார் ஈ.வெ.ரா பெரியாரின் முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்னும் வகையில் நினைவுகூரப்படுகிறார். திராவிட இயக்க இதழ்களில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதினார். அவை நூல்களாயின.
  • திராவிட இயக்கம் முன்வைத்த ஆரிய இனவாதம் போன்ற கருத்துக்களையும், சான்றுகள் அற்ற பண்டைத்தமிழ்ப் பெருமிதங்களையும் மறுத்து முரண்பட்டு பொதுவுடைமை இயக்கம் நோக்கிச் சென்றார். பொதுவுடைமை நோக்கில் தமிழ்ப்பண்பாட்டை ஆராயும் நூல்களை எழுதினார்.
  • வள்ளலார், சித்தர் மரபு சார்ந்த ஈடுபாடுகள் கொண்டவராக இறுதியில் விளங்கினார். தமிழர் மெய்யியல் பற்றிய நூல்களை எழுதினார்.

படைப்புகள்

  • அணைந்த விளக்கு - குண்டலகேசி காப்பியம்
  • அணைந்த விளக்கு (வசன நாடகம்)
  • அருட்பிரகாசர் அமுத வாசகம்
  • அருணகிரியார் - குருபரர் அறிவுரைகள்
  • அருள்நெறித் தொடர் (1-6)
  • ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன்
  • இலக்கிய நுழைவாயில்
  • இலக்கியம் என்றால் என்ன? - இரு பகுதிகள்
  • இன்பசாகரன் (வசன நாடகம்)
  • கம்பன் கண்ட தமிழகம் (1955)
  • கற்பரசியார் நளாயினி வெண்பா
  • காரல் ஹென்றி மார்க்ஸ்
  • சாமி. சிதம்பரனார் சிந்தனைச்செய்யுள்
  • சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்
  • சிலப்பதிகாரக் காலத்து தமிழ்நாடு
  • தமிழர் தலைவர் ( இந்நூல், 1939- ஆம் ஆண்டு வரையான ஈ.வே. ராமசாமி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிந்துள்ளது)
  • தொல்காப்பியத் தமிழர்
  • நளாயினி கதை
  • நாலடியார் பாட்டும் உரையும்
  • பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்
  • பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்
  • புகழேந்தியின் புலமை
  • புதிய தமிழகம்
  • புதுக்குறள்
  • மாதர் சுதந்திரம் அல்லது பெண்மக்கள் பெருமை
  • மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை
  • வடலூரார் வாய்மொழி
  • வளரும் தமிழ்
  • வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Nov-2023, 14:14:27 IST