under review

தேசிகப் பிரபந்தம்

From Tamil Wiki
திருவஹீந்திரபுரம் வேதாந்த தேசிகர் ramanuja.org

தேசிகப் பிரபந்தம் (பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டு) வேதாந்த தேசிகர் எழுதிய பிரபந்த நூல்களின் சுருக்கமான தொகுப்பு. தேசிகர் வடமொழியிலும், தமிழிலும் இயற்றிய விரிவான சில பிரபந்தங்களின் சாரத்தைத் தாமே சுருக்கி அளித்த பாடல்களும், வேறு சில பிரபந்தங்களும் அடங்கியது.

ஆசிரியர்

தேசிகப் பிரபந்தத்திலுள்ள பாடல்களை இயற்றியவர் வேதாந்த தேசிகர். வைணவ ஆசார்யர். 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', ‘உபய வேதாந்தாசாரியர்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகன்’ என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டார். தமிழ், சமஸ்கிருதம், மணிப்பிரவாளம் என மூன்று மொழிகளிலும் 120-க்கு மேற்பட்ட நூல்களை எழுதினார்.

நூல் அமைப்பு

தேசிகப் பிரபந்தம் 17 பகுதிகளைக் கொண்டது.

அமிருதரஞ்சனி

அமுதம் போல இனிமையுடையது என்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். தேசிகர் மணிபிரவாள நடையில் இயற்றிய 17 ரஹஸ்யங்களின் சாரமாக, 39 பாடல்கள்(பாசுரங்கள்) உள்ளன. சேதனம்(சித்தம் உள்ளவை), அசேதனம்(சித்தம் இல்லாதவை), பரம்பொருள் என மூன்று தத்துவங்களும் வைணவத்தின் மூன்று ரஹஸ்யங்களான த்வயம், சரம ஸ்லோகம், திருமந்திரம் ஆகியவற்றின் பொருள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

அதிகாரசங்கிரகம்

தேசிகர் இயற்றிய தேசிகஸூக்தியின் 32 அதிகாரங்களின் சுருக்கம் அந்தாதித் தொடையாக அமைந்தது. ஆழ்வார்கள், எட்டு ஆசார்யர்கள், ராமானுஜர், ஆளவந்தார், நாதமுனிகள் இவர்களின் சிறப்பும் கூறப்படுகின்றன.

அமிருதாசுவாதினி

ரஹஸ்யத்ரயம், ராமாயணத்தின் சரணாகதிகள்(காக சரணாகதி, விபீஷண சரணாகதி), வராஹ சரமஸ்லோகத்தின் பொருள், அமலனாதிபிரான் பாசுரங்களின் சாரம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

பரமபதசோபானம்

தத்துவங்களை அறிதல், சம்சாரத்தில் வெறுப்பு, உலக இன்பங்களில் ஆசையற்று இருத்தல், பாவத்திற்கு அஞ்சுதல், மோட்சம் பெறும் வழிகளைப் பின்பற்றல், உயில் உடலைவிட்டு வெளியேறல், அர்ச்சிராதி (உச்சந்தலை வழியே உயிர் வெளியேறல்), வைகுண்டம் செல்லல், அங்கு நாராயணனைக் கண்டு ஆனந்தம் கொள்ளல்- இவை கூறப்பட்டுள்ளன.

பரமதபங்கம்

தேசிகர் பிற ஞான மார்க்கங்களைச் (பௌத்தம், ஜைனம், சார்வாகம், காணபத்யம் போன்ற) சேர்ந்தவர்களுடன் வாதம் செய்து வைணவமே உயர்ந்தது என நிலைநாட்டிய 'பரமதபங்கம்' என்னும் பிரபந்தத்தின் சுருக்கம்.

மெய்விரதமான்மியம்

காஞ்சிபுரத்தில் பேரருளாளன் அவதரித்த கதை(அத்திகிரி மஹாத்மியம்) கூறப்படுகிறது.

அருத்தபஞ்சகம் (அர்த்தபஞ்சகம்)

முக்தி பெற வேண்டுபவன் உணரவேண்டிய ஐந்து: பரமாத்மாவின் ஸவ்ரூபம், ஜீவாத்மாவாகிய தன்னுடைய ஸ்வரூபம், பரமாத்மாவை அடையும் வழியில் உள்ள இடையூறுகள், மோட்சத்திற்கான உபாயங்கள், பகவத் அனுபவம் ஆகியவை விளக்கப்படுகின்றன.

அடைக்கலப்பத்து

தேசிகர் பேரருராளன் திருவடிகளைச் சரணடைதல், ஸ்வநிஷ்டை, உக்திநிஷை, ஆசார்யநிஷ்டை, பாகவதநிஷ்டை, விபீஷணன் முதல் பலர் சரணாகதியடைந்த விதம் ஆகியன 10 பாடல்களில் பாடப்பட்டன.

ஶ்ரீவைணவதினசரி

வைணவன் தினசரி செய்ய வேண்டியவை அபிகமனம், உபாதானம், இஜ்யை(திருவாராதனம்), ஸ்வாத்யாயம், யோகம் ஒவ்வொன்றிற்கும் இரண்டாக 10 பாசுரங்கள் உள்ளன.

திருச்சின்னமாலை

திருச்சின்னம் பேரருராளன் சன்னிதியில் வாசிக்கப்படும் ஓர் இசைக்கருவி. திருமந்திரத்தின் சாரார்த்தம்(6), த்வயத்தின் விசேஷம்(2), சரம ஸ்லோகத்தின் மகிமை(1), பேரருராளனின் பெருமை(1) - இவை 10 பாசுரங்களில் கூறப்படுகின்றன.

பன்னிருநாமம்

கேசவன் முதல் தாமோதரன் வரை திருமாலின் 12 நாமங்களைச் சொல்லி (கேசவன் ,நாராயணன் , மாதவன் , கோவிந்தன் ,விஷ்ணு, மதுசூதனன்,திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன் ,ருஷீகேசன் , பத்மநாபன்,தாமோதரன் )வைணவர் உடலின் பன்னிரு இடங்களில் திருமண்காப்பு(நாமம்) அணிவர். அந்த நாமங்களில் உள்ள திருமாலின் மேனி நிறம், தரித்திருக்கும் ஆயுதங்கள், வீற்றிருக்கும் திசை, மனித உடலில் புண்ட்ர ரூபமாய் அவை இருக்கும் பாகங்கள்-இவை வைணவர்கள் நாமம் தரிக்கும்போது ஓதவேண்டிய பாசுரங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருமந்திரச்சுருக்கு

திருமந்திரத்தை(எட்டெழுத்து) பதம் பதமாகப் பிரித்து பொருள் கூறப்பட்டுள்ளது. அகாரம், அதன்மேல் ஏறி அழிந்துகிடக்கும் நான்காம் வேற்றுமை உருபு, உகாரம், மகாரம், நம, நார என்னும் பதம், அயன் என்னும் பதம், நான்காம் வேற்றுமை உருபு ஆகியவற்றின் பொருள் கூறப்படுகிறது.

துவயச்சுருக்கு (த்வயச்சுருக்கு)

வினைகளில் சிக்கியிருக்கும் ஜீவாத்மா உய்வதற்கான வழியாக த்வய மந்திரம், அதன் முதல் பகுதி உபாயமாகவும், அடுத்தபகுதி பலனாகவும் அமைதல், பதம் பிரித்துப் பொருள் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

சரமஸ்லோகச்சுருக்கு

கீதையின் முடிவில் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்த சரணாகதியான சரம ஸ்லோகத்தின் பொருள். சரம ஸ்லோகத்தை பதம்பிரித்து பொருள் விளக்கம் கூறப்படுகிறது.

கீதார்த்தசங்கிரகம்

ஆளவந்தார் பகவத் கீதையின் அத்தியாயங்களின் சாரமாக இயற்றிய 18 வடமொழி ஸ்லோகங்கள் (கீதார்த்த சங்கிரகம்) தேசிகரால் தமிழில் பாடப்பட்டன.

மும்மணிக்கோவை

திருவஹீந்திரபுரத்தில் கோவில் கொண்ட தெய்வநாயகனின் மேல் பாடப்பட்ட மும்மணிக்கோவை. நாயகி பாவத்தில் சில பாடல்கள் உள்ளன. 30 பாடல்களில் 10 பாடல்களே கிடத்துள்ளன.

நவமணிமாலை

பா வகைகளில் ஒன்பதிலும் பாடல்கள் அமைந்து மாலை போலத் தொடுக்கப்பட்டதால் நவமணி மாலை. தெய்வநாயகனின்(தேவநாதன்) சிறப்பு, அவதாரங்கள், மாசி மாத உத்ஸவம், தேசிகர் தான் ஒன்பது பிரபந்தங்கள் பாடியமை- இவை கூறப்படுகின்றன.

பிரபந்தசாரம்

பன்னிரு ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் அருளிய பிரபந்தங்களின் சாரம். ஆழ்வார்களின் திருநட்சத்திரம், பிறந்த இடம், இயற்றிய பிரபந்தங்கள், பாடல்களின் எண்ணிக்கை, இவற்றுடன் அவர்கள் இயற்றிய பிரபந்தங்களின் சாராம்சம்-இவை கூறப்படுகின்றன.க கடைசி பாசுரத்தில் பன்னிருவரையும் வணங்குகிறார் தேசிகர்.

ஆகாரநியமம்

உண்ணத்தக்க, உண்ணத்தகாத பொருட்களைப்பற்றிக் கூறப்படுகிறது.

பாடல் நடை

அடைக்கலம்

காகமிரக் கதன்மன்னர் காதலிகத் திரபந்து
நாகமர னயன்முதலா நாகநக ரார்த்தமக்கும்
போகமுயர் வீடுபெறப் பொன்னருள்செய் தமைகண்டு
நாகமலை நாயகனார் நல்லடிப்போது அடைந்தேனே.

துவயச்சுருக்கு

அருவுரு வானவை தன்னை யடைந்திடத் தானடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித் தகற்றும் வினைவிலக்கி
யிருதலை யன்புத னாலெமை யின்னடி சேர்த்தருளுந்
திருவுட னேதிகழ் வார்செறிந் தாரெங்கள் சிந்தையுளே.

கேசவன் என்ற நாமம்

கேசவனாய்நின்று கீழைத் திசையிலு நெற்றியிலுந்
தேசுடையாழிகள் ணான்குடன் செம்பசும்பொன் மலைபோல்
வாசிமிகுத்தெனை மங்காமற் காக்கு மறையதனால்
ஆசைமிகுத்த அயன்மகவேதியிலற்புதனே.

பன்னிரு ஆழ்வார்கள்

வையகமெண் பொய்கைபூ தம்பே யாழ்வார்
மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுர கவிகள்
பொய்யில்புகழ்க் கோழியர்கோன் விட்டு சித்தன்
பூந்கோதை தொண்தரடிப் பொடிபா ணாழ்வா
ரையனருட் கலியனெதி ராசர் தம்மோ
டாறிருவ ரோரொருவ ரவர்தாஞ் செய்த
துய்யதமி ழிருபத்து நான்கிற் பாட்டின்
றொகைநாலா யிரமுமடி யோஹங்கள் வாழ்வே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2023, 09:59:07 IST