under review

அ. சுப்பிரமணிய பாரதியார்

From Tamil Wiki
வரகவி அ. சுப்பிரமணிய பாரதியார் (படம் நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் தளம்)

அ. சுப்பிரமணிய பாரதியார் (வரகவி அ. சுப்பிரமணிய பாரதியார்) (1880-1955) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். குழந்தைகளுக்கான இதழை நடத்திய முன்னோடி. பாரதியாருடன் இணைந்து சுதேசமித்திரனில் பணியாற்றினார். ஔவையாரின் பாடல்கள் அனைத்தையும் முழுமையாகத் தொகுத்துப் பதிப்பித்தார்.

பிறப்பு, கல்வி

அ. சுப்பிரமணிய பாரதியார், 1880-ல், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அலைக்கரை என்ற சிற்றூரில், அய்யாத்துரை ஐயருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை முசிறியில் கற்றார். உயர்நிலைக் கல்வியை திருச்சியில் பயின்றார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றார். சம்ஸ்கிருதம் கற்றார். எழுத்தாளரும், புலவருமான சிவானந்த யோகீச்வரர் அ. சுப்பிரமணிய பாரதியாரின் மாமா. அவரிடமிருந்து தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

தனி வாழ்க்கை

அ. சுப்பிரமணிய பாரதியார், சிவானந்த யோகீச்வரரின் மகளும் எழுத்தாளருமான தேவகுஞ்சரி அம்மாளை மணம் செய்துகொண்டார். தேவகுஞ்சரி அம்மாள் பாரதியாரின் சக்ரவர்த்தினி இதழில் தொடர்கதை எழுதிய எழுத்தாளர்.

இலக்கிய வாழ்க்கை

அ. சுப்பிரமணிய பாரதியார், ஆசுகவியாகவும், பல்வகை அமைப்புகளில் செய்யுள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தமையாலும் ‘வரகவி’ என்று போற்றப்பட்டார். சி. சுப்பிரமணிய பாரதிக்கு நெருங்கிய நண்பராக இருந்தார்.

கவிதை

அ.சுப்ரமணிய பாரதியார் பெரும்பாலும் தோத்திரச் செய்யுள்ளையே எழுதியுள்ளார். அவை இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன.

நாவல்கள்

பாரதி ஆசிரியராகப் பணிபுரிந்த சக்ரவர்த்தினி இதழில் ‘பானுமதி’, ‘ஜடாவல்லபர்’ போன்ற நாவல்களை அ.சுப்பிரமணிய பாரதியார் தொடர்களாக எழுதினார். சுதேசமித்திரன், பாரதமணி, ஆனந்தபோதினி, விவேகபோதினி போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. 12 நாவல்களை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இவருடைய நாவல்கள் பழைய ராஜாராணி கதைகளை உரைநடையில் எழுதியதுபோல் அமைந்தவை, நவீனத்தன்மை அற்றவை

மரபிலக்கியம்.

ஔவையாரின் பாடல்கள் அனைத்தையும் முழுமையாகத் தொகுத்து ‘ஔவை அருந்தமிழ்’ என்ற தலைப்பில் பதிப்பித்தார். திருக்குறளின் கருத்துக்களை தொகுத்து திருக்குறள் சங்கிரகம் என்னும் நூலை எழுதினார். ஸ்ரீமத் பாகவதத்தை முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆநந்த ராமாயணம் என்ற பேரில் இவர் எழுதிய ராமாயணக்கதைச் சுருக்கம் இவர் நூல்களில் மிகவும் புகழ்பெற்றது.

சிறார் இலக்கியம்

அ. சுப்பிரமணிய பாரதியார், சிறார்களுக்காக ஆஸ்திக மத உபாக்கியானம், மாருதி விஜயம் போன்ற பல தலைப்புகளில் பல நூல்களை எழுதினார். சி1918-ம்‌ ஆண்டில்‌ ‘பால விநோதினி’ (பால விநோதினி அல்லது குழந்தைகளின் அன்பன்) என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.

மே, 1907 சக்ரவர்த்தினி இதழில் வரகவி அ. சுப்பிரமணிய பாரதியார், தேவகுஞ்சரி அம்மாள் தொடர்.

இதழியல்

அ. சுப்பிரமணிய பாரதியார், பாரதிக்குப் பின் ‘சக்ரவர்த்தினி’ இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். உடன் பணியாற்றியவர் சி.சுப்பிரமணிய பாரதியார். ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயருக்கு, இதழில், தமிழில் புதிய ஆட்சிச் சொற்களை உருவாக்குவதற்கும் பயன்பாட்டுக்கும் அ. சுப்பிரமணிய பாரதியார் உதவினார்.

நாடகம்

வள்ளிநாயகி, பரதன், பாதுகாபட்டாபிஷேகம் போன்ற பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.

இலக்கிய/வரலாற்று இடம்

அ. சுப்பிரமணிய பாரதியார் செய்யுள், இலக்கியம், சிறார் கதை, நாவல், மொழிபெயர்ப்பு, இதழியல், நாடகம் என இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் செயல்பட்டவர். சம்ஸ்கிருதம் விரவிய இவரது நடை அக்கால இதழியல், இலக்கிய வகைமைக்கு முக்கிய சான்றாக அமைந்துள்ளது .

நூல்கள்

செய்யுள் நூல்
  • திருச்செந்திற்பதிகம்
  • வேல் வணக்கம் (துதி)
இலக்கிய நூல்கள்
  • ஔவை அருந்தமிழ்
  • திருக்குறள் சங்க்ரகம்
சிறார் நூல்கள்
  • ஆஸ்திகமத உபாக்கியானம்
  • மாருதி விஜயம்
  • கோதண்ட விஜயம்
  • பால பக்த விஜயம்
  • சிறியவர்க்குப் பெரியபுராணம்
  • இரண்டு பக்த சிரோமணிகள்
  • பெற்றோர் பெருமை
  • விவேக விளக்கக் கதைகள்
  • பாண்டவர் பால லீலை
  • பாண்டவர் வனவாசம்
  • பரதன் கதை
  • பாலகோபால லீலை
  • மரியாதை ராமர்
நாடகங்கள்
  • வள்ளிநாயகி
  • பரதன் அல்லது கடமையின் மேன்மை
  • பாதுகா பட்டாபிஷேகம்
  • பிதுர்வாக்கிய பரிபாலனம்
வாழ்க்கை வரலாறு
  • சுயம்பிரகாச விஜயம்
  • பரமஹம்ஸ ஸ்ரீமத் ஸ்வயம்ப்ரகாச ப்ரஹ்மேந்த்ராவதூத ஸ்வாமிகள் சரித்திரம்
  • பட்டினத்துப் பிள்ளையார் சரித்திரம்
புதினம்
  • ஜடாவல்லவர்
  • பானுமதி
  • விஜயபாஸ்கரன்
  • சுந்தரவல்லி
  • இரத்தினாம்பாள் அல்லது முத்தமாலை
  • கீர்த்திசிங்கன் அல்லது கொடுங்கோன் மன்னன்
  • பரசுராமன் அல்லது நல்லபிள்ளையின் நடவடிக்கை
  • ருக்மாங்கதன் அல்லது ஏகாதசியின் பிரபாவம்
  • மாயாவதி
  • குலசேகரி
  • பத்மினி
  • சந்திரஹாசன்
மொழிபெயர்ப்பு
  • ஸகல ஸௌபாக்யங்களும் தரும் ஆநந்த ராமாயணம் (ஆனந்த ராமாயணம் தமிழ் மொழிபெயர்ப்பு
  • ஸ்ரீமத் பாகவத ஸாரம் (ஸ்ரீமத் பாகவதம் தமிழ் மொழிபெயர்ப்பு)
புராண, ஆன்மிக நூல்கள்
  • அரிச்சந்திரன்
  • அர்ஜுனன்
  • குகன்
  • பகவத் கீதை
  • இராமாயண இரகஸ்யம்
  • இராமாயணம்
  • ஸாவித்திரி அல்லது மனைவியின் கடமை
  • மதாலஸா - ஒரு புராணக் கதை

உசாத்துணை


✅Finalised Page