பாலவிநோதினி (இதழ்)
பாலவிநோதினி (பாலவிநோதினி அல்லது குழந்தைகளின் நண்பன்) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய சிறார்களுக்கான தமிழ் இதழ். இதன் ஆசிரியர் வரகவி. அ. சுப்பிரமணிய பாரதி.
வெளியீடு
பாலவிநோதினி அல்லது குழந்தைகளின் நண்பன், சென்னையிலிருந்து வெளிவந்த சிறார் இதழ். ஜனவரி 1919-ல் இவ்விதழ் தொடங்கப்பட்டது. 1933 வரை தொடர்ந்து வெளிவந்தது. இதழின் ஆசிரியர் வரகவி. அ. சுப்பிரமணிய பாரதி. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்ரமண்யம் அண்ட் கோ நிறுவனத்தினர் இவ்விதழை வெளியிட்டனர். 1925-ல் இதழை வெளியிடும் உரிமை வாவிள்ளா ராமசாமி சாஸ்திரிகளுக்கு அளிக்கப்பட்டது. என்றாலும் ஆசிரியராக அ. சுப்பிரமணிய பாரதியே தொடர்ந்தார்.
இதழின் நோக்கம்
பாலவிநோதினி தனது இதழின் நோக்கங்களாகப் பின்வரும் கருத்துகளை வெளியிட்டது.
"இவ்விதழ் குழந்தைகள் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் படித்து எளிதில் உணர்ந்துகொள்ளக்கூடிய வகையில் வெகு சுலபமான வசன நடையில் அமையும். இதன்கண், குழந்தைகளுக்கான நீதிக்கதைகள், கட்டுக்கதைகள், புண்யக்கதைகள், யோகினிக்கதைகள், அபூர்வ சூழ்ச்சிகளை விளக்கக் கூடிய ஆச்சர்யக் கதைகள், விநோத விசித்திர சம்பாஷணா ரூபமான நாடகத் தொகுதிகள், ஹாஸ்யத் துணுக்குகள், பழமொழிகள், மனதிலே பதித்துவைத்துக் கொள்ளக்கூடிய நீதி வாக்கியங்கள், சுகாதார விளக்கங்கள் ஆகியன குழந்தைகளுக்கான உள்ளடக்கங்களாக அமையும்."
இதழ் குறித்து ஆசிரியர் அ. சுப்பிரமணியபாரதி, "எலிமென்டரி பாடசாலை உபாத்தியாயர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகவும் உபயோகமானது; ஒவ்வொரு லைப்ரரியிலும் அவசியம் இருக்கத் தக்கது" என்று குறிப்பிட்டார்.
இதழ் அமைப்பு
பாலவிநோதினி இதழின் முகப்புப் பக்கத்தில் பின் வரும் குறிப்புகள் ஆங்கிலத்தில் இடம் பெற்றன.
BALAVINODINI OR THE CHILDREN'S FRIEND
An Illustrated Tamil Monthly for Children
TO INSTRUCT AND CHERISH THE YOUNG HEARTS WITH SWEET INSPIRING AND EDUCATIVE NOVELTIES
மேற்கண்ட குறிப்பின் கீழ் இதழின் வெளியீட்டு ஆண்டுத் தொகுதியும், மாதப் பகுதியும் ஆங்கிலத்தில் இடம்பெற்றன, அதன் கீழ் ஆசிரியரின் பெயரும், பதிப்பிக்கும் நிறுவனத்தின் பெயரும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டன. இறுதியில் உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தா விவரங்கள் இடம்பெற்றன.
இதழின் தொடக்கப் பக்கத்தில் தமிழில் 'பாலவிநோதினி அல்லது குழந்தைகளின் அன்பன்' என இதழின் பெயரும், 'ஒரு மாதாந்தப் பத்திரிகை' என்ற குறிப்பும், இதழின் ஆண்டு, மாத விவரங்களும் இடம்பெற்றன. அதன் கீழ் தெய்வ வணக்கம் இடம்பெற்றது. ஒவ்வோர் வெளியீட்டின் ஆண்டு மாதம் ஆகியவற்றை அறிவதற்குத் தொகுதி பகுதி என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு இதழும் 36 பக்கங்கள் கொண்டது. பக்க எண்கள் அந்தந்த ஆண்டின் ஜனவரி இதழ் தொடங்கி, டிசம்பர் இதழ் வரை தொடர் எண்களாகத் தரப்பட்டன. இதழின் ஆண்டுச் சந்தா விலை இந்தியா, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளுக்கு ஒரு ரூபாய் எட்டணா. பிற வெளிநாடுகளுக்கு ஆண்டுச் சந்தாக் கட்டணம் இரண்டு ரூபாய். தனிப்பிரதி ஒன்றின் விலை இரண்டணா ஆறு பைசா.
உள்ளடக்கம்
பாலவிநோதினி இதழில் நகைச்சுவைக் கதைகள், புராண, இதிகாசக் கதைகள், நீதிபோதனைகள், நாட்டு நிகழ்வுச் சம்பவங்களை ஒட்டிய கதைகள். சாதனையாளர்களின் வரலாறு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றன. பொது அறிவுச் செய்திகள், துணுக்குகள், அது குறித்த சிந்தனைகளைத் தூண்டும் சிறுகதைகள், கட்டுரைகள் இடம்பெற்றன. புராண வரலாற்றுக் கதைகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளை பாலவிநோதினி இதழ் தொடர்ந்து வெளியிட்டது. நகைச்சுவைச் சிறுகதைகளும், துணுக்குகளும் இதழ்தோறும் இடம்பெற்றன.
பாலவிநோதினி இதழ் சிறுகதைப் போட்டி நடத்தி மாணவர்களது படைப்புகளுக்குப் பரிசளித்து ஊக்குவித்தது. ஆங்கிலத்திலும் சில செய்திகளை, கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டது. ஒவ்வொரு இதழிலும் இரண்டு பக்கப் படங்கள் இடம்பெற்றன. விளம்பரங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது.
இதழ் நிறுத்தம்
பால விநோதினி இதழ், 1933 வரை வெளிவந்தது. பின் நின்றுபோனது.
ஆவணம்
பால விநோதினி இதழின் சில பிரதிகள் தமிழ் இணையக் கல்விக்கழக மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
பாலவிநோதினி இதழ், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய சிறார் இதழ்களுள் ஒன்று. ஆன்மிகம், சமயம், ஒழுக்கம், நீதி போதனைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வெளிவந்தது. நகைச்சுவைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. பிற்காலத்தில் வெளிவந்த அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற இதழ்களுக்கு முன்னோடியான அம்சங்களைக் கொண்ட இதழாக பால விநோதினி இதழ் அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2025, 09:12:16 IST