வைசேஷிக சூத்ரம்
வைசேஷிக சூத்ரம் (பொமு 2-10 நூற்றாண்டு) வைசேஷிக சூத்திரங்கள். இந்து தத்துவ மரபான வைசேஷிகத்தின் முதன்மை நூல். கணாதரால் இயற்றப்பட்டது. வைசேஷிக சூத்திரம் வைசேஷிக தரிசனத்தை சிறிய வரையறைகளாகத் தொகுத்துச் சொல்லும் நூல்.
காலம்
வைசேஷிகத்தின் முதல்நூல் வைசேஷிக சூத்ரம். வைசேஷிக சூத்திரத்தின் காலம் பொமு 2 முதல் பொமு 10 நூற்றாண்டு வரைக்குமான காலமாக வெவ்வேறு அறிஞர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
வைசேஷிக சூத்திரங்கள் பிற தரிசனங்களான சாங்கியம் நியாயம் பூர்வ மீமாம்சம் பற்றி பேசுகிறது. அதில் பௌத்தம் பற்றிய குறிப்புகள் இல்லை, ஆகவே பௌத்தத்திற்கு முந்தைய காலம் எனப்படுகிறது.
தொடக்ககால பௌத்த நூல்கள் வைசேஷிக சூத்ரங்கள் பற்றிப் பேசுகின்றன. ஆனால் வைசேஷிக சூத்திரங்கள் பற்றி சமண சூத்திரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. ஆகவே சமண சூத்திரங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
வைசேஷிக சூத்ரங்களை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்த நந்தலால் சின்கா கணாதரின் காலம் பொமு ஆறாம் நூற்றாண்டுக்கு பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையேயாக இருக்கலாமென ஊகிக்கிறார். பல ஊகங்களில் பொதுவாக ஏற்கப்படுவது இதுவே.
நூல் பெயர்
வைசேஷிக சூத்ரம் ( वैशेषिक सूत्र) என்ற பெயர் வைசேஷிக தரிசனத்தின் முதல் நூல் என்பதைக் குறிக்கிறது. இந்நூலுக்குப் பின் அந்த தரிசனம் வைசேஷிகம் என அழைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
வைசேஷிகம் என்பது விசேஷம் என்னும் சொல்லின் நீட்சி. சிறப்பியல்பு என்று பொருள். அணுக்களின் சிறப்பியல்பே பொருட்களின் தன்மை என வரையறை செய்வதனால் இப்பெயர். சூத்ரம் என்றால் நூல் அல்லது சரடு. சுருக்கமாக வரையறைசெய்து சொல்லும் வரிகளுக்கு சூத்ரம் என்று பெயர். தேற்றம் என்ற நவீனச் சொல்லுக்கு சமானமானது.
பதிப்பு
வைசேஷிக சூத்திரத்தின் சுருக்கமான வடிவம் மாக்ஸ் முல்லர் அவர்களால் இந்திய தத்துவத்தின் ஆறு அமைப்புகள் என்னும் பொதுத் தலைப்பின் கீழ் (Six Systems of Indian Philosophy) 1899ல் இந்திய தொல்லியல் ஆய்வகம் (Archaeological Survey of India) வெளியீடாக பிரசுரமாகியது.
1950-ல் தான் கிடைக்கப் பெற்ற எல்லா கைப்பிரதிகளையும் ஒப்புநோக்கி ஆராய்ந்து உருவாக்கப்பட்ட ஆய்வுப் பதிப்பு வெளிவந்தது. அது வரை 15-ம் நூற்றாண்டின் வேதாந்த அறிஞரான சங்கர மிஸ்ரரின் மகாபாஷ்யம் என்னும் நூலின் ஒரு பகுதியான உபஸ்காரம் என்னும் பகுப்பில் இடம்பெற்ற வேதாந்த சூத்திரங்களே அந்நூலாகக் கருதப்பட்டன. அதை விரிவான ஆய்வுக்குறிப்புடன் நந்தலால் சின்கா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அறிஞர்கள் அந்த வடிவத்தின் நம்பகத்தன்மையை ஐயப்பட்டனர். ஏனென்றால் பௌத்த நூல்களில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த வைசேஷிக சூத்ரங்களின் உதிரி வரிகளுடன் அந்த நூலின் வரிகள் இணையவில்லை.
1950-ல் வேறு ஓலைச்சுவடிகள் கண்டடையப்பட்டன. வைசேஷிக சூத்திரங்கள் ஏராளமான மாற்றங்களுடன் சங்கர மிஸ்ரரின் நூலில் இடம் பெற்றது தெரியவந்தது. பின்னர் தொடர்ச்சியான பாடவேறுபாட்டு குறிப்புகளுடன் ஆய்வுப்பதிப்புகள் வெளியாயின.
உரைகள்
வைசேஷிக சூத்திரத்திற்கு ஏராளமான உரைகளும் விளக்கங்களும் தொல்காலத்தில் இருந்திருக்கலாம். ராவண பாஷ்யம், பாரத்வாஜ விருத்தி என்னும் இரு உரைநூல்கள் குறிப்பிடப்படுவதுண்டு, இப்போது கிடைப்பதில்லை. பிரசஸ்தபாதர் எழுதிய பதார்த்த தர்ம சம்கிரகம், மதிசந்திரர் எழுதிய தசபதார்த்த சாஸ்திரம் ஆகிய இரண்டும் யுவான் சுவாங் அவர்களால் சீனமொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
வைசேஷிக சூத்திரங்கள் மீதான உரைகள் மற்றும் விவாதங்களாக இப்போது கிடைப்பவை கீழ்க்கண்டவை:
- பிரசஸ்தபாதர் எழுதிய பதார்த்த தர்ம சம்கிரகம் - பொயு 5 ஆம் நூற்றாண்டு
- மதிசந்திரர் எழுதிய தசபதார்த்த சாஸ்திரம் - பொயு 5 ஆம் நூற்றாண்டு
- வியோமசிவன் பதார்த்த தர்ம சங்கிரகத்துக்கு எழுதிய விளக்கம் வ்யோமாவதி - பொயு 1000
- ஸ்ரீதராச்சாரியார் பிரசஸ்தபாதர் உரைக்கு எழுதிய விளக்கம் நியாய கந்தலி - பொயு 991
- உதயணர் எழுதிய நியாயவார்த்திக தார்பரிய சுத்தி , கிரணாவலி - பொயு 984
- சிவாதித்யர் எழுதிய சப்தபதார்த்தி - பொயு 12 ஆம் நூற்றாண்டு
- வல்லபாச்சாரியார் எழுதிய நியாயலீலாவதி - பொயு 12 ஆம் நூற்றாண்டு
- ஜயநாராயணா தர்க்க பஞ்சானனன் எழுதிய நியாய விவிர்த்தி - பொயு 14 ஆம் நூற்றாண்டு
- வரதராஜர் எழுதிய சாரசம்கிரகம் - பொயு 1150
- சந்திரகாந்தா எழுதிய நியாய பாஷ்யம் - பொயு 1200
- சங்கர மிஸ்ரர் எழுதிய மகாபாஷ்யம் உபஸ்காரம் - பொயு 1650
நூல் அமைப்பு
வைசேஷிக சூத்திரம் பத்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஆஹ்னிகா என்னும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் அத்தியாயம்
'இனி நாம் தர்மத்தைப் பற்றி விவாதிப்போம்' என்னும் சொற்றொடருடன் வைசேஷிக சூத்திரங்கள் தொடங்குகிறது. (அதாதோ தர்ம: வியாக்யாஸ்யாம:). தர்மம் என்றால் என்ன என்று கணாதர் நூலில் விளக்குகிறார். எதிலிருந்து நன்மையும், விடுதலையை அளிக்கும் தூயஞானமும் உருவாகிறதோ அதுவே தர்மம். பொருள்வயமானது பிரபஞ்சம். பொருட்களின் உண்மையை உணர்வதன் வழியாகவே நன்மையும் ஞானமும் அடையப்படும். பொருட்களின் சாமானிய (பொது) விசேஷ (சிறப்பு) சமவாய (உறவு) ஆகியவற்றினூடாகவும், பொருட்களின் சுதர்மம் (தன்னியல்பு) பிறவியல்பு (வைதர்மம்) போன்றவற்றை அறிவதன் வழியாகவே அந்த ஞானம் எய்தப்படுகிறது. அவற்றை விரிவாக விளக்கும் பகுதி இது.
இரண்டாம் அத்யாயம்
இரண்டாம் அத்யாயத்தில் பஞ்ச பூதங்கள் (ஐந்து பருப்பொருட்கள்) பற்றிய விவரணையும் அவற்றின் தனித்த இயல்புகளும் பேசப்படுகின்றன. வைசேஷிக தரிசனத்தின்படி ஐந்து அடிப்படைப் பொருட்களும் இணைந்ததே இந்த உலகின் எல்லா பொருட்களும். ஐந்தாவது பருப்பொருள் வானம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மையும் புலன்களால் அறியப்படும் வெளிப்பாடும் உள்ளது. உதாரணமாக வானின் இயல்பு எங்குமிருத்தல். அதன் வெளிப்பாடு ஓசை.
மூன்றாம் அத்யாயம்
இப்பகுதியில் ஆத்மா (தன்னிலை, தன்னுணர்வு) என்னும் கருத்தின் மதிப்பென்ன என பரிசீலிக்கப்படுகிறது.
நான்காம் அத்தியாயம்
மானுட உடலே அறிதல்களின் ஊடகமாகச் செயல்படுகிறது. உடல் சார்ந்தே மானுடனின் ஞானமும் அமைகிறது. உடலின் இயல்புகள், ஐம்புலன்களின் இயல்புகள் இப்பகுதியில் பேசப்படுகின்றன.
ஐந்தாம் அத்தியாயம்
ஐந்தாம் அத்தியாயம் அறியும் தன்னிலை (subjectivity) பற்றியதாகும். அது உடல் உள்ளம் இரண்டும் கொண்டுள்ள உறவாலும், உடலுள்ளம் என்னும் அந்த அமைப்பு வெளியுலகை எதிர்கொள்ளும் முறையாலும் உருவாவது. கணாதர் யோகம், மோட்சம் ஆகியவற்றை விவாதிக்கிறார். தூய அறிதல் என்பதே தன்னறிதல், தன்னுணர்தல். அதை ஆத்மசாட்சாத்காரம் (self realization) என்கிறார். அதுவே முக்தி. அறிதலை அறிதல் என்பதே அந்த தன்னறிதல். அறிதல் இரு தளங்கள் கொண்டது. ஆத்மா (அறியும் தன்னிலை)வின் விருப்புறுதி. அறிபடுபொருளுக்கும் அறிபவனுக்கும் (அல்லது அறிநிலை) இடையேயான தொடர்பு.
ஆறாம் அத்தியாயம்
இப்பகுதியில் பாவம், புண்ணியம் ஆக்கியவற்றை எப்படி வகுத்துக்கொள்வது, அற -ஒழுக்க அடிப்படைகளை எப்படி வகுத்துக்கொள்வது என்பவை பேசப்படுகின்றன.
ஏழாம் அத்தியாயம்
இப்பகுதியில் பொருட்களின் தனித்தன்மை (விசேஷம்) எப்படி இயல்புகள் (குணங்கள்) ஆக வெளிப்படுகின்றது என்பது பேசப்படுகிறது. வண்ணம், சுவை, வடிவம் போன்றவையும்; வெப்பம், குளிர் போன்றவையும்; காலத்தில் இருத்தல் போன்றவையும் குணங்கள். இவை வழியாகவே பொருட்கள் அளவிடப்படுகின்றன. அளவிடுதல் என்பதே அறிதலின் அடிப்படை வழிமுறையாகும். அளவிடப்பட்ட பொருளே அறிவென்று ஆகிறது.
எட்டாம் அத்தியாயம்
இப்பகுதியில் நாம் புறநிலையாகிய உண்மையை எப்படி அறிகிறோம் என்பது விவாதிக்கப்படுகிறது. அறியும் முறையே அறிவை தீர்மானிக்கும் அம்சமாக உள்ளது. பொருட்களின் இயல்பு, இயக்கம், சாரம் ஆகியவற்றை நாம் நம் புலன்களாலும் அறிவாலும் அறிகிறோம். இருப்பு (அர்த்த) என்று நாம் பொருட்களில் உணர்வதென்ன என்பதே இப்பகுதியின் பேசுபொருள்.
ஒன்பதாம் அத்தியாயம்
இப்பகுதி இந்திய தத்துவசிந்தனையின் அறிவியங்கியல் (Epistemology ) என்று கருதப்படுகிறது. புலனறிதல், ஊகம், தர்க்கம் ஆகியவற்றினூடாக நாம் பொருளைச் சென்றடையும் முறை விவாதிக்கப்படுகிறது. இதுவே வைசேஷிகத்தின் அடிப்படையான பகுதி. இப்பகுதியால்தான் வைசேஷிகம் இந்திய சிந்தனையின் அறிவியங்கியல் எனப்படுகிறது.
பத்தாம் அத்தியாயம்
இப்பகுதி ஆத்மா பற்றியது. வைசேஷிகத்தின் கோணத்தில் ஆத்மா என்பது அறியும் தன்னிலை. உயிர்களுக்குள் இருக்கும் பிரக்ஞை, அதுவே உலகை அறிந்து அறிவை உருவாக்குகிறது. தூய அறிதலை அடைவதே கல்வியின் நோக்கம். கல்வியை முழுமை செய்வதற்கு தியானம் (யோகம்) அவசியம் என கணாதர் சொல்கிறார். காரணகாரிய உறவு, வினைத்தொடர்ச்சி, உடல்-உள்ளம் கொண்டுள்ள உறவு, பொருட்களின் இயல்புகள், பொருட்கள் கொண்டுள்ள தொடர்புகள் மற்றும் இயக்கமுறைகள் ஆகியவற்றுடன் நாம் உலகை அறியும் முறை ஆகியவற்றை நாம் அறிந்து தெளிவடைதலே அகவிடுதலையை அளிக்கும். இதுவே தன்னறிவு (ஆத்மஞானம்) எனப்படுகிறது.
உசாத்துணை
- Authors of Vaisheshika (d): Sridhara (about 991 A.D.)
- udhayana- Nyaya (school of philosophy)
- https://www.ceekr.com/vaisheshika
- Nyaya and vaiseshika- மாக்ஸ்முல்லர் இணையநூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 22:54:47 IST