under review

ரா. கிரிதரன்

From Tamil Wiki

To read the article in English: R. Giridharan. ‎

ரா. கிரிதரன்

ரா. கிரிதரன் (கிரிதரன் ராஜகோபாலன்) (ஜூன் 11, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள், இசைக் கட்டுரைகள் மற்றும் விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை தொடர்ந்து எழுதி வருகிறார். மேற்கத்திய இசையை பின்புலமாக கொண்ட இவரது கதைகள் தமிழுக்கு புதிய களத்தை அறிமுகம் செய்து வைத்தன.

பிறப்பு, கல்வி

ரா. கிரிதரன் தமிழ்நாட்டின் திண்டிவனத்தில் ராஜகோபாலன், பத்மா இணையருக்கு ஜூன் 11, 1979-ல் பிறந்தார். புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் பள்ளி கல்வி பயின்றார். புதுவை பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ரா. கிரிதரன் 2006-ல் சித்ரலேகாவை மணந்தார். மகள்கள் ஆதிரா, அக்ஷரா. கிரிதரன் தற்போது இங்கிலாந்தில் காப்பீட்டுத்துறை மென்பொருள் கட்டுமானத்துறையில் பணியாற்றி வருகிறார்.

அமைப்புச் செயல்பாடுகள்

'லண்டன் வாசகர் குழுமம்' என ஒரு குழுவை 2019-ல் நண்பர்களுடன் இணைந்து நிறுவினார். இதன் வழியாக வாரம் ஒரு முறை இணைய வழியிலும், பின்னர் நேரிலும் இலக்கிய வாசிப்பு மற்றும் சந்திப்புகள் நடைபெற்றன. 2025 டிசம்பரில் தென் இந்திய இலக்கியத்துக்கென ஒரு இலக்கிய விழாவை சென்ட்ரல் லண்டனில் இக்குழுவின் வழியாக நடத்தினார்.

இதழியல்

'சொல்வனம்', 'பதாகை', 'ஆம்னிபஸ்' ஆகிய இணைய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார்.

இலக்கிய பங்களிப்பு

ரா. கிரிதரனின் முதல் நூல் 2010-ல் வெளியான 'கர்நாடக சங்கீதம் ஒரு எளிய அறிமுகம்' எனும் மொழிபெயர்ப்பு நூல். இவரது முதல் சிறுகதை தொகுப்பு 'காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை' தமிழினி பதிப்பகத்தின் வெளியீடாக 2020-ல் வெளியானது.

அசோகமித்திரன், பிரமிள், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோரைத் தன் இலக்கிய ஆதர்சமாக குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

ரா. கிரிதரனின் சிறுகதைகள் வெவ்வேறு நிலப்பரப்பையும் பின்புலத்தையும் கொண்டவை. குறிப்பாக 'இருள் முனகும் பாதை' மற்றும் 'காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை' ஆகிய இரண்டு கதைகளும் மேற்கத்திய இசை மேதைகளின் வாழ்வை பின்புலமாக எழுதப்பட்டு கவனம் பெற்ற கதைகள். கலையின் தீவிரம், அதன் மேன்மை, கலைஞனின் வீழ்ச்சி ஆகியவை இவர் கதைகளின் பேசு பொருள் என சொல்லலாம். மானுட இருப்பு குறித்து கேள்விகளை எழுப்பும் அறிவியல் புனைவுகளும் எழுதியுள்ளார்.

கிரிதரன் செறிவான, உருவகத்தன்மை கொண்ட கட்டற்ற உரைநடைப்பாணி கொண்டவர். நவீனத்துவ மொழி நடைக்கு மாற்றாக அமையும் நடை இது. "கிரியினுடைய கதையுலகின் தனித்தன்மையை உருவாக்குவது கதைக்குப் பின்னிருக்கும் வரலாற்று நோக்கில் வெளிப்படும் தனித்தன்மைதான்" என்று விமர்சகர் சுரேஷ் பிரதீப் குறிப்பிடுகிறார்[1].

விருதுகள்

  • அரூ 2019 அறிவியல் சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை - 'பல்கலனும் யாம் அணிவோம்'[2]
  • வம்சி சிறுகதைப் போட்டி - 2012
  • நியூஹாம்(Newham) லண்டன் சிறுகதைப் போட்டி பரிசு - 2009

நூல் பட்டியல்

மொழியாக்கம்
  • கர்நாடக சங்கீதம் ஒரு எளிய அறிமுகம் - மொழிபெயர்ப்பு,
சிறுகதை
  • காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை
  • கண்ணிநுண் உயிர்த்தாம்பு (அறிவியல் சிறுகதைகள்)
கட்டுரை
  • காற்றோவியம் - இசை கட்டுரைகள்
  • சாதகப்பறவையின் காத்திருப்பு
  • துப்பாக்கிப் போல் சொகுசாய் கிடக்கிறது பேனா
  • சிலையும் கல்லும்: விமர்சன நூல்

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:13 IST