மதுரைக் கொல்லன் புல்லன்
- கொல்லன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கொல்லன் (பெயர் பட்டியல்)
- மதுரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மதுரை (பெயர் பட்டியல்)
மதுரைக் கொல்லன் புல்லன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரையில் கொல்லன் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். புல்லன் என்பது புலவன் என்பதன் திரிந்த சொல்.
இலக்கிய வாழ்க்கை
குறுந்தொகை 373-ஆவது பாடல் மதுரைக் கொல்லன் புல்லன் பாடியது. குறிஞ்சித்திணைப் பாடலில் தோழிகூற்றாக உள்ளது. அலர் மிக்கவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, "தலைவனது நட்பு என்றும் அழியாதது" என்று தோழி கூறியதாக பாடல் அமைந்துள்ளது. 'ஆண்ஊகம்(கரடி)' தன் கறைபட்ட விரல்களால் பலாப்பழத்தைத் தோண்டி உண்ணும் நாடன் உன் காதலன்' என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள். குறிஞ்சி நிலத்தின் இயல்பினையும், அந்நிலத்து மகளிரின் மாறாத இயல்பையும் கவிஞர் பாடலில் பாடியுள்ளார்.
பாடல் நடை
நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடெவன் உடைத்தோ தோழி நீடுமயிர்க்
கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி
காந்தளஞ் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Dec-2022, 13:48:23 IST