மதுரைக் கண்டரதத்தன்
From Tamil Wiki
மதுரைக் கண்டரதத்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மதுரைக் கண்டரதத்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மதுரை நகரில் வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
மதுரைக் கண்டரதத்தன் பாடிய பாடல் குறுந்தொகையில் 317-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டி வரும்பொருட்டு பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழியின் கூற்றாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மலைப் பகுதியில் குளிர் காலத்தில் நெல்லி மரங்கள் கனிகளைக் கொடுக்கும். மரையான் இன ஆண் மான் இனிப்பு கலந்த புளிப்பு சுவையுள்ள நெல்லிக்கனியை உண்டு பசியாறும்.
- மரையான் இன ஆண் மான் கருப்பும் வெண்மையும் கலந்த மயிரினை கொண்டிருக்கும். நெல்லிக்கனிகளை உண்டு பசியாறிய பின் கரைகளில் பூக்கள் அடர்ந்திருக்கும் மலைச்சுனைக்கு சென்று நீர் அருந்தும்.
- குளிர்காலத்தில் வாடைக்காற்றானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசும்.
பாடல் நடை
குறுந்தொகை - 317
- திணை: குறிஞ்சி
- கூற்று: பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.
புரிமட மரையான் கருநரை நல்லேறு
தீம்புளி நெல்லி மாந்தி யயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்
தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்
நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக
வடபுல வாடைக் கழிமழை
தென்புலம் படருந் தண்பனி நாளே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- குறுந்தொகை - 317:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 14:04:42 IST