மடலேறுதல்
மடலேறுதல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடல் ஊர்தல் என்றும் கூறுவர். தன் காதலியை அடைய முடியாத தலைவன் அவளை அடையும் கடைசி முயற்சியாக மடலூர்தல் வழக்கம். ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு பனை மடல்களால் செய்யப்பட்ட குதிரை அல்லது யானை ஒன்றில் ஊர்ந்து தலைவியின் பெயரைப் பாடிக் கொண்டே செல்வது மடலூர்தல். இது இழிவானதாகவும் தலைவனின் இறுதி முயற்சியாகவும் கருதப்படுகிறது. பெண்கள் மடலேறும் மரபு சங்க இலக்கியங்களில் இல்லை.
மடலேறும் முறை
மடலேறுவதற்கான காரணங்கள், சூழல்
திருக்குறள் காம நோயால் வருந்தும் தலைவனுக்கு மடலேறுதல் தவிர வேறு ஆறுதல் இல்லை எனக் குறிப்பிடுகிறது.
காமம் உழந்து வருந்தினார்க்(கு) ஏமம்
மடலல்ல(து) இல்லை வலி
தலைவன் மடலேறுதலுக்கான காரணங்கள்
- தலைவியின் தமர் (சுற்றத்தார்) வரைவிற்கு (மணத்திற்கு) உடன்படாதபோது தலைவன் மக்களின்/சான்றோரின் ஆதரவைப் பெறுவதற்காக
- தலைவன் தான் இயற்கைப் புணர்ச்சியில் ஈடுபட்ட தலைவியுடன் களவு வாழ்வைத் தொடர அனுமதி மறுக்கும் போது மடல் ஏறுவேன் என்று தோழி மூலம் அச்சுறுத்துவதற்காக
- தான் மட்டுமே ஒருதலையாக (கைக்கிளை) விரும்பி தன்னை விரும்பாத பெண்ணை அடைய விரும்பும் தன் நோக்கம் நிறைவேறுவதற்காக
மடல்மா மற்றும் மடலேறுபவரின் தோற்றம்
மடல்மா மடலேறும் விலங்கைக் குறிக்கும். பெண்ணை எனப்படும் பெண்பனையின் மடலால் குதிரை[1] அல்லது யானை போன்ற உருவம் அமைப்பர். பனைமரத்தின் கிளை மட்டை எனப்படும். இது இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். மடல் குதிரைக்கு மயில்தோகை, பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலை அணிவிக்கப்படும். இதன்கீழ் உருளை பொருத்தப் பட்டிருக்கும். மடல் விலங்கின் மேல் அமர்ந்து ஊரைச் சுற்றி வரும் தலைவன் எருக்கம்பூ மாலையையும். வெண்மையான எலும்புகளையும் அணிந்து கொள்வான். உடல் முழுவதும் சாம்பலைப் பூசியிருப்பான்.
மடலேறல்
மடல் விலங்கின் உருளியில் கயிற்றைக் கட்டி சிறுவர்கள் இழுத்து வருவர். மடல் விலங்கின் மேல் அமர்ந்து ஊரைச் சுற்றி வரும் தலைவன் எந்தவிதமான உணர்வையும் காட்டமாட்டான். மழை, காற்று, வெயில்,தீ என எதையும் பொருட்படுத்த மாட்டான். நாணத்தை முற்றிலுமாகக் கைவிட்டு "இன்னாள் செய்தது இது" என்று தலைவியின் பெயரைக் குறிப்பிட்டும் அவளின் அழகினை வர்ணித்தும், அவள் தந்த காமநோய் குறித்தும் தலைவி தன் காதலை ஏற்காமை குறித்தும் பழித்துப் பாடுவதாகவும் குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. " ஆடெனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ" (கலி.140,15-16, ப-432)
மடலேறியபின் நிகழ்பவை
தலைவன் மடலேறியதைக் கண்ட சான்றோர் தலைவனுக்குத் தலைவியை மணம் முடிக்க முயற்சிகளை மேற்கொள்வர். இந்த முயற்சி வெற்றி பெற்றால் தலைவன் மகிழ்வான். மடலேறிய பின்னரும் தலைவியோ, அவளைப் பெற்றவர்களோ திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்காவிட்டால் தலைவன் தன் வாழ்வை முடித்துக் கொள்வான். மலையிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வான். இது 'வரைபாய்தல்' எனப்படும்.
இலக்கியங்களில் மடலேறுதல் பற்றிய குறிப்புகள்
சங்க இலக்கியத்தில் மடல் ஏறுதல் குறித்து பதினாறு பாடல்கள் காணப்படுகின்றன. மடலேறுதலைக் குறிப்பிடும் பாடல்களில் நற்றிணை( 146, 152, 342, 377,220 ) குறுந்தொகை (14, 17, 32, 173, 182), கலித்தொகை(58, 61) ஆகிய 11 பாடல்களும் ஐந்திணைக்குரியவை, கலித்தொகையின் (138,139,140,141) நான்கு பாடல்களும் பெருந்திணைக்கு உரியவை.
மடலேறும் நிகழ்ச்சி , தன்னை விரும்பாத பெண்பொருட்டு நிகழ்ந்தால் அது கைக்கிளை எனப்படும்.(ஒரு தலைக் காதல்). தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் விரும்பிய போதிலும் பெற்றோர் மறுப்பு காரணமாக நிகழும்போது இயற்கையான ஐந்திணை ஒழுக்கத்தில் அடங்கும். தலைவன் தலைவியை அடைய மடலேறுவேன் என்று சொல்வது மடல்கூறல். மடலேற வேண்டாமெனத் தடுப்பது மடல் விலக்கு.
வ.சுப.மாணிக்கம் தமது 'தமிழ்க்காதல்' நூலில் மடல்மாப் பொருள் குறித்துப் பதின்மூன்று பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
குறுந்தொகை
மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.
காம நோயானது முதிர்வடைந்தால், பனை மட்டையையும் குதிரை எனக் கொண்டு, ஆடவர் அதனை ஊர்வர்; குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையை அணிந்து கொள்வர்; தெருவில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரித்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படமாட்டார்கள். தாம் எண்ணியது நிறைவேறாவிட்டால், வேறு செயல்களையும் செய்வர்.
கலித்தொகை
மடலேறுதலில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவன் தான் மடலேறியதையும், அதன் விளைவாகத் தலைவியை அடைந்ததையும் தன் பாங்கனிடம்(தோழனிடம்) கூறும் கலித் தொகை 138-ம் பாடல்
படரும், பனை ஈன்ற மாவும், சுடர் இழை
நல்கியாள்; நல்கியவை,
பொறை என் வரைத்து அன்றிப் பூ நுதல் ஈத்த
நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற
உப்பு இயல் பாவை உறை உற்றது போல,
உக்கு விடும் என் உயிர்.
பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற
.................................................
அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின்
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்புற்று,
அடங்கருந்தோற்றத்து அருந்தவம் முயன்றோர் தம்
உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே.
நற்றிணை
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,
பெரிதும் சான்றோர் மன்ற விசிபிணி 5
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின்,தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே!
(உண்ணாத மடல் குதிரையில் வருகிறேன். குதிரையில் மணி கட்டப்பட்டிருக்கிறது. குதிரையின் மேல் என்னைக் கச்சால் கட்டி நிறுத்தியுள்ளனர். எருக்கம்பூ மாலையை அணிந்திருக்கிறேன். இந்த ஊர்ச் சிறுவர்கள் பெரிதும் சால்புள்ளவர்கள். விடியற்கால முழவு ஓசை கேட்பதற்கு முன்பதாகவே என்னிடம் வந்துவிட்டனர். "நாங்கள் இந்த ஊர்க்காரர்கள்" என்று கூறுகின்றனர். இவர்கள் ஒப்புரவு அறிந்தவர்களாக எனக்குப் பாதுகாப்புத் தருகின்றனர். )
கந்தபுராணம்
கந்தபுராணத்தில் வள்ளியம்மைக்காக மடலேறி உங்கள் ஊர்த்தெருவில் வருவேன் என முருகப்பெருமான் தோழியிடம் சொல்கிறான்.
தோட்டின் மீதுசெல் விழியினாய் தோகையோ டென்னைக்
கூட்டி டாயெனில் கிழிதனில் ஆங்கவள் கோலந்
தீட்டி மாமட லேறிநும் மூர்த்தெரு வதனில்
ஓட்டு வேன்இது நாளையான் செய்வதென் றுரைத்தான்
பக்தி இலக்கியங்களில் பெண்கள் மடலூர்தல்
பெண்கள் மடலேறும் மரபு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இல்லை. பெண்கள் மடலேறக் கூடாது என்பதனை தொல்காப்பியர்
எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான(அகத்திணையியல்- 38)
என்ற நூற்பாவில் சுட்டுகிறார். திருமங்கையாழ்வார் இந்த மரபை மீறி தனது பெரிய திருமடல், சிறிய திருமடல் ஆகிய நூல்களில் தன்னைப் பரகால நாயகியாகப் பாவித்து நாராயணனை அடையவில்லையென்றால் மடலேறுவேன்; தமிழ் நெறிகள் (மரபு) அதற்குத் தடையாக இருக்குமென்றால் வடநெறியை நாடுவேன் எனப் பாடுகிறார். மடல் இலக்கிய வகையின் முன்னோடி நூலாகச் சிறிய திருமடல் காணப்படுகிறது. கடவுள் தலைவனாக இருந்தால் பெண்கள் மடலேறலாம் என்கிற விதியை திருமங்கையாழ்வாரின் மடல்களின் அடிப்படையில் பன்னிரு பாட்டியல் கூறுகிறது.
சிறிய திருமடல்
ஒர்ஆனைக் கொம்பொசித்து ஓர்ஆனைக் கோள் விடுத்த
சீரானை செங்கணெடியானை தேந்துழாய்த்
தாரானை தாமரைபோல் கண்ணனை
யெண்ணரு-ஞ்சீர் ப்பேராயிரமும் பிதற்றி பெருந்தெருவெ
ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்
(பரகால நாயகி கூற்று- ஒரு யானையின் கொம்பைஓடித்து, மற்றொரு யானையைக் காத்த சிறப்பு மிக்க சிவந்த தாமரைக் கண்ணனின் ஆயிரம் பெயர்களையும் பிதற்றியபடி பெரிய தெருவழியே என்னை ஊரிலுள்ளாரெல்லாரும் பழித்தாலும் நான், நீண்டு அழகிய பனை மட்டையைக் கொண்டு மடலூர்வதை நிறுத்தமாட்டேன்-மடலூர்ந்தே தீர்வேன்.)
பெரிய திருமடல்
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்
உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல்
(தாடகையை கௌசிக முனிவருக்காக வதம் செய்ததும் நினைத்து முடியாத இப்படியான மற்றும் பல செயல்களையெல்லாம் ஊரறியப்பாடி பிரகரப்படுத்திக் கொண்டு பரகால நாயகியாகிய நான், முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக் கொண்டு மடலூர்வேன்.)
திருவாய்மொழி( நம்மாழ்வார்)
நாணும் நிறையும் கவர்ந்தென்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு,
சேணுயர் வானத் திருக்கும் தேவ பிரான்தன்னை,
ஆணையென் தோழீ. உலகுதோறலர் தூற்றி,ஆம்
கோணைகள் செய்துகுதிரியாய் மடலூர்துமே (திருவாய்மொழி ஐந்தாம் பத்து)
(என்னிடமிருந்த நாணத்தையும், அடக்கத்தையும் கொள்ளை கொண்டு என் மனதை ஈர்த்து நிற்கும் தேவபிரானை ஊர் தூற்றும் வண்ணம் அடங்காத பெண்ணாய் மடலூர்வேன். இது உறுதி)
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
- ↑ பனைமடலால் 'குதிரை' செய்ததாகப் பல உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மூலப் பிரதிகளில் 'மா' என்று காணப்படுகிறது. மா என்பது விலங்கின் பொதுப்படையான பெயர் எனவே 'மா' என்பது யானையாகவும் இருந்திருக்க கூடும் எனவும் சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Sep-2023, 18:10:07 IST