under review

நவநீதகிருஷ்ண பாரதியார்

From Tamil Wiki
பாரதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாரதி (பெயர் பட்டியல்)
நன்றி-விக்கிப்பிடியா

நவநீதகிருஷ்ண பாரதியார் (மார்ச் 1, 1889 - 1954) (க.சு. நவநீதகிருஷ்ண பாரதியார், பண்டிதமணி க.சு. நவநீதகிருஷ்ண பாரதியார், மாவை நவநீதகிருஷ்ணபாரதியார்) என்ற இவர் ஈழத்து புலவராகவும், தமிழறிஞராகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

இவர் தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம், மணல்ஂமேல்குடிக்கு அருகில் உள்ள கரவாட்டங்குடி என்ற ஊரில் சுப்பிரமணிய பாரதியார் - தைலம்மையார் ஆகியோருக்கு மார்ச் 1, 1889-ம் ஆண்டு பிறந்தார்.

ஆரம்பக்கல்வியை முடித்து சர்க்கரை ராமசாமிப்புலவர், பண்டிதர் அ. கோபாலையர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியமும், சங்க நூல்களும் கற்றுத்தேர்ந்தார். சிறிதுகாலம் அரசன் சண்முகனார் இவருக்கு தொல்காப்பியம் கற்பித்தார்.

தனிவாழ்க்கை

நவநீதகிருஷ்ண பாரதியார் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் தமிழாசிரியராக பணியில் அமர்ந்தார். பின்னர் திருவாவடுதுறை ஆதினத்தில் அம்பலவாணதேசிகருக்குத் திருமுறை ஆய்வுத் துணைவராகவும், திருவாரூர்க் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இலங்கை செல்வந்தரான சர் பொன்னம்பலம் இராமநாதன் வேண்டுகோளுக்கிணங்க 1917-ம் ஆண்டு இலங்கையில் உள்ள மாவிட்டபுரம் என்ற ஊருக்கு குடிபெயர்ந்து, சர். பொன்னம்பல ராமநாததுரை பெண்கள் கல்லூரியில் தமிழாசிரியராக பணியில் அமர்ந்தார். பின்னர் அங்கே உள்ள பரமேஸ்வரா கல்லூரியில் தலைமை தமிழாசிரியராக பணி புரிந்து ஓய்வுபெற்றார்.

இவரின் மனைவியின் பெயர் சௌந்தரநாயகி. இவருக்கு பத்மாவதி, பூர்ணானந்தா என்ற இருபிள்ளைகள். பத்மாவதி பூர்ணானந்தா சமூகப்பணியாளராக அறியப்பட்டார்.

பங்களிப்பு

நவநீதகிருஷ்ண பாரதியார் 1922-ம் ஆண்டு உலகியல் விளக்கம் என்ற நூலை எழுதி ச.பூபால பிள்ளை உரையோடு விபுலானந்த அடிகள் மூலமாக பதிப்பித்தார். இந்த நூல் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட மொழி வளர்ச்சிச் சங்கப் பண்டிதர் தேர்வுக்கு பாட நூலாக இருந்தது.

1929-ம் ஆண்டு புத்திளஞ் செழுங்கதிர்ச் செல்வம், பரம்புமலைப் பாரி, செழுங்கதிர்ச் செல்வம் ஆகிய நூல்களை எழுதினார். 1947-ம் ஆண்டு இளம் சிறார்கள் தமிழ் இலக்கணம் எளிதாக பயில பாரதீயம் என்ற நூலை மூன்று பாகங்களாக எழுதினார். மேலும் இவர் அப்போது மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வுகளில் தேர்வாளராகவும் தொண்டு புரிந்தார்.

இலங்கையில் ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி நடத்தினார். திருவாசகத்திற்கு ஒரு பேருரை நூல் ஒன்றை எழுதி, பதிப்பித்து வெளியிட்டார்.

விருதுகள்

  • நவநீதகிருஷ்ண பாரதியாருக்கு ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் பண்டிதமணி என்ற பட்டத்தை அளித்தது.
  • 1952-ம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆரிய திராவிட மொழிவளர்ச்சிச் சங்கம் புலவர்மணி என்ற பட்டத்தினை அளித்தது.

மறைவு

நவநீதகிருஷ்ண பாரதியார் டிசம்பர் 1954-ல் தம்முடைய 64-ம் வயதில் மறைந்தார்.

ஆவணம்

நவநீத கிருஷ்ண பாரதியாரின் நூல்கள் நூலகம் திட்டத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன (நூலகம் நவநீதகிருஷ்ண பாரதியார்)

இலக்கிய இடம்

நவநீதகிருஷ்ண பாரதியார் நவீனக்கல்விமுறையில் தமிழ்க்கல்வி இடம்பெற்ற தொடக்ககாலகட்டத்தில் மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் இலக்கணத்தை அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒருவர். மரபிலக்கியநூல்களையும் எழுதியுள்ளார்.

நூல்கள்

  • உலகியல் விளக்கம் (செய்யுள் தொகுப்பு), 1922
  • பாரதீயம் (3 பாகங்கள், இலக்கண நூல்), 1949
  • திருவாசகம் ஆராய்ச்சிப் பேருரை, தெல்லிப்பழை, 1954
  • பறம்புமலைப் பாரி (செய்யுள்கள்)
  • புத்திளஞ் செழுங்கதிர்ச் செல்வம் (செய்யுள்கள்)
  • திருவடிக் கதம்பம் (செய்யுள்கள்)
  • காந்தி வெண்பா (அச்சில் வெளிவரவில்லை)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Dec-2022, 13:54:12 IST