நல்விளக்கனார்
நல்விளக்கனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
நல்விளக்கனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். நல்விளக்கு என்னும் ஊரினை சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
நல்விளக்கனார் பாடிய பாடல் நற்றிணையில் 85-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியை மணம் செய்து கொள்ளாமல் இரவுக் காலத்தில் வந்து சென்று தலைவன் துன்பத்திற்கு உள்ளாக்குகிறான். அவன் வருங்காலத்து ஒருநாள் இவன் வராமல் இருப்பதே மேல் என மறைபொருள்படும்படி தலைவியிடம் தோழி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- குறிஞ்சி நிலத்தில் குறவன் முள்ளம்பன்றியை வேட்டையாடிக் கொண்டு வருவான். குறத்தி முள்ளம்பன்றியின் இறைச்சியையும் காட்டில் தான் அகழ்ந்தெடுத்த கிழங்குகளையும் தனது குடியினரோடு பகிர்ந்து கொள்வாள்.
- பிடி யானையானது தனது இளம் யானைக்குட்டியை புலியின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற மெல்ல நடந்து குட்டியை அரவணைத்துச் செல்லும்.
- காதலரை காணாத பெண்கள் உடலும் உள்ளமும் நலிந்து துன்பத்திற்கு உள்ளாவர். அவர்களை குறித்து ஊரார் புறம் பேசுவர்.
- உவமைகள்: குறத்தியின் கூந்தல் மணம் தேனின் மணத்துடன் ஒப்பிடப்பட்டது. தலைவியின் கண்கள் ஆய் மலருக்கும் தோள்கள் மூங்கிலுக்கும் உவமிக்கப்பட்டன.
பாடல் நடை
நற்றிணை - 85
- திணை: குறிஞ்சி
- கூற்று: தலைவன் வரவுணர்ந்த தோழி தலைவிக்குரைத்தது.
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்,
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி
வாரற்கதில்ல-தோழி!-சாரல்
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 09:56:58 IST