under review

திருவெழுகூற்றிருக்கை

From Tamil Wiki

திருவெழுகூற்றிருக்கை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஏழு படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக ஏறி நின்று அப்படிக்கட்டில் உள்ள எண்களால் தொகையிட்டுப் பாடி ஏறுவதும், இறங்குவதுமாகப் பாடுவது எழுகூற்றிருக்கை. இது சொல்லணிப் பாடல்.

இலக்கணம்

Ezu.jpg

எழுகூற்றிருக்கை எண் வரிசை( பொருளால்) ஒரு தேர் போல தோன்றும் அமைப்பு கொண்ட செய்யுள். மிகவும் முயன்று இயற்றப்படுவதால் 'மிறைக்கவி' எனவும் அழைக்கப்படுகிறது. வீரசோழியம், மாறனலங்காரம் முதலான நூல்களில் இதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இறைவனைப் பாடும்போது 'திரு' என்ற தகுதியோடு திருவெழுகூற்றிருக்கை எனப் பெயர் பெறுகிறது. பாடுபொருளுக்கு ஏற்றபடி பொருள் தருமாறு எண்கள் அமைக்கப்படுகின்றன. திருவெழுகூற்றிருக்கைச் செய்யுள்களைத் பொருத்திப் பார்க்கையில், அவற்றில் உள்ள சொற்கள் மேலும் கீழுமுள்ள பகுதிகளை முக்கோண வடிவில் நிரப்புகின்றன. 1 முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த் தட்டுபோல் மேலே செல்வதும் கீழே செல்வதுமாக அமைந்திருக்கும் பாடல்.ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321, என ஏழு வரை சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடைகிறது.

பாடலின் வரிகளில் 1,2,3,4,5,6,7 எண்களைக் குறிக்கும் சொற்களை மேலே குறிப்பிட்டுள்ள வரிசைப்படி எழுதி மொத்தத்தில் அது ஒரு கருத்தைக் குறிப்பது எழு கூற்றிருக்கை

நூல்கள்

திருவெழுகூற்றிருக்கை என்னும் பெயரில்

ஆகியோர் பாடிய பாடல்கள் உள்ளன.

நக்கீரதேவ நாயனார் பாடல்

திருஎழுகூற்றிருக்கை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. பத்தாம் நூற்றாண்டு நக்கீரதேவ நாயனார் பாடிய நூல்.

பாடல் அமைப்பு விளக்கம்:

  • ஓருடம்பு ஈருரு ஆயினை (1, 2)
  • ஒன்று புரிந்து ஒன்றி ஈரிதழ்க் கொன்றை சூடினை. மூவிலைச் சூலம் ஏந்தினை (1, 2, 3)
  • இருகோட்டு ஒருமதில் மூவெயில் நாற்றிசை முரண் அரண் செகுத்தனை (1, 2, 3, 4)
  • ஒன்று நினைவோர்க்கு உறுதி, இரண்டு நினைவோர்க்கு முந்நெறி உலகம் காட்டினை. நான்கென ஊழி தோற்றினை. ஐந்தலை அரவம் அசைத்தனை (1, 2, 3, 4, 5)

இப்படி ஏழுவரை அடுக்கிக் காட்டிக்கொண்டே செல்லும் இந்தப் பாடல் பின்னர் ஏழின் முகட்டிலிருந்து (7, 6, 5, 4, 3, 2, 1) இறங்கித் தொகுத்தும், பின்னர் முறையே (6, 5, 4, 3, 2, 1) என்கிற முறைப்படி (2, 1) என முடியும் வரையில் செல்கிறது. கடைசியில் 'இருகண் மொந்தை ஒருகண் கொட்ட’ நடனமாடினான் (மொந்தை - உடுக்கை) என முடிகிறது.

அருணகிரிநாதர் பாடல்
  • அருணகிரிநாதர் பாடிய திரு எழுகூற்று இருக்கை 27 வரிகள் கொண்டது[1]. இதில் 'ஏரகத்து இறைவன்' என்று சுவாமிமலை முருகனைப் புலவர் வாழ்த்துகிறார்.

ஓருரு வாகிய தாரகப் பிரமத்
  தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
    ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை
இருபிறப் பாளரி னொருவ னாயினை
  ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
    மூவரும் போந்து இருதாள் வேண்ட
       ஒருசிறை விடுத்தனை
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
  முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
  ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
  மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
    நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
       அறுகு சூடிக் கிளையோ னாயினை
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
  முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
    கொருகுரு வாயினை
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
  முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
    ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
       எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
  நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
  ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
    ஏரகத் திறைவ னென இருந்தனையே.

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்புகள்


✅Finalised Page