under review

தர்மு பிரசாத்

From Tamil Wiki
பிரசாத் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பிரசாத் (பெயர் பட்டியல்)
தர்மு பிரசாத்

தர்மு பிரசாத் (பிறப்பு: 1987) ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர். புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசிக்கிறார். ஆக்காட்டி என்ற இதழின் தொகுப்பாசிரியராக செயல்பட்டார். ஆக்காட்டி பதிப்பகத்தின் மூலம் புத்தகங்கள் வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

பிறப்பு, கல்வி

தர்மு பிரசாத் இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தர்மலிங்கம், அகலிகை இணையருக்கு 1987-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒரு தங்கை, மூன்று தம்பிகள். ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தில் பள்ளிக்கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

தர்மு பிரசாத் 2017-ல் அகல்யாவை மணந்தார். மகள் இமயா. தர்மு பிரசாத் 2009 முதல் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசிக்கிறார். திருமணத்தின் பின் இத்தாலியின் சிசில் தீவில் வசிக்கிறார்.

இதழியல்

தர்மு பிரசாத் 2014-ல் பிரான்சில் தொடங்கப்பட்ட 'ஆக்காட்டி' இதழின் தொகுப்பாசிரியர். திறனாய்வுக் கட்டுரைகளூடாக இலக்கிய உரையாடல் செய்வதும், இலக்கியம் கோரும் மீறிச் செல்லலையும், நுட்பத்தையும், உள்விரிவையுமுடைய படைப்புகளைக் கவனப்படுத்துவதையும் ஆக்காட்டி தன் இதழின் நோக்கமாகக் கொண்டது. பத்தொன்பது இதழ்கள் வெளியானது. 2020-ல் இதழ் நின்றுபோனது.

பதிப்பியல்

தர்மு பிரசாத் ஆக்காட்டிப் பதிப்பகத்தின் வழியாக நூல்கள் வெளியிட்டு வருகிறார். இப்பதிப்பகத்தின் வழியாக வெளியான முதல் நூல் 'மெடூசவின் முன் நிறுத்தப்பட்ட காலம்' என்ற சிறுகதைத் தொகுப்பு.

இலக்கிய வாழ்க்கை

தர்மு பிரசாத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'ஆனைக் கோடரி' 2020-ல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்தது. ஆதர்ச எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், பிரமிள், லியோ டால்ஸ்டாய், ஐசக் பாஷவிஸ் சிங்கர், ஆல்பெர் காம்யூ ஆகியோரைக் குறிப்பிடுகிறார். தன் வழிகாட்டிகளாக கவிஞர் சுகன், ஷோபாசக்தி ஆகியோரைக் குறிப்பிடுகிறார். இவரின் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் தமிழினி, ஆக்காட்டி, புதியசொல், அகழ், வனம், புதியசொல், மணல்வீடு ஆகிய இதழ்களில் வெளியாகின.

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • ஆனைக் கோடரி
தொகுப்பாசிரியர்
  • இமிழ் (புலம்பெயர் ஈழச் சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jun-2024, 19:23:15 IST