under review

தத்துவராயர்

From Tamil Wiki
தத்துவ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தத்துவ (பெயர் பட்டியல்)
தத்துவராயர் (நன்றி: விகடன்)
எறும்பூர் - தத்துவராயர் சுவாமிகள் கோயில்

தத்துவராயர் (Tattuvarayar) (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) தமிழறிஞர், சைவ தத்துவ ஞானி. வேதாந்தி. வடமொழி வேதாந்த நெறிக்குத் தமிழில் இலக்கணம் கண்டவர். பக்தி மரபில் நின்று அத்வைதத்தைப் பாடியவர். இவரின் சசிவண்ண போதம் என்ற நூல் தமிழ்நாட்டில் வேதாந்தம் கற்க விரும்புபவர்களுக்கு அடிப்படை வேதாந்த நூலாக உள்ளது. இவர் சுத்த தேக ஸித்தி எனும் சித்து முறையைக் கைக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

தத்துவராயர் சோழநாட்டின் வீரை மாநகரில் பிறந்தவர். அவரது மாமன் சொருபானந்தர். இருவரும் வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லவர்கள். பிரம்மச்சாரிகளாக இருந்து வேதாந்த சாஸ்திரம் யாவையும் படித்து அவற்றின் பொருளை ஆராய்ந்து தத்துவ பரிசீலனை செய்துவந்தனர். தத்துவத்தின் வழியே ஆன்மிகத்தை விளக்கியதால் ”தத்துவராயர்” எனப்பெயர் பெற்றார்.

ஆன்மிக வாழ்க்கை

தத்துவராயரும் சொரூபானந்தரும் ஞான குருவுக்கான தேடலில் இருந்தனர். வடக்கும் தெற்குமாகப் பிரிந்து குருவைத் தேடுவது எனவும் முதலில் குருவைக் காண்பவர் அக்குருவினிடத்தில் கற்ற வித்தையை மற்றவருக்குக் கற்றுக் கொடுக்கலாம் எனவும் தீர்மானித்தனர். சொரூபானந்தர் தென் திசையை நோக்கிச் சென்றார். காவேரி நதியின் கரை வழியாக திருச்சி சமயபுரம் தாண்டி மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் திருப்பைஞ்ஞீலி அருகே கோவர்த்தனம் என்ற ஊரில் தன் குரு இருப்பதை உணர்ந்து கண்ணீர் மல்கினார். மக்களின் உதவியால் அங்கு ஒரு புதரில் இருந்த சிவப்பிரகாசரை சந்தித்தார். சிவப்பிரகாசர் தானும் அவருக்காகவே இவ்வளவு நாள் காத்திருந்ததாகச் சொல்லி சொரூபானந்தரை தன் சீடனாக ஏற்று ஞான உபதேசம் அளித்தார். வடக்கு நோக்கிச் சென்ற தத்துவராயர் குரு கிடைக்காததால் தெந்திசை திரும்பி தன் மாமன் சொரூபானந்தரை குருவாக ஏற்றுக் கொண்டார்.

தத்துவராயர் தனக்கு ஞான உபதேசம் வேண்டியபோது சொரூபானந்தர் அவர் மேலும் பக்குவமடைந்து காலம் கனிவதற்காக வேண்டி தத்துவராயரிடம் கோபம் கொண்டு விலகியிருந்தார். தனது குருவின் அருளைப் பெற வேண்டி சொரூபானந்தர் மீதும், அவரது குரு சிவப்பிரகாசர் மீதும் துதிப்பாடல்களாக சிவப்பிரகாச வெண்பா, திருத்தாலாட்டு, பிள்ளை திருநாமம், மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலிப்பா, சிலேடையுலா, கலிமடல், அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி போன்ற 18 சிற்றிலக்கியங்களைப் பாடினார். இவை 'அடங்கன்முறை' என அறியப்படுகின்றன. சொரூபானந்தர் இத்துதிமாலைகள் அனைத்தும் சாஸ்திரம் மிகவும் கற்றவர்களுக்கும், உனக்குமே உதவுமேயன்றி சாதாரண மக்களுக்கு உதவாது எனப் பொருள்பட 'கூந்தலை உடையவன் வாரி முடிக்கிறான் (தமிழில் வல்லவன் பாடுகிறான்) என்று கூறியதாகக் கூறப்படுகிறது. உலகுக்கு உதவும் வகையில் எளிய நடையில் பாடு என்ற குருவின் உத்தரவுக்கேற்ப மோகவதைப் பரணியில் ஒரு படலமாக சசிவன்ன போதம் பாடினார் தத்துவராயர். சசிவண்ண போத பாகத்தை எண்ணி குரு மகிழ்ந்தார். இந்த சசிவண்ண போதம் நூலே தமிழ்நாட்டில் வேதாந்தம் கற்க விரும்பும் ஒவ்வொருவரும் அடிப்படையாக கற்கும் வேதாந்த நூலாக உள்ளது. கோவிலூர் வேதாந்த மடத்தில் தமிழில் வேதாந்தம் கற்க விரும்புபவர்கள் அடிப்படையாக 16 நூல்கள் படிக்க வேண்டும். அதில் ஒரு முக்கிய நூல் தத்துவராயர் எழுதிய சசிவன்னபோதம்.

மாணவர்கள்
  • ராமலிங்க வள்ளலார் தத்துவராயரைத் தமது ஞான குருவாக ஏற்று, அவரிடத்தில் சூட்சும மாகப் பல வித்தைகளை, குறிப்பாக ஒளி தேகம் பெறும் வித்தையை அறிந்ததாக நம்பப்படுகிறது.
  • பெ. சுந்தரம் பிள்ளைக்கு சைவ அனுபூதி நெறியை உணர்த்தியவரும், ரமாத்துவித சைவஒருமை நெறிக்கு வித்திட்டவருமான குரு கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் தத்துவராயரின் ஞானவழிப் பரம்பரையைச் சேர்ந்தவர்.
  • பொதிகைச் சித்தர் மரபு நாராயண தேசிகர் தத்துவராயரின் வேதாந்த நெறி வழியில் வந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

தத்துவராயர் தத்துவப் பொருளில் 18 மரபு வகை சிற்றிலக்கியங்கள் பாடினார். அவை தனது குரு சொரூபானந்தர் மற்றும் அவரது குரு சிவப்பிரகாசர் பற்றிய துதிப்பாடல்களுடன் வேதாந்தக் கருத்துகளையும் கொண்டிருந்தன. 'பாடுதுறை' என்னும் நூலில் 138 தலைப்புகளில் 1140 பாடல்கள் உள்ளன. எளிய நாட்டுப்புறப் பாடல் பாணியில் பல பாடல்களை இயற்றினார். இப்பாடல்களில் அன்றைய தமிழ்நாட்டு நாட்டுப்புற விளையாட்டுக்கள், இசைக்கருவிகள், கூத்து வகைகள், சாதிப் பெயரில் பாடல் வகைகள் இடம் பெற்றன, பொதுமக்களின் மரபிலிருந்தும், வாய்மொழி வழக்காறுகளிலிருந்தும் பாடல் வடிவமாக வேதாந்தத்தை கொண்டு சென்றவர் தத்துவராயர். பாம்பாட்டி, பிடாரன், பகடி, பகவதி, பறை, குரவை, கழங்கு, ஊசல், போன்ற இசை கூத்து பாடல் வகைகள் பாடுதுறையில் இருக்கின்றன. தச்சன் பாட்டு, செட்டியார் பாட்டு, பிடாரன் பாட்டு, அம்பட்டன் பாட்டு, வண்ணான் பாட்டு, முதலியார் பாட்டு, பார்ப்பானும் பறைச்சி பாட்டு போன்ற தொழில் அடிப்படையில் உருவான சாதிப் பெயர்களை தலைப்பாகக் கொண்ட பாட்டுகளும் அடங்கும். தத்துவராயர் காலத்தில் சாதி வேறுபாடுகள் மிகுந்திருந்ததைக் காணமுடிகிறது. சாதி வேறுபாடின்றி, அனைவரும் சமம் என்பதே அத்வைதம் என்ற தன் கருத்தை முன்வைக்கிறார்.

தத்துவராயர் பாடல்களில் நாம சங்கீர்த்தன முறையில், சிவசிவ, சரணம் சரணம்,, நமோநம போன்ற ஈற்றடிச் சொற்கள் வருமாறு அமைந்த பாடல்கள் இசைத்தன்மையில் பஜனை மரபு தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தன.

தத்துவராயர் சூத சங்கிதையில் உள்ள 'ஈசுவர கீதை'யை தமிழில் மொழிபெயர்த்தார்.

திரட்டுகள்

தத்துவராயர் தொகுத்த திரட்டு நூல்கள் சிவப்பிரகாச பெருந்திரட்டு, குறுந்திரட்டு. சிவப்பிரகாச பெருந்திரட்டில் தமிழில் சங்க இலக்கியம் முதல் தத்துவராயர் காலம் வரை இருந்த அத்வைத, வேதாந்த நூல்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன (அவற்றுள் பல நூல்கள் காணாமல் ஒழிந்தன). உலகாயதம் முதல் வேதாந்தம் வரை பல்வேறு ஞான மார்க்கங்களும், கண்டன மண்டனங்களும், யோகலட்சணங்களும், ஞானத்தின் சாசனங்களின் சொரூபமும், குருபத்தியின் பெருமையும் இத்திரட்டுகளில் கூறப்பட்டுள்ளன.

சசிவன்ன போதம்

சசிவன்னன் தனது தீவினையினால் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டான். அவனது தந்தை பாகயஞ்ஞன் நந்திபாராயணர் என்னும் ஞானியிடம் அழைத்துச் சென்றான். சசிவன்னன் நந்திபாராயணருக்குப் பணிவிடை செய்து தீரா நோயிலிருந்து பூரண குணமடைந்த வரலாறும், சசிவன்னனுக்குப் பிறவிப் பிணி நீங்குவதற்காக நந்திபாராயணர் அருளிய ஞான உபதேசமும் 110 பாடல்களில் பாடப்பட்டுள்ளன. சசிவன்ன போதம் தமிழ்நாட்டில் வேதாந்தம் கற்பவருக்கான அடிப்படை நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

விவாதம்

தத்துவராயர் இயற்றிய அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி இரு நூல்களும் சார்ந்தாரின் அஞ்ஞானத்துடனும், மோகத்துடனும் சொரூபானந்தர் போரிட்டு வதம் செய்வதை பரணி நூலுக்கு உரிய இலக்கண அமைதியோடு பாடிய நூல்கள்.

பரணி என்னும் சிற்றிலக்கியம் பகைவர்களை வென்ற அரசனுக்காகப் பாடப்படுவது. துறவியான சொரூபானந்தர் மேல் அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி போன்றவற்றைப் பாடியது தகாது என வாதிட்ட சில அறிஞர்களின் குற்றச்சாட்டுக்கு, தன்னை நாடியவர்களின் மனதில் இருக்கும் அகங்காரம், அஞ்ஞானம் போன்ற யானைகளை அழித்ததால், சொரூபானந்தரும் பரணிகளின் பாட்டுடைத் தலைவராகத் தக்கவரே, அகந்தையை வெல்வது பகைவரை வெல்வதைவிடவும் கடினமானது என்று அவர்களுக்கு பதில் கூறினார் தத்துவராயர்.

மதிப்பீடு

தமிழ்நாட்டில் அத்வைதத்தை வளர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் தத்துவராயர். அத்வைதத்தை வடமொழியின் துணைகொண்டு மட்டுமே ஓதி உணர முடியும் என்று நாட்டுமொழிகளின் துணை கொண்டு ஓதி உணரலாகாது என்ற கொள்கையும் முன்பு இருந்தது. அதை மாற்றியவர் தத்துவராயர்.

சமாதி

தத்துவராயர் சமாதி

தத்துவராயர் ஆடி மாதம் சதய நட்சத்திரத்தன்று சிதம்பரத்துக்கும், விருத்தாசலத்துக்கும் நடுவிலுள்ள எறும்பூர் என்ற இடத்தில் சமாதியடைந்தார். எறும்பூர் தத்துவராயர் கோயிலில் ஒவ்வொரு ஆடி சதயத்தன்றும் அவருக்கு குருபூஜை நடைபெறுகிறது.

பாடல் நடை

சசிவன்ன போதம்

அளவி லகந்தை யாமை யபரிமிதமுள
தவாவு நிறைந்த வாழ மறிய வரியது,
களவு நெருங்கு பாரு மலையு முடையது
கலக விடங்கண் மேவு இருமி நெளிவ

அஞ்ஞவதைப் பரணி

ஒழியாம லீசன் ஒளியாகி மேவ
வுணராவன் மூடு ஒரு மாயையால்
விழியாத லோக ரழியாத ஞான
விழிமேலலான வழி மேவவே

தத்துவ சரிதை

மூன்றா முருவு முதலுருவு மெவ்வுருவுங்
கோன்றானே யான குணக்குன்றே தோன்றி
யிறக்குமா செய்தா ரெனையொழிய வெல்லா
மறக்குமா செய்தார் மலை

நூல் பட்டியல்

  • சிவப்பிரகாச வெண்பா
  • தத்துவாமிர்தம்
  • சுரக்கீதை,
  • பிரமகீதை (சொரூபானந்தர் சித்தி)
  • பாடுதுறை
  • குறுந்திரட்டு
  • பெருந்திரட்டு
  • அஞ்ஞைவதைப் பரணி (தத்துவக் காட்சி)
  • மோகவதைப் பரணி
  • அமிர்த சாரம்(தத்துவ தரிசனம்)
  • திருத்தாலாட்டு (தத்துவப் பிரகாசம்)
  • பிள்ளைத் திருநாமம்(தத்துவ நிலையம்)
  • வெண்பா அந்தாதி(தத்துவ விளக்கம்)
  • கலித்துறை அந்தாதி(தத்துவ சாரம்)
  • சின்னப்பூ வெண்பா (தத்துவ சரிதை)
  • தசாங்கம்(தத்துவ போதம்)
  • இரட்டை மணிமாலை(தத்துவ தீபம்)
  • மும்மணிக்கோவ(தத்துவ ரூபம்)
  • நான்மணிமாலை (தத்துவ அனுபவம்)
  • கலிப்பா(தத்துவ சித்தி)
  • ஞானவினோதன் கலம்பகம்(தத்த்துவ ஞானம்)
  • உலா(தத்துவ காமியம்)
  • சிலேடை உலா (தத்துவ வாக்கியம்)
  • நெஞ்சுவிடு தூது(தத்துவ நிச்சயம்)
  • கவிமடல் (தத்துவத் துணிவு)
மொழியாக்கம்
  • ஈசுர கீதை(சிவப்பிரகாசர் சித்திமு

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jun-2024, 10:04:37 IST