under review

சு. சாலமன் பாப்பையா

From Tamil Wiki
சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா குடும்பம்
சாலமன் பாப்பையா முதுகலைப் பட்டம்
சாலமன் பாப்பையா இளமையில்
சாலமன் பாப்பையா திருமணம்
சாலமன் பாப்பையா மனைவியுடன்

சு. சாலமன் பாப்பையா (சுந்தரம் சாலமன் பாப்பையா; பிறப்பு: பிப்ரவரி 22, 1936) தமிழறிஞர். எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர். பதிப்பாசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். திரைப்படங்களில் நடித்தார். பல்வேறு இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினார். தனது இலக்கியப் பங்களிப்புக்காக இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றார்.

சாலமன் பாப்பையா (படம் நன்றி விகடன்)

பிறப்பு, கல்வி

சாலமன் பாப்பையா, மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில், பிப்ரவரி 22, 1936 அன்று, சுந்தரம்-பாக்கியம் இணையருக்குப் பிறந்தார்.

ஆரம்பக் கல்வியை மதுரை ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியிலும், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைப் பள்ளியிலும் படித்தார். உயர்நிலைக் கல்வியை மதுரை தல்லாகுளம் அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்கேயே புது முக வகுப்பு படித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சாலமன் பாப்பையா - குடும்பத்துடன் (இளம் வயதுப் படம்: நன்றி குங்குமம் இதழ்)

தனி வாழ்க்கை

சாலமன் பாப்பையா, அமெரிக்கன் கல்லூரியில் பயிற்றுநராக(tutor) மூன்றாண்டுகள் பணியாற்றினார். பின் தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

மனைவி ஜெயாபாய் ஆசிரியை. மகன், தியாகமூர்த்தி. மகள் விமலா.

இலக்கிய வாழ்க்கை

பேச்சாளர்

சாலமன் பாப்பையா பள்ளியில் படிக்கும்போது பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசினார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் போன்றோரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டார். அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றினார். குன்றக்குடி அடிகளார், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்றோரது பேச்சரங்குகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலமும், சா. கணேசன், குன்றக்குடி அடிகளார் போன்றோரது சொற்பொழிவுகளைக் கேட்டும், தொடர் வாசிப்புப் பயிற்சியாலும், தன்னை ஒரு பேச்சாளராக வளர்த்துக் கொண்டார்.

முதல் மேடைப் பேச்சு, 1961-ல், புதுக்கோட்டையில் நிகழ்ந்தது. ’பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா?’ என்ற விவாதத் தலைப்புகளில், ‘புதுமைக் கவிஞனே’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே பட்டிமன்ற நிகழ்வுகள் பலவற்றில் பேச்சாளராகக் கலந்துகொண்டார். பட்டிமன்ற நடுவராக உயர்ந்தார். பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற தன் குழுவினருடன் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை எனப் பல வெளிநாடுகளில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். 7000-க்கு மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தினார்.

கட்டுரைகள்

சாலமன் பாப்பையா, பணிகளினூடே இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. திருக்குறளுக்கு உரை விளக்கம் எழுதினார். மாநாட்டு மலர்கள் பலவற்றிலும் அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர், குங்குமம், குமுதம் போன்ற இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இவருடைய ‘உரைமலர்கள்’ நூல் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டது.

தமிழாய்வு

சாலமன் பாப்பையா புறநாநூறு பாடல்கலை புதிய வரிசைப்படி உரையெழுதி வெளியிட்டார். அகநாநூறு மூன்று தொகுதிகளாக உரை எழுதினார். சாலமன் பாப்பையாவின் இலக்கிய அணுகுமுறை ரசனை சார்ந்த ஆய்வுநோக்கு கொண்டது. மு. வரதராசனை முன்னோடியாகக் கொண்டது.

நாடக வாழ்க்கை

சாலமன் பாப்பையா, அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றியபோது பல நாடகங்களை எழுதினார். இயக்கினார். நடித்தார்.

திரை வாழ்க்கை

சாலமன் பாப்பையா புது வருஷம், எஸ். மேடம், டூயட், பாய்ஸ், முதல்வன், சிவாஜி போன்ற திரைப்படங்களில் நடித்தார்

ஊடகம்

சாலமன் பாப்பையா, சன் தொலைக்காட்சியில், ‘வணக்கம் தமிழகம்’ நிகழ்வில், தினந்தோறும் காலையில் திருக்குறளுக்கு விளக்கமளித்தார். நாலடியார், நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம் போன்ற இலக்கியங்கள் குறித்து உரையாற்றினார். ‘ஔவையின் அமுதமொழி’ நிகழ்வின் மூலம் ஔவையின் பாடல்களுக்கு விளக்கமளித்தார். தொலைக்காட்சிப் பட்டிமன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். திருச்சி, மதுரை வானொலி நிலையங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றினார். சங்க இலக்கியம், திருக்குறள் விளக்கம் போன்ற உரை விளக்க நிகழ்ச்சிகளை நடத்தினார்.

பொறுப்புகள்

  • திருக்குறள் கழகத் தலைவர்
  • மதுரை கம்பன் கழகத் தலைவர்

அறப்பணிகள்

  • சாலமன் பாப்பையா தன் பட்டிமன்றம் வழியாக பல்வேறு கல்வி- அறக்கொடை நிறுவனங்களுக்கு நிதி திரட்ட உதவியுள்ளார்
  • 2023ல் தான் பயின்ற மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளிக்கு கட்டிட நிதிக்காக ரூ 20 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.
சாலமன் பாப்பையா - பத்மஸ்ரீ விருது

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய முத்தமிழ் பேரறிஞர் பட்டம்
  • கோவை நன்னெறிக்கழகம் வழங்கிய தமிழறிஞர் விருது
  • மதுரை சதங்கை அகாடமி வழங்கிய சொல்வேந்தர் விருது
  • நாகை தமிழ் இலக்கிய மன்றம் வழங்கிய நகைச்சுவை நாவலர் பட்டம்
  • அமெரிக்கா பயாகிராபிகல் நிறுவனம் வழங்கிய சிறந்த மனிதர் விருது
  • சென்னை முத்தமிழ்ப் பேரவை அளித்த இயற்செல்வம் விருது
  • ஆஸ்திரேலியத் தமிழ் அமைப்புகள் இணைந்து வழங்கிய பட்டிமன்றப் பேரரசு பட்டம்
  • மதுரை தமிழ் இசைச் சங்கம் வழங்கிய முத்தமிழ்ப் பேரறிஞர் விருது
  • திருக்குறள் செம்மல் விருது

இலக்கிய இடம்

சாலமன் பாப்பையா, இலக்கியம் மட்டுமே பேசப்பட்டுக் கொண்டிருந்த பட்டி மன்ற மேடைகளில் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் பேசப்படக் காரணமானார். குடும்பம், உறவுகள், சமூகம் சார்ந்த பல புதிய தலைப்புகளில் தன் குழுவினருடன் ஊர்தோறும் சென்று பேசினார். பட்டிமன்றங்களின் சிறப்பை, அதிகம் கற்காதவர்களையும் அறியச் செய்தார். பட்டிமன்றங்களை நோக்கிப் பாமரர்களை ஈர்த்த முன்னோடித் தமிழ் அறிஞர்களுள் ஒருவராகச் சாலமன் பாப்பையா மதிப்பிடப்படுகிறார்.

தமிழாய்வாளராக சாலமன் பாப்பையா திருக்குறள், புறநாநூறு அகநாநூறு ஆகியவற்றுக்கு எழுதிய உரைகள் குறிப்பிடத்தக்கவை. கம்பன் ஆய்வுகளை பதிப்பித்தவராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

கட்டுரை நூல்கள்
  • பட்டிமன்றமும் பாப்பையாவும் (தன்வரலாறு)
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை (திறனாய்வு நூல்)
  • உரைமலர்கள் (திறனாய்வுக் கட்டுரைகள்)
  • சிந்தனைக் கதிர் (திறனாய்வுக் கட்டுரைகள்)
  • திருக்குறள் உரை
  • புறநானூறு புதிய வரிசை வகை
  • அகநானூறு - மூன்று தொகுதிகள்
பதிப்பித்தவை
  • கம்பன் - பன்முகப் பார்வை
  • கம்பனைத் தேடி...
  • கம்ப வனத்தில் ஓர் உலா
  • அவர்கள் கண்ட ராமன்
  • இவர்கள் நோக்கில் கம்பன்
  • கமபனில் உலகியல்
  • கம்பனின் தமிழமுது
  • கம்பன் அமுதில் சில துளிகள்

உசாத்துணை


✅Finalised Page