under review

சங்கரலிங்கம் ஜெகந்நாதன்

From Tamil Wiki
சங்கரலிங்கம் ஜெகந்நாதன்

சங்கரலிங்கம் ஜெகந்நாதன் (1914 - பிப்ரவரி 12, 2013) காந்தியவாதி, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். சமூகச் செயற்பாட்டாளர். சமூக நீதிக்காகவும், மானுடத்தின் நீடித்த நிலையான வளர்ச்சிக்காகவும் தன் மனைவி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் இணைந்து செயலாற்றியவர். லாப்டி (LAFTI: Land for Tillers’ Freedom) இயக்கத்தின் மூலம் நிலமற்ற விவசாயிகளுக்கு, மக்களுக்கு நிலக்கிழார்களிடமிருந்து நிலங்கள் கிடைக்க வகை செய்தவர்.

கிருஷ்ணம்மாள், சங்கரலிங்கம், மகன் பூமி, மகள் சத்யா

பிறப்பு, கல்வி

ஜெகந்நாதன் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூருக்குச் செல்லும் சாலையில் செங்கற்பட்டை என்ற கிராமத்தில் 1914-ல் பிறந்தார். இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கல்லூரிப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார்.

கிருஷ்ணம்மாள், சங்கரலிங்கம் ஜெகந்நாதன் தம்பதியினர்

தனிவாழ்க்கை

காந்தியவாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் -ஐ ஜூலை 6, 1950-ல் மணந்தார். காந்தி, விவேகானந்தர், பரமஹம்சரின் கருத்துக்களால் பாதிக்கப்பட்டு சமூகசேவைகளில் ஈடுபட்டார். திருமணத்திற்குப் பின் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் இணைந்து பல சமூகப்பணிகளில் ஈடுபாட்டார். மகன் பூமிகுமார். மகள் சத்யா. இருவரும் மருத்துவர்கள்.

சுதந்திரப் போராட்டம்

ஜெகந்நாதன் 1942-ல் 'வெள்ளயனே வெளியேறு' இயக்கத்தின்போது மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஊர்வலம் சென்றதால் பதினைந்து மாதச் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலையாகி வெளியே வந்து ரகசியமாக நடைபெற்ற அனைத்து இந்திய சத்தியாகிரகி மாநாட்டில் கலந்து கொண்டார். கிராமம் கிராமமாகச் சென்று ரகசிய கூட்டங்களை நடத்தி சுதந்திரப் போராட்டத்திற்கான ஆட்களைத் திரட்டினார். மாவட்ட அளவிலான கூட்டங்கள் முற்றுப் பெற்ற பின் மாநில அளவிலான கூட்டத்திற்கான பொறுப்பு சங்கரலிங்கம் ஜெகந்நாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. 1944-ல் ஆங்கிலேய போலீசாரின் கடுமையான கண்காணிப்பையும் மீறி மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றி கோஷமிட்டார். இதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

காந்தியவாதி

ஜெகந்நாதன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது காந்தியவாதியான டாக்டர் பாஸ்டரின் பேச்சாலும், தோற்றத்தாலும் ஈர்க்கப்பட்டு ஆங்கிலேய ஆடைகளை தவிர்த்து கதராடைக்கு மாறினார். அவர் பெங்களூரில் நடத்திக் கொண்டு வந்த 'கிறிஸ்து குலம்' என்ற ஆசிரமத்தைப் பற்றி கேள்விப்பட்டார். கல்லூரிப்படிப்பை விட்டுவிட்டு காந்தி ஆசிரமத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி கேட்டு காந்திக்குக் கடிதம் எழுதினார். தமிழ்நாட்டில் ராஜாஜி ஆரம்பிக்கப்போகும் ஆசிரமத்திற்கு தன் மகன் தேவதாஸ் வரவிருப்பதாகவும் அங்கு இணைந்து கொள்ளும்படியும் காந்தி அறிவுறுத்தியதால் ராஜகோபாலாச்சாரியாருக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து மறுமொழி வரவில்லை. எனவே டாக்டர் பாஸ்டரின் ஆசிரமத்தில் சென்று சேர்ந்தார்.

அதன்பின் அமெரிக்க மிஷனரியில் பணிபுரிந்தவரான கெய்தான் (Ralph Richard or RR Keithahn ) ஆரம்பித்த ‘தீன சர்வ சேவா சங்கம்’ ஆசிரமத்தில் சேர்ந்தார். பெங்களூரின் சேரிப்பகுதி மக்களுக்கு அதன் மூலம் சேவை செய்தார். ஆசிரமத்தின் சார்பில் மாணவர்களுக்கு மாலையில் கல்வி கற்பித்தார். மது விலக்கு பிரச்சாரம் செய்தார். 1936-ல் நடைபெற்ற மதுவிலக்கு மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பின் இந்தியா முழுவது நடந்து பயணம் செய்தார். ஜப்பானிய காந்தி என்று அழைக்கப்பட்ட கட்வா (Toyohiko Kagawa) சேரிக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்ட தீர்மானித்திருந்ததால் மீண்டும் பெங்களூர் ஆசிரமம் வந்தார். அந்தப் பணியின் உந்துதலால் மதுரை வந்து 'ஸ்டூடண்ட் ஹோம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி சேவைகள் செய்தார்.

சுதந்திரத்திற்குப் பின்

ஜெகந்நாதன் சுதந்திரத்திற்குப் பின் கெய்தானுடன் காந்தியின் டால்ஸ்டாய் பண்ணை போல மாதிரி தன்னிறைவு அமைப்பு ஒன்றை உருவாக்கச் செயல்பட்டார். கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்த பல முயற்சிகள் செய்தார். இந்திய தேசிய தொழிற்சங்கத்தை ஏற்படுத்தினார். நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இறால் பண்ணைகளை எதிர்த்து அறப்போராட்டங்களை நடத்தினார். ‘அசோஷியேஷன் ஆஃப் சர்வோதயா ஃபார்ம்ஸ்’ என்ற அமைப்பின் தலைவராக 1993 வரை சங்கரலிங்கம் ஜெகந்நாதன் இருந்தார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன், கெய்தானுடன் சங்கரலிங்கம் ஜெகந்நாதன்
நில மீட்பு

மதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள கள்ளஞ்சேரி என்ற இடத்தில் விவசாயம் செய்துவந்தவர்களைப் பணக்காரர்கள் விரட்டியடித்தனர். சங்கரலிங்கம் ஜெகந்நாதன் அங்கு சென்று போராடி நிலத்தை இழந்தவர்களுக்கு அதை மீட்டுக் கொடுத்தார்.

1950-1952 ஆண்டுகளுக்கிடையே சங்கரலிங்கம் ஜெகந்நாதன் உத்திரப்பிரதேசத்தில் பூதான் இயக்கத்திற்காக தங்கள் நிலத்தில் ஆறில் ஒரு பங்கினை நிலமற்றவர்களுக்கு நிலக் கொடையாக வழங்க நிலப்பிரபுக்களைக் கேட்டுக்கொண்டு வினோபா பாவேவுடன் பாத யாத்திரையாக சென்றார். புதிதாகத் திருமணமான தன் மனைவியையும் பாதயாத்திரையில் கலந்து கொள்ளச் செய்தார். அப்போது நிலங்களை தானமாகப் பெற்று ஏழைகளுக்கு தானமாக வழங்கினார். பின் தமிழ்நாட்டில் அவ்வியக்கத்தை தனியாக முன்னெடுத்தார். வலிவலம் கிராமத்தில் பெருநிலக்கிழார் ஒருவரால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கிராம மக்கள் மூலமே மீட்டுக் கொடுத்தார். கோணியம்பட்டியில் கடன் கொடுத்து நிலத்தை கையகப்படுத்திக் கொண்ட நிலக்கிழாரிடமிருந்து மக்களுக்கு நிலத்தை மீட்டுக் கொடுத்தார். கீழத் தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று 10 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு அளித்தார்.

டிசம்பர் 25, 1968-ல் நாகைமாவட்டம் கீழ்வெண்மணியில் நாற்பத்தியிரண்டு விவசாயிகள் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு சர்வோதையா அமைப்பிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி 'உழுபவனின் நில உரிமை இயக்கம்'(லாப்டி) (LAFTI: Land for Tillers’ Freedom) என்னும் அமைப்பை 1981-ல் தொடங்கினர். பாதிக்கப்பட்ட எழுபத்து நான்கு குடும்பங்களுக்கு எழுபத்து நான்கு ஏக்கர் நிலத்தை அரசின் மூலம் அளிக்கும் வரை போராடினார். 1957-ல் முதுகுளத்தோர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்தார். இறால் பண்ணைகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடினர். லாப்டி மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்டு உழுபவர்களுக்குக் கொடுத்தார். தனக்கு தானமாகக் கிடைத்த பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்தார். பீஹாரில் நிலக்கிழார்களுடன் போராடி கையகப்படுத்தப்பட்ட 23,000 ஏக்கர் நிலத்தை மீட்டார்.

சுதந்திரத்தின் நிறம்

விருதுகள்

  • சுவாமி பிரணவானந்தா அமைதி விருது (1987)
  • ஜம்னாலால் பஜாஜ் அமைதி விருது (1988)
  • இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (1989)
  • பகவான் மகாவீரர் விருது (1996)
  • ரைட் லைவ்லிஹூட் (Right Livelihood Award) விருது (2008)

மறைவு

சங்கரலிங்கம் ஜெகந்நாதன் பிப்ரவரி 12, 2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் காலமானார்.

நூல்கள்

  • 'The color of Freedom’ - இத்தாலியைச் சேர்ந்த லாரா கோப்பா கிருஷ்ணம்மாள், சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் உரையாடியதை நூலாக வெளியிட்டார்.
  • ’சுதந்திரத்தின் நிறம்’ - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு (The Color of Freedom-ன் மொழிபெயர்ப்பு: B.R.மகாதேவன்)

உசாத்துணை


✅Finalised Page