under review

சகஜானந்தர்

From Tamil Wiki
சகஜானந்தர்
சகஜானந்தர்
சகஜானந்தர் சட்டமன்ற உரைகள்

சகஜானந்தர் (சுவாமி சகஜானந்தர்; சுவாமி சகஜானந்தா; சஹஜானந்தர்; முனுசாமி; சிகாமணி) (ஜனவரி 27, 1890 - மே 01, 1969),துறவி, சமூகசீர்த்திருத்தவாதி, அரசியல்செயல்பாட்டாளர். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து அம்மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகப் போராடினார். சட்டமன்ற உறுப்பினராகி பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டார். ஆன்மிக, இலக்கிய நூல்களை எழுதினார். இதழாளராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

சகஜானந்தர் நூல்
சகஜானந்தர் மாநாடு

முனுசாமி என்னும் இயற்பெயர் கொண்ட சகஜானந்தர், ஜனவரி 27, 1890-ல், ஆரணி அருகிலுள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை - அலமேலு தம்பதியருக்குப் பிறந்தார். மாசிலாமணி என்ற மூத்த சகோதரரும், எட்டியம்மாள், பாக்கியம் அம்மாள், கமலம் அம்மாள் என மூன்று சகோதரிகளும் இவர் உடன் பிறந்தவர்கள்.

புதுப்பாக்கத்தில் உள்ள பிராட்டஸ்டண்டு கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த அமெரிக்கன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். திண்டிவனம் நகரில் உள்ள அமெரிக்கன் ஆர்க்காடு சமயப்பரப்பு ஊழியர்கள் நடத்திய உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் கல்வி பயின்றார். பள்ளியில் இவரது பெயர் முனுசாமி என்பதிலிருந்து 'சிகாமணி' என்பதாக மாற்றம் செய்யப்பட்டது.

கிறித்தவப் பாதிரிமார்கள் சிகாமணியைக் கிறித்தவச் சமயத்திற்கு மதம் மாற்ற முற்பட்டனர். மத மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டால் எதிர்காலத்தில் அவர் விரும்பும் மேல்படிப்பைப் படிக்க உதவுவதாக வாக்களித்தனர். மதம் மாற மறுத்தமையால் எட்டாம் வகுப்போடு சிகாமணியின் கல்வி முற்றுப்பெற்றது என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆன்மிக வாழ்க்கை

சமய ஆர்வம்
சகஜானந்தர் சிலை

சிகாமணி தன் பெற்றோர்கள் வேலை பார்த்த கோலார் தங்கவயலுக்குச் சென்று மேற்கல்விக்கு முயன்றாலும் அதற்கு வாய்ப்பு அமையவில்லை. அங்கே நிகழ்ந்த ஆன்மிகச் சொற்பொழிவுகள் வழியாக இந்து மத ஈடுபாட்டை அடைந்தார். 1905-ல், சிகாமணியின் பெற்றோர் கோலாரைவிட்டுத் தங்கள் ஊராகிய மேல்புதுப்பாக்கத்தில் குடியேறினர். நிலக்கிழார் ஒருவரது பண்ணையில் கமலை ஓட்டும் பணியை புரிந்தார். ஆன்மிகப்பயணங்கள், ஆலயத் தரிசனங்களில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அவருடைய சாதியின் காரணமாக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.மேல்புதுப்பாக்கத்துக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முனுகப்பட்டு என்ற ஊரில் மடம் அமைத்து தங்கியிருந்த நீலமேக சுவாமிகள் என்னும் துறவியின் அழைப்பின் பேரில் சகஜானந்தர் அவருடன் சென்று மாணவராக தங்கியிருந்தார்.

துறவுநாட்டம் கொண்டிருந்த சகஜானந்தர் மெய்யியல் கல்விக்காக காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றார். சுயம் கைலாச சுவாமிகள் உள்ளிட்ட பல ஆன்மிகவாதிகளைச் சந்தித்தார். நரசிங்கபுரம் தட்சிணாசாமி சுவாமியிடம் மந்திர உபதேசம் பெற்றார்.

சென்னையில் கோ. வடிவேல் செட்டியா ரிடம் மாணவராகி சமய இலக்கியங்களைக் கற்றார். வடிவேல் செட்டியாரின் பரிந்துரைப்படி வியாசார்பாடி செங்கல்வராய நாயகர் தோட்டத்தில் தங்கியிருந்த கரபாத்திரம் சிவப்பிரகாசச் சுவாமிகளிடம் கல்விக்காகச் சென்றார். காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள், வீரசுப்பையா சுவாமிகள், ராஜகோபால் முதலியார், ஆரணி குப்புசாமி முதலியார், அமெரிக்கரான சார்ட்டால் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கரபாத்திர சுவாமிகளின் மாணவர்களாக இருந்தனர்.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் பேசா நோன்பு மேற்கொண்டிருந்த நாளில், சிகாமணி அவரைச் சென்று சந்தித்தார் என்றும் அவரிடம் மாணவராகி அவருடைய ஆசிரமத்திலேயே தங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.மடத்திலிருந்த புலவர் முருகேச முதலியாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். திருவிசைநல்லூர் சின்னைய நாயகர் என்பவரிடமும் தமிழ் கற்றார்.

துறவு ,தீட்சை

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் சிகாமணிக்கு துறவு (தீட்சை) அளித்து 'எப்பொழுதும் ஆனந்தத்தில் திளைத்திருப்பாயாக' என்று வாழ்த்தி, 'சகஜானந்தர்' என்று பெயர் சூட்டினார்.

தொடக்கத்தில் சைவ மதத்தினராக இருந்த சகஜானந்தர் பின்னர் தீவிர வைணவராக மாறினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்கு வைணவமே வழியாகும் என்று வாதிட்டார்.

கல்வி, சொற்பொழிவு

1910-ல் சிதம்பரத்திற்கு வந்தார் சகஜானந்தர். கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, 'கல்வியும் அதன் பயனும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். 'சாது மகா சங்கம்'. 'ஆனந்த ஆசிரமம்' போன்ற இடங்களில் சமயச் சொற்பொழிவாற்றினார். 1916 முதல் மலேசியா, பர்மா, சிங்கப்பூர், ரங்கூன் சென்று ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார்.

ஸ்ரீரங்கம் சென்று பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரிடம் வடமொழியை கற்றார். வ.உ.சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்து திருக்குறள் பாடம் கேட்டார். வ.உ.சி.யின் 'அகமே புறம்', 'மெய்யறம்' போன்ற நூல்களுக்குப் பாயிரம் எழுதினார்.

அமைப்புப்பணிகள்

நந்தனார் கல்விக்கழகம்

சிதம்பரத்தில் வாழ்ந்த முருகேசன் பிள்ளை என்பவர் 10.07.1910 அன்று அவரைச் சிதம்பரம் அழைத்து வந்தார். ஆறுமுகசாமி, பின்னத்தூர் இலட்சுமணன் ஆகிய இருவரும் சிதம்பரம் அருகே உள்ள ஓமக்குளம் கிராமத்தில் குடில் அமைத்து ஆன்மீகப் பணியை மேற்கொண்டு வந்தனர். அவர்களுடன் இணைந்து சுவாமி சகஜானந்தர் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக சிதம்பரம் ஓமக்குளக்கரையில் 'நந்தனார் மடம்' என்பதைத் தொடங்கினார்.

காந்தி திறப்புவிழா கல்வெட்டு

சகஜானந்தர் 1910-ல் ஓமக்குளத்தில் கூரைக் கொட்டகையில் 25 மாணவர்களுடன் உண்டு உறைவிட கல்விச்சாலை தொடங்கி அதற்கு 'நந்தனார் பள்ளி' எனப் பெயரிட்டார். இப்பள்ளியின் முதல் ஆசிரியர் தண்டேஸ்வரநல்லூர் மாரிமுத்து. முதல் தலைமையாசிரியர் எஸ்.சாமிநாத ஐயர். பள்ளியைத் துவக்கி வைத்தவர் நீதிபதி என்.கோபால ஸ்வாமி ஐயங்கார். 1918-ம் ஆண்டு நந்தனார் கல்விக்கழகத்தின் ஆரம்பபள்ளி ஓமக்குளம் தென்பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதாசிவ ஐயரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது மாணவர்கள் எண்ணிக்கை 64.

1916ல் இது நந்தனார் கல்விக்கழகம் என ஒருங்கிணைந்த கல்வியமைப்பாக ஆகியது. 1919-ல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, சிதம்பரம் வந்தபோது நந்தனார் கல்விக் கழகத்திற்காக காட்டுமன்னார்குடி வட்டம் கள்ளிப்பாடியில் சுமார் 52 ஏக்கர் நிலமும், சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு வட்டத்தில் 28 ஏக்கர் நிலமும் வழங்கினார்.

1919-ம் ஆண்டு இருபது மாணவிகளுடன் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். 1923-ல் மாலேசிய நாட்டில் விசித்து வந்த நானு செட்டியார் பொருளுதவி செய்தார். மலேசியாவில் வாழ்ந்துவந்த சகஜானந்தரின் சகோதரி பாக்யலட்சுமி அம்மாள் பெண்கள் பள்ளிக்குப் பொறுப்பேற்று நடத்தினார்.

1934-ல் சிதம்பரம் வந்த காந்தி சகஜானந்தரின் நந்தனார் மடத்தில் தங்கினார். அங்கு ஸ்ரீ சிவலோகநாதர், ஸ்ரீ நந்தனார் ஆலயத்திற்கு காந்தி அடிக்கல் நாட்டினார். காந்தி, இந்தியாவில், ஆலயத் திருப்பணிக்காக அடிக்கல் நாட்டிய ஒரே ஆலயமாக இவ்வாலயம் அறியப்படுகிறது.

நந்தனார் மடத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப் பள்ளி, பின்னர் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. தொடர்ந்து நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்தனார் தொழிற்கல்வி நிலையம் எனப் பலவாறாகத் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தது. 1939-ல் நந்தனார் கல்விக் கழகத்தை அரசிடம் ஒப்படைத்தார் சகஜானந்தர்.

சகஜானந்தர் முயற்சியால் மேலவன்னியூர், பின்னத்தூர், பண்ணப்பட்டு, சாட்டைமேடு, முகையூர் உள்ளிட்ட சிதம்பரம், காட்டுமன்னார்குடி வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் இருபாலர் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.

நந்தனார் மடம்

சிதம்பரம் அருகே சகஜானந்தர் நிறுவிய சிவலோக நாதர் திருக்கோயிலுடன் இணைந்து அமைந்திருக்கும் நந்தனார் மடம் செயல்பட்டு வருகிறது.

சமூகசீர்திருத்தப்பணிகள்

சகஜானந்தரின் சகோதரி

1917-ல் சுவாமி சகஜாநந்தர் ஓமக்குளம் பொதுக்கிணற்றில் நீர் எடுக்கும் போராட்டம் தமிழ அரசியலில் அவ்வகையில் நிகழ்ந்த முதல் போராட்டமாகும். ஆலயப்பிரவேச போராட்டம் அதற்குப் பின்னர்தான் நிகழ்ந்தது. அன்றைய சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் சுவாமி சகஜாநந்தர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்தப் போராட்டமும் வழக்கும் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் அரசியலில் விவாதங்களை உருவாக்கி மாற்றங்களுக்கு வழிவகுத்தன.

ஆலய நுழைவுப் போராட்டத்தைச் சிதம்பரத்தில் காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று 1934-ல் ஜூலை ஆனித் திருமஞ்சனத்தின் போது தன் இன மக்களுடன் சகஜானந்தர் செய்துபோது சாதியவாதிகளால் தாக்கப்பட்டார்.

சிதம்பரம், காட்டுமன்னார்குடி, புவனகிரி உட்பட அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் பட்டியலின மக்கள் பறை அடிக்கக் கூடாது; வெட்டியான் வேலை பார்க்கக் கூடாது போன்ற சீர்திருத்தங்களை மேற்கொண்டார். நிலவுடைமையாளர்களிடம் கூலித்தொழிலாளிகளாக இருந்தவர்களுக்கு முறையான கூலி வழங்கப்படுவதற்கும் போராட்டங்களை முன்னெடுத்து உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.

அரசியல்

இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் இயங்கிய மதராஸ் ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன் அமைப்பில் 1920களில் இணைந்து சகஜானந்தர் தன் அரசியல் பணியைத் தொடங்கினார். 1926இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மெட்ராஸ் மாகாண மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு, 1932வரை அப்பதவியில் இருந்தார். 1936 முதல் 1947 வரை மீண்டும் மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1930-ல் டாக்டர் அம்பேத்கரும் இரட்டை மலை சீனிவாசனும் வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றபோது தனது பூரண ஆதரவை வழங்கினார். பூனா ஒப்பந்தப்படி தனித்தொகுதி முறையை ஆதரித்துப் பிரசாரம் செய்தார்.

சகஜானந்தர் ஆலய நுழைவுப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களுடன் சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார். 1932-ல் சிதம்பரம் தனித் தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1932 ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

சுவாமி சகஜானந்தர் 1936 முதல் 1959 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் பட்டியலின மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் போராடினார்

கல்விப் பணிகள்

சுவாமி சகஜானந்தர் நந்தனார் கல்விக்கழகத்தை உருவாக்கி அடித்தள மக்களின் கல்விக்காக உழைத்தார்.சுவாமி சகஜானந்தர், 1929-ல் அண்ணாமலைச் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (மீனாட்சி கல்லூரி) தொடங்க உதவினார். 1940-41-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழறிஞர்களில் ஒருவரானார். தமிழ்ச் சொற்பொழிவாளராகவும் விரிவுரையாளராகவும் செயற்பட்டார். ஆட்சிக் குழு உறுப்பினருள் ஒருவராக இயங்கினார்.

இதழியல்

சுவாமி சகஜானந்தருக்கு சிதம்பரத்தில் 'பரஞ்சோதி அடிகளார்' என்பவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். அவரைப் போற்றும் வகையில், 'பரஞ்சோதி' என்னும் செய்தித் தாளைச் சிலகாலம் நடத்தினார். பரஞ்சோதி அச்சகம் என்பதை ஏற்படுத்தினார். அதன் மூலம் 'ஜோதி' என்ற தமிழ், ஆங்கில இருமொழி வார இதழை 1932-ல் தொடங்கி, 1939 வரை நடத்தினார்.

மதிப்பீடுகள்

  • பாரதியார் சகஜானந்தரின் கல்விப்பணிகளைப் பாராட்டி, அவற்றுக்கு அனைவரும் உதவிசெய்யவேண்டும் என தன் இந்தியா இதழில் எழுதியிருக்கிறார்.
  • வ.உ. சிதம்பரனார் எழுதிய மெய்யறம் நூலுக்கு சகஜானந்தர் சிறப்புப் பாயிரம் எழுதினார். அதில் சிதம்பரனார் 'கல்வி கேள்வி ஒழுக்கங்களால் நிறைந்த மெய்யந்தணன் சகஜானந்தர்' என்று குறிப்பிடுகிறார்.
  • காந்தி சிதம்பரத்திற்கு வந்தபோது சகஜானந்தரின் ஆசிரமத்தில் தங்கி ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மறைவு

சுவாமி சகஜானந்தர், மே 01, 1969-ல் காலமானார்.

நினைவு

  • 1969-ல் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி சகஜானந்தரின் முழு உருவச் சிலையை அப்போதைய இந்தியத் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார்.
  • 1990இல் சுவாமி சகஜாநந்தரின் நூற்றாண்டை சிதம்பரத்தில் அவருடைய மாணவர் இளையபெருமாள் நடத்தினார். இதில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி கலந்துகொண்டார்.
  • சுவாமி சகஜானந்தர் வாழ்ந்த சிதம்பரத்தில் உள்ள நந்தனார் ஆண்கள் பள்ளிவாயிலில், தமிழக அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதில் சுவாமிஜியின் மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்பட்டது.
  • 2014-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுவாமி சகஜானந்தருக்கு அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். சகஜாநந்தரின் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு 2018-ல் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டது.
  • சுவாமி சகஜானந்தரின் பிறந்தநாள், 23 மார்ச் 2020 தேதியிட்ட அரசாணைப்படி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது
  • சிதம்பரம் நந்தனார் ஆண்கள், பெண்கள் பள்ளிகளிலும் நந்தனார் மடத்திலும், சுவாமி சகஜானந்தர் மணிமண்படத்திலும் சுவாமி சகஜானந்தரின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இதுதவிர காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகே சுவாமி சகஜானந்தருக்கு முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுவாமி சகஜானந்தர் நான்கு வகைகளில் மதிப்பிடத்தக்கவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய சமூகசீர்திருத்தவாதி, அரசியலாளர், கல்வியாளர் மற்றும் மெய்ஞானி.

  • தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவர்களில் அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகிய முதல் மூவருக்கும் பிறகு வந்த முதன்மையான ஆளுமை சகஜானந்தரே. அரசியல், கல்வி, மெய்யியல் என பல தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.
  • காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து இந்திய விடுதலைப்போரில் பங்கெடுத்த சகஜானந்தர் காந்தியவாதியாகத் திகழ்ந்தார். இந்திய விடுதலைக்குப்பின்னரும் அரசியல்பணிகளில் ஈடுபட்டார். அரசியலை சமூகவிடுதலைக்கான களமாகக் கண்டார்.
  • தமிழகத்தில் கல்வி மிகத்தொடக்கநிலையில் இருந்தபோது அனைவருக்குமான கல்விநிலையத்தை உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி வழியாகவே விடுதலை பெற முடியும் என நம்பி அதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தார். அதற்கான அமைப்புகளை உருவாக்கினார். தமிழகத்தின் தொடக்ககட்ட கல்விமுன்னோடிகளில் ஒருவர்.
  • சகஜானந்தர் வைணவமெய்யியலை அடித்தள மக்களுக்கான விடுதலைக்கான தத்துவமாக விளக்கியவர்.

நூல்கள்

  • தாழ்த்தப்பட்டோர்
  • ஹரிஜனங்கள் தோற்றம்
  • தீண்டாமை
  • நமது தொன்மை
  • பண்ணையாள் பாதுகாப்புச் சட்டமும் சர்க்காரின் கடமையும்
  • வச்சிர சூசிகை உபநிடதம்
  • ஆலயம் என்பது ஹரிஜனங்களுக்கே
  • தீண்டாமை சாஸ்திரியமன்று
  • சிதம்பர ரகசியமும் நடராசர் தாண்டவமும்

மற்றும் பல.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:38:41 IST