under review

நந்தனார்

From Tamil Wiki

நந்தனார் (திருநாளைப்போவார் நாயனார்) சைவ சமய அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சிதம்பரம் கோவிலுக்கு 'நாளை போவேன்' என்று தினமும் சொல்லிவந்ததால் 'திருநாளைப்போவார்' என்று பெயர்பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

சோழ நாட்டில் கொள்ளிடக் கரையில் அமைந்த ஆதனூரின் புலைப்பாடியில் புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் தாழ்த்தப்பட்ட புலையர் குலத்தில் பிறந்தார் நந்தன். புலைப்பாடியின் தலைவராக இருந்தார். சிறுவயது முதல் சிவபக்தி மிகுந்தவராக இருந்தார். தன் தமது குலப்பிறப்பு கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் பூசைக்காக கோரோசனையும், பேரிகைகளுக்காக தோல்பொருட்களும் கோவிலுக்கு அளித்து புறத்தொண்டு செய்துவந்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

நந்தனார் ஆதனூருக்கு அருகில் இருந்த திருப்புன்கூருக்குச் சென்று சிவபெருமானை வழிபட விரும்பினார். திருப்புன்கூருக்குச் சென்று கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் நின்று பாடித்துதித்தார். நந்தி மறைத்ததால் இறைவனைக் காண முடியவில்லை. நந்தியைச் சற்று விலகச் செய்து சிவபெருமான் நந்தனாருக்குக் காட்சியளித்தார். பரவசத்துடன் நந்தனார் கோவிலை வீதி வலம் வரும்போது பெரிய பள்ளம் ஒன்றைக் கண்டார். அப்பள்ளத்தைத் தோண்டி, குளமாக மாற்றினார்.

இதன்பின் பல ஊர்களிலுள்ல சிவாலயங்களில் குளங்கள் அமைத்து தொண்டு புரிந்தார். தில்லையில் நடராஜரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. 'நாளை சிதம்பரத்துக்கு போவேன்' என்ற கனவும் தன் குலப்பிறப்பை எண்ணி போகாமல் தவிர்த்தலும் தொடர்ந்தன. அதனால் 'திருநாளைப்போவார்' என்ற பெயர் ஏற்பட்டது. இப்படி பல நாள்கள் கழிந்தபின் ஒருநாள் ஆவல் மிகுதியால் தில்லை நகரின் எல்லை வரை சென்றார். வேள்விப் புகையும், வேத ஒலியும் கேட்டு பயந்து நின்றார். தொழுது வீதிவலம் செய்து "நீலகண்டனைக் காணும் வழி என்ன" என்று ஏங்கினார். தன் பிறப்பு இறைவனை தரிசிப்பதற்கு தடையானதை எண்ணி மிக வருந்தினார்.

நந்தனாரின் குறையைத் தீர்க்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் அவரது கனவில் வந்து " என்று வந்தாய்" என்று கேட்டு “இந்தப்பிறவி நீங்க தீயில் மூழ்கி எழுந்து, முப்புரிநூலுடன் என் சன்னதிக்கு வருக" என்று அருளினார். தில்லைவாழ் அந்தணர்களுக்கும் வேள்வித்தீ அமைக்கும்படி கனவில் கட்டளையிட்டார். தில்லை வாழ் அந்தணர்கள் கோவிலின் தெற்கு வாசலில் அப்படியே வேள்வித்தீ அமைத்தார்கள். நந்தனார் தீக்குள் இறங்கி அப்போது பூத்த தாமரைபோல் மலர்ச்சியுடன் அந்தணராக வெளிவந்தார்.

அந்தணர்கள் அவரை வணங்கி தில்லை அம்பலத்துக்குள் அழைத்துச் சென்றார்கள். சிவனைத் தொழுது நந்தனார் சிவனுடன் இரண்டறக் கலந்து, மாயமாக மறைந்துவிட்டார்.

“செம்மையே திருநாளைப் போவார்க்கு அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

நந்தனார் சரித்திரம்

திருநாளைப்போவார் புராணம் கோபாலகிருஷ்ண பாரதியால் இசைநாடகமாக இயற்றப்பட்டு தமிழகத்தில் பாடப்பட்டும், நடிக்கப்பட்டும் வருகிறது.

பார்க்க: நந்தனார் சரித்திரம்

பெரிய புராணத்தில் திருத்தொண்ட நாயனார் புராணப் பாடல்கள்

சிவன் புன்கூரில் நந்தியை விலக்கிக் காட்சி அளித்தல்

சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன் கூர்க் கண் நுதலார் திரு முன்பு
போர் ஏற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார்.

சிதம்பரத்துக்கு நாளைபோவேன் என ஏங்கியிருத்தல்

அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன்பின் அங்கு எய்த
ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார்
நன்று எழும் காதல் மிக நாளைப் போவேன் என்பார்.

சிவபெருமான் கனவில் வந்து தீமூழ்கி எழுச் சொல்லல்

இப் பிறவி போய் நீங்க எரியின் இடை நீ மூழ்கி
முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அப் பரிசே தில்லை வாழ் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்.

நந்தனார் தீயில் புகுந்து வருதல்

கை தொழுது நடம் ஆடும் கழல் உன்னி அழல் புக்கார்
எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப்
பொய் தகையும் உருவு ஒழித்துப் புண்ணிய மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்.

நந்தனார் சிவனுடன் கலந்து மறைதல்

தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்
கொல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலர் ஆல்.

குருபூஜை

திருநாளைப் போவார் நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page