under review

கைசிக புராண நாடகம்

From Tamil Wiki
திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயில் tamil.nativeplanet.com
கைசிக நாடகம்

கைசிக புராண நாடகம் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியன்று திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயிலிலும், மற்ற வைணவ ஆலயங்களிலும் நடத்தப்படும் ஓர் நிகழ்த்து கலை. இதைப்பற்றிய தொன்மமும் வரலாறும் வராக புராணத்தில் காணக் கிடைக்கின்றன. கைசிக புராணம் 'நம்மைப் பாடுபவன்' என்று திருமாலால் அழைக்கப்பட்ட பெருமையை உடைய[1] நம்பாடுவான் என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பாணன் கைசிகப்பண்ணை இசைத்து ஓர் அந்தணனை தீச்சொல்லிலிருந்து விடுவித்து, திருமாலின் பிரபஞ்சரூப (விஸ்வரூப) தரிசனம் பெற்ற கதை. வருடம்தோறும் திருக்குறுங்குடி நம்பியின் முன் இயல், இசை, நாடகம் என முத்தமிழும் பயின்று வரும் நம்பாடுவான் கதை நடிக்கப்படுகிறது. சில ஆலயங்களில் பாடவும், படிக்கவும் படுகிறது. அழியும் நிலையில் இருந்த இந்நிகழ்த்து கலை பேராசிரியர் எஸ். ராமானுஜத்தின் பெருமுயற்சியால் புனரமைக்கப்பட்டது.

கைசிக புராணம்(நம்பாடுவான் சரித்திரம்)

திருக்குறுங்குடி கைசிக நாடகம் - நம்பாடுவான் - நன்றி https://narasimhar.blogspot.com/

திருநெல்வேலி மாவட்டத்தில் நம்பியாற்றின் கரையில் உள்ள திருக்குறுங்குடிக்கு அப்பால் காட்டுப்புறத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பாணன் நம்பாடுவான், திருக்குறுங்குடியில் கோயில் கொண்டுள்ள வைணவ நம்பியின் (அழகிய நம்பி, நின்ற நம்பி, வண்ணமழகிய நம்பி) பக்தன். ஒவ்வொரு ஏகாதசி அன்றும் திருக்குறுங்குடி மலை ஏறி ஆலயத்துள் செல்ல அனுமதி இல்லாததால் வாயிலில் நின்று நம்பியைப் பாடி துவாதசி பொழுது புலர்ந்ததும் திரும்புவது வழக்கம்.

பிரம்ம ராக்ஷசன் (https://narasimhar.blogspot.com/)

கார்த்திகை வளர்பிறை (சுக்லபக்ஷ) ஏகாதசியன்று நம்பாடுவான் குறுங்குடி மலை மீது ஏறுகையில் பசியோடிருந்த ஓர் பிரம்ம ராக்ஷசன் பிடித்துக் கொண்டான். தான் பசியுடன் இருப்பதாகவும் நம்பாடுவானை உண்ணப் போவதாகவும் தெரிவித்தான். நம்பாடுவான் "நான் மலை மீதேறி நம்பியைப் பாடி, ஏகாதசி விரதத்தை முடித்து திரும்புகிறேன். அதன்பின் நீ என்னை தாராளமாக உண்ணலாம்" என்றான். பிரம்ம ராக்ஷசன் நம்பாடுவானை நம்பவில்லை. நம்பாடுவான் பெருமாளின் உண்மையான பக்தன் பொய் உரைக்க மாட்டான் என்று கூறித் திரும்பி வருவதாக சத்தியம் செய்கிறான். அப்போதும் பிரம்ம ராக்ஷசன் அவனை நம்பவில்லை.

நம்பி

நம்பாடுவான் 18 விதமான பாவச்செயல்களைக் கூறி தான் திரும்பி வராவிட்டால் அதன் பாவம் தன்னை வந்து சேரட்டும் என்று சூள் உரைத்தான். முதல் பதினாறுக்கும் பிரம்ம ராக்ஷசன் அசையவில்லை. 17-ம் பாவச்செயலை (புறம் தொழுதல்-வாசுதேவனைவிட்டு வேறு தெய்வங்களை வணங்குதல்) சொன்னதும் பிடியை விட்டான். 18-ம் பாவச் செயலை (நாராயணனுக்கு இணை வைத்தல்)[2] சொன்னதும் நம்பாடுவானின் பக்தியை அறிந்திருந்ததால் அவனைப் போக அனுமதித்தான். நம்பாடுவான் கோயிலின் வாயிலில் நின்று பாடும்போது அவன் வீணை மீட்டும் அழகைக் காண (அல்லது நம்பாடுவான் நம்பியைக் கண்ணாரக் காண வசதியாக) அழகிய நம்பி கோயிலின் கொடிமரத்தை சற்று நகர்த்தியதாகக் கூறப்படுகிறது. நம்பாடுவான் நம்பியை பாடி, கைங்கரியத்தை முடித்து வந்தான். வழியில் நம்பி கிழ அந்தண ரூபத்தில் வந்து "வேறு வழியில் தப்பிச் செல்" என்று கூற, நம்பாடுவான் "செய்த சத்தியத்தை மீறேன்" என பிரம்ம ராக்ஷசனிடம் சென்று தன்னை உணவாக அளித்தான். பிரம்ம ராக்ஷசன் "நான் முற்பிறவியில் சோம ஷர்மா எனும் அந்தணன். யாகத்தை தவறாக செய்ததற்கான தீச்சொல்லை அனுபவிக்கிறேன். எனக்கு பசி இல்லை. அதற்குப் பதிலாக நீர் நம்பியைப் பாடியதற்கு உண்டான பலனை எனக்கு தந்து அருளி என்னை தீச்சொல்லிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்று கேட்டான். "நான் பலன் கருதி பாடவில்லை, நம்பியைப் பாடியதே என் தவப்பலன் தான்" என்று கூறி நம்பாடுவான் மறுக்க, பிரம்ம ராக்ஷசன் "நீ கடைசியாகப் பாடிய பண் எதுவோ, அதற்கான பலனை மட்டுமாவது கொடு" என இறைஞ்சினான். நம்பாடுவான் கடைசியாகப் பாடியது கைசிகப் பண். அதன் பலனை பிரம்ம ராக்ஷசனுக்கு அளிக்க வேண்டி அவன் நம்பியை வேண்ட, பிரம்ம ராக்ஷசன் சாப விமோசனம் பெற்றான். நம்பாடுவானுக்கு நம்பியின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது. அன்றிலிருந்து கார்த்திகை வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி எனப் பெயர் பெற்றது

வராக புராணத்தில் கைசிக மகாத்மியம்
Rakshasha pleading.jpg

ஹிரண்யாக்ஷன் என்ற அரக்கன் பூமியை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அவனிடமிருந்து பூமாதேவியை மீட்க விஷ்ணு வராக(காட்டுப்பன்றி) அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டு வென்று, தன் தேற்றையால் (கொம்பு) பூமியை மீட்டெடுத்தார். பூமாதேவியின் பயம் போக்கி மடியிலிருத்தி பூவராக மூர்த்தியாக அமர்ந்தார். பூமாதேவி பூவுலகில் தன் மக்கள் உய்யும் வழியை அருளிச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, திருமால் நம்பாடுவான் சரிதத்தைச் சொல்லி, எவர் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியன்று விரதமிருந்து கைசிகப் பண்ணிசைத்து பாடுகிறாரோ, இக்கதையைக் கேட்கிறாரோ அவர் செய்த பாவங்கள் நீங்கி இன்புற்று வாழ்வார் என்றும் அருளினார்.

கைசிக புராண நாடகம்

கைசிக புராணம் திருக்குறுங்குடியில் நாடகமாக வருடந்தோறும் கைசிக ஏகாதசியன்று இரவு கைசிக மண்டபத்தில் நடக்கின்றது (பார்க்க: காணொளி [3]) முக்கிய பாத்திரங்களை (நம்பாடுவான், நம்பி கிழவர்) தேவதாசிகளே ஏற்று நடித்து வந்துள்ளனர். பிரம்ம ராக்ஷசன் வேடத்தில் ஆண்கள் நடிப்பது வழக்கம். 10 நாள் விரதமிருந்து உடல், உள்ளத் தூய்மை பேணி பங்கு கொண்டார்கள். இந் நாடகப் பிரதியில் இடம்பெற்றுள்ள பாடல்களும், உரையாடல்களும் 15-ம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த மணிபிரவாள நடையில் இருந்தன. இம்மொழிநடை கதையை எடுத்துரைத்தல் முறைக்கு மிகுந்த அழுத்தம் கொடுப்பதாகவும் நாடகப்பாங்கில் அமைந்த உரையாடல்கள் மிகுந்ததாகவும் காணப்பட்டது. கிருஷ்ணதேவ ராயரின் ஆமுக்தமால்யதாவில் கைசிக புராணம் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்பாடுவான் மால்கேசரி என்று அழைக்கப்படுகிறான். கிருஷ்ணதேவ ராயரின் தம்பி அச்சுத ராயரின் மனைவி திருமலாம்பாள் (16-ம் நூற்றாண்டு) கைசிக புராண நாடகம் நிகழ்த்துவதற்காக திருக்குறுங்குடி கோயிலுக்கு விளைநிலங்களை தானமாக வழங்கினார்.

இன்னும் பல வைணவ ஆலயங்களில் கைசிக புராணம் கார்த்திகை மாதத்து கைசிக ஏகாதசியன்று இரவு வாசிக்கப்படுகிறது. அப்போது பெருமாளுக்குச் சில கோயில்களில் பட்டுப் போர்வை சாத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

பேரா. ராமானுஜம்
கைசிக புராண நாடகத்தின் புனரமைப்பு
பேரா. ராமனுஜத்தின் குழுவில் நம்பாடுவான் பாத்திரம் ஏற்ற சுமதி

கைசிக புராணத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள் போன்றோர் நாடக வடிவில் இயற்றி நடித்து வந்தனர். 1900-களில் அழியத் தொடங்கிவிட்ட இக்கலை 1980-ல் ஏறத்தாழ அழிந்து மிகச் சிறிய அளவில் நடந்து வந்தது. 1993-94 ஆண்டுகளில் பேராசிரியர் எஸ். ராமானுஜம் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தின் கோயில் கலைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் கைசிக நாடகத்தைப் பற்றி அறிந்து, தன் தேடலைத் தொடங்கினார். ராமானுஜத்தின் அன்னை திருக்குறுங்குடியைச் சேர்ந்தவர். வயதான உறவினர் பெண்ணிடமிருந்து சில தகவல்கள் கிடத்தன. நாடகத்தின் ஆங்கில பொழிபெயர்ப்பு ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளரிடமிருந்து (Dr. Wellburne) கிடைத்தது.

நாராயண அய்யங்கார் என்பவரிடமிருந்து முழு நாடகத்தின் ஓலைச் சுவடி கிடைத்தது. சுவடியில் பாடல்களும் அவற்றிற்கான பண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. பேராசிரியர் ராமானுஜம் இந்த நாடகத்தில் ஒரு காலத்தில் நடித்து வந்த கிராமத்து முதியவர்களிடம் பேசி, பழைய கையெழுத்துக் குறிப்புகளைத் தேடிப் படித்து, கோயில் சிற்ப நுணுக்கங்களை ஆய்ந்து, வைணவ அறிஞர்களுடனும், அரையர் கலைஞர்களுடன் விவாதித்து, பழைய வடிவின் புனரமைப்பை கூத்துப்பட்டறை நடிகர் ந. முத்துசாமி மற்றும் TVS குடும்பத்தைச் சேர்ந்த நடனக்கலைஞர் அனிதா ரத்னம் ஆகியோரின் உதவியுடன் முன்னெடுத்தார். இதற்காக ஓர் வல்லுனர்/ஆலோசனைக் குழுவை உருவாக்கினார். பண்ணாராய்ச்சியாளர் ம. வைத்தியலிங்கம், கர்நாடக இசை மற்றும் நாடக இசை வல்லுநரான அரிமளம் பத்மநாபன், நாட்டுப்புற தெய்வச் சடங்குகள் பற்றிய வல்லுநர் ம. வேலுசாமி, இசை வேளாளர் மரபினரும் பாகவத மேளா நாட்டிய ஆசிரியருமான ஹேரம்பநாதன், சதிராட்டப் பாரம்பரியம் கொண்ட இவரது மாமியார் துரைக்கண்ணு (எ) ரேவதியம்மாள், பரதநாட்டிய வல்லுநர் தஞ்சை கமலாம்பாள் போன்றவர்கள் இடம்பெற்ற குழுவின் ஆலோசனையுடன் கைசிக புராண நாடகத்தின் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. நாடகத்தின் ஒத்திகையை வடுவூர் ராமர் ஆலயத்தில் நிகழ்த்தினார்.

1998-ம் ஆண்டு திருக்குறுங்குடியில் ராமானுஜம் தலைமையில் அனிதா ரத்னத்தின் குழுவினர் (நம்பாடுவானாக சுமதி சுந்தர், பிரம்ம ராக்ஷசனாக கோபி, நம்பியாக அருணோதயா) பாத்திரமேற்று கைசிக புராணத்தை நிகழ்த்தினர்.[4] அப்போது முதல் கைசிக புராண நாடகத்தின் புனரமைக்கப்பட்ட வடிவம் ஒவ்வொரு ஆண்டும் கைசிக ஏகாதசி அன்று நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலான பாத்திரங்களை பெண்களே ஏற்று நடிக்கிறார்கள். பிரம்ம ராக்ஷசன் போன்ற சில பாத்திரங்களை ஆண்கள் நடிக்கிறார்கள். 2021-ல் நாடகம் நிகழ்த்தப்பட்டபோது முதலில் பிரம்ம ராக்ஷசனாக நடித்தவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

பார்க்க - பேராசிரியர் எஸ். ராமானுஜத்தின் நேர்காணல் [5]

திருவரங்கம் (ஶ்ரீரங்கம்)
ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பட்டாடை சேவை நன்றி: andalyatra.com

ஶ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசியன்று நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்கிறார். 365 வஸ்திரங்களும், தாம்பூலமும், கற்பூர ஆரத்தியும் சமர்ப்பித்த பின் ஆழ்வார்கள் திருக்குறுங்குடியை சிறப்பித்த (மங்களாசாசனம் செய்த[6]) பாசுரங்களைப் பராசர பட்டர் வழிவந்தவர் பாடி[7] அரையர் சேவை நடைபெறுகிறது. அதன்பின் பராசர பட்டர் வழிவந்தவரால் இரவு 11.30 முதல் அதிகாலை 2 மணி வரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் பாடப்படுகிறது. ஶ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசியன்று தக்கை[8] என்ற தோல்கருவி இசைக்கப்படுகிறது.

ஶ்ரீரங்கத்தில் விஜய சொக்கநாத நாயக்கரின் குடும்பம் https://sujathadesikan.blogspot.com/

நாயக்க மன்னர் விஜய சொக்கநாதர் கைசிக ஏகாதசி சேவையை தரிசிப்பதற்குத் தனது குடும்பத்துடன் திருவரங்கம் வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் பெருமாள் சந்தன மண்டபத்துக்குப் புறப்பட்டுவிட்டார். மனம் வருந்திய மன்னர் ஸ்ரீரங்கத்திலேயே ஒரு வருடம் தங்கி அடுத்த ஆண்டு சேவையைக் கண்டுகளித்தார் என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் இவர்களின் நினைவாக இரண்டாம் திருச்சுற்றில் இவர்களின் சிலைகள் இருக்கின்றன.

விவாதங்கள்

பேராசிரியர் ராமானுஜம் கைசிக புராண நாடகம் புனரமைக்கப்பட்டதாகக் கருதுகிறார். தலித் சிந்தனையாளரான பேராசிரியர் தர்மராஜ் அவரிடமிருந்து மாறுபட்டு, அது ராமானுஜத்தால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.

பேராசிரியர் தர்மராஜ் திராவிட காலத்தில் பிராமணர்களுக்கு சாபவிமோசனம் உண்டா?[9] என்ற கட்டுரையில் நிகழ்த்து கலையை புரிந்துகொண்டு, அதன் பழமையை, மரபை உட்செறித்து நவீன நாடகத்தை நோக்கிச் செல்லாமல் , மரபை தூசி தட்டி அதே இடத்தில் அமரவைத்ததாகக் குற்றம் சாட்டுகிறார். அப்படி ஓர் சாதியப் பாகுபாடு மேலோங்கிய கலையை மீட்டெடுக்கையில் வெளிப்படையான சாதிய ஒருங்கிணைப்புகள் (கைசிக நாடகத்தில் பிராமண சாதித் திரட்சி) நடப்பதற்கு இந்த மீட்டுருவாக்கமே காரணமானதாகவும் கருதுகிறார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. பெருமாளால் தன்னுடையவர்(நம்முடையவர்) என அழைக்கப்பட்ட பெருமையை உடையவர்கள் நம்மாழ்வார் , நம்பாடுவான்(நம்மைப் பாடுவான்), நஞ்ஜீயர்(நம் ஜீயர்) , நம்பிள்ளை(திருவாய்மொழி போன்றவற்றிற்கு உரை எழுதியவர்)
  2. ச்வர்வ சுவாமியும் மோக்ஷ பிரதான
    ஸ்ரீமன் நாராயணனையும், தேவதை களையும்
    சமமாக பாவிக்கிறேன் யாவரோருவன்
    அவனை போலே நித்ய சம்சாரி ஆவேன்

  3. கைசிக ஏகாதசி நாடகம் திருக்குறுங்குடி காணொளி-youtube.com uploaded by krishnan kichu
  4. A tradition revisited- ThirukkuRungkudi kaisika puranam-The Hindu Dec 3,2009
  5. RECONSTRUCTING AND REVIVING AN ANCIENT TEMPLE THEATRE RITUAL -Interview with Prof.S.Ramanujam by Lalitha Venkat
  6. குறுங்குடி நம்பியை நம்மாழ்வார் (2189, 2393, 2568-2578) பெரியாழ்வார், (71) திருமங்கையாழ்வார் (1005, 1399, 1470, 1788-1807, 2065, 3815:14) ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்)
  7. ஶ்ரீரங்கத்தில் பாசுரங்கள் ஒலி வடிவில்
  8. அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள்-துடி மற்றும் தக்கை- தமிழ் முரசு
  9. திராவிட காலத்தில் பிராமணர்களுக்கு சாப விமோசனம் உண்டா?


✅Finalised Page