under review

ஹேரம்பநாதன்

From Tamil Wiki
தினமணி

பா. ஹேரம்பநாதன் (P. Heramba Nathan; ஜனவரி 12, 1945-மே 10, 2022) தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபலமான பாகவத மேளா கலைஞர், பரத நாட்டிய ஆசிரியர். நடன ஆசிரியராக இருந்து 1000-க்கும் மேலான நாட்டிய நாடகங்களை அரங்கேற்றினார். அழிந்து போகும் நிலையிலிருந்த கோயில் சார்ந்த நிகழ்த்து கலைகளை மீட்டுருவாக்கம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார். தமிழக அரசின் கலைமாமணி மற்றும் சங்கீத நாடக அகாதெமி விருதைப் பெற்றார்.

பிறப்பு,கல்வி

பா. ஹேரம்பநாதன் தஞ்சாவூரில் புகழ்பெற்ற மிருதங்க வித்வானாகவும், நாட்டிய ஆசிரியராகவும் இருந்த பாவுப் பிள்ளை- கர்நாடக இசைக் கலைஞர்கள் தஞ்சாவூர் சகோதரிகளில் இளையவர் சாவித்திரி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். நாட்டியப் பள்ளிகளில் பாவுப் பிள்ளை மிருதங்க வித்வானாக இருந்துவந்தார். ஏழுவயதில் இருந்து ஹேரம்பநாதன் தஞ்சாவூர் இராஜம் ஐயரிடம் 10 ஆண்டுகள் மிருதங்கம் பயின்றார். பின்னர் இவரின் தந்தையின் மாணவிகளின் அரங்கேற்றத்தின் போது வாசிக்கத் துவங்கினார். தந்தையுடன் சென்றுவந்த ஹேரம்பநாதனுக்கு நாட்டியக் கலையின்மீது ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் இவரே முயன்று நட்டுவாங்கம் வாசிக்க கற்றுக் கொள்ளத் துவங்கினார். பின்னர் இவரது தந்தை இவருக்கு நட்டுவாங்கம் கற்பித்தார்.

தனி வாழ்க்கை

ஹேரம்பநாதன் ஆசிரியர் பயிற்சி முடித்த பின் தஞ்சாவூரில் உள்ள ஶ்ரீ கணேச வித்தியசாலையில் ஆசிரியராக பணியில் இணைந்தார். 1967-ல் இருந்து 2003 வரை 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார்.

ஹேரம்பநாதனின் மனைவி பாஷிணி புகழ்பெற்ற இசைவேளாளர் மரபில் வந்த, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத்தில் பங்குகொண்ட துரைக்கண்ணு என்னும் ரேவதி அம்மாளின் மகள். மகன்கள் சுவாமிநாதன், ஹரிஹரன்.

இசை மற்றும் நாட்டியப்பணி

தஞ்சை பெரிய கோயிலில் சின்ன மேளம்
கைசிக புராண நாடகம்
பாகவத மேளா dinamani.com

1967-ல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு நாட்டியம் கற்பிக்கத் துவங்கினார். ஹேரம்பநாதனின் மாணவிக்கு 1970-ல் முதல் அரங்கேற்றம் நடந்தது. 1986-ல் இருந்து நாட்டியம் கற்பிக்க மலேசியா செல்லத் துவங்கினார். 1973 முதல் தன் தந்தையுடனும் கே.பி. கிட்டப்பா பிள்ளையுடனும் நடனங்களை இயக்கத் துவங்கினார்.1989-ல் தன் தந்தையின் நினைவாக தஞ்சாவூர் பாவுப்பிள்ளை நாட்டியப் பள்ளியை ஏற்படுத்தினார்.

சுபத்ரா கல்யாணம், சாகுந்தலம், கம்ச வதம், ஆண்டாள், பரைவையார் ஊடல், கந்தன் காவியம், வள்ளி கல்யாணம், காரைக்கால் அம்மையார் போன்ற நாட்டிய நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார். தமிழ், தெலுங்கு, மராத்தி மூன்று மொழிகளிலும் நாட்டிய நாடகங்களை தயாரித்துள்ளார்.

மெலட்டூர் சாலியமங்கலத்தில் நடைபெறும் பாகவத மேளா கலைஞர்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி அளித்ததன் மூலம் பல மாணவர்களை உருவாக்கினார்.

காங்கேயம் சிவன் மலைக் குறவஞ்சி நாடகத்தை உருவாக்கி மேடையேற்றினார்.

தஞ்சை பெரிய கோயிலில் நடந்து வந்த சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத்தை மீளுருவாக்கம் செய்து அரங்கேற்றினார்.

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி நம்பி கோயிலில் நடைபெற்றுவந்த கைசிக புராண நாட்டிய நாடகத்தின்மீட்டுருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். பேராசிரியர் ராமானுஜம், அனிதா ரத்னம், ந. முத்துசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்றி, 1999 முதல் கைசிக புராண நாடகத்தை தொடர்ந்து நடத்தினார்.

தஞ்சை மரபுக்கலை கலாசார மையத்தை (Thanjavur Heritage Arts and Cultural Academy.) தோற்றுவித்தார். அதன் தலைவராக தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை விழாவில் நடந்து வந்து, நின்று போன சின்னமேளம் நாட்டிய விழாவை மீளுருவாக்கம் செய்து 2010-லிருந்து நடத்தினார்.

பரதம், பாகவத மேளம், ரச பண்டாரம், ஆடல் அடவுகள், நாட்டுப்புறக் கலைகள், தஞ்சையின் நாட்டியப் பாரம்பரியம், கோயில் கலைகள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 'ஆலய வழிபாட்டில் சின்ன மேளம்' என்ற நூலை எழுதினார்.

பரிசுகள், விருதுகள்

  • தலைக்கோல் ஆசான்
  • பெரும்பாண நம்பி
  • சங்கீத நாடக அகாதமி விருது
  • கலைமாமணி விருது

இறப்பு

பா.ஹேரம்பநாதன் மே 10, 2022 அன்று தஞ்சையில் காலமானார்.

பண்பாட்டு இடம்

தேவதாசி மரபின் கடைக் கண்ணியாக விளங்கிய ஹேரம்பநாதன் பாரம்பரியமான நால்வர் பாணியில் நடனக்கலைஞர்களை உருவாக்கியவர். மெலட்டூர் பாகவத மேளாவின் பயிற்சியாளராகவும் நாட்டிய குருவாகவும் விளங்கினார். தஞ்சை பாரம்பரிய கலை கலாசார மையத்தை நிறுவி அதன்மூலம் 'சின்னமேளம்' என்னும் நின்று போன கலை வழிபாட்டை மீண்டும் தொடங்கி நடத்தினார் .அழிந்து போகும் நிலையில் இருந்த கைசிக புராண நாடகம் போன்ற கோயில் சார்ந்த கலைகளை தேவதாசி மற்றும் சதிராட்ட மரபில் வந்த துரைக்கண்ணு அம்மாள் போன்ற கலைஞர்களின் உதவியுடன் பழமை மாறாமலும், சூழலுக்கு ஏற்றவாறும் மீட்டெடுத்ததில் ஹேரம்பநாதனின் பங்களிப்பு முக்கியமானது.

உசாத்துணை


✅Finalised Page