அரிமளம் சு.பத்மநாபன்
- பத்மநாபன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பத்மநாபன் (பெயர் பட்டியல்)

அரிமளம் சு.பத்மநாபன் (பிறப்பு: 1951) தமிழிசைக் கலைஞர், ஆராய்ச்சியாளர், இசையாசிரியர். தொல்காப்பியத்தையும், பத்துப்பாட்டையும் செம்மொழி நிறுவனத்திற்காக முற்றோதல் வகையில் ஆவணப்படுத்தினார். தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) தேசிய சேர்ந்திசைப் பயிற்றுனராகப் பணி புரிந்தார். இந்தோளப் பண் பாடுவதில் தேர்ந்தவர். தமிழின் முதல் இசைத் தமிழ்க் கலைச் சொல் அகராதி யின் தொகுப்பு ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
அரிமளம் சு.பத்மநாபன் புதுக்கோட்டையை அடுத்த அரிமளம் என்ற ஊரில் ஜூன் 14,1951அன்று இசைக்கலைஞர் அரிமளம் சுப்பிரமணியம் (புகழ்பெற்ற அரிமளம் சகோதரர்களில் மூத்தவர்), மங்களம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். அரிமளத்தில் உயர்நிலைக் கல்வியும், தந்தையாரிடம் முறைப்படி மரபிசையும் கற்று ஆங்கில இலக்கியத்திலும் கல்வியியலிலும் முதுகலை பயின்றார்.
அரிமளம் பத்மநாபன் 1967 -ம் ஆண்டில் திருவையாறு தியாகராஜர் இசைவிழாவில் இசைக்கலைஞராக அரங்கேறினார். காரைக்குடி தமிழிசைச் சங்கம் தமிழக அளவில் நடத்திய இசைப்போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழாண்டுகள் பரிசுபெற்றார். விளைவாக தமிழிசை ஆய்வாளர் குடந்தை சுந்தரேசனாரின் தொடர்பு உருவாகியது. குடந்தை சுந்தரேசனாரிடமிருந்து பண்ணிசையை கற்றுத்தேர்ந்தார். அதில் ஆய்வுசெய்யும் தகுதியையும் அடைந்தார்.
அரிமளம் பத்மநாபன் 'தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக் கூறுகள்' என்னும் தலைப்பில் தமிழ் மரபுவழி நாடக இசையில் ஆய்வு மேற்கொண்டு பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் இருந்து 1998-ம் ஆண்டில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.
கல்விப்பணி
கல்விப்பணி
- 1976-ல் இசையாசிரியர்-புதுச்சேரி மத்திய அரசுப்பள்ளி(கேந்த்ரிய வித்யாலயா)
- 1976-ல் பாண்டிச்சேரி அரசில் இசையாசிரியர்
- 1993 பாண்டிச்சேரி அரசில் ஆங்கில ஆசிரியர்
- 2000 த்தில் விருப்ப ஓய்வுபெற்றார்
கௌரவப் பதவிகள்
- உறுப்பினர் பாடத் திட்டக் குழு, நிகழ்கலைப் புலம் -பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.
- இசைத்துறைப் பட்டப் படிப்புகளுக்கான பாடங்கள்-சென்னைப் மற்றும் பாரத்தாசன் பல்கலைக்கழகங்கள்
- ஒன்று முதல் பத்தாம் வகுப்புக்கான இசை பாடத்திட்டத் தயாரிப்பு-புதுச்சேரி அரசுக் கல்வித்துறை
வருகைதரு பேராசிரியர்
- நிகழ்கலைத் துறை, புதுவைப் பல்கலைக் கழகம்,
- இசைத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
- கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
- உள்ளுறை ஆய்வுத் தகைஞர் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்,
இசை மற்றும் இலக்கியப் பணி
அரிமளம் சு.பத்மநாபன் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு இசைத்தமிழ், நாடகத்தமிழ், நாட்டுப்புறக் கலைகள் பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளார். மொழிபெயர்ப்பு நூல் உள்பட இசைத் தமிழ், நாடகத் தமிழ் தொடர்பான 9 நூல்களையும் 75-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அவர் முனைவர் பட்டத்திற்காக செய்த தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக் கூறுகள் என்ற ஆய்வு நாடக இசைத்துறையில் ஓர் முன்னோடி ஆய்வு.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மேற்கொண்ட பணிகள்
- பழந்தமிழ் நூல்கள் காட்டும் பழந்தமிழர் வாழ்க்கை, கடல் வணிகம், முத்துக் குளித்தல், மற்றும் பல தொழில் நுட்பங்கள் குறித்து 20 காட்சிக் குறும்படங்கள் (Visual Episodes) உருவாக்கம்
- தமிழின் பன்மை பற்றிய பன்முக ஆய்வுத் திட்டத்தில் மரபு வழித் தமிழ்ச் செய்யுள் படிக்கும் மரபினை மீட்டெடுக்கும் முயற்சியாக பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழி படித்தல், தொல்காப்பியம் மற்றும் பத்துப்பாட்டு முற்றோதல் ஆகிய குறுவட்டுகள் தயாரிப்பு
- பல்கலைக்கழக, கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செய்யுளை மரபுவழி படிக்கும் பயிற்சியளிப்பு
- பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை (முதல்வர் கருணாநிதி அவர்கள் தலைமை) மற்றும் பண்டைக் காலத் தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும் (மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை) ஆகிய மாநாடுகளின் ஒருங்கிணைப்பு
- தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் (10 -28 நாட்கள் வரை) தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களிலும், குறிப்பாக, தமிழ், இசை, நாடகத் துறை, திரைப்படக் கல்லூரி மற்றும் கவின்கலைக் கல்லூரிகளில் ஒருங்கிணைத்து நடத்துதல்.
- உ.வே.சாமிநாதையர் பிறந்த நாளை ஒட்டிய சங்க இலக்கிய வார கொண்டாட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஒருங்கிணைந்து 115 ஊர்களில் ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட சங்க இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துதல்.
படைப்புகள்
- தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக் கூறுகள், 2000
- சங்கரதாஸ் சுவாமிகளின் சந்தங்கள் ஓர் ஆய்வு, 2002
- சங்கரதாஸ் சுவாமிகளின் இரு நாடகங்கள், 2006, சாகித்திய அகாதமி வெளியீடு
- சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் களஞ்சியம், 2008, காவ்யா வெளியீடு
- தமிழிசையும் இசைத்தமிழும், 2009, காவ்யா வெளியீடு
- பார்சி அரங்கு தோற்றமும் வளர்ச்சியும் (மொ.பெ.), 2014, காவ்யா வெளியீடு
- கம்பனில் இசைத்தமிழ், 2016, உமா பதிப்பகம், சென்னை
- சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் கருவூலம், 2017, காவ்யா வெளியீடு
- இசைத் தமிழ்க் கலைச் சொல் அகராதி, 2018, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
விருதுகள், சிறப்புகள்
- தமிழ் மாமணி விருது - புதுச்சேரி அரசு
- கலைமாமணி விருது - புதுச்சேரி அரசு
- விபுலானந்தர் விருது - கிழக்குப் பல்கலைக்கழகம், ஸ்ரீலங்கா
- முத்துத் தாண்டவர் விருது - 2018 தமிழ்ப் பேராயம், S R M பல்கலைக்கழகம்
- இராஜா சர் முத்தையா செட்டியார் விருது- மதுரை
- பெரும்பாண நம்பி விருது-லால்குடி
- அருட்பா இசைமணி விருது - வடலூர்
- சங்கரதாஸ் சுவாமிகள் விருது - புதுச்சேரி
- நாடகச் செல்வம் - சென்னை
- நாடக நற்றமிழ் ஞாயிறு - மதுரை
- டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் நினைவு விருது
- சிறந்த இசை விளக்க உரை விருது - மியூசிக் அகாடமி, சென்னை
- தமிழிசைப் பேரொளி(வாழ்நாள் சாதனையாளர் விருது) SIGNIS தமிழ்நாடு
- 'கலைக் காவிரி’ இசை அறிஞர் விருது திருச்சிராப்பள்ளி
- டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது கரூர்
- நிகழ்த்துக் கலைச் செம்மல் விருது - கோவை
- சென்னைக் கம்பன் கழகம் தமிழிசையறிஞர் மாரிமுத்தாப்பிள்ளை விருது
- ‘இசை ஆய்வாளர்’ (musicologist) (சங்கீத வித்வத் சபை விருது)
பண்பாட்டு இடம்
அரிமளம் பத்மநாபன் தமிழிசை ஆய்வாளர்களின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், சுவாமி விபுலானந்தர் போன்றவர்கள் முதல் தலைமுறையினர். குடந்தை சுந்தரேசனார், தண்டபாணி தேசிகர் போன்றவர்கள் இரண்டாம் தலைமுறையினர். அரிமளம் பத்மநாபன் அவ்வரிசையில் மூன்றாம் தலைமுறை இசையறிஞர்களில் முதன்மையானவர். தமிழ் தொல்லிலக்கியங்களை பண்ணிசையில் அமைத்தல், பழந்தமிழ்ப் பண்களை மீட்டு இசைக்கோலங்களாக்குதல் ஆகியவற்றில் முன்னோடியான பணிகளை ஆற்றியதுடன் தமிழிசை ஆய்வாளர்களின் பணிகளை அடுத்த தலைமுறையினருக்கு விளக்கும் இசையுரை நிகழ்வுகளையும் நடத்தியவர். நாட்டார் பண்களுக்கும் தமிழ்ப் பண்மரபுகளுக்குமான உறவை விளக்கியவர். சங்கரதாஸ் சுவாமிகளின் இசை பற்றிய அவருடைய ஆய்வு முக்கியமானதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. பேராசிரியர் ராமானுஜத்தின் கைசிக புராண நாடகத்தின் புனரமைப்புக் குழுவில் பெரும் பங்காற்றினார்.
உசாத்துணை
- இசையறிஞர் அரிமளம்.சு.பத்மநாபன்-முனைவர் மு.இளங்கோவன் -தமிழோடு நான்
- வரலாற்று வரிசை-அரிமளம் சு.பத்மநாபன்-கட்டுரையாளர் ஷைலா ஹெலீன்
- இசையின் மறுபெயர் தமிழ்-sirukathaigal.com-
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:15 IST