கண்ணனார்
From Tamil Wiki
கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கண்ணன் என்னும் இயற்பெயர் உடையவர்.
இலக்கிய வாழ்க்கை
கண்ணனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 244-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. இரவில் தலைவியை சந்திக்க வரும் தலைவனிடத்து, தலைவி இற்செறிக்கப்பட்டுள்ள தகவலைத் தோழி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- காதல் கொண்ட பெண்ணை ஊர் அறியா வண்ணம் ஆடவர் இரவு நேரத்தில் வந்து சந்திப்பர்.
- மகளின் காதலை அறிந்த தாய்மார், இரவில் மகளுடன் நெருங்கி அணைத்தவாறு படுத்து மகளை வீட்டுக்காவலில் வைக்க முயல்வர்.
- உவமைகள்: தலைவன் ஆண் யானைக்கு நிகரென ஒப்பிடப்பட்டுள்ளான். தாயின் பிடியில் சிக்கித் தவிக்கும் மகளின் நிலை, வலையில் அகப்பட்டு தலைக்கொண்டை நெரிய தோகையை படபடவென்று அடித்து கொள்ளும் மயிலின் நிலையை ஒத்துள்ளது.
பாடல் நடை
குறுந்தொகை - 244
- திணை:குறிஞ்சி
- கூற்று: இரவுக்குறி வந்தொழுகா நின்ற தலைமகற்குத் தம் காவல் மிகுதியாற் புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறாதவழி,பிற்றை ஞான்று(மறுநாள்)தோழி, "வரைந்து கொளினல்லது இவ்வொழுகலாற்றின்(களவொழுக்கத்தில்)இனிக் கூடல் அரிது" என வரைவு கடாயது.
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- குறுந்தொகை - 244:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Apr-2025, 21:07:18 IST