கடுந்தோட் கரவீரன்
கடுந்தோட் கரவீரன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கடுந்தோட் கரவீரன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். புலவரின் பெயருக்கு முன்பாக கடுந்தோள் என்ற அடைமொழி இடம்பெற்றிருப்பதால் வலிமை வாய்ந்த தோள்களைக் கொண்டவராக இருந்திருப்பார் என கருதப்படுகிறது. 'கரவீரம்' என்பது புலவர் போரில் வல்லவர் என உணர்த்தும் பெயராக இருக்கும். எனவே வலிமை வாய்ந்த தோள்களை கொண்ட போர்வீரன் என்று உணர்த்தவே புலவருக்கு இப்பெயர் என கருதப்படுகிறது.
திருவாரூருக்குப் பக்கத்தில் இருக்கும் கரவீரம் என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்தமையால் இப்பெயர் பெற்றார் என்றும் கரவீரம் என்ற சொல்லுக்கு அலரிமலர் மாலை என பொருள் கொண்டு அலரி மாலை அணிந்தவர் என்றும் இருவேறு ஊகங்கள் அறிஞர்களால் முன்வைக்கப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
கடுந்தோட் கரவீரன் பாடிய பாடல் குறுந்தொகையில் 69-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. ஆபத்து நிறைந்த பாதையில் இரவு காலத்தில் தலைவியை சந்திக்க வரும் தலைவனிடத்து, பிரிவு துன்பத்தால் வாடும் தலைவியை மணம் செய்து கொள் என்று பொருள் அமையும் வகையில் தோழி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மலைகளில் வாழும் குரங்கு இணைகளில் ஆண் குரங்கு இறந்துவிட்டால் அதன் இணையான பெண் குரங்கு துன்பத்தால் வாடும்.
- தனது இணையான ஆண் குரங்கின் இறப்பு துன்பத்தை தாங்காத பெண் குரங்கு மரம் தாவக் கற்றறியாத தன்னுடைய இளங்குரங்கு குட்டியை சுற்றத்து குரங்குகளிடம் விட்டுவிட்டு மலை முகட்டில் சென்று தாவி குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும்.
பாடல் நடை
குறுந்தொகை - 69
- திணை: குறிஞ்சி கூற்று: தோழி இரவுக்குறி மறுத்தது
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணகத்தார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க.கோவிந்தன்
- குறுந்தொகை - 69:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Apr-2025, 18:20:02 IST