under review

ஆன்டன் செகாவ்

From Tamil Wiki
ஆன்டன் செகாவ்

ஆன்டன் செகாவ் (ஆன்டன் பாவ்லோவிச் செகாவ்) (Anton Pavlovich Chekhov) (ஜனவரி 29, 1860 – ஜூலை 15, 1904) ரஷ்யாவைச் சேர்ந்த எழுத்தாளர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், மருத்துவர். உலக இலக்கியத்தில் சிறுகதையின் முன்னோடி. சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தை கூர்மையாக, வாழ்க்கையின் மெய்யான சிக்கல்களை, முரண்பாடுகளைச் சொல்லப் பயன்படுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்தவர்களில் முக்கியமான நாடக ஆசிரியர்.

ஆன்டன் செகாவ் குடும்பம்

பிறப்பு, கல்வி

அன்டன் செகோவ் ஜனவரி 29, 1860-ல் தெற்கு ரஷ்யாவின் அசோவ்(Azov) கடல் துறைமுகமான டாகன்ராக் (Taganrog) என்னும் இடத்தில் பவெல் எகொரோவிச் செக்கோவ் (Pavel Chekhov), எவ்கினியா(மொரோசாவா)(Yevgeniya (Morozova) இணையருக்கு மூன்றாவதாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி.

செகாவின் தாத்தா பண்ணையடிமையாக இருந்து தனது விடுதலையைத் தானே தேடிக்கொண்டவர். செகாவின் தந்தை பவுல் ஒரு மளிகைக் கடைக்காரர். அரிசி, காபி, பாரஃபின், எலிப்பொறிகள், அமோனியா, கத்தி, வோட்கா எனப் பலவிதப் பொருட்களையும் விற்பனை செய்தார். வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரம் கொண்டவர், திருச்சபைப் பாடகர் குழுவின் இயக்குநராகவும், பக்தியுள்ள கட்டுப்பாடான கிறிஸ்துவராகவும் இருந்தார். மதம்சார்ந்த விஷயங்களில் கண்மூடித்தனமான ஈடுபாடு கொண்டவர். உடல் குறைபாடுடையவராகவும் காணப்பட்டார்.

செகாவின் தாய் உக்ரேனிய நாட்டைச் சேர்ந்தவர். அவரது வில்ஹோவட்கா கிராமமானது கொபிலியகி அருகேயுள்ள போல்டவா பகுதியில் உள்ள தற்போதைய உக்ரைன் நாட்டில் அமைந்துள்ளது. செகாவின் தாய்சிறந்த கதைசொல்லி. அவர் தம்முடைய குழந்தைகளுக்கு தாம் தம் துணி வியாபாரியான தந்தையுடன் ரஷ்யா முழுக்கப் பயணித்த பல்வேறு பயண அனுபவங்களைக் கதைகளாக எடுத்துக் கூறுவார்.

செகாவ் 1866-லிருந்து 1879 வரை டகன்ரோகிலுள்ள கிரேக்கப் பள்ளியில் மரபான மதம் சார்ந்த கல்வியும், டகன்ரோக் ஜிம்னாசியத்திலும் (செக்கோவ் ஜிம்னாசியம் என்று பெயர் மாற்றப்பட்டது) பயின்றார். அங்கு அவர் பண்டைய கிரேக்கத்தில் ஒரு தேர்வில் தோல்வியடைந்ததற்காக பதினைந்து வயதில் ஒரு வருடம் படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. டகன்ரோக்கில் உள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மடத்திலும் அவரது தந்தையின் குழுவிலும் அவரும் சகோதரர்களும் பாடல்கள் பாடினர். மணியொலிப்பவர்களாகவும் பூசனைகளுக்கு உதவுபவர்களாகவும் சேவையாற்றினர். செகாவின் வளர்ப்பு மதரீதியானதாகவே அமைந்தது.

1876-ம் ஆண்டு செகாவின் தந்தைக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடன்காரர்களிடமிருந்து தப்பிக்கவேண்டி, மாஸ்கோவில் படித்துக்கொண்டிருந்த மூத்த மகன் அலெக்ஸாண்டரிடம் குடும்பம் சென்றடைந்தது. அப்போது பதினாறு வயதேயான செகாவ் பள்ளிக்கல்வியைப் படித்து முடிக்கும்பொருட்டு டகன்ரோகிலேயே தனித்துவிடப்பட்டார். செலவுகளைச் சமாளிக்க வீடுகளில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். மிக ஏழ்மையில் வாழ்க்கையைக் கழித்தார். 1879-ல் கல்வியை முடித்ததும் மாஸ்கோவில் இருந்த குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டார்.1884-ம் ஆண்டு மருத்துவக் கல்வியை முடித்தார். ஆனால் தொழில்முறை மருத்துவராகப் பணியாற்றவில்லை.

ஆன்டன் செகாவ், ஓல்கா

தனி வாழ்க்கை

ஆன்டன் செகாவ் மேல் காதல் கொண்ட பெண்கள் பலர். லிகா மிசினோவாவிடம் அவர் காதல் கொண்டுவிடும் நிலையில் இருந்தபோது 1894-ல் வெளிநாட்டுக்குச் செல்ல நேர்ந்த சமயத்தில், குறித்த நேரத்தில் அவரைச் சந்திக்க முடியாமல் போனதால் அக்காதல் முறிந்தது. 1897-ல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அருகில் இருந்த லிடியா அவிலோவா எனும் நாவலாசிரியையும் அவரது காதலிகளில் ஒருவர். 1899-ல் மாஸ்கோ கலைக்கூடத்தில் நடித்துக்கொண்டிருந்த இளம் நடிகையான ஓல்கா நிப்பரைச் சந்தித்து காதல் கொண்டார். மே 25, 1901-ல் ஓல்கா நிப்பரை திருமணம் செய்து கொண்டார். ஆன்டன் செகாவிற்கு குழந்தைகள் இல்லை.

அமைப்புப் பணிகள்

ஆன்டன் செகாவ் மெலிகோவாவில் இருந்த நாட்களில் எண்ணற்ற மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இலவச மருத்துவம் அளித்தார். 1891, 1892-ம் ஆண்டுகளில் காலரா பரவியபோதும், அதே ஆண்டுகளில் பஞ்சம் வாட்டிய நேரத்திலும் தொண்டாற்றினார். மெலிகோவாவில் ஒரு பள்ளியை நிறுவினார். அங்குள்ளவர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் அது சிறப்பாக அமைந்தபோது அண்டைய கிராமங்களில் மேலும் இரண்டு பள்ளிகளை உருவாக்கினார். கிராமத்திலிருந்த தேவாலயத்தில் மணிக்கூண்டு ஒன்றையும் கட்டித் தந்தார். தகரோங்கிலுள்ள நூலகத்துக்கு ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொடுத்தார். 1898-ம் ஆண்டுக்குப் பிறகு தான் வசித்த யால்தாவில் கடல்சார் உயிரியில் ஆய்வகம் ஒன்றை நிறுவினார்.

நாடக வாழ்க்கை

செகாவ் நாடக ஆசிரியராக இருந்து கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்களை எழுதி, அரங்காற்றுகை செய்தார். ஹென்ரிக் இப்சன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். செகாவின் இந்நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு 'மனநிலை சார்ந்த அரங்கியல்' என்னும் நுட்பத்தையும், 'நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலை'யையும் கொடுத்தன.

1887-ன் இலையுதிர்காலத்தில், கோர்ஷ் என்ற நாடக மேலாளர் செக்கோவை ஒரு நாடகத்தை எழுத நியமித்தார். 'Ivanov' பதினைந்து நாட்களில் எழுதப்பட்டு அந்த நவம்பரில் தயாரிக்கப்பட்டது. செகாவ் எழுதிய 'The Seagull' நாடகம் 1896-ல் மேடையேற்றப்பட்டு படுதோல்வி அடைந்தபின் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். 1898-ல் கான்சிட்டாண்டின் தாலின்சிலாவிசிக்கியின் (Konstantin Stanislavski) இயக்கத்தில் மாஸ்கோ கலை அரங்கில் மீண்டும் அரங்கேறியபோது பெரும் வரவேற்பும், புகழும் பெற்றது. அடுத்த ஆண்டில் 'Uncle Vanya' நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னர் 'The Three Sisters'(1901) மற்றும் 'The Cherry Orchard' (1904) ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் Heartbreak House (1919) நாடகத்தில் செகாவின் The Cherry Orchard நாடகத்தின் பாதிப்பு உள்ளதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். இன்னொரு பிரிட்டிஷ் நாடக ஆசிரியரான ஹெரால்ட் பிண்ட்டின் படைப்புகளிலும் அமெரிக்க நாடகாசிரியர்களான டென்னிஸ் வில்லியம்ஸ், ஆர்தர் மில்லர் ஆகியோரின் நாடகங்களிலும் செகாவின் பாதிப்பு மறைமுகமாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அரங்காற்றுகை செய்த நாடகங்கள்
  • Ivanov / Ivanoff (1887)
  • The Bear (1888)
  • The Wedding (1889)
  • The Sea-Gull (1896)
  • Uncle Vanya (1899)
  • The Three Sisters (1901)
  • The Cherry Orchard (1904)
ஆன்டன் செகாவ் சகோதரர் நிகோலாயுடன்

இலக்கிய வாழ்க்கை

குடும்பத்துக்கு உதவவும் தன் கல்விச் செலவுக்காகவும் பிரபல பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகளையும் சிறிய கதைகளையும் புனைப்பெயர்களில் எழுதத் தொடங்கினார் செகாவ். இந்த விஷயத்தில் செகாவ் தனது அண்ணன் அலெக்ஸாண்டரைப் பின்பற்றினார். பெரும்பாலான கதைகளைத் தகரோங்கிலிருந்தபோது அவருடைய ஆசிரியர் ஒருவர் சூட்டிய ‘அண்டோசா செகோந்தே’(Antosha Chekhonte) என்ற பெயரிலேயே எழுதினார். அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.

1887-ல் அதிக வேலை, உடல்நலக்குறைவால் சோர்ந்துபோன செக்கோவ் உக்ரைனுக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். அங்குள்ள ஸ்டெப்பி புல்வெளி அவருக்கு மீண்டும் எழுதுவதற்கான ஆர்வத்தை அளித்தது. அவர் திரும்பியதும், அவர் 'தி ஸ்டெப்பி' என்ற நாவல்-நீள சிறுகதையைத் தொடங்கினார். யால்டாவில் செக்கோவ் தனது மிகவும் பிரபலமான கதைகளில் ஒன்றான 'தி லேடி வித் தி டாக்'(The lady with the dog) எழுதினார். நானூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதினார். குறுநாவல்கள், நாடகங்கள் எழுதினார்.

தமிழில் ஆண்டன் செகாவ்

1952-ல் டி.என்.ராமச்சந்திரன் மொழிபெயர்த்து நாகப்பட்டினம், இமயப் பதிப்பகம் பதிப்பித்த ‘காதலி’ என்ற தொகுப்பே செகாவை தமிழில் அறிமுகப்படுத்திய முதல் தொகுப்பு. இத்தொகுப்பில் ‘காதலி’, ‘துணைவி’, ’மூன்று ஆண்டுகளில்’ ஆகிய மூன்று கதைகளும், ‘காதலி’ கதையைக் குறித்த தல்ஸ்தோயின் விமர்சனமும் இடம்பெற்றுள்ளன. ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம் ஆகியோரின் மொழிபெயர்ப்பில் ராதுகா பதிப்பகம் ‘அந்தோன் செகாவ் – சிறுகதைகளும் குறுநாவல்களும்’ என்ற தலைப்பில் வெளியிட்டது.

எம்.எஸ்-ன் மொழியாக்கத்தில் ‘அன்டன் செகோவ்-சிறுகதைகள்’ பாதரசம் வெளியீடாக வந்தது. தமிழினி வெளியீடாக, க. ரத்னம் மொழிபெயர்ப்பில் ‘மனப்பிராந்தி’ வெளிவந்தது. சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர் மொழியாக்கத்தில் ‘ஆன்டன் செக்காவ்-ஆகச் சிறந்த கதைகள்’ என்ற பெயரில் தடாகம் வெளியிட்டது. இவற்றிலுள்ள கதைகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் செகாவின் ஏறத்தாழ ஐம்பது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தீபம் இதழில் 1967-ம் ஆண்டு ‘ஆண்டன் செகாவ்’ என்ற தலைப்பில் அசோகமித்திரன் ஒரு கட்டுரையை எழுதினார். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘செகாவின் மீது பனி பெய்கிறது’, ‘செகாவ் வாழ்கிறார்’ ஆகிய இரு நூல்களும் முக்கியமானவை. 1985-ம் ஆண்டு செகாவின் 125-வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் அவரது படைப்புகள் அனைத்தையும், ஆங்கில மொழியாக்கத்தில், கால வரிசைப்படி ஐந்து தொகுதிகளாக ராதுகா பதிப்பகம் வெளியிட்டது.

இலக்கிய இடம்

”ஒரு நல்ல சிறுகதையென்பது அரசியல், சமூக, பொருளாதாரம் குறித்த நீண்ட பிரசங்கங்களைக் கொண்டிருக்கக்கூடாது என்பதை வரையறையாகக் கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி எப்படி மதிப்பிடுவார்கள்? செகாவின் கருத்து ‘கலை கலைக்காக’ என்பதாகவும் எழுத்தாளனின் சமூகக் கடமையை மறுப்பதாகவும் கலையின் பயன்பாட்டு மதிப்பை வலியுறுத்தும் மரபை மீறுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. மரபான கதைசொல்லல் முறைக்கு மாறாக புதிய வகையான கதைகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளனைப் பற்றிய புதிய வலுவான எண்ணத்தையும் ஏற்படுத்தினார். எழுத்தாளன் என்பவன் ஒதுங்கி நின்று கவனிப்பவன், மிகையாக உணர்ச்சிவசப்படாமல் கட்டுப்பாடுடனும் பணிவுடனும் கொள்கை சார்ந்த அதிகப்பிரசங்கித்தனங்களையும் அறம் சார்ந்த தீர்வுகளை முன்வைக்கும் ஆவலையும் அபாரமான எண்ணங்களை உருவாக்கும் தற்பெருமையையும் தவிர்த்து, தன் எழுத்தை நம்பகத்தன்மையுடனும் துல்லியத்துடனும் கட்டமைக்கும் ஒரு தொழில்நுட்ப நிபுணன் என்னும் புதிய சித்திரத்தை அவர் அளித்தார். கொள்கை சார்ந்த விஷயங்களில் தனக்கு இருக்கும் போதாமையைக் குறித்த தெளிவு அவருக்கிருந்தது.” என எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

"அலங்காரமில்லாத எளிமை. நேரடியாகக் கதைகளை சொல்லும் முறை. அழுத்தமான கதாபாத்திரங்கள். கச்சிதமான உணர்ச்சி வெளிப்பாடு.சிறுகதைகளின் பேரரசன் என்றே அவரைச் சொல்ல வேண்டும்." என எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

மறைவு

மார்ச் 22, 1897-ல், செகாவ் தனது நெருங்கிய நண்பரும் பதிப்பாளருமான அலெக்சி சுவோரினுடன் உணவகத்துக்குச் சென்றார். சாப்பிட உட்கார்ந்த சிறிது நேரத்தில் இரத்த வாந்தி எடுத்தார். எலும்புருக்கி நோய் அவரைத் தாக்கியது. சிகிச்சைக்காக பாதன்வெய்லெர் நகரத்துக்கு மனைவி ஓல்கா நிப்பருடன் சென்றார். ஜூலை 2, 1904-ல் செகாவ் காலமானார்.

நூல் பட்டியல்

நாவல்
  • The Shooting Party (1884)
குறுநாவல்
  • The Unnecessary Victory (1882)
  • The Steppe (1888)
  • The Duel (1891)
  • The Story of an Unknown Man (1893)
  • Three Years (1895)
  • My Life (1896)
சிறுகதைத் தொகுப்பு
  • The Prank (1882)
  • The Tales of Melpomene (1884)
  • Motley Stories (1886)
  • In the Twilight (1887)
  • Innocent Speeches (1887)
  • Stories (1888)
  • Children (1889)
  • Gloomy People (1890)
  • Ward No. 6 (1893)
  • Novellas and Stories (1894)
  • Peasants and My Life (1897)
  • Stories (1901)
நாடகம்
  • A Tragedian in Spite of Himself / A Reluctant Tragic Hero (1889)
  • Ivanov / Ivanoff (1887)
  • On the Harmful Effects of Tobacco (1886)
  • On the High Road (1884)
  • Platonnov (1878)
  • Tatiana Repina (1889)
  • The Bear (1888)
  • The Cherry Orchard (1904)
  • The Festivities / The Anniversary (1891)
  • The (Marriage) Proposal (1889)
  • The Night Before the Trial (1890s)
  • The Sea-Gull (1896)
  • The Swan Song (1887)
  • The Wood Demon (1889)
  • The Wedding (1889)
  • The Three Sisters (1901)
  • Uncle Vanya (1899)
தமிழில்
  • காதலி (1952) (டி.என்.ராமச்சந்திரன்) (இமயப் பதிப்பகம்)
  • அந்தோன் செகாவ் – சிறுகதைகளும் குறுநாவல்களும்: (ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம்) (ராதுகா பதிப்பகம்)
  • அன்டன் செகோவ் சிறுகதைகள் (எம்.எஸ்) (பாதரசம்)
  • மனப்பிராந்தி (தமிழினி) (க.ரத்னம்)
  • ஆன்டன் செக்காவ்-ஆகச் சிறந்த கதைகள் (சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர்) (தடாகம்)
  • ஆன்டன் செக்காவ் கதைகள் (எம். கோபாலகிருஷணன்) (சொல்வனம்)
  • செகாவின் மீது பனி பெய்கிறது (எஸ்.ராமகிருஷ்ணன்)
  • செகாவ் வாழ்கிறார் (எஸ்.ராமகிருஷ்ணன்)
  • பந்தயம்: கீதா மதிவாணன்: கனலி

இணைப்புகள்


✅Finalised Page