under review

அமிர்தவசனி

From Tamil Wiki
தத்துவபோதினி 1866-ம் ஆண்டு இதழில் ‘அமிர்தவசனி’ இதழ் விளம்பரம்

அமிர்தவசனி, தமிழில் வெளியான முதல் மகளிர் இதழ். 1865 முதல் சென்னையில் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் தபிதா பாபு. தமிழின் முதல் பெண் இதழாசிரியர் இவர்தான். இவ்விதழ் கிறிஸ்தவ சமயம் சார்ந்த இதழாக இருந்தாலும் இந்துக்களின் வாழ்வியல் மற்றும் கொள்கைகள், வாழ்க்கை முறை சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிட்டது. பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. (அமிர்தவசனி என்னும் இதே பெயரில், 1962-ல் ஆன்மிக இதழ் ஒன்றும் வெளிவந்தது. அதன் ஆசிரியர்: சு.முத்துசாமி ஐயர்)

அமிர்தவசனி ஆன்மிக இதழ்[1]

பதிப்பு, வெளியீடு

'சுதேச கிறித்தவப் பெண்களுக்கு மதக்கொள்கையை எடுத்தோதும் ஒரு பத்திரிகை' என்ற குறிப்புடன், 1865-ல் அமிர்தவசனி வெளிவந்தது. தமிழில் பெண்களுக்கு என வெளிவந்த முதன் பெண்கள் இதழ் இதுதான். குழந்தை மண எதிர்ப்பு, பெண் கல்வி , பெண் ஒழுக்கம் முதலான கட்டுரைகளைத் தாங்கி வந்த இதழின் ஒரு பிரதி கூட தற்போது கிடைக்கவில்லை. அமிர்தவசனியின் சமகாலத்து இதழான ‘தத்துவபோதினி’ வெளியிட்ட மதிப்புரை, விளம்பரக் குறிப்புகள் மூலமும், தத்துவபோதினி மறுபிரசுரம் செய்த கட்டுரைகள் மூலமுமே அமிர்தவசனி இதழைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

கிறிஸ்தவ சமயத்தாரால் அச்சிடப்பட்ட இதழ் என்றாலும் இதில் பெரும்பான்மையான செய்திகள் இந்துப் பெண்களுக்காகவே எழுதப்பட்டதாய் அமைந்திருந்தன. பெண்களுக்காகப் பெண்களாலேயே எழுதப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது. தபிதா பாபு இதன் ஆசிரியராக இருந்தார். தமிழின் முதல் பெண் இதழாசிரியராக இவர் கருதப்படுகிறார்.

அமிர்தவசனி இதழ் குறித்து தத்துவபோதினியின் மதிப்பீடு

இதழின் நோக்கம்

இவ்விதழின் நோக்கமாக, தத்துவபோதினியில் வெளிவந்த விளம்பரக் குறிப்பில், “ அமிர்தவசனி என்னும் பெயருடைய சிறுபத்திரிகையொன்றைப் பிரதி மாதம் இரண்டாவது சனி வாரந்தோறும் நாங்கள் பிரசுரஞ்செய்ய உத்தேசித்திருக்கின்றோம். இச்சென்னையம்பதிலுள்ள பற்பல பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களும் , தற்காலத்தில் கல்வி கற்பவர்களாகிய எம்போலிய ஹிந்து ஸ்திரீகளுக்கு நல்லறிவு, நல்லொழுக்கங்களை விர்த்தி செய்விப்பதே இப்பத்திரிகையின் கருத்தாம்.

சமயதருமம், ஆசாரதருமம், இலக்கிய இலக்கணங்கள், ககோள போகோளங்கள், கணிதம், ஜெந்து சுபாவம், பாக சாஸ்திரம், பலவகைப்பட்ட தையல்கள், விடுகதைகள், விநோத கதைகள், பழமொழிகள் முதலிய பல பிரயோஜனமான விஷயங்களை எங்களாலியன்ற வரையில் இப்பத்திரிகையின் கண்ணே இயற்றுவிக்க முயலுவோம். எங்கள் அபிப்ராயங்களை விளக்கத்தக்க சில உசிதமான சித்திரப் படங்களையும் இதிற் காணலாம்” என்ற குறிப்பு உள்ளது.

இவ்விதழின் தொடர்பு முகவரியாக, ‘ப்ரீ சர்ச்சு மிஷன் பாலிகாபாடசாலை , பூக்கடை வீதி, சென்னை’ என்ற முகவரியும் ‘ப்ரீ சர்ச்சு மிஷன் பாலிகா பாடசாலை. ஆசாரப்பன் வீதி, சென்னை’ என்ற முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.

தனிப்பிரதியின் விலை அரை அணா. வருஷத்திற்கு அணா 5.

உள்ளடக்கம்

அமிர்தவசனி இதழ் பற்றி தத்துவபோதினி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. “அமிருதவசனி என்னுமொரு சிறு மாதாந்திர பத்திரிகை சில மாதங்களாய் எங்களுக்கெட்டி அதை காண மிகவும் சந்தோஷமடைந்தோம். இஃது ஸ்தரீகளின் பொருட்டு ஸ்திரீகளாலேயே எழுதப்பட்டு, அழகிய சிறுபுத்தகமாய் அச்சிடப்பட்டு வருகின்றது. இதன் அழகிய நாமத்துக்குத் தக்கபடியே இதிலடங்கிய வாக்கு அமிருதமயமாயிருக்கக்கண்டு யாங்களடைந்த ஆநந்தத்துக்களவில்லை. இதில் பற்பல உபயோகமுள்ள விஷயங்களைப்பற்றி யாவருக்கும் எளிதில் விளங்கும்படி அதி சுலபநடையில் எழுதியிருப்பதுபோல வேறெவ்விடத்தும் யாங்களிதுவரையில் பார்த்தோமில்லை. இதன் அழகும் மேன்மையும் இதை வாசிப்போருக்கன்றி, செம்மையாய் விளங்க மாட்டாதாகையால், இதிலிருந்து சிலபாகங்களை இப்பத்திரிகையில் பிரசுரம் செய்கிறோம். இன்னும் இதைப்பற்றி விசேஷமாய் பிரஸ்தாபிக்க சமயமில்லாதபடியால், இஃது எல்லோரும் அபிமதித்துக் கொள்ளத்தக்கதென்று மாத்திரம் குறிக்கின்றோம்.”

இவ்விதழில் பெண் கல்வி, சுகாதாரம், பதிவிரதா தருமம் எனப் பல செய்திகள் குறித்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அக்கட்டுரைகளை அவ்வப்போது தத்துவபோதினி இதழ் மறுபிரசுரம் செய்துள்ளது. அக்குறிப்புகள் மூலம் மட்டுமே இவ்விதழின் உள்ளடக்கம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

’அமிர்தவசனி’ இதழ் பற்றிய மாதர்மனோரஞ்சனி இதழ்க் குறிப்பு (ஜூன், 1900)
அமிர்தவசனி இதழ் ஆசிரியர் : தபிபா பாபு

பிற செய்திகள்

அமிர்தவசனி இதழ் பற்றி பெ.சு. மணி, தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் (தமிழ் இதழ்கள்1831-1881 கருத்தியல் கோட்பாடு). “ஆய்வாளர் அ.மா. சாமி அவர்கள் அமிழ்தவசனி எனும் வார இதழ் திருச்சியில் இருந்து 1860 முதல் வெளிவந்ததாகக்குறிப்பிட்டுள்ளார். தமிழில் வெளிவந்த முதல் மகளிர் இதழ் இதுவென்றும், அதன் ஆசிரியை திருமதி அமிர்தபாபு என்றும், 1865 முதல் சென்னையில் இருந்து மாத இதழாக வெளிவந்தபொழுது இலவசமாக வழங்கப்பட்டதென்றும் அ.மா. சாமி தகவல் அளித்துள்ளார்." எனக் குறிப்பிட்டுள்ளார்.[2]“ (தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள் ஓர் ஆய்வு, அ.மா. சாமி, நவமணி பதிப்பகம்)

ஆனால், சென்னையிலிருந்து வெளிவந்த அமிர்தவசனி இதழ், இலவச இதழாக வெளிவரவில்லை. அதன் ஆசிரியர் பெயரும் அமிர்தபாபு அல்ல; தபிதா பாபு.

ஜூன், 1900-த்தில் வெளியான ‘மாதர் மனோரஞ்சனி’ இதழ், 1900 காலகட்டத்தில், திருச்சியிலிருந்து ‘அமிர்தவசனி’ என்ற வார இதழ் வெளிவந்த தகவலைக் குறிப்பிடுகிறது. ஆனால், அது பெண்களுக்கான இதழ் அல்ல.

நிறுத்தம்

அமிர்தவசனி இதழ் எத்தனை ஆண்டுகாலம் வெளிவந்தது, எப்போது நின்றது என்பது பற்றிய விவரங்களை முழுமையாக அறிய இயலவில்லை.

வரலாற்றிடம்

தமிழில் வெளியான பெண்களுக்கான முதல் இதழாக ’அமிர்தவசனி’ கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே சுகுணபோதினி, ஸ்திரீ தர்மம், மஹாராணி எனப் பல பெண்களுக்கான இதழ்கள் தொடர்ந்து வெளிவந்தன. அந்த வகையில் முன்னோடித் தமிழ் இதழ்களில் ஒன்றாக ஆய்வாளர்களால் ‘அமிர்தவசனி’ மதிக்கப்படுகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page