அகத்தியர்
அகத்தியர் (அகஸ்தியர்) தமிழ்நாட்டில் வாழ்ந்த பதினெண் சித்தர்களில் முதன்மையானவர். தமிழ் மொழிக்கு முதன்முதலாக இலக்கணம் செய்தவர் என்றும் தொல்காப்பியர் இவரின் மாணவர் என்றும் தமிழறிஞர்கள் கருதினர். இவரைப் பற்றி தமிழிலும், வட மொழியிலும் புராணக் கதைகள் உள்ளன. இலக்கணம், காவியம், ஜோதிடம், ரசவாதம் உட்பட்ட பல்துறைகளில் அகத்தியர் எழுதியதாகச் சொல்லப்படும் நூல்களின் தொகுப்புகள் தமிழில் உள்ளன.
பார்க்க: அகஸ்தியர் கதை
வரலாறு
அகத்தியர் என்ற பெயரைக் கொண்ட பலர் வரலாற்றில் உள்ளனர். அகத்தியரை வரலாற்றிடைக்காலத்து மாமுனி என்று இந்திய பாரம்பரிய வரலாறு கூறுகிறது. "ஈண்டு பொதியன் முனிவர்" என்பவரை அகத்தியர் என்பர். பண்டைய தமிழிலக்கிய அறிஞர்கள் அகத்தியரை பொதியை மலையில் தவச்சாலை அமைத்து இருக்கை கொண்டவர் என்றனர். இம்மலை ஆகமங்களின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் குள்ளமானவராக இருந்ததால், தமிழ்ப் படைப்புகளில் குறுமுனி (குறுகிய துறவி) என்று அழைக்கப்பட்டார்.
- சங்க இலக்கியத்தில் அகத்தியர் பெயர் இல்லை.
- ராமாயணத்தில் அகத்தியரின் தவச்சாலை பொதிகை மலையில் இருந்தது பற்றிய குறிப்பு உள்ளது.
- மகாபாரதத்தில் அகத்தியர் பற்றிய கதைகள் உள்ளன. வேதத்திலும் விஞ்ஞானத்திலும் தேர்ச்சிபெற்றவராகவும், துரோணரின் ஆசிரியரான அக்னிவேசரின் ஆசிரியராகவும் மகாபாரதத்தில் குறிப்பிடப்படுகிறார்.
- பண்டை இலக்கியங்களில்
- பரிபாடலில் அகத்தியரை, "மால் வரைத்திரு முனி" என்றும்,
- சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரியில் (23) "பொதியிற் பொருப்பின்" என்றும்,
- மணிமேகலையில் "மலையத்தருந்தவத்தினர்"
என்றும் அகத்தியரைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
இந்தியகண்டம் முழுவதும் பயணம் செய்த அகஸ்தியருக்கு பல ஆசிரமங்கள் இருந்தன. வால்மீகி ராமாயணத்தில் அகஸ்தியரின் அழகிய ஆசிரமங்கள் மற்றும் அதைச் சுற்றி நிலவிய அமைதியான சூழல் பற்றிய விளக்கம் உள்ளது.
கல்வெட்டு
பொ.யு. 4-ம் நூற்றாண்டுக்குப் பின் (நம்பிக்கை யுகம்) தோன்றிய கல்வெட்டுக்களிலும், இலக்கியத்திலும் அகத்தியர் என்ற பெயர்ச்சொல் உள்ளது.
"பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாய்ப் பெற்று..."
என வேள்விக்குடிசாசன கல்வெட்டில் உள்ளது. இது பொ.யு. 4-ம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்ற நம்பிக்கை யுகத்தில் எழுந்த சமய அரசியல் மாற்றத்துக்கு இசைவாக அகத்தியர் பற்றிய வரலாற்றுச் சிந்தனை மாற்றம் பெற்றதைக் குறிப்பிடுகிறது.
தொன்மம்
- அகஸ்தியர் இன்றும் அகஸ்திய கூத்த மலையில் தவம் செய்து வருவதாக நம்பப்படுகிறது.
- அகத்தியர்க்குத் தமிழ் அறிவுறுத்தியவர் சிவன் என்றும் முருகன் என்றும் கதைகள் உண்டு.
- முருகக் கடவுளிடம் தமிழ்க்கற்று முதற் சங்கத்தில் தலைமை ஏற்றார் என்பது தமிழ் உரையாசிரியர்களின் நம்பிக்கை.
- இவர் மகேந்திர மலையில் தங்கி ஆகமம் கேட்டார் என்றும் கூறுவர்.
- இவர் விந்திய மலையின் ஆணவத்தை அடக்கினார்; வில்வலன், வாதாபி என்னும் அரக்கர்களை அழித்தார்; விதர்ப்ப மன்னன் மகள் உலோப முத்திரையை மணந்து சித்தன் என்னும் மகனைப் பெற்றார் போன்ற கதைகள் வழக்கத்தில் உள்ளன. அகத்தியரை "வாதாபி வில்லபன்" என்றும் "குடயோனி பிறப்பவன்" என்றும் கூறும் கதைமரபு உள்ளது. மேற்கே உறைவிடம் வைத்ததால் குடமுனி என அழைக்கப்பட்டார். குடமுனி மயங்கி 'குடயோனி' ஆனது.
- பொ.யு. 4-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் தொடங்கிய சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் பொருள் விளங்கியும், பொருள் மயங்கியும் அகத்தியர் தோன்றிய கதைகள் உள்ளன.
- பொதிகை மலையிலிருந்த ஆகமங்களை வட இந்தியாவில் அகத்தியர் பரப்பியதாக கதை மரபு உள்ளது.
- அகத்தியர் வட இந்தியாவில் பிறந்து விதர்ப்ப அரசரின் மகளான லோப முத்திரையை மணம் செய்தார். பின்னர் தென் திசைக்குப் பயணம் செய்து மீண்டும் வட இந்தியா திரும்பாமலானார் என்ற நம்பிக்கை உள்ளது.
- அகத்தியர் சிவனின் கட்டளைப்படி தமிழகம் வந்து பொதிகை மலையில் தங்கினார் என்று கந்தபுராணம் கூறுகிறது. சிவன் பார்வதியை மணந்த நாளில் தேவரெல்லாம் ஒன்று கூடியமையால் வடமலை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது என்றும், நாவலந்தீவினைச் சமன் செய்வதன் பொருட்டே அகத்தியரைச் சிவன் இங்கு அனுப்பினார் என்றும் கந்தபுராணத்தில் உள்ளது.
- அகத்தியர் கடல் கொண்ட குமரி நாட்டில் தோன்றியவர் என்றும் சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
- இவரது கமண்டலத்து நீரே காவிரி ஆயிற்று என்பர்.
எழுத்து
தமிழ் மொழிக்கு முதன்முதலாக இலக்கணம் செய்தவர் என்றும் தொல்காப்பியர் இவரின் பன்னிரெண்டு மாணவர்களில் ஒருவர் என்றும் தமிழறிஞர்கள் கருதினர். இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம், உளவியல் முதலான பல்கலைகளில் வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் வழங்குகின்றன. முத்தமிழுக்கும் இலக்கணமாக 'அகத்தியம்' என்ற நூலை இயற்றினார். இதனைப் 'பேரகத்தியம்' என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர். தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'மூன்று சங்கங்களின்' முதல் இரண்டு 'சங்கங்களில்' அகஸ்தியரும் உறுப்பினராக இருந்தார் என்று தமிழறிஞர்கள் கருதினர்.
விவாதம்
இறையனார் அகப்பொருள் உரை வெளியான பிறகு தமிழ்மொழியை அகத்தியருடன் இணைத்துப் பேசும் வழக்கம் உருவாகியது. அகத்தியருடன் தமிழை இணைப்பதை சி.வை. தாமோதரம் பிள்ளை கண்டித்திருக்கிறார்.
வழிபாடு
இந்தியாவின் தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இலங்கை, கம்போடியா ஆகிய நாடுகளிலும் அகத்தியருக்காக தனிக்கோயில்கள், சிலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.
- அகஸ்தீசுவரர் திருக்கோவில், அகத்தியான்பள்ளி - வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்
- கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புறத்தாய நாட்டிலுள்ள அகதீஸ்வரம் என்ற ஊரில் பொ.யு 10-ம் நூற்றாண்டுக்கு முன்னர் அகத்தியருக்கு எழுப்பிய அகத்தீசுவரர் கோயில் உள்ளது. பொ.யு. 11, 12-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு தேவதானங்களும், பிரம்மதேயங்களும் வழங்கினர். அறிவு விருத்தி நாட செல்லும் ஆலயங்களில் ஒன்றாக இது உள்ளது.
இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகவும், கல்வித்தடை நீங்கவும், புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கவும், முன்வினை பாவங்கள் அகலவும், பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கவும் பேரும், புகழும், மதிப்பும் தேடி வரவும் அகத்தியரை வழிபடும் நம்பிக்கை உள்ளது.
நினைவு
தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் ஒரு மலைமுடிக்கு அகத்தியமலை என்ற பெயர் உள்ளது. இதன் உயரம் 1,868 மீட்டர்கள். இதற்கு அகத்தியக் கூடம் என்று பெயர். இம்மலை நெய்யாறு கானுயிர்க் காப்பகத்தின் ஒரு பகுதி. தாமிரபரணி ஆறு இம்மலையில் தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது. இம்மலை அகத்திய முனிவரின் பக்தர்களால் புண்ணியத் தலமாகக் கருதப்படுகிறது. மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது.
மதிப்பீடு
- கம்பர், 'தமிழ் என்னும் அளப்பரும் சலதி(கடல்) தந்தவன்'; 'தழல்புரை சுடர்க்கடவுள் (சிவன்) தந்த தமிழ் தந்தான்' என்று பாராட்டினார்.
- யாப்பருங்கலக் காரிகை, 'தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீர் அருவிக்கானார் மலையத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ்' என்று புகழ்கிறது.
- வீரசோழிய ஆசிரியர், 'அகத்தியன் புவனிக்கு இயம்பிய தண்டமிழ்' என்று அகத்தியரைப் புகழ்ந்தார்.
நூல் பட்டியல்
அகத்தியர் எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் கையெழுத்துப்படியாகவும், சென்னை அரசாங்க நூலகத்திலும் நூல்கள் உள்ளன. (இப்பட்டியல் முழுமையில்லை)
- அகத்தியம்
- அகஸ்திய கீதை (வராஹபுராணத்தில், பசுபலோபாக்கியானம்)
- அகஸ்திய சம்ஹிதை (பஞ்சராத்ரத்தில்)
- அகஸ்திய சம்ஹிதை (ஸ்கந்த புராணத்தில்)
- சிவ சஹிதா (பாஸ்கர சம்ஹிதையில்)
- த்வைத-நிர்ணய தந்திரம்
- இத்மா விறகுக் கிளைகள்
- அகத்தியர் ஞானகாவியம்
- அகத்தியர் சூத்திரம்
- அகத்தியம் கர்ம காண்டம்
- அகத்தியம் அம்மை சாத்திரம் (மருத்துவம்)
- அகத்தியம் அனுபோக சூத்திரம் (மருத்துவம்)
- அகத்தியம் இரசமணி (யோகம்)
- அகத்தியர் யோகம்
- அகத்தியர் மாந்திரீய காவியம்
- அகத்தியம் இரசவாதம் (இரசவாதம்)
- அகத்தியம் இலட்சண காவியம்
- அகத்தியம் உபதேச ஞானம்
- அகத்தியம் உட்கருவு சூத்திரம் (மருத்துவம்)
- அகத்தியர் பதார்த்த குண சிந்தாமணி
- அகத்தியர் நிகண்டு
- அகத்தியர் தீட்சை விதி
- அகத்தியர் தீட்சை நாடி சூத்திரம்
- அகத்தியர் சாத்திரம்
- அகத்தியர் சர்ப்பாரூடம்
- அகத்தியர் சவுக்காரத் திறவுகோல்
உசாத்துணை
- கன்னியாகுமரி சித்தர்கள் - தொகுப்பாசிரியர் புலவர் பச்சைமால் - VBX வெளியீடு
- அகத்தியர் வரலாற்றுப்பின்னணியும் குமரி மாவட்டத்தில் சித்தர் தடயங்களும் - பே.ரா. வே.தி.செல்லம், இயக்குநர், சமூகவியல் ஆய்வு நிறுவனம்
- அகத்தியரும் அகத்தியமும் - tamilvu
- வெட்டம் மாணி புராண கலைக்களஞ்சியம்
- மேக்கரை அகத்தியர் கோவில் வரலாறு - tenkasidistrict
- அகத்தியர் வழிபட்ட 163 தலங்கள் - தினமலர்
- அகத்தியர் (Agathiyar) என்ற மாமுனிவர் மனித குலத்தின் வரப்பிரசாதம் - ஈஷாயோகா
- How Did Agathiyar And Other Saptarishis Become So Powerful? - Sadhguru Tamil
- அகத்திய முனி பற்றி கண்டிப்பாக அறிய வேண்டியவை | Agastya Muni | Sadhguru Tamil
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jul-2025, 11:39:35 IST