first review completed

திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை

From Tamil Wiki

திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை (செப்டம்பர் 29, 1926 - நவம்பர் 4, 1981) ஒரு நாதஸ்வரக் கலைஞர். நாதஸ்வர வாத்தியத்தில் ஸ்வரப்பிரஸ்தாரம் செய்வதில் ஒரு புதிய பாணியை உருவாக்கியவர்.

இளமை, கல்வி

திருமெய்ஞானம் என்ற கிராமத்தில் பக்கிரிஸ்வாமி பிள்ளை - மீனாக்ஷிசுந்தரம் அம்மையார் இணையரின் மகனாக செப்டம்பர் 29, 1926 அன்று நடராஜசுந்தரம் பிள்ளை பிறந்தார்.

நடராஜசுந்தரம் பிள்ளை தன் சிறிய தந்தை நாராயணஸ்வாமி பிள்ளையிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்றார்.

தனிவாழ்க்கை

நடராஜசுந்தரம் பிள்ளைக்கு ஒரு மூத்த சகோதரர் - மஹாலிங்கம் (தவில்), ஒரு மூத்த சகோதரி ப்ருஹத்ஸுந்தர குசலாம்பாள் (கணவர் - திருவாரூர் வைத்தியநாத பிள்ளை - நாதஸ்வரம்), இரு தம்பிகள் - ராகவன் (தவில்), ஞானபண்டிதன், இரு தங்கைகள் - குஞ்சிதம்மாள், ஞானசுந்தரம்.

கீரனூர் சின்னத்தம்பி பிள்ளையின் மகள்கள் ஜெயலக்ஷ்மி, ராமசுந்தரம் இருவரையும் மணந்தார். இவர்களுக்கு ஷண்முகநாதன் (தமிழகக் காவல்துறை), வேணுகோபால் (நாதஸ்வரம்), கணேசன், ராமநாதன் என்ற மகன்களும் செல்வி, சித்ராதேவி என்ற மகள்களும் பிறந்தனர்.

இசைப்பணி

நடராஜசுந்தரம் பிள்ளை, தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளையிடம் துணை நாதஸ்வரக்காரராக முதலில் வாசிக்கத் தொடங்கினார். பல்லவி வாசிப்பதில் புதிய உத்திகளை இக்காலகட்டதில் அறிந்துகொண்டார். பின்னர் தன் தமக்கையின் கணவர் திருவாரூர் வைத்தியநாத பிள்ளையுடன் இணை நாதஸ்வரம் வாசித்தார்.

ஒரு முறை சென்னிமலையில் நிகழ்ந்த உத்சவம் ஒன்றில் நடராஜசுந்தரம் பிள்ளையும் திருவாரூர் வைத்தியநாத பிள்ளையும் வாசிக்க நேர்ந்தது. பல இசை மேதைகளும் கலந்து கொண்ட அந்நிகழ்வில் இரவு ஸ்வாமி புறப்பாட்டின் போது விசேஷ மேளம் என்பதால் எல்லாக் கலைஞர்களும் கலந்து கொள்வதாக ஏற்பாடாகி இருந்தது. வைத்தியநாதபிள்ளை பைரவி ராக ஆலாபனையை வெகு நிதானமாக வாசிக்கத்தொடங்கவே கூடியிருந்த பல கலைஞர்களும் தங்கள் விடுதிகளுக்கு சென்று விட்டனர். அரிதான ஒரு கலைஞர்களின் அவையில் நாதஸ்வரத்தின் புகழ் குன்றிவிடக் கூடாதென எண்ணிய நடராஜசுந்தரம் பிள்ளை குறுக்கே புகுந்து பல்லவி வாசிக்கத் தொடங்கினார். அன்று யாருமே அதுவரை கையாண்டிருக்காத வகையில் நடராஜசுந்தரம் பிள்ளை ஸ்வரக்கோர்வைகளை ஒன்றன் பின் ஒன்றாக வாசித்தார். விலகிச் சென்ற கலைஞர்கள் கூட்டம் மீண்டும் கூடி, விடியும் வரை நாதஸ்வரக் கச்சேரி நிகழ்ந்தது. அவ்விதம் குறுக்கிட்ட குற்றத்துக்காக திருவாரூர் வைத்தியநாத பிள்ளை நடராஜசுந்தரம் பிள்ளையைத் தன் மேளக் குழுவிலிருந்து விலக்கினார். இவ்விதமாக நாதஸ்வர வாத்தியத்தில் பல்லவி வாசிப்பில், ஸ்வரப்பிரஸ்தாரம் செய்வதில் ஒரு புதிய பாணியை உருவாக்கியவர் நடராஜசுந்தரம் பிள்ளை.

அன்று முதல் நடராஜசுந்தரம் பிள்ளையின் பல்லவி-ஸ்வரம் பெரும் புகழ் பெற்றது. இலங்கை யாழ்ப்பாண நகரைச் சுற்றி உள்ள பகுதிகளில் பல பல்லவி விற்பன்னர்கள் அன்று இருந்தனர். அவர்களையும் தனது புதிய பாணி இசையால் வென்று அனைவரது பாராட்டையும் பெற்றார் நடராஜசுந்தரம் பிள்ளை. அதுமுதல் நடராஜசுந்தரம் பிள்ளைக்கு ஆண்டுதோறும் இலங்கையில் வாசிக்க அழைப்பு வந்துவிடும்.

நடராஜசுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை, குன்றக்குடி ஆதின வித்வானாக இருந்திருக்கிறார்.

’நாத நர்த்தகி’ போன்ற சில திரைப்படங்களில் இவரது நாதஸ்வர இசை இடம்பெற்றுள்ளது. ’ஸரஸ ஸாமதான[1]’, ‘முருகன் என்றதுமே’ போன்ற பாடல்களை கொலம்பியா இசைத்தட்டுக்களில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மாணவர்கள்

திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • திருவையாறு ஜோதிராமலிங்கம்
  • பெருஞ்சேரி பத்மநாபன்
  • கோபால் (ஆந்திரா)

விருதுகள்

  • பாரத ஜனாதிபதி வி.வி. கிரியிடம் இருந்து ‘நாதஸுதா’ விருது
  • அரியலூர் தியாகராஜ சபையில் ‘நாகஸ்வரக் கலைமாமணி’ விருது

மறைவு

திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை நவம்பர் 4, 1981 அன்று மறைந்தார்.

இதர இணைப்புகள்

திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை நாதஸ்வர இசை

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

அடிக்குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.