under review

நாராயணகுரு: Difference between revisions

From Tamil Wiki
Line 8: Line 8:


====== மூதாதையர் ======
====== மூதாதையர் ======
நாராயண குருவின் தந்தையின் பெயர் மாடன் ஆசான். அவருடைய குடும்பப்பெயர் கொச்சுவிளை. தாயின் பெயர் குட்டியம்மா. அவருடைய குடும்பப்பெயர் வயல்வாரம் வீடு. ருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழஞ்ஞி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டியம்மா. குட்டியம்மாவின் அம்மா செம்பழஞ்ஞியில் மணய்க்கல் கோயிலின் மேற்கே இருந்த இலஞ்ஞிக்கல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் ஈழவ சாதியைச் சேர்ந்தவர்கள். பெண்வழிச்சமூக முறைப்படி குட்டியம்மாவின் இல்லத்துக்கு வந்து மாடன் ஆசான் வாழ்ந்தார். நாராயணகுருவின் குடும்பப்பெயர் வயல்வாரம் வீடு என்பதுதான். 


====== தந்தை ======
நாராயண குருவின் தந்தையின் பெயர் மாடன் ஆசான். அவருடைய குடும்பப்பெயர் கொச்சுவிளை. பெண்வழிச்சமூக முறைப்படி குட்டியம்மாவின் இல்லத்துக்கு வந்து மாடன் ஆசான் வாழ்ந்தார். நாராயணகுருவின் குடும்பப்பெயர் வயல்வாரம் வீடு என்பதுதான். 
====== தாய் ======
தாயின் பெயர் குட்டியம்மா. அவருடைய குடும்பப்பெயர் வயல்வாரம் வீடு. திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழஞ்ஞி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டியம்மா. குட்டியம்மாவின் அம்மா செம்பழஞ்ஞியில் மணய்க்கல் கோயிலின் மேற்கே இருந்த இலஞ்ஞிக்கல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் ஈழவ சாதியைச் சேர்ந்தவர்கள்.   
====== தொழில் ======
அக்காலத்தில் ஈழவர்களின் தொழில்களாக பனையிலும் தென்னையிலும் ஏறி கள் எடுப்பது, தலைச்சுமையாக பொருட்களை கொண்டுசெல்வது ஆகியவை இருந்தன. ஈழவர்களில் சிலர் வைத்தியம், சோதிடம் ஆகியவற்றை கற்று தொழில்புரிந்தனர். அதன்பொருட்டு சம்ஸ்கிருதமும் கற்றிருந்தனர். குறிப்பாக அறுவைசிகிச்சை வைத்தியம் பெரும்பாலும் ஈழவர்களாலேயே செய்யப்பட்டது. மாடன் ஆசான் ஆயுர்வேத மருத்துவமும் சோதிடமும் செய்துவந்தார். சம்ஸ்கிருதமும் கற்றிருந்தார். ஆகவே ஆசான் என அழைக்கப்பட்டார். நாராயணகுருவின் தாய்மாமா கிருஷ்ணன் வைத்தியர் ஆயுர்வேதமும் சம்ஸ்கிருதமும் கற்று மருத்துவர் பணி செய்துவந்தார்.  
அக்காலத்தில் ஈழவர்களின் தொழில்களாக பனையிலும் தென்னையிலும் ஏறி கள் எடுப்பது, தலைச்சுமையாக பொருட்களை கொண்டுசெல்வது ஆகியவை இருந்தன. ஈழவர்களில் சிலர் வைத்தியம், சோதிடம் ஆகியவற்றை கற்று தொழில்புரிந்தனர். அதன்பொருட்டு சம்ஸ்கிருதமும் கற்றிருந்தனர். குறிப்பாக அறுவைசிகிச்சை வைத்தியம் பெரும்பாலும் ஈழவர்களாலேயே செய்யப்பட்டது. மாடன் ஆசான் ஆயுர்வேத மருத்துவமும் சோதிடமும் செய்துவந்தார். சம்ஸ்கிருதமும் கற்றிருந்தார். ஆகவே ஆசான் என அழைக்கப்பட்டார். நாராயணகுருவின் தாய்மாமா கிருஷ்ணன் வைத்தியர் ஆயுர்வேதமும் சம்ஸ்கிருதமும் கற்று மருத்துவர் பணி செய்துவந்தார்.  


====== பிறப்பு ======
==== பிறப்பு ====
வயல்வாரம் வீட்டில் குட்டியம்மாவுக்கும் கொச்சுவிளை வீட்டில்  மாடன் ஆசானுக்கும்  20 ஆகஸ்ட்  1856-ல் நாராயணகுரு பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். தேவி,கொச்சு, மாதை. நாராயணகுருவுக்கு 15 வயதிருக்கையில் குட்டியம்மா மறைந்தார். அதன்பின் மூத்தவரான தேவி நாராயண குருவுக்கு அன்னையின் இடத்தில் இருந்தார்.   
வயல்வாரம் வீட்டில் குட்டியம்மாவுக்கும் கொச்சுவிளை வீட்டில்  மாடன் ஆசானுக்கும்  20 ஆகஸ்ட்  1856-ல் நாராயணகுரு பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். தேவி,கொச்சு, மாதை. நாராயணகுருவுக்கு 15 வயதிருக்கையில் குட்டியம்மா மறைந்தார். அதன்பின் மூத்தவரான தேவி நாராயண குருவுக்கு அன்னையின் இடத்தில் இருந்தார்.   


====== கல்வி ======
==== கல்வி ====
நாரயண குருவின் தந்தையும் தாய்மாமனும்  அவருக்குத் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் அடிப்படைகளையும் ஆயுர்வேத மருத்துவ அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தனர். தொழில்முறைப் பாடங்களான சித்தரூபம், பாலபுரோபதனம், அமரகோசம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்தனர்.  
 
====== ஆரம்பக் கல்வி ======
நாராயண குருவின் தந்தையும் தாய்மாமனும்  அவருக்குத் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் அடிப்படைகளையும் ஆயுர்வேத மருத்துவ அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தனர். தொழில்முறைப் பாடங்களான சித்தரூபம், பாலபுரோபதனம், அமரகோசம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்தனர்.  


====== எழுத்துகல்வி ======
மாமாவின் பரிந்துரையில் உள்ளூர் பள்ளி ஆசிரியரும், கிராம அதிகாரியுமாக இருந்த கண்ணங்கரை வீட்டில் செம்பழந்திப் பிள்ளை என்பவர் நாராயண குருவை முறைப்படி எழுத்துக்கல்விக்கு அமரச்செய்தார். 1878ல், தன் 22 வயதில் கருநாகப்பள்ளி என்னும் ஊரில் இருந்த கும்மம்பள்ளி  ராமன்பிள்ளை என்னும் ஆசானிடம் சம்ஸ்கிருத இலக்கணம், காவியம் பயில கொண்டுசென்று சேர்த்தார்கள்.     
மாமாவின் பரிந்துரையில் உள்ளூர் பள்ளி ஆசிரியரும், கிராம அதிகாரியுமாக இருந்த கண்ணங்கரை வீட்டில் செம்பழந்திப் பிள்ளை என்பவர் நாராயண குருவை முறைப்படி எழுத்துக்கல்விக்கு அமரச்செய்தார். 1878ல், தன் 22 வயதில் கருநாகப்பள்ளி என்னும் ஊரில் இருந்த கும்மம்பள்ளி  ராமன்பிள்ளை என்னும் ஆசானிடம் சம்ஸ்கிருத இலக்கணம், காவியம் பயில கொண்டுசென்று சேர்த்தார்கள்.     


====== சாஸ்திரக் கல்வி ======
கும்மம்பள்ளி ராமன் பிள்ளைக்கு கேரள வரலாற்றில் ஓர் இடம் உண்டு. அக்கால மரபுகளை மீறி ஈழவர், கிறிஸ்தவர்கள் முதலிய இரண்டாம்நிலைச் சாதியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டவர்களுக்கும் அவர் சம்ஸ்கிருதம், மருத்துவம் உட்பட சாஸ்திரக் கல்வி கற்பித்தார். ஆகவே நம்பூதிரி, நாயர் போன்ற சாதியினரால் அவர் புறக்கணிப்புக்கு ஆளானார். பெருந்நள்ளி கிருஷ்ணன் வைத்தியர், வெளுத்தேரி கேசவன் வைத்தியர் இ.கே.அய்யாக்குட்டி போன்று அவருடன் அங்கே படித்த பலர் பின்னாளில் புகழ்பெற்றனர்.           
கும்மம்பள்ளி ராமன் பிள்ளைக்கு கேரள வரலாற்றில் ஓர் இடம் உண்டு. அக்கால மரபுகளை மீறி ஈழவர், கிறிஸ்தவர்கள் முதலிய இரண்டாம்நிலைச் சாதியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டவர்களுக்கும் அவர் சம்ஸ்கிருதம், மருத்துவம் உட்பட சாஸ்திரக் கல்வி கற்பித்தார். ஆகவே நம்பூதிரி, நாயர் போன்ற சாதியினரால் அவர் புறக்கணிப்புக்கு ஆளானார். பெருந்நள்ளி கிருஷ்ணன் வைத்தியர், வெளுத்தேரி கேசவன் வைத்தியர் இ.கே.அய்யாக்குட்டி போன்று அவருடன் அங்கே படித்த பலர் பின்னாளில் புகழ்பெற்றனர்.           



Revision as of 06:54, 10 April 2024

நாராயணகுரு
நாராயணகுரு 60 வயதில்
நாராயணகுரு
எஸ்.என்.டி.பி இயக்கம் தொடங்கப்படுதல்
நாராய்ணகுரு சிலை. வர்கலை குருகுலம்

நாராயணகுரு (நாராயணன்) (ஆகஸ்ட் 20, 1856 - செப்டம்பர் 20, 1928) சிந்தனையாளர், தத்துவ ஆசிரியர், அத்வைதி, இந்து சமய மறுமலர்ச்சி காலத்தின் குறிப்பிடத்தகுந்த ஆன்மிகவாதி, சமூக சீர்திருத்தவாதி. கேரளத்தின் சமூக, கலாச்சார உலகில் நவீன சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். 'ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்கு’ என்ற வரி அவரது உபதேசத்தின் மையமாகக் கொள்ளப்பட்டது. ஆன்மிக, தத்துவ சிந்தனையில் நடராஜகுரு, நித்யசைதன்ய யதி என அவரிடமிருந்து ஒரு மாணவநிரை உருவானது.

பிறப்பு, கல்வி

மூதாதையர்
தந்தை

நாராயண குருவின் தந்தையின் பெயர் மாடன் ஆசான். அவருடைய குடும்பப்பெயர் கொச்சுவிளை. பெண்வழிச்சமூக முறைப்படி குட்டியம்மாவின் இல்லத்துக்கு வந்து மாடன் ஆசான் வாழ்ந்தார். நாராயணகுருவின் குடும்பப்பெயர் வயல்வாரம் வீடு என்பதுதான்.

தாய்

தாயின் பெயர் குட்டியம்மா. அவருடைய குடும்பப்பெயர் வயல்வாரம் வீடு. திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழஞ்ஞி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டியம்மா. குட்டியம்மாவின் அம்மா செம்பழஞ்ஞியில் மணய்க்கல் கோயிலின் மேற்கே இருந்த இலஞ்ஞிக்கல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் ஈழவ சாதியைச் சேர்ந்தவர்கள்.

தொழில்

அக்காலத்தில் ஈழவர்களின் தொழில்களாக பனையிலும் தென்னையிலும் ஏறி கள் எடுப்பது, தலைச்சுமையாக பொருட்களை கொண்டுசெல்வது ஆகியவை இருந்தன. ஈழவர்களில் சிலர் வைத்தியம், சோதிடம் ஆகியவற்றை கற்று தொழில்புரிந்தனர். அதன்பொருட்டு சம்ஸ்கிருதமும் கற்றிருந்தனர். குறிப்பாக அறுவைசிகிச்சை வைத்தியம் பெரும்பாலும் ஈழவர்களாலேயே செய்யப்பட்டது. மாடன் ஆசான் ஆயுர்வேத மருத்துவமும் சோதிடமும் செய்துவந்தார். சம்ஸ்கிருதமும் கற்றிருந்தார். ஆகவே ஆசான் என அழைக்கப்பட்டார். நாராயணகுருவின் தாய்மாமா கிருஷ்ணன் வைத்தியர் ஆயுர்வேதமும் சம்ஸ்கிருதமும் கற்று மருத்துவர் பணி செய்துவந்தார்.

பிறப்பு

வயல்வாரம் வீட்டில் குட்டியம்மாவுக்கும் கொச்சுவிளை வீட்டில் மாடன் ஆசானுக்கும் 20 ஆகஸ்ட் 1856-ல் நாராயணகுரு பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். தேவி,கொச்சு, மாதை. நாராயணகுருவுக்கு 15 வயதிருக்கையில் குட்டியம்மா மறைந்தார். அதன்பின் மூத்தவரான தேவி நாராயண குருவுக்கு அன்னையின் இடத்தில் இருந்தார்.

கல்வி

ஆரம்பக் கல்வி

நாராயண குருவின் தந்தையும் தாய்மாமனும் அவருக்குத் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் அடிப்படைகளையும் ஆயுர்வேத மருத்துவ அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தனர். தொழில்முறைப் பாடங்களான சித்தரூபம், பாலபுரோபதனம், அமரகோசம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்தனர்.

எழுத்துகல்வி

மாமாவின் பரிந்துரையில் உள்ளூர் பள்ளி ஆசிரியரும், கிராம அதிகாரியுமாக இருந்த கண்ணங்கரை வீட்டில் செம்பழந்திப் பிள்ளை என்பவர் நாராயண குருவை முறைப்படி எழுத்துக்கல்விக்கு அமரச்செய்தார். 1878ல், தன் 22 வயதில் கருநாகப்பள்ளி என்னும் ஊரில் இருந்த கும்மம்பள்ளி ராமன்பிள்ளை என்னும் ஆசானிடம் சம்ஸ்கிருத இலக்கணம், காவியம் பயில கொண்டுசென்று சேர்த்தார்கள்.

சாஸ்திரக் கல்வி

கும்மம்பள்ளி ராமன் பிள்ளைக்கு கேரள வரலாற்றில் ஓர் இடம் உண்டு. அக்கால மரபுகளை மீறி ஈழவர், கிறிஸ்தவர்கள் முதலிய இரண்டாம்நிலைச் சாதியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டவர்களுக்கும் அவர் சம்ஸ்கிருதம், மருத்துவம் உட்பட சாஸ்திரக் கல்வி கற்பித்தார். ஆகவே நம்பூதிரி, நாயர் போன்ற சாதியினரால் அவர் புறக்கணிப்புக்கு ஆளானார். பெருந்நள்ளி கிருஷ்ணன் வைத்தியர், வெளுத்தேரி கேசவன் வைத்தியர் இ.கே.அய்யாக்குட்டி போன்று அவருடன் அங்கே படித்த பலர் பின்னாளில் புகழ்பெற்றனர்.

பணிகள்

கல்வி முடித்து 1882 ல் நாரயணகுரு கருநாகபள்ளிக்கு அருகிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகச் சிலகாலம் பணி செய்தார். 'நாணு ஆசான்' என்று அழைக்கப்பட்டார். 1883ல் தனது சொந்த ஊர் திரும்பிய நாராயணன் அந்தப்பகுதி சிறுவர்களுக்கு கல்வி அளிக்க ஒரு பள்ளியைத் துவக்கினார். அந்த பள்ளியில் கல்வி வழங்கியது போக மீதி நேரம் கோவிலுக்குச் சென்று கவிதைகள் எழுதுவது, கிராம மக்களுக்கு தத்துவம் மற்றும் நீதிக்கதைகள் சொல்வது என வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் நாராயண குரு வைத்தியத்தொழிலையும் செய்துவந்தார்.

தனிவாழ்க்கை

நாராயணனின் குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி நாராயணகுருவின் தந்தை மாடனாசானின் மருமகள் முறைகொண்ட காளியம்மா என்பவரை 1883ல்அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். நாராயணன் துறவியைப் போல் அலைந்து திரிந்து கொண்டிருந்ததால் காளியம்மாள் அவருடைய தந்தை வீட்டிற்குச் சென்று விட்டார்.

1885ல் நாராயணகுரு தன் 29 வயதில் தன் தந்தையும், மனைவியும் மரணமடைந்தபின் நாடோடியாகப் பல இடங்களுக்குச் சென்றார். இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஈரோடு போன்ற ஊர்களில் அவர் இருந்தமைக்கான புகைப்பட ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

நாராயணகுரு

ஆன்மிக வாழ்க்கை

யோகப்பயிற்சி

சட்டம்பி சுவாமி

1883ல் நாராயணகுரு செம்பழஞ்ஞியில் ஆசிரியராக இருக்கையில் தன்னுடன் பயின்ற பெருநள்ளி கிருஷ்ணன் வைத்தியர் என்பவரின் இல்லத்தில் குஞ்ஞன் பிள்ளை என்பவரை அறிமுகம் செய்துகொண்டார். குஞ்ஞன் பிள்ளை யோகப்பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தவர், பிற்காலத்தில் அவர் சட்டம்பி சுவாமி என அறியப்பட்டார். அப்போது அவர் சுப்ரமணிய உபாசகராகவும் ஷண்முகதாசன் என்ற பெயர் சூட்டிக்கொண்டவராகவும் இருந்தார்.

தைக்காடு அய்யாவு

சட்டம்பி சுவாமியின் வழிகாட்டலில் அவருடைய ஆசிரியரான தைக்காடு அய்யாவு என்னும் யோகியை நாராயண குரு அறிமுகம் செய்துகொண்டார். திருவனந்தபுரம் சாலைத் தெருவில் தைக்காடு அய்யாவு வணிகம் செய்துவந்தார். பிரிட்டிஷ் ரெசிடென்சியில் சூப்பரிண்டண்டாக வேலை பார்த்தவர்.1883 முதல் 1885 வரை நாராயணகுரு அவரிடம் தமிழ், திருமந்திரம் போன்ற நூல்களைப் பாடம் கேட்டார். ஹடயோகமும் கற்பித்தார்.

தவம்

நாராயண குரு தன் இருபத்து ஒன்பதாவது முதல் துறவறம் பூண்டார் எனப்படுகிறது. அவருக்கு துறவு அளித்தவர் எவர் என தெரியவில்லை. முப்பது வயது வரை கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி எனும் ஊரின் அருகிலுள்ள மருத்துவாழ்மலையில் (மருந்துவாழ்மலை) தனிமையில் இருந்து தவம் செய்ததாக நம்பப்படுகிறது. மருத்துவாழ்மலையில் அவருக்கு துறவு அளிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது

அருவிப்புறம் சிவன் கோவில்

நாராயண குரு 1888-ல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அருவிக்கரை என்ற சிற்றூருக்கு திரும்பி வந்தார். அங்கே ஒரு குடில் கட்டி வாழ்ந்தார். அவர் மருத்துவமும் ஆன்மிக உரையாடலும் நிகழ்த்தி வந்தார். ஏராளமான மக்கள் அவரைக் காண வந்துகொண்டிருந்தார்கள். 1888 மார்ச் மாதம் சிவராத்திரி நாளில் நாராயண குரு நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில், தனது சீடர்கள் உதவியுடன் அந்த ஆற்றில் சங்கரன்குழி என்னும் ஆழ்ந்த சுழிக்குள் கிடந்த ஒரு கல்லை எடுத்து சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்தார். தென்னை மரக்கிளைகள் மற்றும் மாமரத்து இலைகளைக் கொண்டு மேற்கூரையுடன் அருவிப்புறம் சிவன் கோவில் அமைக்கப்பட்டது.

அந்த சிவலிங்க நிறுவுதல் கேரளத்தில் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ’ஈழவனுக்கு பிரதிஷ்டை உரிமை உண்டா?’ என்ற வினாவுக்கு 'நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிவன் அல்ல' என்று பதில் சொன்னார். அந்தக் கோயில் வாசலில் 'சாதி மத பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது' என்று எழுதி வைத்தார்.

மடங்கள்

வர்க்கலை சிவகிரி மடம்

1904ல் நாராயணகுரு வர்க்கலையில் சிவகிரி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமத்தையும் சம்ஸ்கிருத பள்ளியையும் நிறுவினால். அங்கே 1912ல் ஒரு சாரதாதேவி கோயிலையும் நாராயண குரு நிறுவினார்

ஆலுவா மடம்

1913ல் நாராயணகுரு ஆலுவாவில் பாரதப்புழை ஆற்றின் கரையில் அத்வைதாசிரமம் என்னும் மடத்தை நிறுவினார். 'ஓம் சாகோதரியம் சர்வத்ர" (அனைவரும் உடன்பிறப்புகள்) என்னும் அறைகூவலை எழுதிவைத்தார்

நாராயண குருகுலம்

1924ல் நாராயண குருவின் மாணவர் நடராஜ குருவால் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நாராயண குருகுலம் தொடங்கப்பட்டது. அதன் தலைமையகம் வர்க்கலா ஸ்ரீனிவாசபுரத்தில் உள்ளது. அதற்கு தமிழகத்தில் ஊட்டி ஃபெர்ன்ஹில் உட்பட பல இடங்களில் கிளைகள் உள்ளன.

அருவிபுரம் சிவன் கோயில்

ஆலயங்கள்

சிறுதெய்வ மறுப்பு

நாராயண குரு பெருந்தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தினார். சிறுதெய்வ வழிபாடு உயிர்ப்பலியுடனும், மது அருந்துவதுடனும் தொடர்புடையது என்பதனால் அதை நிராகரித்தார். பேய்த்தெய்வங்கள், நீத்தார் தெய்வங்கள், குறியீட்டுத்தெய்வங்கள் போன்றவற்றை வழிபடலாகாது என விலக்கினார்.

சிறுதெய்வ வழிபாடு பூசாரிகள், குறிசொல்பவர்கள், மந்திரவாதிகள் ஆகியோரின் ஆதிக்கத்தை உருவாக்கி மக்களை மூடநம்பிக்கையில் கட்டிப்போடுகிறது என்று நாராயண குரு சொன்னார். அத்துடன் சிறுதெய்வ வழிபாட்டில் உள்ள வன்முறை அம்சம் அதை வணங்குபவர்களின் வாழ்விலும் நீடிக்கிறது என்று அவர் கருதினார். இறைவழிபாட்டின் உணர்வுகள் அச்சம் சார்ந்தவையாக இருக்கலாகாது என்றும், இறைவழிபாடு கல்வியுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்

ஆகவே நாராயண குரு கிராமங்கள் தோறும் சென்று அங்குள்ள சிறுதெய்வச் சிலைகளையும் வழிபடப்பட்ட கற்களையும் தூக்கி அகற்றி அங்கே பெருந்தெய்வங்களை நிறுவினார். நாராயணகுரு அவரே கட்டிய ஆலயங்கள், அவர் வந்து மையச்சிலையை நிறுவிய ஆலயங்கள் பல உள்ளன.

( பார்க்க நாராயண குரு ஆலயங்கள்)

அருவ தெய்வக் கோயில்கள்

நாராயணகுரு ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமானதாக இருக்கும் சிறு தெய்வக் கோவில்களை எல்லாம் இடித்துவிட்டு அந்த இடங்களை பலர் கூடும் கோயில்களாக அமைத்தமைக்கு ஒரு காரணம் அவை அன்றாடம் மக்கள் கூடும் பொது இடங்களாகவும், கல்வி வழங்கும் பள்ளிக்கூடங்களாகவும் அமையவேண்டும் என்பது.

நாராயணகுரு சில தத்துவார்த்த அடிப்படைகளைக் கொண்டு கோவில்களை அமைத்தார். சிவன், விஷ்ணு, சுப்பிரமணியர் போன்ற முழுமுதல் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து கோவில்களை உருவாக்கிய நாராயணகுரு அடுத்து இந்த தத்துவார்த்தமான கொள்கைகளை வலியுறுத்தும் வழியில் முதலில் விளக்கை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும், பின்பு சத்யம்-தர்மம்-தயை எனும் சொற்களை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும் கோவில்களை அமைத்தார். பின்னர் களவங்கோடு எனும் பகுதியில் நிலைக் கண்ணாடியை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து புதிய கோவில் ஒன்றை அமைத்தார். அதன்பின் அவர் கோயில்கள் எதையும் புதிதாக அமைக்கவில்லை.

அமைப்புப் பணிகள்

ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா

நாராயணகுருவைப் பற்றி கேள்விப்பட்டு மைசூரில் டாக்டராக வேலை பார்த்து வந்த டாக்டர் பல்பு அவரைக் காண வந்தார். அவரது உண்மைப்பெயர் பத்மநாபன். ஆனால் தீண்டப்படாத மக்கள் கடவுள் பெயர் சூட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்கேற்ப அப்பெயர் அவரின் நில உடைமையாளரால்(ஜன்மி) மாற்றப்பட்டது. அவர் பி.ஏ. படிப்பை ஒரு பாதிரியாரின் உதவியுடன் முடித்தபோது கேரள மன்னர் அவருக்கு அரசு வேலை அளிக்க மறுத்தார். மைசூருக்கு சென்று அவர் மருத்துவப்பயிற்சி பெற்று உயர்பதவிக்கு வந்தார். அவர் மூலம் கேரள கலாசார வாழ்வை மாற்றியமைத்த பேரியக்கமான எஸ்.என்.டி.பி [ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா] 1903-ல் திருவனந்தபுரத்தை மையமாக்கி அருவிப்புறத்தில் நிறுவப்பட்டது. இந்த அமைப்பில் ஈழவர்கள் மட்டுமின்றி புலையர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

நாராயணகுரு ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபாவின் மூலம் ஏராளமான பள்ளிகளையும் கல்விக்கூடங்களையும் கட்டினார். ஈழவ சமுதாயத்தினர் செய்து வந்த குலத் தொழிலான ஆயுர்வேத மருத்துவத் தொழிலுக்குத் தேவையான சமஸ்கிருதம் கற்றவர்கள் அச்சமுதாயத்தில் சிலர் இருந்தாலும் அவர்களுக்கு அதில் முழுமையான அறிவு இல்லாமலே இருந்தது. எனவே பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ள வலியுறுத்தினார். இதன் மூலம் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் கல்வி கற்க முற்பட்டனர்.

நாராயண குருகுலம்

நாராயணகுரு 1928-ல் தனக்குப் பின்பு தன் பணிகளை செய்யும் அமைப்பாக ஒரு சன்யாசி மடத்தை உருவாக்கினார். ;தர்ம சங்கம்; என்ற அவ்வமைப்பு வற்கலையில் சிவகிரி என்ற மலைமீது துவங்கப்பட்டது.

சமஸ்கிருதப்பள்ளி

நாராயணகுரு வற்கலையில் சமஸ்கிருதப் பள்ளி ஒன்றை அமைத்தார். இங்கு சாதிப் பாகுபாடுகளின்றி கல்வித்தகுதிகள் எதுவுமின்றி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதில் ஏழைக் குழந்தைகள், அனாதையாக விடப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு அதிகமும் ஆதரவளித்தார்.

அத்வைத ஆசிரமம்

1913-ல் ஆலுவா எனுமிடத்தில் அத்வைத ஆசிரமம் அமைக்கப்பட்டது. இந்த ஆசிரமத்தின் முக்கிய கொள்கையாக "கடவுளின் கண்களுக்கு அனைத்து மனிதர்களும் சமம்" என்கிற வாசகம் வலியுறுத்தப்பட்டது.

நாராயணகுருவின் தத்துவம்

ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம்

நாராயண குருவைப் பொறுத்தவரை 'ஒரு தெய்வம்' என்பது மனித சமத்துவநோக்கின் முதல்படி. 1921-ல் ஆலுவாயில் சகோதரன் அய்யப்பனின் முயற்சியால் கூட்டப்பட்ட உலக சகோதரத்துவ மாநாட்டில் குரு வெளியிட்ட ‘ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்கு’ (One caste, One Religion, One God for all men) என்ற வரி அவரது மையமான உபதேசமாக கொள்ளப்பட்டது. அம்மாநாடு கேரளத்தில் மனித சமத்துவத்துக்கான செய்தியை மக்கள் மத்தியில் பதித்தது. 'அனைத்தும் ஒன்றே' என்பது முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டது.

தத்துவார்த்த தெய்வம்

முழுமுதல்தெய்வம் என்ற உருவகத்தின் அடுத்தபடி மேலும் நுண்மையான தளம், தத்துவார்த்த தெய்வம் அல்லது கருத்துருக் கடவுள் என்பதே. நாராயணகுரு முழுமுதல் தெய்வத்தை அளித்து அடுத்தபடியாக தத்துவார்த்தமான தெய்வத்தை முன்வைத்தார். நீண்டகால அடிப்படையில் மிக நுட்பமாக இதை குரு நிகழ்த்தினார் எனலாம். அவர் நிர்மாணித்த கோயில்கள் இதற்கு உதாரணம். முதலில் சிவலிங்கத்தையும் பிறகு சுப்ரமணியர், ஜகன்னாதர் போன்ற கடவுள்களையும் பதிட்டை செய்த குரு அடுத்த கட்டத்தில் விளக்கையும் பிறகு ‘சத்யம் தர்மம் தயை ‘ என்ற சொற்களையும் கருவறை தெய்வமாக பதிட்டை செய்தார். இறுதியில் சேர்த்தலை களவங்கோடு கோவிலில் மூலவராக நிலைக்கண்ணாடியை நிறுவியபிறகு மேலும் கோயில்கள் வேண்டாம் கல்விச்சாலைகளே போதும் என்று சொன்னார். அவர் அருவிக்கரையில் கோயிலை நிறுவியபோதே சொன்ன கருத்து இது. ஆனால் அதன் பிறகு பல படிகளிறங்கி வந்து கோயில்கள் நிறுவி மீண்டும் அரை நூற்றாண்டுக்கு பிறகு துவங்கிய தளத்துக்கே வந்து சேர்ந்தார். மக்களை அங்கு கொண்டு சேர்ப்பதே அவரது நோக்கம் என்று ஊகிக்கலாம்.

அறிவு
நாராயணகுரு ரபீந்த்ரநாத் தாகூர்

நாராயணகுரு அறிவின் அதிகாரத்தை உய்த்துணர்ந்த சமூக சீர்திருத்தவாதி. நாராயணகுருவின் வழிமுறை எதையும் நிராகரிப்பது அல்ல. அவர் அனைத்தையும் கற்று உள்ளடக்கி தனக்கென ஒரு நோக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். அனைத்தையுமே கற்றுக் கொள்ள வேண்டும். இது போல் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். அறிவு ஒன்றுதான் மனித குலத்துக்கு உரியது என்றும் அதைக் கொண்டு முன்னேற்றம் காண்பதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார். இந்த அறிவுக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை என்ற அவரது உபதேசம் முக்கியமானது. தன்னை பின்பற்றியவர்களிடம் தான் கற்றறிந்தது மட்டுமின்றி அனைவரும் வேதங்கள், உபநிடதங்கள் இந்திய மற்றும் மேலை நாட்டு தத்துவங்கள், சமஸ்கிருத மலையாள காவியங்கள் தமிழிலக்கிய மரபு அனைத்துமே கற்று தெரிவு செய்து மறு ஆக்கம் செய்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். தன் முக்கிய மாணவரான நடராஜ குருவை ஐரோப்பாவுக்கு அனுப்பி மேலை தத்துவத்தில் பயிற்சிபெற அவர் ஏற்பாடு செய்தார்.

கேரளத்தில் மிக அதிகமாக கல்வி நிறுவனங்களை நடத்துவது நாராயணகுரு துவக்கிய பேரியக்கமே. பள்ளிகளும் கல்லூரிகளும் துவங்குவதும் படிக்கும் உரிமைக்காக போராடுவதும் அவ்வியக்கத்தின் ஆரம்பகால பணிகளில் முக்கியமானதாக இருந்தது. ஈழவ சமூகமே படிப்புமிக்க சமூகமாக மாறியது. பொதுவாக கேரளத்தின் கல்விநிலை முன்னேறியது. ஆங்கிலக்கல்வியை குரு பெரிதும் வலியுறுத்தினார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அறிவார்ந்த தளங்களில் செயல்படும் முக்கியமானவர்களாகவும், சமஸ்கிருதத்திலும் வேதவேதாந்தங்களிலும் தர்மநூல்களிலும் ஈழவர்கள் முதன்மை பெறுமளவுக்குப் பயிற்சி பெறவேண்டும் என நாராயணகுரு எண்ணினார். புறக்கணிப்பதன் மூலம் மத அதிகாரம் அதை ஏற்கனவே கையில் வைத்திருப்பவர்களிடமே தங்கிவிடவே வழிவகுக்கிறோம் என்பதே அவரது கருத்து.

நாராயணகுருவின் மாணவர்கள்

நாராயணகுருவின் தத்துவ நோக்கு அவரது மாணவர்களால் பிற்பாடு இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது. அது இந்திய அறிவுத்தளத்தில் முக்கியமான ஓர் இயக்கமாக ஆயிற்று. கேரள பொதுவுடைமை அரசியல் நாராயணகுருவில் துவங்குகிறது என ஈ.எம்.எஸ் எழுதினார். மூன்று தலைமுறைகளாக நாராயணகுருவை தொடர்ந்து அறிஞர்கள் பல துறைகளிலும் உருவாகினர்.

  • குமாரன் ஆசான்: நாராயணகுருவின் முதல் சீடர். சிறு வயதிலேயே எஸ்.என்.டி.பி இயக்கத்தின் செயலராகி நெடுங்காலம் பணியாற்றினார். மலையாளத்தில் நவீனக் கவிதை, இதழியல் இரண்டுமே ஆசானிலிருந்து தொடங்கியவை. அவரது ‘கருணை’, ‘சண்டால பிட்சுகி’, ‘துரவஸ்தை’ முதலிய குறுங்காவியங்கள் கேரள இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு களம் அமைத்தவை. ஆசானின் நடை நேரடியானது, உணர்ச்சிகரமானது. அது எழுப்பிய அலை மிகப்பெரியது.
  • சகோதரன் அய்யப்பன்: நாராயணகுருவின் அணுக்கத்தொண்டர்; அடிப்படைக் கருத்துக்களில் அவரை நிராகரித்தவர். கேரளத்தில் நாத்திக சிந்தனையை நிறுவிய முன்னோடி. புலையர்களை அணிதிரட்டி ஆரம்பகட்ட கிளர்ச்சிகளை நடத்தியவர். அக்காரணத்தாலேயே ‘புலையன்’ அய்யப்பன்' என்று அறியப்பட்டவர்.
  • நடராஜகுரு: நாராயணகுருவின் கொள்கைகளையும் செய்திகளையும் உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர். இவர் நாராயண குருகுலம் எனும் ஒரு அமைப்பை நிறுவி அவருடைய தத்துவங்களையும், நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஐரோப்பிய நாடுகளுக்குச் கொண்டு சென்றதுடன் அங்கும் நாராயண குருகுலத்தின் கிளை அமைப்புகளைத் துவக்கி உலகத் தத்துவ ஞானிகளில் ஒருவராக அவரைப் பரிணமிக்கச் செய்தவர். ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (SREE NARAYANA DHARMA PARIPALANA YOGAM) (SNDP) என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் தலைமைப்பீடம் வற்கலாவில் உள்ளது. முதன்மைக்கிளை மஞ்சணகொரே, ஃபெர்ன் ஹில், ஊட்டியில் உள்ளது.
  • சி.வி.குஞ்ஞுராமன் கேரள பண்பாட்டுவரலாற்றில் ஆழமான பங்களிப்பை ஆற்றிய 'கேரள கெளமுதி' இதழ் குழுமம் நாராயணகுருவின் மாணவரான சி.வி.குஞ்சுராமனால் உருவாக்கப்பட்டது. இவரது மகன்தான் மார்க்சிய தத்துவ வரலாற்றாசிரியரான கெ.தாமோதரன். கெளமுதி இதழில் எழுதி உருவான படைப்பாளிகளின் ஒரு வரிசையென பி.கே.பாலகிருஷ்ணன் போன்றவர்களைச் சொல்லலாம். கேரள சுதந்திரப்போராட்டத்தின் முதல்கட்ட தலைவர்களில் ஒருவரான டி.கெ.மாதவன் நாராயணகுருவின் நேரடி சீடர். அவரால் நடத்தப்பட்டது தான் வைக்கம் போராட்டம்.
  • டி.கே.மாதவன்: வைக்கம் ஆலயநுழைவுப்போராட்டத்தை தொடங்கி முன்னெடுத்தவர் டி.கே.மாதவன்.

சமூக சீர்திருத்தம்

  • நாராயணகுரு எளியமக்களுக்கு முழுமுதல்தெய்வத்தை அளித்தது மாபெரும் சமூகப் புரட்சி ஒன்றின் தொடக்கமாக அமைந்தது.
  • அனைவரும் கூடும் பொது இடங்களாக கோயில்களை அமைத்தார்.
  • தீண்டாமை முதலிய கொடுமைகள் ஒழிய நாராயணகுரு உருவாக்கிய வழிமுறை: தீண்டாமைக்கு ஆளானவர்கள் ஆதிக்க சாதிகளை விட கல்வி, செல்வம், ஆன்மீக வல்லமை மிக்கவர்களாக ஆவதை ஊக்குவித்தார்.
  • "நான் தத்துவத்தில் ஆதி சங்கரரை பின்பற்றுகிறேன். ஆனால் ஜாதிப்பிரிவினை சம்மந்தமாக நான் அவருடன் ஒத்துப்போகமாட்டேன்" என்றார் நாராயணகுரு.
  • சமூக அதிகாரத்தில் செல்வத்தின் இடம் குறித்து நாராயணகுருவுக்கு புரிதல் இருந்தது. தொழில் அபிவிருத்தி குறித்து தொடர்ந்து பேசினார். ஈழவ சமூகத்தில் விரல்விட்டு எண்ணத்தக்க சில குடும்பங்கள் பெருநில உடைமை காரணமாக செல்வ வளத்துடன் இருந்தன. ஐதீகம் சார்ந்த காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டன. இக்குடும்பங்கள் எல்லாமே பெளத்தமதப் பின்னணியும் கொண்டவை. பாலி மொழி ஏடுகள் பல இவர்கள் வீடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. ஈழவர்கள் பெளத்தர்களாக இருந்து பெளத்தம் வீழ்ச்சி அடைந்தபோது நிலம் இழந்து தீண்டப்படாதவர்களாக ஆகியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இவை. இக்குடும்பங்களை தொழில்துறையில் இறங்க நாராயணகுரு வற்புறுத்தினார். கேரளத்தின் கயிறு ஓடு தொழில்கள் உருவாக அவரே காரணமாக அமைந்தார்.
  • காந்தியின் அரசியல் செயல்திட்டங்களில் ஹரிஜன இயக்கம், மது ஒழிப்பு இயக்கம் ஆகிய இரண்டும் நாராயணகுருவின் இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்று அவர் ஏற்றுக் கொண்டவை.

எழுத்து

மலையாள எழுத்துக்களை ஒருங்கிணைத்த துஞ்சத்து எழுத்தச்சன் உருவாக்கிய மாற்றம் உறைந்து போய் மறைந்துவிட்ட நிலையில் அதை புத்துயிர் பெறச்செய்தவர் நாராயணகுரு. எழுத்தச்சன் தொடங்கி வைத்ததை நாராயணகுரு முழுமை செய்தார்.

மருத்துவாமலையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு மலையாள மொழியில் 'ஆத்மோபதேச சதகம்' எனும் நூறு செய்யுள்களை இயற்றினார். மலையாளம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை வாய்ந்தவராக இருந்தார். தன் வாழ்வின் இறுதி பதினைந்து வருடங்களில் தத்துவ முக்கியத்துவம் கொண்ட நூல்களை எழுதினார். அவரது இறப்புக்குப் பின்னர் நாராயணகுருவின் இயக்கம் இந்த நூல்களில் இருந்து மீண்டும் புதிதாக முளைத்தெழுந்தது. நாராயணகுரு மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ ஐம்பது நூல்களை எழுதினார். இவற்றில் 'தர்சன மாலா', 'ஆத்மோபதேச சதகம்' ஆகிய நூல்கள் தத்துவார்த்தமாக முக்கியமானவை. தமிழ்ப் பாடல்கள் பெரிதும் திருமந்திரம் சித்தர் பாடல்கள் ஆகியவற்றின் சாயல் கொண்டவை. திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.

'காளி நாடகம்' சுவாமி வினய சைதன்யாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியன் லிட்டரேச்சர் இதழில் வெளிவந்தது. நாராயணகுருவைப்பற்றிய ஒரு ஆய்வும் அவரைப்பற்றிய பல்வேறு கட்டுரைகளின் தொகுதியுமாக அமைந்த ‘நாராயணகுரு தொகுப்பு’ என்ற நூல் பி.கே.பாலகிருஷ்ணன் 1954-ல் எழுதி வெளிவந்தது. நாராயணகுருவின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் ஆகியவை கேரளாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் வேறு சில பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு பல மாணவர்கள் முனைவர் முனைவர் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும் பெற்றனர்.

நாராயணகுரு சமாதி

மறைவு

செப்டம்பர் 20, 1928-ல் நாராயணகுரு தன் 74 வது வயதில் 1928-ல் கேரளத்தில் வற்கலையில் அவர் உருவாக்கிய சிவகிரி மடத்தில் காலமானார். அங்கே அவரது சமாதி உள்ளது. நாராயணகுருவின் உயிர் பிரிந்த அறையில் அவர் பயன்படுத்திய கட்டிலும், நாற்காலியும், தலையணைகளும் அப்படியே இருக்கின்றன. அங்கு ஒரு விளக்கு எந்நேரமும் எரியும்.

நினைவு

  • நாராயணகுருவின் பிறந்த நாள் மற்றும் அடக்கமான நாள் ஆகியவை கேரள அரசால் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டன.
  • 2006-ல் நாராயணகுருவின் 150-ஆவது பிறந்த நாளின் போது இந்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாக சிறப்பு நாணயங்களை வெளியிட்டது.
நாராயணகுரு அஞ்சல்தலை

மதிப்பீடு

  • 1925-ல் பல எதிர்ப்புகளுக்கிடையே கேரளாவில் நாராயண குருவை சந்தித்த காந்தி நாராயண குருவை 'அவதார புருஷர்' என்று குறிப்பிட்டார்.
  • 1923-ல் கன்யாகுமரி வந்த தாகூரும் நாராயணகுருவை சந்தித்து அவர் பாரத தேசத்தில் தோன்றிய மகாரிஷிக்களில் ஒருவர், ஒரு பரமஹம்சர் என்றார்.
  • கேரளத்தின் மகாகவி ஜி.சங்கரகுரூப் தனது செய்யுளில் நாராயண குருவை 'இரண்டாம் புத்தர்' என்று குறிப்பிட்டார்.
  • 1901-ல் நாராயணகுரு வாழ்ந்த காலகட்டத்திலேயே வெளியிடப்பட்ட திருவாங்கூர் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு புத்தகத்தில் ஸ்ரீ நாராயணா 'குரு' எனும் அடை மொழியுடன் சமஸ்கிருத பண்டிதராகவும் குறிப்பிடப்படுகிறார்..
நாராயணகுரு உருவம் பொறித்த நாணயம்

விவாதம்

"நாராயணகுரு இறக்கும்போது அவர் தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கம் ஏறத்தாழ அதன் சாதனைகளை முடித்துக் கொண்டு அரசியல் இயக்கமாக ஆகி பேரங்களில் இறங்க ஆரம்பித்தது. நாராயணகுரு கடைசிக்காலத்தில் எஸ்.என்.டி.பி இயக்கத்தை முழுக்கவே நிராகரிக்கும் மனநிலையில் இருந்தார். அமைப்புசார்ந்த செயல்பாடுகளின் எதிர்விளைவுகளை அவர் காண நேர்ந்தது." என ஜெயமோகன் குறிப்பிட்டார்.

நூல் பட்டியல்

தமிழ்
  • தேவாரப் பதிகங்கள்
மலையாளம்
  • ஸ்வனுபவ கீதை
  • ஆத்மோபதேச சதகம்
  • அத்வைத தீபிகா
  • அறிவு
  • தெய்வ தசகம்
  • ஜீவகாருண்ய பஞ்சகம்
  • அனுகம்ப தசகம்
  • ஜாதி நிர்ணயம்
  • ஜாதி லட்சணம்
  • சிஜ்ஜட சிந்தகம்
  • தெய்வ சிந்தனம்-1 &2
  • ஆத்ம விலாசம்
  • சிவ சதகம்
சமஸ்கிருதம்
  • தர்சன மாலா
  • பிரம்மவித்ய பஞ்சகம்
  • நிர்விருத்தி பஞ்சகம்
  • சுலோகதிரயி
  • வேதாந்த சூத்திரம்
  • ஹோம மந்திரம்
  • முனிசர்ய பஞ்சகம்
  • ஆஸ்ரமம்
  • தர்மம்
  • சரம சுலோகங்கள்
  • சிதம்பர அஷ்டகம்
  • குக அஷ்டகம்
  • பத்ரகாளி அஷ்டகம்
  • விநாயக் அஷ்டகம்
  • ஸ்ரீ வாசுதேவ அஷ்டகம்
  • ஜெனனி நவரத்னமஞ்சரி
மொழிபெயர்ப்புகள்
  • திருக்குறள்
  • ஈசோவாஸ்யோ உபநிஷத்
  • ஒழிவில் ஒடுக்கம்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page