under review

சூறாவளி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Sooravali (Magazine). ‎

சூறாவளி

சூறாவளி (1939) க.நா. சுப்ரமணியம் நடத்திய இலக்கிய இதழ். இதை ஒரு வார இதழாக, பொதுவாசகர்களுக்கான இதழாக நடத்தினர். ஓராண்டு மட்டுமே சூறாவளி வெளிவந்தது.

வரலாறு

சூறாவளி முதல் இதழ் ஏப்ரல் 23, 1939 அன்று வெளியானது. 'க்ரௌன்’ அளவில் 64 பக்கங்கள். ஞாயிறுதோறும் 'சூறாவளி’ வெளியாகும்இது 1939-ல் உருவாகியிருந்த சுதந்திரப்போராட்டத்தின் எழுச்சியை ஒட்டி உருவான வாசிப்பு அலையை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு தொடங்கப்பட்டது. இதழின் இணையாசிரியராக மணிக்கொடி எழுத்தாளர் கி.ரா.கோபாலன் இருந்தார். இருபது இதழ்கள் வெளியாயின. இருபதாவது இதழ் அக்டோபர் 15, 1939 அன்று வெளியானது. ஓர் இடைநிலை இதழை வணிகரீதியாக நடத்த முயன்ற க.நா.சுப்ரமணியம் அதில் தோல்வியை அடைந்தார்.

"சூறாவளி என்று என் முதல் பத்திரிகைக்குப் பெயர் வைத்தது புதுமைப்பித்தன்தான். ‘மணிக்கொடி’ நின்றுபோன பிறகு அவருக்கு எழுத ஒரு பத்திரிகை வேண்டும் என்கிற காரணத்துக்காகவே பத்திரிகை உலகுக்குப் புதியவனான நான் ஆரம்பித்த பத்திரிகை அது.” என க.நா.சுப்ரமணியம் 'புதுமைப்பித்தன் என்று ஒரு மேதை' கட்டுரையில் குறிப்பிட்டார்.

உள்ளடக்கம்

சூறாவளி இதழில் இலக்கிய விவாதங்களும் படைப்புகளும் வெளியாயின. இந்தியா மற்றும் உலக அரசியல் விவாதங்கள் 'அகல் விளக்கு’, 'அங்கே’ என்ற தலைப்புகளில் அலசப்பட்டன. 'அங்கே’ என்ற ஐரோப்பிய அரசியல் அரங்கக் கட்டுரைகளை புதுமைப்பித்தன் இரண்டாவது உலகப்போர் வருமுன் வாராவாரம் ஐந்து மாதங்களுக்கு மேல் எழுதினார். 'ஆயகலைகள்’ என்ற தலைப்பில் சங்கீதம், சினிமா போன்ற மற்றக் கலை வடிவங்கள் குறித்த கட்டுரைகள் வெளியானது. ஆசிரியர் குறிப்புகள் 'சூறாவளி’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழிலும் வழவழப்பான ஆர்ட் காகிதத்தில் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

'சூறாவளி’யில் க.நா.சு மட்டும் கிட்டத்தட்ட பதினைந்து புனைப் பெயர்களில் எழுதியிருக்கிறார். மயன், ராஜா, நசிகேதன், தேவசன்மன், சுயம் போன்றவை அதில் சில. ச.து.சு யோகியார், சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், கே. பரமசிவம், பி.எஸ். ராமையா, கு.ப. ராஜகோபாலன், சாலிவாகனன், இலங்கையர்கோன், அ.கி.ஜெயராமன் போன்றவர்கள் சூறாவளியில் எழுதியுள்ளனர். புதுமைப்பித்தன் எழுதிய சாமியாரும் குழந்தையும் சீடையும், செவ்வாய் தோஷம், சுப்பையாபிள்ளையின் காதல்கள் ஆகியவை சூறாவளியில் வந்தவை. கு.ப.ரா.வின் முக்கியமான கதையான 'திரை'யும் சூறாவளியில் வந்தது.

இலக்கிய இடம்

சூறாவளி இதழுக்கு நவீனத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடமேதும் இல்லை. இது ஒரு வணிகக்கேளிக்கை இதழுக்கான முயற்சி மட்டுமே. இவ்விதழ் நின்றபின் 16 ஆண்டுகளுக்குப் பின் இடைநிலை இதழ் என்று சொல்லத்தக்க சந்திரோதயம் இதழை க.நா.சுப்ரமணியம் நடத்தினார்.

உசாத்துணை


✅Finalised Page