சுபமங்களா நேர்காணல்கள்
சுபமங்களா மாத இதழ், ஶ்ரீராம் நிறுவனத்தால் 1988-ல் தொடங்கப்பட்டது. அனுராதா ரமணனின் ஆசிரியத்துவத்தில் வெகு ஜன இதழாக ஜனவரி 1991 வரை வெளிவந்தது. பிப்ரவரி 1991-ல் கோமல் சுவாமிநாதன் ஆசிரியர் பொறுப்பேற்றார். அது முதல் டிசம்பர் 1995 வரை அது ஓர் இலக்கிய இதழாக வெளிவந்தது.
சுபமங்களா நேர்காணல்கள்
அரசியல், சமூகம், இசை, இலக்கியம், மொழிபெயர்ப்பு என பல்துறையைச் சார்ந்தவர்களின் நேர்காணல்கள் சுபமங்களாவில் இடம் பெற்றன. எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சினிமா வசன ஆசிரியர், நடனத்துறை சார்ந்தவர்கள் என்று பலரது நேர்காணல்களை சுபமங்களா வெளியிட்டது. மற்ற நேர்காணல்களைப் போல் அல்லாமல் அந்தந்தத் துறை சார்ந்தவர்களின் அறிவுப்பூர்வமான விளக்கங்கள், அனுபவப் பகிர்தல்கள், வெளிப்படையான கருத்துக்கள் கொண்டதாக அவை அமைந்திருந்தன. பரவலான வாசக வரவேற்பை அவை பெற்றன.
சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, நா. மகாலிங்கம், கலாப்ரியா, என்.ராம், அ. மார்க்ஸ், தமிழவன், மு. கருணாநிதி, சுப்புடு, செம்மங்குடி ஸ்ரீநிவாஸய்யர், கார்த்திகேசு சிவத்தம்பி, சரஸ்வதி ராம்நாத் என பல்வேறுபட்ட கலை, இலக்கிய, அரசியல், சமூக ஆளுமைகளின் நேர்காணல்கள் சுபமங்களாவில் வெளியாகின. கோமல் சுவாமிநாதனுக்கு உறுதுணையாக நேர்காணல்களில் குடந்தை கீதப்ரியன், இளையபாரதி, வண்ணநிலவன் உள்ளிட்டோர் பணியாற்றினர்.
சுபமங்களா நேர்காணல் துளிகள்
சுபமங்களா நேர்காணலில் கலைஞர் மு. கருணாநிதி, “எங்கோ ஓர் இடத்தில் கடவுள் என்பவர் அமர்ந்து கொண்டு, விண்ணிலும், மண்ணிலும் இத்தனை அதிசயங்களை நடத்துகிறார் என்பதை நம்ப முடியாவிட்டாலும், ஏதோ ஒரு சக்தியால் எல்லாம் நிகழ்கிறது என்பது உண்மை. அதற்காக அந்த சக்திக்கு கை கால் உண்டா? பேசுமா? வரம் அருளுமா? என்றெல்லாம் அலட்டிக் கொள்ளத் தேவையேயில்லை" என்கிறார்.
"’தாங்கள் எழுதியுள்ள நாடகங்கள், சிறுகதைகள் அழகியல் அற்றவை’ என்றும், ’வெறும் பிரச்சாரமானவை’ என்றும் இன்று சில விமர்சகர்ளால் நிராகரிக்கப்படுகிறதே.. இதே நிலை அண்ணாவின் நூல்களுக்கும் ஏற்பட்டிருக்கிறதே, இதைப் பற்றி தங்கள் கணிப்பு என்ன?" என்ற கேள்விக்கு, “அண்ணாவையும், என்னையும் ‘அழகியல்’ அற்ற எழுத்தாளர்கள் என்று யாராவது விமர்சித்தால் அவர்கள் எங்களை அரசியல் கட்சிக் கண் கொண்டு பார்க்கிறார்கள் என்று அர்த்தம். ‘ஓர் இரவு’, ‘வேலைக்காரி’ நாடகங்களைக் கண்டு மகிழ்ந்து, அண்ணாவை, ’தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று பேராசிரியர் கல்கி பாராட்டியிருக்கிறார். எனது நூல்களைப் படித்து, நாடகங்களைப் பார்த்துவிட்டு, ‘தமிழ் அரசர்களான நலங்கிள்ளி, நெடுங்கிள்ளிக்குப் பிறகு புலவனாகவும், அரசனாகவும் வாழ்பவர் கலைஞர் ஒருவர் தான்’ என்று டாக்டர் மு. வரதராசனார் பாராட்டி எழுதினார். நாடகமோ, புதினமோ, சிறுகதையோ எதுவாயிலும் அதனை எழுதும் ஆசிரியரின் கருத்தைப் பிரச்சாரம் செய்வதுதான் என்பதை ஏனோ ஒரு சிலர் மறந்து விடுகிறார்கள். [1]” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுபமங்களா நேர்காணலில் எழுத்தாளர் சுஜாதா, “சுஜாதா என்கிற பெயர் காலம் காலமாக நிலைச்சு நிற்கும்படி சமுதாயப் பிரச்சினைய வச்சு ஒரு பிரும்மாண்டமான நாவல் - Magnum Opus எழுதணுகிற ஆர்வம் உங்களுக்கு இருக்கா?” என்ற கேள்விக்கு, “எழுத மாட்டேன். ஏன்னா பிரும்மாண்டமாக எழுதறது என்பது முன்னால தீர்மானிக்கப்படறதில்லை. எனக்கு அந்த மாதிரியான ஒரு நாவலில் வாழ்ந்து பார்த்த அனுபவம் கிடையாது. என் வாழ்க்கையில் போராட்டங்கள் இல்லே. ஏழ்மையை நான் அதிகம் பார்த்ததில்லே. வேலை தேடி அலைஞ்சதில்லே. மத்தவங்க உளர்ச்சிகளில் தான் நான் வாழ முடியுமே தவிர, அதை ஒட்டித்தான் கதை எழுத முடியுமே தவிர, என் அனுபவத்தைப் பிரதிபலிக்க முடிவதில்லை” என்கிறார். மேலும் “நூறு வருஷத்துக்கு தமிழே இருக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்குது. ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்ற நிலைதான். காலத்தால் சாகாத இலக்கியம் படைப்பது மாதிரி தொடர்களில் எனக்கு நம்பிக்கையில்லை.[2] ” என்கிறார்.
பாலகுமாரன் தனது நேர்காணலில், “இன்றைக்கு உங்கள் புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்பது உண்மை . குறுகிய காலத்தில் பல பதிப்புகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் உங்கள் நாவல்களுக்கான வாசகர்கள் காலம் காலமாக நிலைத்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?” என்ற கேள்விக்கு, “ரொம்ப நிச்சயமாக நம்புகிறேன். இன்னும் நூறு வருஷத்துக்கு பாலகுமாரன் பேசப்படுவான் என்ற சந்தோஷமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனெனில் நான் எழுதுவது சிறந்ததா இல்லையா என்பதல்ல விஷயம். நான் எழுதியது உண்மை என்பதே முக்கியம். நான் வரலாற்று ஆசிரியனைப் போல மத்திய தர வர்க்கத்தை என் நாவலில் பிரதிபலித்திருக்கிறேன். என் முடிவுகள், தீர்வுகள், சரியா, தவறா என்பது காலத்தின் விமரிசனத்துக்கு உட்பட்ட விஷயம். அதைச் சொல்ல எனக்கும் அருகதையில்லை, உங்களுக்கும் அருகதையில்லை. ஆனால் இந்த சமுகத்தை நான் உண்மையாகப் பிரதிபலித்திருக்கிறேனே. அதுவே என்னை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு இழுத்துக் கொண்டு செல்லும்.” என்கிறார்.(https://subamangala.in/archives/199109/#p=4)
பலரது கருத்தாழமிக்க நேர்காணல்கள் சுபமங்களாவில் இடம் பெற்றுள்ளன.
சுபமங்களா நேர்காணல் குறித்து பாலகுமாரன் “சுபமங்களா அதன் பேட்டிகளுக்காகவே கொண்டாடப்பட்டது. பேட்டிகளை வாரப் பத்திரிகைகள் மதித்ததே இல்லை. எவர் பேட்டியையும் முழுமையாய், எரிமலைக் குமுறலாய், காட்டாற்று வெள்ளமாய் காட்டியதே இல்லை. முக்கால் நிர்வாணப் படங்கள் தான் வாரப் பத்திரிகைகளில் முழுசாக வரும் விஷயம். ஆனால் சுபமங்களாவில் பேட்டிகள்தான் முக்கிய விஷயம்.” என்கிறார்.
சுபமங்களா நேர்காணல் குறித்து, நடிகர் சிவகுமார், சுபமங்களாவில் வெளியான, ‘நெஞ்சில் நிறைந்த நேர்காணல்கள்’ என்ற கட்டுரையில், “ இந்திரா பார்த்தசாரதி, கவிஞர் சுரதா, கவிஞர் அப்துல் ரகுமான், கவிஞர் இன்குலாப், பெரியவர் சிட்டி, பெரியவர் எம்.வி.வி., பேராசிரியர் சே. ராமானுஜம், வண்ணநிலவன், வண்ணதாசன், யு.ஆர். அனந்த மூர்த்தி, செ. யோகநாதன் என அனைவரது நேர்காணலும் ஒரு அனுபவமாக ரசிக்க முடிந்தது.” என்கிறார்.
சுபமங்களாவில் வெளியான நேர்காணல்கள் இளையபாரதியால் தொகுக்கப்பட்டு ‘கலைஞர் முதல் கலாப்ரியா’ வரை என்ற தலைப்பில் நூலாக வெளியானது. கலைஞன் பதிப்பகம் அதனை வெளியிட்டுள்ளது.