being created

சி. மோகன்

From Tamil Wiki
Revision as of 21:26, 29 January 2022 by Madhusaml (talk | contribs) (stage template moved)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

சி.மோகன்
சி.மோகன்

சி. மோகன் (C.Mohan) நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, நாவல், ஆய்வு, விமர்சனம், கட்டுரை, ஓவியம், திரைப்படம், மொழிபெயர்ப்பு, உடையாடல், நூல் பதிப்பு, சிறுபத்திரிகை ஆகியவற்றில் தீவிரமாக இயங்கி வருபவர். 2014 ஆம் ஆண்டு விளக்கு விருது சி.மோகனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமர்சன கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறந்த உரையாடல்காரராக அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் பாதிப்பை உருவாக்கியவர்.

பிறப்பு, கல்வி

சி. மோகன், 1952 ஜூன் 12ஆம் தேதி மதுரையில் பிறந்தவர். வேறு ஊர்களில் இளமைக்கால வாழ்க்கை அமைந்தாலும், பத்தாம் வகுப்பு படிக்கும்போது குடும்பத்தோடு 1967ல் மதுரைக்கு வந்திருக்கிறார்கள். மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் தமிழ் முதுகலை படித்தார். மதுரையில் படிக்கும்போது எழுத்தாளர் ஜி.நாகராஜனிடம் படிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.

தனி வாழ்க்கை

பாளையங்கோட்டையில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் பணியாற்றியவர். 1967ல் இருந்து 1983ல் வரை மதுரையில் வாழ்ந்திருக்கிறார். கிரியாவில் பணியாற்றி இருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஜி. நாகராஜனின் இறுதிக்காலத்தில் அவரோடு பழகும் வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. அவரை மருத்துவமனையில் சேர்த்தது தொடங்கி, தத்தநேரியில் தகனம் செய்யும் வரை உடன் இருந்திருக்கிறார். அந்த நினைவுகளை ‘ஓடிய கால்கள்’ என்ற சிறுகதையாகவும் எழுதியிருக்கிறார். ஜி. நாகராஜன் 'வாழ்வும் எழுத்தும்' என்ற நூலின் வாயிலாக அவரது ஆளுமையைப் பதிவு செய்திருக்கிறார். பாளையங்கோட்டையில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் பணியாற்றியபோது நாகர்கோவிலுக்கு அடிக்கடி சென்று ஜி. நாகராஜன் எழுத்துக்களைத் தொகுக்கும் பணியைச் செய்திருக்கிறார். சாகித்ய அகாடமி வெளியிட்ட 'இலக்கியச் சிற்பிகள்' என்ற தொகுப்பில் ஜி. நாகராஜன் பற்றி எழுதியிருக்கிறார்.

மதுரையில் வாழ்ந்த ப. சிங்காரம் அவர்களை சந்தித்திருக்கிறார்.’புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ நாவல்கள் குறித்த சி.மோகனது கட்டுரை வாயிலாக அந்த நூலின் மீதான வெளிச்சம் பரவியது. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் தமிழ் முதுகலை படிக்கும் நாட்களில் சிறுபத்திரிகை செயல்பாடுகளில் தீவிரமாக இருந்திருக்கிறார். ‘விழிகள்’, ‘வைகை’ போன்ற சிற்றிதழ்களில் எழுதியிருக்கிறார்.

1975 ஜனவரி 31ஆம் தேதி சுந்தரராமசாமியை மதுரை ரயில்நிலையத்தில் சந்தித்திருக்கிறார். சுந்தர ராமசாமி நடத்திய காகங்கள் முதல்கூட்டத்தொடரிலேயே பேசும் வாய்ப்பும் சி.மோகன் அவர்களுக்கு கிட்டியிருக்கிறது. காகங்கள் கூட்டத்தில் நாவல் பற்றிய இவரது கட்டுரையாலும், முந்தைய நாள் இரவில் அவர் அக்கட்டுரையை எழுதியமை குறித்த வியப்பாலும் சுந்தர ராமசாமி இவர் மீது தீவிர அக்கறை காட்டியிருக்கிறார். சுந்தரராமசாமியின் வீட்டில்போய் அடிக்கடி தங்கும் அளவிற்கு நெருக்கமாகப் பழகியிருக்கிறார். சுந்தரராமசாமியைத் தன்னுடைய வழிகாட்டிகளில் ஒருவராகச் சொல்கிறார்.

வெங்கட்சாமிநாதனை மதுரையில் சந்தித்து அவரோடு உரையாடியிருக்கிறார். தருமுசிவராம் இலங்கையிலிருந்து வந்து மதுரையில் தங்கிய நாட்களில் அவரோடு சி.மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தி.ஜானகிராமனின் ‘கொட்டுமேளம்’, ‘சிவப்பு ரிக்‌ஷா’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை 1980ல் சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார். மதுரை வந்தபோது ஜானகிராமனோடு மதுரை வீதிகளில் உலவிய ஞாபகங்களை எழுதியிருக்கிறார்.

க்ரியா ராமகிருஷ்ணன் அழைப்பின் பேரில் சென்னைக்கு 1983ல் சென்றிருக்கிறார். அப்போது க்ரியா பதிப்பகத்தின் வாயிலாக சம்பத்தின் ‘இடைவெளி’ நாவலை கொண்டுவந்த போது சம்பத்துடன் பழகும் வாய்ப்பும் இவருக்கு கிட்டியிருக்கிறது. துரதிஷ்டவசமாக நாவல் வெளியாவதற்கு முன் சம்பத் இறந்துபோனது பெரும் சோகம். தமிழின் மிக முக்கியமான நாவலாக சம்பத்தின் ‘இடைவெளி’ நாவலை சி.மோகன் குறிப்பிடுகிறார்.

க்ரியாவில் பணியாற்றிய பொழுது எழுத்தாளர் பிரபஞ்சன், கோபிகிருஷ்ணன் ஆகியோர் கொஞ்சநாட்கள் இவரோடு பணியாற்றியிருக்கிறார்கள்.

சி.மோகன் சம்பத்தின் ‘இடைவெளி’ சுந்தரராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’, அசோகமித்திரனின் ‘தண்ணீர்’, போன்ற நாவல்களில் எடிட்டிங் பணியை செய்து கொடுத்திருக்கிறார்.

‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் ‘கமலி’ என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார்.

ஏறத்தாழ எண்பது கட்டுரைகள் கொண்டது, ‘சி.மோகன் கட்டுரைகள்’ தொகுப்பு. இந்தக் கட்டுரைகள் அகப்படுத்தியிருக்கும் பரப்பு மிகவும் விசாலமானது. படைப்பிலக்கியம் குறித்தும், ஓவியம் – சிற்பம் – இசைத் துறைகளின் பிரகாசக் கோபுரங்களான ஆளுமைகளைக் குறித்துமான பெருநூல்.

மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் உச்சங்களுள் ஒன்றாகக் கொண்டாடப்படுவது, இவர் மொழிபெயர்த்த, ஜியாங் ரோங் எழுதிய சீன நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’. தமிழ் மொழியாளுமைக்காகவும் மிகப் பெரிதும் சிலாகிக்கப்பட்டது இது.

ஓவியம் – ஓவியர்கள் மீதான இவரது தீவிர நாட்டமும் பரவசமும் சேர்ந்து ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ எனும் நாவலாயிற்று. இந்த நாவல், மறைந்த ஓவியர் ராமானுஜத்தைப் பற்றியது.

இலக்கிய இடம், மதிப்பீடு

ஓநாய் குலச்சின்னம்
ஓநாய் குலச்சின்னம்

"'தண்ணீர் சிற்பம்’, ‘எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை’ எனும் அவரது கவிதைத் தொகுப்புகளின் கவிதைகள், எளிமையான வாசிப்பு அணுகுதலில் ஒத்திசைபவை. எளிமையாக வெளிப்பட்டிருப்பதாலேயே பல கவிதைகள் அதைத் தன் ஒற்றைக் குணமாகக் கொண்டிருப்பதில்லை. ‘மனவியல் அறிந்த மகத்தான கவிஞராக விளங்குகிறார் சி.மோகன்’" என்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன்.

எழுத்தாளர் ஜெயமோகன் "எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நூல்தொகுப்பாளரும்,கலை, இலக்கிய விமர்சகருமான சி.மோகனுக்கு 2014 விளக்கு விருது அளிக்கப்படுகிறது. சி.மோகன் அதிக முனைப்பின்றிச் செயல்படும் இயல்பு கொண்டவர். ஆகவே குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் தமிழிலக்கியப்பரப்பில் முக்கியமான பங்களிப்பை தன் விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் நிகழ்த்தியவர்.

குறிப்பிடும்படியான சிறுகதைகளையும் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்னும் சிறியநாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ தமிழ் மொழியாக்கங்களில் ஓர் அலையை உருவாக்கியபடைப்பு" என்று சி. மோகனுக்கு வழங்கப்பட்ட விளக்கு விருது வாழ்த்துரை பதிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

நூல்கள்
  • மஞ்சள் மோகினி (சிறுகதைத் தொகுப்பு)
  • நவீன உலகச் சிறுகதைகள் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
  • ரகசிய வேட்கை (சிறுகதைத் தொகுப்பு)
  • ஆசை முகங்கள்
  • சவாரி விளையாட்டு
நாவல்கள்
  • விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்
  • கமலி
மொழிபெயர்ப்புகள்
  • ஓநாய் குலச்சின்னம்
  • இரவு உணவு (க.நா.சு, சி.மோகன், புதுமைப்பித்தன்)
கவிதைகள்
  • தண்ணீர் சிற்பம்
  • எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை
கட்டுரைகள்
  • காலம் கலை கலைஞன்
  • நடைவழிக்குறிப்புகள்
  • நடைவழி நினைவுகள்
  • ஜி.நாகராஜன் வாழ்வும் எழுத்தும்
  • சுந்தரராமசாமி சில நினைவுகள்
  • சி.மோகன் கட்டுரைகள்
நேர்காணல்கள்
  • அங்கீகரிக்கப்படாத கனவின் வலி

விருதுகளும் பரிசுகளும்

  • விளக்கு விருது (2014)
  • கனடா இலக்கியத்தோட்ட விருதுகள் (2013)

உசாத்துணை