கோமல் சுவாமிநாதன்

From Tamil Wiki
Komal Swaminathan.jpg

கோமல் சுவாமிநாதன் (ஜனவரி 27, 1935 - அக்டோபர் 28, 1995) தமிழ் எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர். இவர் தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர். சுபமங்களா என்னும் இலக்கிய இதழை நடத்தினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

பிறப்பு, கல்வி

Komal Swaminathan Collage.jpg

கோமல் சுவாமிநாதன் ஜனவரி 27, 1935 காரைக்குடியில் ஸ்ரீநிவாசன் - அன்னபூரணி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோரின் பூர்விக ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகில் உள்ள கோமல் என்னும் சிற்றூரை சேர்த்தே இவரை கோமல் சுவாமிநாதன் என்றழைத்தனர்.

தந்தை ஸ்ரீநிவாசன் தபால்துறையில் வேலை செய்ததால் அடிக்கடி வேலை மாற்றம் செய்யப்பட்டார். அதனால் கோமல் சுவாமிநாதன் தன் பள்ளிக் கல்வியை குளித்தலை, திருப்பத்தூர், காரைக்குடி, பெரியகுளம் என பல ஊர்களில் பயின்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் நிறைவு செய்தார். தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ வில் வணிகவியல் பள்ளியில் டிப்ளமோ பயின்றார். பின்னர் நாடகவியலில் கொண்ட ஈடுபாட்டால் நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையத்தில் சேர்ந்தார். நாடகத்திற்கு வசனம் எழுதுவது பற்றிய நுணுக்கங்களை சகஸ்ரநாமம், பி. எஸ். ராமையா, என்.வி. ராஜாமணி, கலாசாகரம் ராஜகோபால் ஆகியோரிடம் கற்றுக் கொண்டார்.

பள்ளி நாட்களிலேயே நூலகத்திற்கு சென்று படிக்கும் வழக்கம் இருந்தது. இவர் வாசித்த ஜெய்பிரகாஷ் நாராயணின் வாழ்க்கை வரலாறு இவருள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காரைக்குடி எஸ்.எம்.எஸ். கலாசாலையில் படித்தபோது, அங்கு சா. கணேசன் தலைமையில் நிகழ்ந்த கம்பராமாயணக் கூட்டங்கள் இவருக்குள் இலக்கிய ஆர்வத்தைத் தோற்றுவித்தன. அங்குள்ள கலாநிலையம் நூலகத்தில் வாசித்த புத்தகங்கள் இவரது ஆர்வத்திற்கு மேலும் உதவின. கே.எம். முன்ஷி, புதுமைப்பித்தன் என பலரது எழுத்துக்கள் இவருக்கு அங்கு பரிச்சயமாயின.

தனி வாழ்க்கை

மகள் தாரணி

கோமல் சுவாமிநாதனின் மனைவி பெயர் விஜயலெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகள்கள். 1957 இல் சென்னைக்கு வந்தது முதல் அக்டோபர் 28 1995 இல் காலமாகும் வரை சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்தார். இவருடைய மகள் தாரிணி, தந்தையின் நாடகங்களை மீண்டும் மேடையேற்றியும், "சுபமங்களா" இதழ்களை இணையத்தில் பதிவேற்றமும் செய்தார்.

பொது வாழ்க்கை

அரசியல் பணி

ஆரம்ப காலத்தில் (1952 முதல்) காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது பற்றுக் கொண்டு காங்கிரஸ் மேடைகளில் பேசினார். அப்போதைய முதலமைச்சர் காமராசருடன் நல்ல நட்பு இருந்தது. அந்நாட்களில் காமராஜரின் நெருங்கிய வட்டத்தில் சுவாமிநாதன் என்ற பெயரில் நிறைய நண்பர்கள் இருந்ததால் இவரது சொந்த ஊரான ”கோமல்” சேர்த்து கோமல் சுவாமிநாதன் என அறியப்பட்டார். இந்நாட்களில் காமராஜர் கேட்டுக் கொண்டதன் பேரில் கதராடைக்கு மாறினார். இவருடைய தொடர் சொற்பொழிவுகளால் “கோடையிடி கோமல்” என அறியபட்டார்.

1956 இல் தோழர் ஜீவானந்தத்துடன் ஏற்பட்ட நட்பும், பரிட்சியமும் சுவாமிநாதனை இடதுசாரி பக்கம் இழுத்தது. அங்கிருந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் அளவிற்கு அந்நட்பு வளர்ந்தது.

நாடகப் பணி
ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸ் நாடகக் குழுவினர்

கோமல் சுவாமிநாதன் பள்ளி நாட்களிலேயே நாடகங்களில் நடித்தார். நண்பர்களுடன் இணைந்து 1953 ஆம் ஆண்டு ”இதயத் துடிப்பு” என்னும் அரசியல் நையாண்டி நாடகத்தை அரங்கேற்றினார். சென்னையில் பரவலாக நிகழ்ந்துக் கொண்டிருந்த நாடகங்களுக்குச் சென்று நாடக நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். கேரள பீப்பிள் ஆர்ட் சென்டர் நடத்திய நாடகங்கள் நாடகத்தின் மீதான இவரது பார்வைக்கு உதவின. யதார்த்த நாடகங்களை எப்படி எழுதுவது என இங்கே கற்றுக் கொண்டார். அதன்பின் மிகை இல்லாத யதார்த்த நாடகங்களை மட்டும் எழுதினார்.

ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸ் தியேட்டர்

எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்திய சேவா ஸ்டேஜில் பயிற்சி முடித்து அங்கேயே பணியாற்றினார். சுவாமிநாதன் எழுதிய முதல் நாடகமான “புதிய பாதை” 1961 ஆம் ஆண்டு சேவா ஸ்டேஜில் அரங்கேறியது. இந்நாடகத்திற்கு சி.சு.செல்லப்பா, தொ.மு.சி. ரகுநாதன், தி.க.சிவசங்கரன், கல்கி ராஜேந்திரன் உள்ளிட்ட பலரிடமிருந்து பாராடுக்களைப் பெற்றார். பின்னர் அடுத்தடுத்து அவரது “தில்லைநாயகம்”, “மின்னல் காலம்” நாடகங்கள் அரங்கேறி பரவலாகப் பேசப்பட்டன.

Thaneer thaneer1.jpg

1971 இல் சுவாமிநாதன் ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸைத் துவங்கினார். அதில் “சன்னதித் தெரு” என்ற நாடகத்தை அரங்கேற்றினார். இங்கே அரங்கேறிய இவரது “நவாப் நாற்காலி” பரவலாகப் பாராட்டப்பட்டது. இந்நாடகம் பின்னாளில் திரைப்படமாகவும் வெளியானது. இவரது நாடகங்களில் “தண்ணீர் தண்ணீர்” முக்கியமானது. அந்நாடகம் கோமல் சுவாமிநாதன் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. சுவாமிநாதன் இந்நாடகம் மூலம் அகில இந்திய அளவில் அறியப்பட்டார். இந்நாடகம் 250 முறைக்கு மேல் அரங்கேற்றப்பட்டது. பேராசிரியர் எஸ். சங்கர் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, பி.சி ராமகிருஷ்ணாவின் மெட்ராஸ் பிளேயர்ஸால் ஆங்கிலத்தில் நாடகமாக நடத்தப்பட்டது. 1981 இல் கே. பாலசந்தர் இயக்கத்தில் படமாக்கப்பட்டது.

தன் ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ் குழுவிற்கு மட்டுமல்லாமல் மனோரமா, எம்.என். நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன் போன்றோர் நடத்தி வந்த நாடகக்குழுக்களுக்கும் நாடகங்களை எழுதினார். தன் வாழ்நாளில் மொத்தம் 33 நாடகங்களை இயற்றினார். அவர் காலத்தில் அபத்த நகைச்சுவைக் குவியல்களாக மேடை நாடகங்கள் இருந்ததற்கு எதிராக சற்று யோசிக்க வைக்கும் பகடிகளை இவருடைய நாடகத்தில் செயல்படுத்தி கவனம் பெற்றார். கேரளத்திலும் வங்கத்திலும் நிகழ்த்தப்படுவது போல தமிழகத்திலும் மக்களின் குரலையும், மக்களுக்கான குரலையும் நாடகங்கள் கொடுக்க வேண்டுமென விரும்பினார். அதன் காரணத்தால் பெண்ணிய கருத்துகளையும், தலித் விடுதலையையும், அரசியல் சமூகப் பிரச்சனைகளையும் அவர் நாடகங்கள் பிரதானப்படுத்தின. ”நாடகத்தின் அடிப்படை சாராம்சம் பாதிக்கப்படாமல் உள்ளடகத்திலும் உத்தியிலும் பல பரிசோதனைகளைச் செய்து புதிய பரிமாணம் படைத்தவர்” என மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ. கோ. சுந்தர்ராஜன் சுவாமிநாதனைப் பாராட்டினார்.

தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.

திரைத்துறை பணி
Thaneer thaneer.jpg

நாடகங்களில் தொடர் முத்திரை பதித்த காலங்களில் சுவாமிநாதனின் ஈடுபாடு சினிமாவின் பக்கம் திரும்பியது. இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனிடம் “கற்பகம்”, “கைகொடுத்த தெய்வம்”, “பேசும் தெய்வம்” மற்றும் பல படங்களில் வசன உதவியாளராகவும், உதவி இயகுனராகவும் பணியாற்றினார். இந்தியில் தயாரிக்கப்பட்ட “சாரதா” படத்திலும் சுவாமிநாதன் பணியாற்றினார்.

தேவர் பிலிம்ஸின் இந்தித் திரைப்பட கதை விவாதங்களில் கலந்துகொண்டார். “பாலூட்டி வளர்த்த கிளி”, “குமார விஜயம்”, “சாதிக்கொரு நீதி” என்று பல படங்களுக்குக் கதை வசனம் எழுதினார்.

“யுத்தகாண்டம்”, “அனல் காற்று”, “ஒரு இந்திய கனவு”, “நவாப் நாற்காலி” என நான்கு திரைப்படங்களை இயக்கினார். வணிக சினிமாவில் பணியாற்றிக் கொண்டே மாற்று சினிமா எடுக்கும் எண்ணம் கொண்டிருந்தார். சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’யைப் போல தமிழிலும் சினிமாக்கள் வரவேண்டும் என விரும்பினார்.

இதழியல் பணி
சுபமங்களா இதழ்

பள்ளி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து “பாலர் சோலை” என்ற கையெழுத்து இதழை நடத்தினார். 1960 களில் மீண்டும் இதழியல் மீது ஆர்வம் கொண்டு சி.சு. செல்லப்பா நடத்திய “எழுத்து” இலக்கிய இதழில் பணியாற்றினார். பின்னர் ஸ்ரீராம் குழுமத்தின் “சுபமங்களா” என்ற ஜனரஞ்சக பெண்கள் இதழுக்கான ஆசிரியர் பொறுப்பு கிடைத்த போது அதை சிற்றிதழில் இயங்கி வந்த மூத்த எழுத்தாளர்களுக்கும், இளைய எழுத்தாளரகளுக்கும், ஈழ எழுத்தாளர்களுக்குமான பொதுவான தளமாக மாற்றினார். கவிதைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், பயணக் கட்டுரைகள், அறிவியல் விளக்கங்கள் என 90 களில் நவீஅ இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் இலக்கிய இதழாக சுபமங்களா விளங்கியது.

அதில் வெளியான தேரந்தெடுத்த நேர்காணல்களை, "கலைஞர் முதல் கலாப்ரியா வரை" என்ற தலைப்பிலும், அவருடைய வாழ்நாள் அனுபவங்களான "பறந்து போன பக்கங்கள்" தொடர், கட்டுரை நூல்களாக வெளிவந்தன. "சுபமங்களா வாசகர் வட்டம்" என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் எழுத்தாளர் வாசகர் சந்திப்புகளையும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி இளையதலைமுறைக்கு இலக்கிய ஆர்வத்தை தூண்டினர்.

மரணம்

கடைசி நாட்களில் முதுகு தண்டு புற்று நோயால் அவதிபட்டவர் 28 அக்டோபர் 1995 இயற்கை எய்தினார்.

விருதுகள்

  • 1977 ஆம் ஆண்டின் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
  • இவர் இயக்கிய "ஒரு இந்தியக் கனவு" திரைப்படம் 1983 ஆம் வருடம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றது.

படைப்புகள்

நாடகப் படைப்புகள்
  • சன்னதித் தெரு (1971)
  • நவாப் நாற்காலி (1971)
  • மந்திரி குமாரி (1972)
  • பட்டணம் பறிபோகிறது (1972)
  • வாழ்வின் வாசல் (1973)
  • பெருமாளே சாட்சி (1974, தமிழில் குமார விஜயம் என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாழி மதனம் என்ற பெயரிலும் படமாகியது)
  • ஜீஸஸ் வருவார் (1974)
  • யுத்த காண்டம் (1974, அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது)
  • ராஜ பரம்பரை (1975, பாலூட்டி வளர்த்த கிளி என்ற பெயரில் பி. மாதவன் இயக்கத்தில் படமாகியது. இளையராஜா இசையமைத்த இரண்டாவது படம்)
  • அஞ்சு புலி ஒரு பெண் (1976)
  • கோடு இல்லாக் கோலங்கள் (1977, இவரால் முதலில் "இலக்கணம் மீறிய கவிதைகள்" என வழங்கப் பெற்றது)
  • ஆட்சி மாற்றம் (1977)
  • சுல்தான் ஏகாதசி (1978)
  • சொர்க்க பூமி (1979, அனல் காற்று என்ற பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது)
  • செக்கு மாடுகள் (1980, சாதிக்கொரு நீதி என்ற பெயரில் விஜயகாந்த் நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி படமாகியது)
  • தண்ணீர் தண்ணீர் (1980, அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் படமாகியது)
  • ஒரு இந்தியக் கனவு (1982, அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகி தேசிய விருது பெற்றது)
  • அசோகவனம் (1983, அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது)
  • நள்ளிரவில் பெற்றோம் (1984)
  • இருட்டிலே தேடாதீங்க (1985, அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது)
  • கறுப்பு வியாழக்கிழமை (1988)
  • நாற்காலி (1989, அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
  • கிராம ராஜ்யம் (1989)
  • மனிதன் என்னும் தீவு (1989)
  • அன்புக்குப் பஞ்சமில்லை (1992)
மற்றவர்களுக்காக பணியாற்றிய  நாடக படைப்புகள்
  • புதிய பாதை (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
  • மின்னல் கோலம் (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
  • தில்லை நாயகம் (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
  • டாக்டருக்கு மருந்து
  • கல்யாண சூப்பர் மார்க்கெட் (எம்.என். நம்பியாரின் நாடகக் குழு )
  • டெல்லி மாமியார் (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு) (பின்னாளில் "கற்பகம் வந்தாச்சு" என்ற பெயரில் படமாகியது,
  • அவன் பார்த்துப்பான் (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
  • அப்பாவி (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
  • கிள்ளியூர் கனகம் (மனோரமாவின் நாடகக் குழு)
  • என் வீடு, என் கணவன், என் குழந்தை (மனோரமாவின் நாடகக் குழு) (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது)
பிற நூல்கள்
  • கிராமராஜ்யம் (நாடகம், வானதி பதிப்பகம்)
  • தண்ணீர் தண்ணீர் (நாடகம், வானதி பதிப்பகம்)
  • பறந்து போன பக்கங்கள் (அனுபவ கட்டுரைகள், குவிகம் பதிப்பகம்)
  • கலைஞர் முதல் கலாப்ரியா வரை (இளைய பாரதி உடன் இணைந்து நேர்காணல் தொகுப்பு, வ உ சி நூலகம்)

பிறர் எழுதிய படைப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகன் தன் அறம் சிறுகதை தொகுதியில் கோமல் சுவாமிநாதன் பற்றி “பெருவலி” என்னும் சிறுகதை எழுதியுள்ளார்.

வெளி இணைப்புகள்