குமரகுருபரர்

From Tamil Wiki
Revision as of 16:28, 18 March 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by Ka. Siva

Swami-kumaragurubarar.jpg

குமரகுருபரர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர். சைவ நெறியைப் போற்றிய தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடைய துறவி

இளமைப்பருவம்

குமரகுருபரர் தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்தார். இவரது தந்தை சண்முக சிகாமணிக் கவிராயர். தாயார் சிவகாம சுந்தரி.  குமரகுருபரர் ஐந்து வயது வரை பேசும் திறனின்றி இருந்தார். பின்பு இவரின் பெற்றோர் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வழிபட்ட பிறகு பேசும் திறன் பெற்றார். இள வயதிலேயே கந்தர் கலி வெண்பா என்னும் பாடலைத் திருச்செந்தூர் முருகக் கடவுளைப் போற்றிப் பாடினார்.

LLRfK36cW5gVzoET sakalakalavalli-maalai.jpg

குமரகுருபரர் தனது இளம் வயதிலேயே கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறினார். திருச்செந்தூரில் அவர் இருந்தபோது, தன் குருவைக் காணும்போது தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். அதனால் தன் குருவைக் காணும் நோக்கத்தில் மதுரை நகருக்கு வந்தார். அச்சமயத்தில் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்டு வந்தார். அவர் குமரகுருபரரை நன்கு கௌரவித்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார்.  இந்த நூலின் "வருகைப்பருவம்" என்னும் பகுதியை கோவில் மேடையில் அமர்ந்தவாறு பாடிய போது மதுரை மீனாட்சி அம்மனே சிறு பெண் வடிவத்தில் வந்து குமரகுருபரருக்கு முத்து மாலை பரிசளித்ததாக கூறப்படுகிறது. மேலும், மதுரைக் கலம்பகம், நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றினார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் "திருவாரூர் நான்மணி மாலை" என்னும் நூலை இயற்றினார்.

வாழ்க்கை வரலாறு

Kumaraguruparar-1.jpg

குமரகுருபரர் திருவாரூரிலிருந்து தருமபுரத்திற்குப் பயணப்பட்டார். தருமபுரத்தில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் என்ற பாரம்பரிய சைவ மடம் ஒன்று இருந்தது. அம்மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது மாசிலாமணி தேசிகர், குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் "ஐந்து பேரறிவும் கண்களே கொல்லா" எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார். அப்பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாகப் பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். குமரகுருபரர் இதைக் கேட்டதும் வாயடைத்து நின்றார். அசரரீ தெரிவித்தபடி   தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர்தான் எனப் புரிந்துகொண்டு அவரைச் சரணடைந்தார். தேசிகர் ஒரு ஆன்மீக நோக்குடைய நபர் மட்டுமல்ல. சமுதாயத்தின் மீதும் அவருக்கு அக்கறை இருந்தது. ஆன்மீக ரீதியில் உயரும்போது, சுற்றியுள்ள எல்லா உயிர்களிடமும் ஒருவர் அன்பு நிறைந்தவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் இந்து மதம் நசுக்கப்படுவதைத் தேசிகர் உணர்ந்திருந்தார். குமாரகுருபாரரைப் போன்ற ஆன்மீக ரீதியில் உயர்ந்த, திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஒருவரின் தேவையை அவர் உணர்ந்தார். எனவே அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமரகுருபரரின் குருவாக இருக்க ஒப்புக் கொண்டார்.

தனக்குத் துறவுநிலை அருள வேண்டுமென்று தன் குருவிடம் குமரகுருபரர் வேண்டினார். அவ்வாறு செய்வதற்குமுன் காசியாத்திரை செய்துவரும்படி குரு கட்டளையிட்டார். காசிக்குச் சென்று வருவதில் நெடுங்காலம் ஆகுமேயென்று தயங்கிய குமரகுருபரரை நோக்கிச் சில காலம் சிதம்பரத்தில் இருந்துவரும்படி கூறினார்.

குருவின் கட்டளைப்படி  சிதம்பரத்துக்கு  பயணமான குமரகுருபரர் இடையே  வைத்தீசுவரன் கோயிலில் தங்கித் தரிசனம் செய்துகொண்டு அங்கே கோயில் கொண்டிருக்கும்  முத்துக்குமார சுவாமி பெயரில் ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றினார். பிறகு சிதம்பரம் சென்று  நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு சிலகாலம் தங்கினர். அக்காலத்தில் "சிதம்பர மும்மணிக் கோவை" என்னும் நூலை இவர்  இயற்றினார். அதில் முதற் செய்யுளில் காசிக்குச் செல்வதில் உளவாகும் துன்பங்களையும் சிதம்பரத்திற்குச் சென்று தரிசனம் செய்யும் எளிமையையும் ”காசியினிறத்த னோக்கி” (452) என்பது முதலிய அடிகளில் உணர்த்தியிருக்கின்றார்.

சில அன்பர்கள், ”யாப்பருங்கலக் காரிகையில் காணப்படும் உதாரணச் செய்யுட்கள் பெரும்பாலும் சமண சமயச் சார்புடையனவாக இருப்பதால் அந்நூலின் இலக்கணங்களுக்கு உதாரணமாக  நடராஜப் பெருமான் தொடர்பான செய்யுள்களை இயற்றித்தர வேண்டும்” என்று கோரியதற்கிணங்க  "சிதம்பர செய்யுட் கோவை"  நூலை இயற்றினார்.

"நீதிநெறி விளக்கம்" என்னும் நீதிநூலில் சிதம்பரம் நடராஜப் பெருமானது வாழ்த்து இடம்பெற்றிருப்பதால் இவர் சிதம்பரத்தில் இருந்த காலத்திலேயே இந்நூல்  இயற்றப்பட்டிருக்க  வேண்டுமென்று கருதப்படுகிறது.

சிதம்பரத்திலிருந்து திரும்பிய குமரகுருபரர், குரு   மாசிலாமணி தேசிகரிடம் சென்று தம்முடைய துறவியாகும் வேட்கையை மீண்டும் தெரிவித்தார். இவருடைய வேண்டுதலை ஏற்று   மாசிலாமணி தேசிகர் இவருக்கு ஞானம் உபதேசித்து துறவியாக்கினார். அதுமுதல் இவர் குமரகுருபர முனிவரென அழைக்கப்பட்டார்.. அப்பொழுது தன் குரு மாசிலாமணி தேசிகர் தொடர்பாக  "பண்டார மும்மணிக் கோவை" என்ற நூலை இயற்றினர்.

மாசிலாமணி தேசிகரிடம் விடைபெற்றுக் காசிக்குச் சென்று தம்முடைய கல்வியறிவினாலும் தவப்பண்பினாலும் டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக் கவர்ந்தார். அப் பாதுஷாவின் தாய் மொழியாகிய ஹிந்தியை விரைவில் அறிந்துகொள்ள வேண்டுமென்றெண்ணிச் "சகலகலாவல்லி மாலை" யென்னும் நூலை இயற்றிக் கலைமகளை வேண்டினார். கலைமகள் திருவருளால் அம்மொழியிலே சிறந்த அறிவு பெற்றுப் பாதுஷாவிடம் பேசிப் பழகினார்.

பாதுஷா, குமரகுருபரர்மேல் அன்பு கொண்டு இவருடைய விருப்பத்தின்படியே இவர் காசியில்  மடம் அமைப்பதற்கு கேதார கட்டத்தில் இடம் அளித்தார். (இங்கே “பாதுஷா” என்று குறிக்கப் படுபவர்  ஔரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா ஷுகோ)

கேதார கட்டத்திலுள்ள கேதாரலிங்கத்தை முகம்மதியர் மறைத்திருந்தனரென்றும் குமரகுருபர முனிவர் அம்மூர்த்தியை வெளிப்படுத்தி ஆலயத்தை கட்டி தின வழிபாட்டை நடத்தச் செய்தாரென்றும், இன்றும் ஆகம விதிப்படி தமிழ்நாட்டு முறையில் சில திருவிழாக்கள் அங்கே நிகழ்கின்றன என்றும் கருதப்படுகிறது. குமரகுருபரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர்.   இம்மடத்தின் கிளை, தமிழகத்தின் திருப்பனந்தாளிலும் அமையப்பெற்றது. இந்த மடங்கள் இன்றும் தமது தமிழ்ப்பணியினைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டு வருகின்றன.  காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் அப்போது இவரால் இயற்றப்பெற்றன. இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்தியிலும் தமிழிலும் புராணப் பிரசங்கம் செய்தார். இராம பக்தராகிய துளசிதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்தாரென்றும் கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்தியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டாரென்றும் என்றும் கூறப்படுகிறது.

நூல்கள்

  • கந்தர் கலிவெண்பா
  • மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  • மதுரைக் கலம்பகம்
  • நீதிநெறி விளக்கம்
  • திருவாரூர் நான்மணிமாலை
  • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
  • சிதம்பர மும்மணிக்கோவை
  • சிதம்பரச் செய்யுட்கோவை
  • பண்டார மும்மணிக் கோவை
  • காசிக் கலம்பகம்
  • சகலகலாவல்லி மாலை
  • மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
  • மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
  • தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
  • கயிலைக் கலம்பகம் (பிரதி கிடைக்கவில்லை)
  • காசித் துண்டி விநாயகர் பதிகம் (பிரதி கிடைக்கவில்லை)

நினைவு கூறல்

கயிலாசபுரத்தில் குமரகுருபர பிறந்த வீட்டுப் பகுதி குமரகுருபரர் மடமாக 31.08.1952-இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

2010-ஆவது ஆண்டு ஜுன் மாதம் 27-ஆம் நாள் குமரகுருபரர் நினைவாக ஒரு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது.

குமரகுருபரரைப் பாடியோர்

மறைவு

குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடம் அமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.

உசாத்துணை

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012251.htm

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கம், திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் வெளியீடு, 1965.

https://www.tamilhindu.com/2008/09/kumaraguruparar-life-history-by-uvesa/