under review

கால சுப்ரமணியம்

From Tamil Wiki
Revision as of 14:51, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
கால சுப்ரமணியம்
கால சுப்ரமணியம்

கால சுப்ரமணியம் (கா. சுப்ரமணியம்) (பிறப்பு: பிப்ரவரி 27, 1955) தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், தமிழ்ப் பேராசிரியர். கவிஞர் பிரமிளின் நூல்களைத் தொகுத்து வெளியிட்டார். அரிய நூல்கள் பலவற்றை மறுபதிப்புச் செய்தார்.

பிறப்பு, கல்வி

கால சுப்ரமணியம் ஈரோடு மாவட்டம் நகலூரில் காள நாயக்கர், மாரக்காள் இணையருக்கு பிப்ரவரி 27, 1955-ல் பிறந்தார். அந்தியூர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். கோபி கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (உயிரியல்) கல்வியும், கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலைக்கல்லூரியில் இளங்கலை (வரலாறு) பட்டமும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை (தமிழ்) பட்டம் பெற்றார். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தி.ஜானகிராமன் சிறுகதைகள் என்ற தலைப்பில் எம்.பில். பட்டமும், பிரமிள் கவிதைகள் என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

கால சுப்ரமணியம் செப்டம்பர் 6, 1984-ல் விமலாவை மணந்தார். மகள்கள் அபிதா, பவித்ரா.

ஆசிரியப்பணி

கால சுப்ரமணியம் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராகவும், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பிறகு 1998-லிருந்து உதகை, திருப்பூர், சேலம், கோவை ஆகிய அரசு கலைக்கல்லூரிகளில் துணை, இணைப் பேராசிரியர் பதவிகளில் பணியாற்றினார். 2012-ல்பணிநிறைவு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

கால சுப்ரமணியம் 1995-ல் 'மேலே சில பறவைகள்' என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். கட்டுரை நூல்கள் எழுதி, மொழியாக்கங்கள் செய்தார். முதன்மையாக, பிரமிளின் படைப்புகளின் வெளியீட்டாளராகவும் ஆய்வாளராகவும் உள்ளார். தொடர்ந்து இணைய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

இதழாசிரியர்

பிரமிள் ஆசிரியராக இருந்து கொணர்ந்த 'படிமம்' என்ற ஆண்டு மலரின் வெளியீட்டாளராக இருந்தார். 'திசைநான்கு' இதழின் ஆசிரியராகவும் 'உள்ளுறை', 'எதிர்முனை' ஆகியவற்றின் சிறப்பாசிரியராகவும் இருந்தார். 1985-ல் 'லயம்' என்ற சிறுபத்திரிக்கையைத் தொடங்கினார். இதில் பிரமிள், தேவதேவன் போன்ற கவிஞர்கள் எழுதினர். 1996 வரை பதினேழு இதழ்கள் வெளிவந்தன.

பதிப்பாளர்

பிரமிளால் தமது எழுத்துகளுக்கு முழுப் பதிப்புரிமை வழங்கப்பட்ட கால சுப்ரமணியம், பிரமிளின் மறைவுக்குப் பிறகு அவரது அனைத்து எழுத்துக்களையும் திரட்டி, நூல் தொகுதிகளாகப் பதிப்பித்தார். லயம் வெளியீடு என்ற பதிப்பகம் மூலம் பிரமிளின் நூல்களைப் பதிப்பித்தார். தேவதேவன், நோயல் போன்றோரின் புத்தகங்களும் பதிப்பிக்கப்பட்டன. தமிழின் இரண்டாவது நாவலான அ. மாதவையாவின் 'சாவித்திரி சரித்திரம்' (1892) விவேகசிந்தாமணி இதழில் தொடர்கதையாக ஆறு அத்தியாயங்கள் வரை மட்டுமே வந்து நிறுத்தப்பட்டது. மாதவையா பின்பு ‘சாவித்திரி சரித்திரம்’ என்ற அதே நாவலை 10 வருடங்கள் கழித்து “முத்துமீனாக்ஷி” (1903) என்ற தலைப்பில் பெயர்கள், இடங்கள், சில வாக்கியச் செம்மைகள் முதலிய சில திருத்தங்களை மட்டும் செய்து வெளியிட்டார். இந்த இரு கதை வடிவங்களையும் தேடி எடுத்து இணைத்து தமிழினி வெளியீடாக “முத்துமீனாட்சி (சாவித்திரி சரித்திரம்)“என்ற தலைப்பில் 2020-ல் செம்பதிப்பு நூலாகக் கொண்டுவந்துள்ளார் கால சுப்ரமணியம். மாதவையாவின் 'தில்லைக் கோவிந்தன்' நாவலையும் செம்பதிப்பாக வெளியிட்டார்.

இலக்கிய இடம்

கால சுப்ரமணியம் தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆய்வாளர், இலக்கிய வரலாற்றாசிரியர். பிரமிளின் படைப்பியக்கத்திற்கு களம் அமைத்தவர், பிரமிளின் படைப்புலகத்தை தொகுத்துப் பதிப்பிக்கும் பணியை முன்னெடுத்தவர் என்னும் நிலைகளில் முதன்மையாக அறியப்படுகிறார்.

நூல் பட்டியல்

கவிதை
  • மேலே சில பறவைகள் (2018, தமிழினி)
கட்டுரை
  • ஃபிராய்டு (மறைக்கப்பட்ட உண்மைகள்) (2019, தமிழினி)
  • நபக்கோவியா: இடமற்ற மனோவேளை (2019, தமிழினி)
மொழிபெயர்ப்பு
  • உலகம் நீதான் (You are the World) (ஜே.கிருஷ்ணமூர்த்தி, தமிழினி)
  • காலமே வெளி (அறிவியல் புனைகதைகள்) தமிழில் (தமிழினி, 2012)
  • விழிமூடிய வானம் (தமிழாக்கக்கவிதைகள்) (தமிழினி, 2018)
  • சொப்பன வாசவதத்தம் (வடமொழி நாடகம், பாஸன், தமிழினி, 2022)
  • பிரதிமை (வடமொழி நாடகம், பாஸன், தமிழினி, 2022)
  • மத்தவிலாசம் & பகவத்தஜ்ஜூகம் (வடமொழி நாடகங்கள், மகேந்திரவர்ம பல்லவன், தமிழினி, 2022)
  • மேகசந்தேசம் (சமஸ்கிருத சிறுகாவியம், காளிதாசன், உன்னதம், 2020)
பதிப்பும் தொகுப்பும்
  • மண்ணாசை, சங்கரராம் (2009, லயம்)
  • கதாசரித் சாகரம் (சமஸ்கிருத பெருங்கதைத் தொகுதி) (தமிழினி, 2019)
  • முத்துமீனாட்சி (சாவித்திரி சரித்திரம்) (தமிழினி, 2022)
  • தில்லைக்கோவிந்தன் (தமிழினி, 2022)
  • கானகத்தின் குரல் (அமெரிக்க நாவல்) (தமிழினி, 2019)
  • நித்தியவெளி (கவிதைகள்) (தமிழினி, 2021)
  • உலகம் நீதான் (ஜே.கிருஷ்ணமூர்த்தி) (தமிழினி, 2014)
தொகுத்துப் பதிப்பித்த பிரமிள் படைப்புகள்
  • வானமற்ற வெளி
  • வெயிலும் நிழலும்
  • பாதையில்லாப் பயணம்
  • லங்காபுரிராஜா
  • யாழ் கதைகள்
  • சீரீலங்காவின் தேசியத் தற்கொலை (1985)
  • தெற்குவாசல்: கடல் நடுவே ஒரு களம் பிரமிளின் இலங்கை பற்றிய கவிதை, கதை, கட்டுரை, நூல்களின் ஒட்டுமொத்தத் தொகுதி
  • காலவெளிக் கதை (அறிவியல் கட்டுரைகள்) (2008)
  • சூரியன் தகித்த நிறம் (2011 நற்றிணை பதிப்பகம்)
  • ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதையில்லாப் பயணம் (2014, தமிழினி)
  • மார்க்ஸும் மார்க்ஸீயமும் பீட்டர் வோர்ஸ்லி (2014, தமிழினி)
சிறப்புப் பதிப்பு நூல் தொகுதி
  • பிரமிள் படைப்புகள் (2018)
  • தொகுதி-1: கவிதைகள்
  • தொகுதி-2: கதைகளும் நாடகங்களும்
  • தொகுதி-3: விமர்சனங்கள்:1960-80
  • தொகுதி-4: விமர்சனங்கள் :1980-2000
  • தொகுதி-5: பேட்டிகள்-உரையாடல்கள்
  • தொகுதி-6: தமிழாக்கம்- அறிவியல் - ஆன்மீகம்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page