under review

அருணன்

From Tamil Wiki
அருணோதயம் அருணன்
பதிப்பாளர் அருணன்

அருணன், (அருணாசலம்; அருணோதயம் அருணன்; டிசம்பர் 18, 1924-செப்டம்பர் 26, 2020) தமிழின் முன்னோடிப் பதிப்பாளர்; எழுத்தாளர்; இதழாளர். 1953-ல் ‘அருணோதயம்’ என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டார். ‘தென்றல்’ இதழைத் தொடங்கி நடத்தினார். பல நூல்களை எழுதினார். தனது பதிப்பகம் மூலம் பல பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார்.

பிறப்பு, கல்வி

அருணன், தேவக்கோட்டையில், டிசம்பர் 18, 1924-ல், லெட்சுமணன் செட்டியார் - சீதை ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர்: அருணாசலம். தேவக்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

பள்ளி நண்பர் சின்ன அண்ணாமலை தலைமையில் சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். பணி தேடி சென்னைக்குச் சென்றார். மனைவி: கல்யாணி ஆச்சி. மகன்கள்: அரு. சோலையப்பன், அரு. லட்சுமணன், அரு. வெங்கடாசலம்.

இலக்கிய வாழ்க்கை

அருணன், ரூ.750/- முதலீட்டில் நண்பர் குயிலனுடன் இணைந்து ‘தென்றல்’ என்ற இதழை ஆரம்பித்தார். இதன் முதல் இதழில் சோழன் நெடுமுடிக்கிள்ளி பற்றி ‘பீலிவளை' என்ற கதையை கண்ணதாசன் எழுதினார். பொருளியல் பிரச்சனைகளால் அந்த இதழ் நின்று போனது. (பின்னர் அதே பெயரில் கண்ணதாசன் இதழ் ஆரம்பித்து நடத்தினார்) தொடர்ந்து ‘சினிமா ரசிகன்’, ‘கலை அரசு’, ‘நிழல்’, ‘தினச்செய்தி’, ‘தினசரி’, ‘தமிழ் முழக்கம்’, ‘திரைக்கலை’ போன்ற இதழ்களில் ஆசிரியராகவும், ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். ‘அருணன்’ என்ற பெயரிலேயே இதழ் ஒன்றைத் தொடங்கிச் சிலகாலம் நடத்தினார். கதை, கட்டுரை, தொடர்களைப் பல இதழ்களில் எழுதினார்.

இதழியல் வாழ்க்கை

அருணன், தனது நண்பரான சின்ன அண்ணாமலை தொடங்கிய ‘தமிழ்ப் பண்ணை’யில் சில காலம் நூலகராகப் பணியாற்றினார். பின் ‘புத்தகாலயம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டதால் அதை நிறுத்திவிட்டு, முல்லை முத்தையாவின் முல்லைப் பதிப்பகத்தில் நிர்வாகியாகப் பணியாற்றினார்.

உழைப்பே உயர்வு தரும் - அருணன் நூல்

அருணோதயம் பதிப்பகம்

கண்ணதாசனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார் அருணன். கண்ணதாசனின் எழுத்துக்களை வெளியிடவேண்டும் என்பதற்காகவே, தன் மனைவியின் பங்குப் பத்திரங்களை அடமானம் வைத்து ரூ.500 முதலீட்டில், 1953-ல், ‘அருணோதயம்’ பதிப்பகத்தைத் தொடங்கினார். கவிஞர் கண்ணதாசனின் முதல் நூலான ‘ஈழத்து ராணி’யை தன் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியிட்டார். தொடர்ந்து பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டார். ‘அருணோதயம் அருணன்’ என்று சக பதிப்பாளர்களால் அழைக்கப்பட்டார்.

நாவல்கள் மட்டுமல்லாது உலக நீதிக்கதை வரிசை, ஆத்திசூடிக் கதை வரிசை, கொன்றை வேந்தன் கதை வரிசை, வரலாற்றுக் கதை வரிசை, இராமாயணக் கதை வரிசை, மகாபாரதக் கதை வரிசை எனப் பல தமிழ் நூல்களை வெளியிட்டார். திருக்குறள், நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், குற்றாலக் குறவஞ்சி முதலிய சிறந்த தமிழ் இலக்கிய நூல்களைக் குறைந்த விலையில் மக்கள் பதிப்பாக வெளிக்கொணர்ந்தார்.

ரமணிசந்திரனின் நூலை முதன் முதலில் வெளியிட்டது அருணன் தான். அவரைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களை எழுத்துலகிற்கு அறிமுகம் செய்துள்ளார். முத்துலட்சுமி ராகவன், அருணா நந்தினி, என்.சீதாலெட்சுமி, பிரேமா, அமுதவல்லி கல்யாணசுந்தரம், பிரேமலதா பாலசுப்ரமணியம், சியாமளா கோபு, திருமதி லாவண்யா, தமிழ் நிவேதா, ராஜேஸ்வரி எனப் பலர் அருணனால் ஊக்குவிக்கப்பட்ட எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

அருணனின் மகன் அரு. வெங்கடாசலம் தற்போது அருணோதயம் பதிப்பகத்தின் நிர்வாகியாக உள்ளார்.

திரைப்படப் பங்களிப்புகள்

ஹேமா புரொக்டஷன்ஸார் தயாரித்து வெளியிட்ட 'ஹரிச்சந்திரா' திரைப்படத்திலும், கலாநிதி பிலிம்ஸ் வெளியிட்ட ‘விநாயக சதுர்த்தி’ படத்திலும் அருணன் பாடல்கள் எழுதியுள்ளார்.

விருதுகள்

  • அருந்தமிழ்ச் செம்மல் பட்டம்
  • நூல் நெறிச் செல்வர் பட்டம்
  • பதிப்பகத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டிற்காக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது'

மறைவு

அருணன், செப் 26, 2020 அன்று, தனது 96-ம் வயதில், வயது மூப்பால் காலமானார்.

நூல்கள்

  • புது வாழ்வு
  • வாழப் பிறந்தவர்கள்
  • நாட்டியக்காரி
  • இல்லற இன்பம்
  • குடும்ப நல வழிகாட்டி
  • உழைப்பே உயர்வு தரும்

மற்றும் பல.

உசாத்துணை


✅Finalised Page