first review completed

சிந்தாமணி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 12:38, 9 December 2022 by Ramya (talk | contribs)
சிந்தாமணி இதழ்: படம் நன்றி : பாலம்மாள்-முதல் பெண் இதழாசிரியர், தடாகம் வெளியீடு.

சிந்தாமணி (ஆக்ஸ்ட், 1924) பெண்கள் மாத இதழ். பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டது. இதன் ஆசிரியர் வி. பாலம்மாள்.

வி. பாலம்மாள்

பதிப்பு, வெளியீடு

சிந்தாமணி இதழ் ஆகஸ்ட், 1924-ல் தொடங்கப்பட்டது. 'விவேகாச்ரமம், ஸலிவன் ரோட், மைலாப்பூர், சென்னை' என்ற முகவரியிலிருந்து இவ்விதழ் வெளியானது. வி. பாலம்மாள் இதன் ஆசிரியர். சிந்தாமணி இதழுக்கான சந்தாத் தொகை வெவ்வேறு வகையில் நிர்ணயித்தார். 1930-க்குப் பிறகும் வெளி வந்த ‘சிந்தாமணி’ இதழ் எப்போது நின்று போனது என்பது பற்றிய தகவல் இல்லை.

சிந்தாமணி - ஏப்ரல் 1926 இதழ்

நோக்கம்

"தமிழ் நாட்டுப் பெண்மணிகளின் முன்னேற்றத்தை முக்கியமாகக் கொண்டு வெளிவரும் ஓர் உயர்தர மாதாந்தத் தமிழிப் பத்திரிகை" என்ற குறிப்புடன் சிந்தாமணி இதழ் வெளிவந்தது. "நம் தமிழ்நாட்டுச் சகோதரிகளின் அபிவிருத்தியை முக்கியக் காரணமாகவும் மற்ற விஷயங்களைப் பொதுவாகவும் உத்தேசித்து இத்தமிழ் மாதப் பத்திரிகையை வெளியிட முன்வந்திருக்கிறேன். அவசியமான சகலவிஷயங்களும் இதிலடங்கியிருக்கும் என்ற காரணம் பற்றி இதற்குச் சிந்தாமணி என்று பெயரிடலாயிற்று. சிந்தாமணியில் பெண்கல்வி, மாணவர் முன்னேற்றம், தொழிலாளர் நிலைமை, நீதிமொழிகள், சுகாதாரம், நவீனக் கதைகள், புராண ஆராய்ச்சி முதலிய பலவிஷயங்களும் வெளிவருமாகையால் தமிழ்நாட்டிலுள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் என் முயற்சியை ஆதரித்து என்னைக் கௌரவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்" என இதழின் நோக்கம் பற்றி இதழின் நோக்கம் பற்றி வி. பாலம்மாள் குறிப்பிட்டார்.

உள்ளடக்கம்

கட்டுரைகள், சிறுகதைகள்,

கட்டுரைகள்

பெண்களின் நலன், பெண் விடுதலையோடு கூடவே தேச விடுதலை, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம், பெண்கல்வியின் அவசியம், தற்காலப் பெண் கல்வியில் சீர்திருத்தம், கட்டாயக் கல்வி, எனப் பல தலைப்புகளில் சிந்தாமணியில் கட்டுரைகள் வெளியாகின. சமூக மாற்றம் என்பது பெண்களை உயர்வு செய்யும்போதுதான் உண்மையாக மலரும் என்பதை அடிப்படையாக வைத்துப் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.

சிறுகதைகள்

கட்டுரைகளோடு கூடவே சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. சிந்தாமணியில்,  பாலம்மாள், கற்பகமலர்-1, கற்பகமலர்-2, கற்பகமலர்-3 என்று தனித் தனி தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.

’பத்திராதிபர் குறிப்புகள்’ என்ற  பகுதியில் பிற இதழ்களில் வெளியான செய்திகளைச் சிந்தாமணி இதழில் வெளியிட்டு அதற்கான தனது விமர்சனக் கருத்துக்களையும் பாலம்மாள் முன் வைத்துள்ளார். இதழில் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. பிற மொழிப் படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. திருக்குறள் கருத்துக்களும் அதுபற்றிய கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.  அகலிகையின் கதை தொடராக வெளியாகியுள்ளது. பெண்களுக்கான இதழ் என்றாலும், ஆண்களின் பங்களிப்பும் இருந்திருக்கிறது. தமிழர்கள் வசித்த வெளிநாடுகளிலும் 'சிந்தாமணி’ இதழுக்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது என்பதை வாசகர் கடிதங்கள், கட்டுரைகள் காட்டுகின்றன.

பாலம்மாள் - முதல் பெண் இதழாசிரியர் நூல் முகப்புப் படம்

பங்களிப்பாளர்கள்

  • அசலாம்பிகை அம்மாள்
  • பாகீரதி அம்மாள்
  • ஸ்ரீமதி சுந்தரம்
  • மங்களா பாய்
  • ருக்மணி அம்மாள்
  • ஜயம்மாள்
  • கமலாம்பிகை
  • கே. கமலாம்பாள்
  • கோமதியப்பன்
  • ரங்கநாதாச்சாரியார்
  • எம்.சி. கிருஷ்ணசாமி
  • ஏ. சந்தனஸ்வாமி
  • வி. பதுமநாபப் பிள்ளை
  • எம்.எம்.என். அய்யர்
  • சுவாமி அற்புதானந்தர்
  • தேசிக விநாயகம் பிள்ளை

ஆவணம்

’சிந்தாமணி’ இதழ் பற்றியும் அதன் ஆசிரியரான பாலம்மாள் பற்றியும் மிக விரிவாக ஆராய்ந்து, பேராசிரியர் கோ. ரகுபதி, “பாலம்மாள் - முதல் பெண் இதழாசிரியர்” என்ற நூலைத் தொகுத்துள்ளார். தடாகம் பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டுள்ளது.

வரலாற்று இடம்

“பெண்களுக்கெனச் சிறப்பாக முழுப்பொறுப்பையும் ஏற்றுத் தென்னிந்தியப் பெண் ஒருவரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை” என சிந்தாமணி இதழ் குறித்து, பண்டிதை அசலாம்பிகை மதிப்பிடுகிறார். பெண் கல்வி, பெண் சுதந்திரம், பெண் சுகாதாரம், பெண் அரசியல் உரிமை, ஓட்டுரிமை, சொத்துரிமை போன்ற பல்வேறு உரிமைகளுக்காக விழிப்புணர்வைத் தோற்றுவித்தது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.