சிந்தாமணி (இதழ்)
சிந்தாமணி (ஆக்ஸ்ட், 1924) பெண்கள் மாத இதழ். பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டது. இதன் ஆசிரியர் வி. பாலம்மாள்.
பதிப்பு, வெளியீடு
சிந்தாமணி இதழ் ஆகஸ்ட், 1924-ல் தொடங்கப்பட்டது. 'விவேகாச்ரமம், ஸலிவன் ரோட், மைலாப்பூர், சென்னை' என்ற முகவரியிலிருந்து இவ்விதழ் வெளியானது. வி. பாலம்மாள் இதன் ஆசிரியர். சிந்தாமணி இதழுக்கான சந்தாத் தொகை வெவ்வேறு வகையில் நிர்ணயித்தார். 1930-க்குப் பிறகும் வெளி வந்த ‘சிந்தாமணி’ இதழ் எப்போது நின்று போனது என்பது பற்றிய தகவல் இல்லை.
உள்ளடக்கம்
நூலின் முகப்புப் பக்கத்தில், "தமிழ் நாட்டுப் பெண்மணிகளின் முன்னேற்றத்தை முக்கியமாகக் கொண்டு வெளிவரும் ஓர் உயர்தர மாதாந்தத் தமிழிப் பத்திரிகை" என்ற குறிப்பு காணப்படுகிறது. இதழின் ஆண்டைக் குறிக்க 'மலர்’ என்பதும், மாதத்தைக் குறிக்க 'இதழ்’ என்பதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதழின் நோக்கமாகப் பாலம்மாள், "நம் தமிழ்நாட்டுச் சகோதரிகளின் அபிவிருத்தியை முக்கியக் காரணமாகவும் மற்ற விஷயங்களைப் பொதுவாகவும் உத்தேசித்து இத்தமிழ் மாதப் பத்திரிகையை வெளியிட முன்வந்திருக்கிறேன். அவசியமான சகலவிஷயங்களும் இதிலடங்கியிருக்கும் என்ற காரணம் பற்றி இதற்குச் சிந்தாமணி என்று பெயரிடலாயிற்று. சிந்தாமணியில் பெண்கல்வி, மாணவர் முன்னேற்றம், தொழிலாளர் நிலைமை, நீதிமொழிகள், சுகாதாரம், நவீனக் கதைகள், புராண ஆராய்ச்சி முதலிய பலவிஷயங்களும் வெளிவருமாகையால் தமிழ்நாட்டிலுள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் என் முயற்சியை ஆதரித்து என்னைக் கௌரவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முழுக்க முழுக்க பெண்களின் நலன் சார்ந்து வெளியான இவ்விதழில், பெண்களுக்குக் கல்வி தேவை என்பதை வலியுறுத்திப் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பெண் விடுதலையோடு கூடவே தேச விடுதலை, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் என்பதையும் இலக்காகக் கொண்டு சிந்தாமணி செயல்பட்டது. தாய்நாடு, குடியரசு, ஜஸ்டிஸ், இந்துசாதனம், பொதுஜனமித்திரன், தாருல் இஸ்லாம், தேசோபகாரி போன்ற இதழ்கள் சிந்தாமணியை ஆதரித்தன.
பெண்கல்வி, பெண்கல்வியின் அவசியம், தற்காலப் பெண் கல்வியில் சீர்திருத்தம், கட்டாயக் கல்வியும் பெண் மக்களும், பெண் மக்களுக்கு எத்தகைய கல்வி தேவை, பெண்கல்வி அத்தியாவசியம் எனப் பல தலைப்புகளில் சிந்தாமணியில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சமூக மாற்றம் என்பது பெண்களை உயர்வு செய்யும்போதுதான் உண்மையாக மலரும் என்பதை அடிப்படையாக வைத்துப் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.
கட்டுரைகளோடு கூடவே சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. சிந்தாமணியில், பாலம்மாள், ‘அதிருஷ்டம்’,' கிண்டி குதிரைப் பந்தயம்’, ‘திருச்செந்தூர் கந்த ஷஷ்டி’, 'கற்பகத்தின் காதற் கடிதம்’, ‘தேச சேவை’, ‘உண்மைக்காதல்’, ‘திலகவதி’, ‘பரோபகாரம்’, ‘விருந்தில் விலங்கு’, ‘பணச்செருக்கு’, ‘அவள் இஷ்டம்’, ‘கல்லட்டிகை’, ‘ஒப்பந்தம்’, ‘இவர் யார்’ போன்ற சிறுகதைகளை எழுதியுள்ளார். பின் இந்தச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, 'கற்பக மலர்’ என்ற பெயரில், கற்பகமலர்-1, கற்பகமலர்-2, கற்பகமலர்-3 என்று தனித் தனி தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.
’பத்திராதிபர் குறிப்புகள்’ என்ற பகுதியில் பிற இதழ்களில் வெளியான செய்திகளைச் சிந்தாமணி இதழில் வெளியிட்டு அதற்கான தனது விமர்சனக் கருத்துக்களையும் பாலம்மாள் முன் வைத்துள்ளார். இதழில் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. பிற மொழிப் படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. திருக்குறள் கருத்துக்களும் அதுபற்றிய கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. அகலிகையின் கதை தொடராக வெளியாகியுள்ளது. பெண்களுக்கான இதழ் என்றாலும், ஆண்களின் பங்களிப்பும் இருந்திருக்கிறது. தமிழர்கள் வசித்த வெளிநாடுகளிலும் 'சிந்தாமணி’ இதழுக்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது என்பதை வாசகர் கடிதங்கள், கட்டுரைகள் காட்டுகின்றன.
பங்களிப்பாளர்கள்
- பாகீரதி அம்மாள்
- ஸ்ரீமதி சுந்தரம்
- மங்களா பாய்
- ருக்மணி அம்மாள்
- ஜயம்மாள்
- கமலாம்பிகை
- கே. கமலாம்பாள்
- கோமதியப்பன்
- ரங்கநாதாச்சாரியார்
- எம்.சி. கிருஷ்ணசாமி
- ஏ. சந்தனஸ்வாமி
- வி. பதுமநாபப் பிள்ளை
- எம்.எம்.என். அய்யர்
- சுவாமி அற்புதானந்தர்
- தேசிக விநாயகம் பிள்ளை
மற்றும் பலர்
ஆவணம்
’சிந்தாமணி’ இதழ் பற்றியும் அதன் ஆசிரியரான பாலம்மாள் பற்றியும் மிக விரிவாக ஆராய்ந்து, பேராசிரியர் கோ. ரகுபதி, “பாலம்மாள் - முதல் பெண் இதழாசிரியர்” என்ற நூலைத் தொகுத்துள்ளார். தடாகம் பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டுள்ளது.
வரலாற்று இடம்
“பெண்களுக்கெனச் சிறப்பாக முழுப்பொறுப்பையும் ஏற்றுத் தென்னிந்தியப் பெண் ஒருவரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை” என்பது சிந்தாமணி இதழ் குறித்து, பண்டிதை அசலாம்பிகையின் கருத்து. பெண் கல்வி, பெண் சுதந்திரம், பெண் சுகாதாரம், பெண் அரசியல் உரிமை, ஓட்டுரிமை, சொத்துரிமை பற்றி தீவிரமாகப் பேசிய இதழ் சிந்தாமணி. தமிழில் வெளியாகியிருக்கும் பெண்களுக்கான இதழிகளில் சிந்தாமணிக்கு மிக முக்கிய இடம் உண்டு.
உசாத்துணை
- பாலம்மாள் - முதல் பெண் இதழாசிரியர், தொகுப்பாசிரியர் கோ. ரகுபதி, தடாகம் வெளியீடு
- மகளிர் இதழ்கள்: தமிழ் இணைய நூலகம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.