ராஜேஸ்வரி கோதண்டம்
ராஜேஸ்வரி கோதண்டம் (இராஜேஸ்வரி கோதண்டம்) (பிறப்பு: மார்ச் 22, 1948) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். பொது வாசிப்புக்குரிய நூல்களையும், சிறார்களுக்கான நூல்களையும் எழுதினார். தெலுங்கு, இந்தி மொழிகளிலிருந்து தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்தார். தமிழக அரசின் ஜி.யு. போப் விருது பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜேஸ்வரி கோதண்டம், மார்ச் 22, 1948 அன்று பிறந்தார். முதுகலைப் பட்டம் பெற்றார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்து வருகிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். தமிழ், மலையாளம். இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், கன்னடம் எனப் பன்மொழிப் புலமை கொண்டவர். கணவர் கொ.மா. கோதண்டம், மகன்கள் கொ.மா.கோ. இளங்கோ, கொ.மா.கோ. குறளமுதன் ஆகியோரும் எழுத்தாளர்கள்.
இலக்கிய வாழ்க்கை
ராஜேஸ்வரி கோதண்டம் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு, சிறார் படைப்பு, பொது வாசிப்புக்குரிய படைப்புகள் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தெலுங்கு மற்றும் இந்தியிலிருந்து சில நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்தார். சாகித்ய அகாதெமிக்காக தெலுங்கில் இருந்து 'கற்சிலைகள்' நூலை மொழிபெயர்த்தார். பி. கணபதி சாஸ்திரி தெலுங்கில் எழுதி, ஆந்திர அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ராமானுஜர் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை 'கருணை விழிகள்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார்.
அமைப்புச் செயல்பாடுகள்
ராஜேஸ்வரி கோதண்டம் சிறார் இலக்கிய வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்பட்டார். மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி போன்ற வானொலி நிலையங்களுக்குச் சிறார்களை அழைத்துச் சென்று அவர்களைக் கொண்டு பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார். ராஜபாளையத்தில் நடந்த பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகளில் பங்கு பெற்றார்.
பொறுப்பு
- ராஜேஸ்வரி கோதாண்டம் வாசுகி மாதர் சங்கம், மணிமேகலை மன்றம், கோகுலம் சிறுவர் சங்கம், அழ.வள்ளியப்பா மணிமலர் மன்றம், திருக்குறள் சிறார் பயிற்சிக் கழகம் போன்ற அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
- மணிமேகலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்.
- தமிழ்நாடு கலை இலக்கிய மன்றச் செயற்குழு உறுப்பினர்.
விருதுகள்
- மொழிபெயர்ப்புக்காக நல்லி திசையெட்டும் விருது - 2011
- தியாகத்துருகம் பாரதியார் தமிழ்ச்சங்க விருது
- திருவள்ளுவர் விருது
- நெய்வேலி புத்தகக் கண்காட்சி விருது
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அளித்த 'அரிமா சக்தி விருது'
- கிழக்கு வாசல் உதயம் இதழ் அளித்த 'சாதனைச் சிகரம்' விருது
- குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக்கழக விருது
- தொ.மு.சி. ரகுநாதன் நினைவு விருது
- இலக்கியச்செல்வி பட்டம்
- பன்மொழிச் செல்வி பட்டம்
- இலக்கிய சாதனைச் சிகரம் பட்டம்
- சாதனைச் செம்மல் பட்டம்
- தமிழக அரசின் ஜி.யு. போப் விருது - 2017
மதிப்பீடு
ராஜேஸ்வரி கோதண்டம் தெலுங்கு இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர். சிறார்களுக்காகவும் பல நூல்களை எழுதினார். குறிப்பிடத்தகுந்த தெலுங்கு இலக்கிய நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவராக அறியப்படுகிறார். கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
சிறார் நூல்கள்
- பெரியோர் வாழ்வில் அரிய நல்கதைகள்
- இறையருளாளர் கதைகள்
- ஞானம் வழங்கும் ஆன்மிகக் கதைகள்
- மகிழ்ச்சியூட்டும் பீர்பல் கதைகள்
- அம்மு உனக்காக
- சிறுவர்களுக்கு காமராஜர்
- அம்முவுக்கு
- சாதனைப் பெண்கள்
- அம்மு நதியோடு நாமும்
மொழிபெயர்ப்பு நூல்கள்
- 'தியாகதீபம்' அல்லூரி சீதாரமராஜூ
- வேமனா பாடல்கள்
- மசூதிப் புறா
- மைனா
- அக்னி - தெலுங்குச் சிறுகதைகள்
- காட்டுக்குள்ளே மான்குட்டி
- பேம்பி
- சாம்பைய்யா
- அப்பாவின் கடிதம்
- அபிஷேகம்
- கருணை விழிகள்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-May-2026, 11:30:11 IST