under review

லக்ஷ்மி சரவணகுமார்

From Tamil Wiki
Revision as of 21:16, 17 April 2026 by SakthivelS (talk | contribs) (→‎நாவல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Lakshmi Saravanakumar. ‎


லக்ஷ்மி சரவணகுமார்

லக்ஷ்மி சரவணகுமார் (ராஜா சரவணகுமார்) (பிறப்பு: மே 22, 1985) தமிழில் சிறுகதைகளையும், நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதி வரும் எழுத்தாளர். திரைத்துறையில் உதவி இயக்குநராக, வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார். விளிம்புநிலை மனிதர்கள் சார்ந்த, பாலியல் சார்ந்த அதன் பின்னணியிலிருக்கும் குரூரங்களையும், வன்முறைகளையும் எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

லக்ஷ்மி சரவணகுமார் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் லக்ஷ்மிக்கு மகனாக ஜூலை 23, 1985-ல் பிறந்தார். ஒரே மகன். தந்தை கொலைக்குற்றத்திற்காகச் சிறைக்குச் செல்ல நேர்ந்தமையால் பெற்றோரின் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்தார். பத்து வயது வரை அனாதை இல்லத்தில் வளர்ந்தார். அதன்பின் பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கல்வி தொடரவில்லை.

தனி வாழ்க்கை

லக்ஷ்மி சரவணகுமார் நவம்பர் 2, 2014-ல் கார்கியை மணந்தார். கல்கி இதழில் துணையாசிரியராக பணியாற்றினார். திரையுலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்.

இலக்கியவாழ்க்கை

லக்ஷ்மி சரவணக்குமார் தன் பதினேழாவது வயது முதல் தீக்கதிர், செம்மலர் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார். "எழுத்தின் நிழலில் தான் ஆறுதலாக இளைப்பாற முடிந்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்வு ஒருபோதும் என்னை கசப்புகளிலிருந்து விடுவிக்காது என்றாலும் இன்னும் சில காலங்களுக்கு இந்த வாழ்வைப் பற்றிக்கொள்ள எனக்கு இலக்கியம் போதுமானது" என்று தன் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடுகிறார்.

ஆதர்ச எழுத்தாளர்களாக ரமேஷ் - ப்ரேம் இணையர், கோணங்கி, ஜெயமோகன், தஸ்தயேவ்ஸ்கி, மார்க்வெஸ், ஆல்பர்ட் காம்யூ ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

சிறுகதைகள்

லக்ஷ்மி சரவணக்குமாரின் முதல் சிறுகதை "எஸ்.திருநாவுக்கரசுக்கு 25 வயதான பொழுது" புதிய காற்று இதழில் 2007 நவம்பர் மாதத்தில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுதி "நீலநதி" உயிர்மை பதிப்பகத்தின் வழியாக 2009-ல் வெளியானது. 'யாக்கை', 'முதல் கதை', 'போர்க்குதிரை', 'வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவை', 'மச்சம்', 'மஹ்ராஜின் மைதானம்' ஆகியவை இவரின் பிற சிறுகதைத் தொகுப்புகள். 2007முதல் 2017 வரை எழுதப்பட்ட லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு "லக்ஷ்மி சரவணக்குமார் கதைகள்" எனும் பெயரில் எழுத்து பிரசுரம் வெளியீடாக வந்தது.

நாவல்

லக்ஷ்மி சரவணக்குமாரின் முதல் நாவல் "உப்புநாய்கள்" டிஸ்கவரி புக் பேலஸ் வழியாக 2016-ல் வெளியானது. தொடர்ந்து தென்தமிழகத்தின் வேட்டைப்பின்னணி கொண்ட கானகன்; கம்போடிய உள்நாட்டுக்கலவரப் பின்னணி கொண்ட கொமோரா; பாலியல் தொழிலாளர் பெண் ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லும் 'நீலப்படம்'; இஸ்லாமிய அழகியல் சாயல்கொண்ட 'ரூஹ்' போன்ற நாவல்களை எழுதினார். மதுரையின் பெருநகர் குற்றப்பின்னணியை சித்தரிக்கும் 'இரண்டாவது ஆட்டம்' ஜூனியர் விகடனில் தொடராக வந்த நாவல்.

திரைவாழ்க்கை

லக்ஷ்மி சரவணக்குமார் 'மயான காண்டம்' என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். 2015-ல் கென்யாவில் நடைபெற்ற 'ஸ்லம் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' (Slum film festival)-ல் இந்த குறும்படம் திரையிடப்பட்டது. அரவான், காவியத்தலைவன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநர். பொன்மகள் வந்தாள், நதி, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் வசனகர்த்தாவாக பங்களிப்பாற்றினார்.

விருது

  • 'உப்பு நாய்கள்' என்ற நாவலுக்காக சுஜாதா நினைவு விருது - 2012
  • சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருது (கானகன் நாவலுக்காக) - 2016

இலக்கிய இடம்

பாலியல் சார்ந்த, அதன் பின்னணியிலிருக்கும் குரூரரங்களையும், வன்முறைகளையும் எழுதி வருபவர். இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான பதிவுகளையே தன் நாவலில் எழுதியிருக்கும் இவர், சமூகத்தில் விளிம்புநிலை வாழ்க்கை வாழ்வோரின் கசப்பான பக்கங்களைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.

நூல் பட்டியல்

நாவல்கள்
  • கானகன் (2019, எழுத்து பிரசுரம்)
  • வாக்குமூலம்
  • ஐரிஸ்
  • கொமோரா (2021, எழுத்து பிரசுரம்)
  • ரெண்டாம் ஆட்டம் (2022, விகடன் பிரசுரம்)
  • வேட்டை (2023, எழுத்து பிரசுரம்)
  • உப்புநாய்கள் (2024, எழுத்து பிரசுரம்)
  • பன்றிவேட்டை (2025, எழுத்து பிரசுரம்)
  • ரூஹ் (2025, எழுத்து பிரசுரம்)
  • நீலப்படம் (2026, டிஸ்கவரி புக் பேலஸ்)
சிறுகதை தொகுப்புகள்
  • நீல நதி
  • யாக்கை
  • போர்க்குதிரை (2020, எழுத்து பிரசுரம்)
  • முதல் கதை (2021, எழுத்து பிரசுரம்)
  • வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவை
  • மச்சம்
  • மஹ்ராஜின் மைதானம்
  • மயானகாண்டம் (2024, உயிர்மை பதிப்பகம்)
  • லக்ஷ்மி சரவணக்குமார் கதைகள் (2007-2017) (எழுத்து பிரசுரம்) (தொகுப்பு)
கவிதைத் தொகுப்பு
  • மோக்லியை தொலைத்த சிறுத்தை (2014)
கட்டுரை
  • சொற்களைத் தவிர வேறு துணையில்லை (2019, கலக்கல் ட்ரீம்ஸ்)
  • தனித்திருத்தலின் ருசி (2020)
  • இவர்கள் (2023, மோக்லி பதிப்பகம்)
  • இந்தியச் சிறுகதைகள் ஓர் அறிமுகம் (2025, எழுத்து பிரசுரம்)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு
  • Huntsman (by Aswini Kumar - Zero Degree Publishing)

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:21 IST