மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கணக்காயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஐந்து பாடல்களில் புறநானூறில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றும் அகநானூறிலும் மூன்றும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
மதுரைக் கணக்காயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் மதுரையை சேர்ந்தவர். நக்கீரரின் தந்தை. கணக்காயனார் என்றால் கற்பிப்பவர் என்று பொருள். ஆகவே இவர் மதுரையில் ஆசிரியப் பணியில் இருந்தவர் என்று கருதப்படுகிறார். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் இவரை கணக்காயனார் என்று மட்டுமே குறிப்பிடுகிறார். ஆனால் எஸ். வையாபுரிப் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் இருவரும் மதுரைக் கணக்காயனார் என்று குறிப்பிடுகிறார்கள்.
இலக்கிய வாழ்க்கை
மதுரைக் கணக்காயனார் பாடிய ஐந்து பாடல்கள் புறநானூறில் 330 - ம் பாடலாகவும் நற்றிணையில் 23 - ம் பாடலாகவும் அகநானூறில் 27, 338 மற்றும் 342 - ம் எண் கொண்ட பாடல்களாக இடம்பெற்றுள்ளன. புறநானூறு 330 - ம் பாடலில் சிற்றரசன் ஒருவனின் வீரத்தையும் கொடைத்திறத்தையும் ஆட்சி சிறப்பையும் வாகைத் திணையில் மூதின் முல்லை துறையில் அமைத்து கூறியுள்ளார். நற்றுணை 23 - ம் பாடல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவியின் துயர் நிலை கண்டு தோழி தலைவியின் துயரை தலைவனுக்கு உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. அகநானூறு 27 - ம் பாடல் தலைவனின் பிரிவை நினைத்து வருந்தும் தலைவிக்கு தோழி கூறுவதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது. அகநானூறு 338 மற்றும் 342 - ம் பாடல்கள் தலைவியை நினைத்து ஏங்கும் தலைவனின் உள்ள நிலையை புலப்படுத்துவனவாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளன. இவ்விரண்டு சோழ, பாண்டிய மன்னர்களின் நாட்டு வளங்கள் தலைவிக்கு இணையாக ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளன.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
புறநானூறு
- பகைவர் படை முன்னேறி வந்து தாக்குகையில் அஞ்சாமல் தனி ஒருவனாக எதிரியினரை அஞ்சாது போரிட்டு முன் செல்வதை பெருவீரனுக்கு உண்டான பண்பாக கருதியிருக்கிறார்கள். இச்செயல் கடலை தடுத்து நிறுத்து நிலத்தின் கரையை போன்றதாக உவமிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த மன்னர்கள் தம்மை நாடி வந்த இரவலர்க்கு இல்லையெனாது பரிசில் வழங்குவர். வரி செலுத்தும் திறனில்லாத நாட்டையும் தம் நிர்வாக வல்லமையால் சிறப்புள்ளதாக்குவர். இச்செயல் எதிரி படையினரை எதிர்த்த பெருவீரனின் செயலுக்கு ஒப்பானதாக உவமிக்கப்பட்டது.
நற்றிணை
- மகளின் காதலுறவு தெரிந்த அன்னையர் மகளை வீட்டுக்காவலில் வைத்து கண்காணிப்பர்.
- காதலரை பிரிந்த இளம்மகளிரின் உடல் துயரத்தால் மெலியும். அவர்தம் கைவளையும் தோள்வளையும் நழுவும். உடனிருக்கும் தோழியர் தலைவியுடன் விளையாடி அவளை தேற்ற முனைவர்.
- உவமை: காதலனுக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் இளம் பெண்ணின் கண்ணீர் நிறைந்த கண்கள் கொற்கை துறைமுகத்து நெய்தல் மலருக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது.
அகநானூறு
- பசும்பூண் பாண்டியன் பொதிய மலையை ஆண்டவன். அவனது நாட்டுப்பரப்பு குன்றுகள் நிறைந்த வளம் மிக்க பகுதி. பாண்டியன் அறமல்லாதோரை வீழ்த்தி நல்லாட்சி நடத்தும் உயர்பண்பு மிக்கவன்.
- பொறையன் காடு நிறைந்த கொல்லிமலையை ஆண்டவன். பகைவர்கள் பாழாகும்படி கடுந்தாக்குதல் தொடுக்கும் வேல்படையை கொண்டவன். கொல்லிமலை மக்கள் நட்பு மிக்கவர்கள்.
- சோழன் காவிரியாறு கடலில் கலக்கும் பட்டினப்பாக்கத்தை ஆண்டவன். பகைவரின் தூதை விரும்பாதவன். கன்றுபோட்ட பசுவினங்களை இளைஞர் கூட்டத்தோடு சென்று மீட்டுவரும் தலைவன்.
- தென்னன் கவுரியர் நாட்டை ஆட்சி செய்தான். அவன் பசுக்கூட்டங்களை கவர்ந்து வரும் கள்வர் தொழில் செய்யும் மறவர்களின் தலைவன். அவர்களை எதிர்த்து வந்தோர் இரக்கமின்றி கொல்லப்படுவர். உயிர் துறந்தோர் பிணங்கள் பருந்துகளுக்கு உணவாகும். தென்னன் மழைமேகம் போல் இரவலருக்கு கொடையளிக்கும் வள்ளல்.
- உவமைகள்: தலைவியின் வெண்ணிற பற்களின் புன்னகை யானை தந்தத்தின் நிறத்திற்கும் கொற்கை துறைமுகத்து முத்துகளின் ஒளிக்கும் நிகரானது. அவளது கண்கள் குவளை மலர் போன்றவை. கண்ணில் இருந்து வெளிப்படும் பார்வை போர்க்களத்தில் பாயும் குருதிப்படிந்த வேல் போன்றது. அவளது உடல் மணம் பொதிய மலையில் பூக்கும் காந்தள் மலரின் வாசம் கொண்டது. தலைவனும் தலைவிக்குமான நட்பு கொல்லிமலையின் மக்களின் நட்புக்கு இணையானது. இருவரும் இணை சேர்ந்திருப்பது காவிரி கடலில் கலப்பதை ஒத்தது. தலைவியை அடைய முடியாத தலைவனின் நிலை தென்னனின் மலை மேல் வாழும் வரையர மகளிரை அணுக முடியாமைக்கு ஒப்பாகும்.
பாடல் நடை
புறநானூறு - 330
- திணை: வாகை
- துறை: மூதின் முல்லை
வேந்துடைத் தானை முனை கெட நெரிதர,
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி,
தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு
ஆழி அனையன்மாதோ என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மையோனே.
நற்றிணை - 23
- திணை: குறிஞ்சி
- கூற்று: தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.
தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே;
வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின்,
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய,
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே!
அகநானூறு - 342
- திணை: குறிஞ்சி
- கூற்று: அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
ஏவல் இளையர் தலைவன், மேவார்
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையர மகளிரின் அரியள்,
அவ் வரி அல்குல் அணையாக்காலே!
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 5:தமிழ் பல்கலைகழகம்
- புறநானூறு - 330:puram400
- நற்றிணை - 23:Tamilvu
- அகநானூறு - 27:Tamilvu
- அகநானூறு - 338:Tamilvu
- அகநானூறு - 342:Tamilvu
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.