under review

ஆ.ப. சுவாமிநாத சர்மா

From Tamil Wiki
Revision as of 05:04, 5 January 2026 by Jeyamohan (talk | contribs) (→‎மதிப்பீடு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆ.ப. சுவாமிநாத சர்மா

ஆ.ப. சுவாமிநாத சர்மா (ஆ.ப. சாமிநாத சர்மா; சர்மா; சாமா; ஏ.பி.எஸ். சர்மா. ஏ.பி.எஸ், ஆவுடையார் கோயில் பஞ்சாபகேசன் சுவாமிநாத சர்மா) (செப்டம்பர் 04, 1900 - ஜூலை 19, 1973) தமிழ்ப்புலவர். கணிதவியல் அறிஞர். நூற்றுக்கணக்கான சித்திரக்கவிகளை இயற்றினார். சிற்றிலக்கிய நூல்களை எழுதினார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 'மதுரவரகவி' பட்டம் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ஆ.ப. சுவாமிநாத சர்மா, செப்டம்பர் 04, 1900-ம் அன்று, புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலை அடுத்துள்ள குடிக்காட்டில், பஞ்சாபகேச சர்மா - தர்மாம்பாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள், ராமச்சந்திரன், பாலசுப்ரமணியன், ஆத்மநாதன் ஆகியோர். சுவாமிநாத சர்மா, எட்டாம் வகுப்பு வரை ஆவுடையார் கோயிலில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஆசிரியருக்கான பயிற்சிக் கல்வியை நிறைவு செய்தார்.

கோகிலாம்பாள் - ஆ.ப. சுவாமிநாத சர்மா

தனி வாழ்க்கை

ஆ.ப.சுவாமிநாத சர்மா, ஜூலை 07, 1922 முதல் புதுக்கோட்டையில் உள்ள சாரதாப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து திருமயம் - பெருந்துறை, கீரனூர் - நாங்குபட்டி, மூக்கன்பட்டி போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் கண்டவராயம்பட்டி ஸ்ரீ பணிச்சாருடையார் தருமகலாசாலையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாபட்டு ஸ்ரீ சரஸ்வதி கலாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

1925-ம் ஆண்டில், சுவாமிநாத சர்மா, கோட்டையூர் திருக்குறள் சுப்ரமணிய ஐயரின் மகளான கோகிலாம்பாளை மணந்தார். இவர்களுக்கு பி.எஸ். வெங்கட்ராமன், பி.எஸ். பாலசுப்பிரமணியன் என இரு மகன்கள். பி.எஸ். தேவகுஞ்சரி, பி.எஸ். ஜெயலட்சுமி என இரு மகள்கள். ஆ.ப. சுவாமிநாத சர்மாவின் மகனான பி.எஸ். பாலசுப்பிரமணியன் எழுத்தாளர், கவிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மருமகள் ஆனந்தி மணியனும் எழுத்தாளர். பேரன்களில் கி. நடராஜன் (தேவகி மைந்தன்), அரவிந்த் சுவாமிநாதன் (பா.சு. ரமணன்), பா. சங்கர் மூவரும் எழுத்துத் துறையில் உள்ளனர்.

ஆ.ப. சுவாமிநாத சர்மா முதல் நூல்
ஆ.ப. சுவாமிநாத சர்மா இரண்டாவது நூல்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

சுவாமிநாத சர்மா, இளம் வயதிலேயே, தந்தையின் சேகரிப்பில் இருந்த பழைய ஓலைச்சுவடிகள் மூலம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். புதுக்கோட்டை ஆசான் மதுரகவி பு.க. ஆறுமுகம் பிள்ளையிடமிருந்து இலக்கண நுணுக்கங்களைக் கற்றார். சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றும், கவி வகைகளில் மிகக் கடினமானதுமான 'சித்திரக்கவி'யை பழுதறக் கற்றறிந்தார். ஆசுகவியாகத் தமிழ் பாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றார்.

சுவாமிநாத சர்மா, 1923-ம் ஆண்டில், தமது 23-ம் வயதில் தம் குல தெய்வமான சுவாமிமலை முருகன் மீது பாடல்கள் புனைந்து, அதை 'சுவாமிநாதன் தோத்திரக் கொத்து' என்னும் பெயரில் வெளியிட்டார். அதுதான் அச்சில் வெளியான சுவாமிநாத சர்மாவின் முதல் நூல்.

ஆ.ப. சுவாமிநாத சர்மா சித்திரக் கவிகள்
சித்திரக்கவிகள்

ஆ.ப. சுவாமிநாத சர்மா, சான்றோர்கள், அறிஞர்களுக்கான பல வரவேற்புப் பாடல்களையும், சித்திரக்கவிகளையும் எழுதினார். நா. கனகராஜய்யர், காஞ்சி மடாதிபதிகள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட பலரை வரவேற்றுச் சித்திரக்கவிகள் எழுதினார். முரசு பந்தம், மயூர பந்தம், நாக பந்தம், அட்ட நாக பந்தம், கூடச் சதுக்க பந்தம், ரத பந்தம், கமல பந்தம், புட்ப பந்தம், வேல் பந்தம், மயில் பந்தம், சேவல் பந்தம் என்று பல நூற்றுக்கணக்கான சித்திரக்கவிகளை இயற்றினார். தனது கவிகளுக்காக அக்காலத் தமிழறிஞர் நா. கனகராஜையரின் பாராட்டைப் பெற்றார்.

சுவாமிநாத சர்மா, பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் புதிய நூல்களைப் படைப்பதில் ஈடுபட்டார். கவிதை இலக்கியம் மட்டுமல்லாது கணிதம், ஜோதிடம், கதை, நாவல்கள் எழுதுவதில் ஈடுபட்டார். கணிதச் சூத்திரங்கள், விதிகள், காலக் கணக்குகள் பற்றி ஆய்வு செய்து சர்மா எழுதிய 'கணக்கியல்' எனும் நூல் குறிப்பிடத்தக்கது. கால ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். கம்பன் பிறந்த நாள், மறைந்த நாள், அவன் சமாதி இருக்கும் இடம், அம்பிகாபதி-அமராவதி சமாதிகள் இருக்கும் இடம் பற்றிய குறிப்புகள் இவரது கையேட்டில் உள்ளன.

சிங்கப்பூரில் வாழ்ந்த சித்திரக் கவிஞர் இக்குவனம், சர்மாவிடம் சித்திரக் கவிகள் பற்றிப் பயின்றவர்களுள் ஒருவர்.

ஆ.ப. சுவாமிநாத சர்மா நூல் கைப்பிரதிகள்
நூல்கள்

சுவாமிநாத சர்மா, 1935-ல், கண்டவராயம்பட்டி ஸ்ரீ பணிச்சாருடையார் தருமகலாசாலையில் பணியாற்றும்போது, அப்பள்ளியில் உள்ள விநாயகர் மீது 'வரத கணேச தோத்திரப் பாமாலை' என்னும் நூலை இயற்றினார். இலங்கை ராபர்ட் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டு அந்நூல் வெளியானது. 'குன்றை மும்மணிக்கோவை', 'மயூர கிரி உலா', 'மால் அரன் மாலை மாற்று மாலை' உள்ளிட்ட பல சிற்றிலக்கிய நூல்களை எழுதினார். நங்கைபுரம் வித்வான் ந.து வேங்கடராமையர், புதுக்கோட்டை மதுரகவி பு.க. ஆறுமுகம் பிள்ளை உள்ளிட்ட பலர் சர்மாவின் இலக்கிய நூல்களுக்குச் சாற்றுக் கவி வழங்கினர்.

அமைப்புச் செயல்பாடுகள்

ஆ.ப. சுவாமிநாத சர்மா, கண்டவராயன்பட்டி-பணிச்சாருடையவர் தருமகலாசாலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும்போது கல்விப் பணியோடு இலக்கியப் பணிகளையும் முன்னெடுத்தார். பல இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினார். கோனாபட்டு சரஸ்வதி கலாசாலையில் பணியாற்றும்போதும் சக ஆசிரியர்களுடன் இணைந்து பல இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

ஆ.ப. சுவாமிநாத சர்மா சதுர்நாக பந்த இலக்கணக் குறிப்பு
நூலகம்

ஆ.ப. சுவாமிநாத சர்மா, நூல் சேகரிப்பாளராக இருந்தார். இலக்கியம், நாவல், ஜோதிடம், மாந்த்ரீகம், தத்துவம், சமயம் சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். பணியின் காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ வேண்டியிருந்த காரணத்தாலும், நூல்களைச் சரியாகப் பராமரிக்க முடியாததாலும் பல நூல்களை கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியாரிடம் கையளித்தார். எஞ்சிய நூல்களில் சில அவரது வாரிசுகளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நாடகம்

நடிகர் பி.யூ.சின்னப்பாவின் தந்தை உலகநாதன் பிள்ளை, சுவாமிநாத சர்மாவின் நெருங்கிய நண்பர். அவருடன் இணைந்து நாடகங்களுக்குச் செல்வதையும், நாடகங்களுக்கு பாடல்கள் எழுதித் தரும் பணியையும் சுவாமிநாத சர்மா சில காலம் மேற்கொண்டிருந்தார். குடும்பச் சூழல்களால் நாடகங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார்.

காஞ்சி மடாதிபதி மீதான ஆ.ப. சுவாமிநாத சர்மாவின் சித்திரக்கவிகள்

ஆன்மிகம்

ஆ.ப. சுவாமிநாத சர்மாவின் தந்தை பஞ்சாபகேசன் முருக பக்தர். 'குடிக்காட்டு குகானந்தர்' என்று போற்றப்பட்டார். சுவாமிநாத சர்மாவும் இளமை முதலே முருகன் மீதும், அம்பாள் மீதும் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். முருகன், அம்பாள், சிவன் உட்பட பல தெய்வங்கள் மீது ஐந்நூற்றிற்கும் மேற்பட்ட சித்திரக் கவிகளை எழுதினார்.

காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி, இளையாற்றங்குடிக்கு வந்து தங்கியிருந்தபோது, 06-08-1961 அன்று நடந்த சதஸ்ஸில் கலந்து கொண்ட சுவாமிநாத சர்மா, மடாதிபதி மீது பல பாடல்கள், சித்திரக் கவிகள் புனைந்து அவரது பாராட்டையும், ஆசியையும் பெற்றார்.

ஆ.ப. சுவாமிநாத சர்மா சக ஆசிரியர்களுடன்

விருதுகள்

ஆ.ப. சுவாமிநாத சர்மா, சந்தக் கவிகள் பாடுவதில் மிகவும் வல்லவராக இருந்ததால், புலவர் குழுவினரால் 'சந்தச் சரபச் சித்திரப் பாவல ஆசான்' என்று பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டார்.

'புதுக்கோட்டை சமஸ்தானப் புலவர் மன்றம்', 'மதுரவரகவி' பட்டம் அளித்துச் சிறப்பித்தது.

மறைவு

1970-ல் பார்வைக்குறைவு ஏற்பட்டு முற்றிலும் பார்வை இழந்த ஆ.ப. சுவாமிநாத சர்மா, ஜூலை 19, 1973 அன்று காலமானார்.

மதிப்பீடு

தமிழ் இலக்கியப் பணிகளை தமது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, புகழின் வெளிச்சம் சிறிதும் விரும்பாமல் வாழ்ந்து மறைந்தோர் பலர். அவர்களுள் ஒருவராக ஆ.ப. சுவாமிநாத சர்மா அறியப்படுகிறார். இறைவன் மீதான துதிகளை, நூற்றுக்கணக்கான சித்திரக் கவிகளை இயற்றியவராகவும், மரபுசார்ந்த இலக்கியப் படைப்பாளி ஆகவும் ஆ.ப. சுவாமிநாத சர்மா மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • சுவாமிநாதன் தோத்திரக் கொத்து
  • வரத கணேச தோத்திரப் பாமாலை
  • துதிப்பாசுரத் தொகை
  • குன்றை மும்மணிக்கோவை
  • மயூர கிரி உலா
  • திருவேரகன் பதிகம்
  • மால் அரன் மாலை மாற்று மாலை
  • புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் துதிப்பாசுரத் தொகை
  • கல்லம்பட்டி முத்து மாரியம்மன் துதிப்பாசுரத் தொகை
  • தேனிமலை முருகன் துதிப்பாசுரத் தொகை
  • தேனிமலை முருகன் தோத்திரப் பாமாலை
  • சித்திரப்பாக் கோவை
  • மயூரகிரி மும்மணி மாலை
  • முருகன் மாலை மாற்று மாலை
  • கணக்கியல்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2025, 08:02:19 IST