under review

வி. இக்குவனம்

From Tamil Wiki
கவிஞர் இக்குவனம்
வி. இக்குவனம் (இளமைப் படம்)

வி. இக்குவனம் (அக்டோபர் 18, 1923-செப்டம்பர் 5, 2013) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழகத்திலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் வாழ்ந்தார். பல நூற்றுக்கணக்கான சித்திரக்கவிகளை எழுதினார். ‘வெண்பாச் சிற்பி’ என்று போற்றப்பட்டார். தனது கவிதை நூல்களுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

வி. இக்குவனம், அக்டோபர் 18, 1923 அன்று, சிவகங்கை மாவட்டத்திலுள்ள பட்டமங்கலத்தில், பஞ்சநதம் - பார்வதி இணையருக்குப் பிறந்தார். பொன்னுசாமிப் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அரிச்சுவடி பயின்றார். பட்டமங்கலம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்தார். கண்டரமாணிக்கம் உயர்நிலைப்பள்ளி, திருப்புத்தூர் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உயர்நிலைக் கல்வி கற்றார். தமிழிலும், ஆங்கிலத்திலும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயின்று தேர்ச்சி பெற்றார். கணக்கியல் மற்றும் மனிதவள ஆற்றல் மதிப்பீட்டுப் பயிற்சி பெற்றார்.

கவிஞர் வி. இக்குவனம்

தனி வாழ்க்கை

வி. இக்குவனம், 1941 முதல் 1943 வரை பட்டமங்கலத்தில் திண்ணைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1946 முதல் 1948 வரை இலங்கையில், கொழும்பு ஏ.வி.ஆர்.ஏ (AVRA) நிறுவனத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். 1951 வரை சென்னையில் டிரால் (Dralle) நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார். 1952-ல் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்தார். நடராஜன் சுவாமிநாதன் நிறுவனத்தில் கணக்குத் தணிக்கையாளராகப் பணியாற்றினார். சிங்கப்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்தியப் பகுதியில் சுருக்கெழுத்தாளராகப் பணிபுரிந்தார்.

பல்கலைக்கழகம் கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டதால் இக்குவனம் கோலாலம்பூரில் சில ஆண்டுகள் பணியாற்றினார். மலாயா பல்கலைக்கழக நூல் நிலையத்தின் தமிழ்ப் பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தார். 1975-ல் பணி ஓய்வு பெற்று சிங்கப்பூர் திரும்பினார். இதழாளராகச் சில ஆண்டுகாலம் பணிபுரிந்தார். மணமானவர். பிள்ளைகள்: இரண்டு மகன், ஒரு மகள்.

இதழியல் வாழ்க்கை

வி. இக்குவனம், தமிழ் முரசு இதழின் ஆசிரியராக மே 1976 முதல் மார்ச் 1978 வரை பணியாற்றினார். தமிழ் மலர் ஆசிரியராக ஜூன் 1979 வரை பணிபுரிந்தார்.

அன்ன பந்தம் - ( நன்றி: வி. இக்குவனத்தின் சித்திரச் செய்யுள் நூல்)
ரத பந்தம் - ( நன்றி: வி. இக்குவனத்தின் சித்திரச் செய்யுள் நூல்)

இலக்கிய வாழ்க்கை

இளம் வயது முதலே கவிதைகளில் ஆர்வம் கொண்டிருந்தார் இக்குவனம். மரபுக் கவிதைகளில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்தார். 1952 முதல் இதழ்களுக்கு எழுதத் தொடங்கினார். இவரது கவிதைகள் தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர் ஆகிய இதழ்களில் வெளிவந்தன. வெண்பா, சித்திரக் கவி என கவிதையின் பல்வேறு வகைகளில் எழுதினார். புதிய புதிய சித்திரங்களில், பல்வேறு வடிவ முயற்சிகளில் சித்திரக் கவிகளை எழுதினார். பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். ’காரம் இனித்திடுமே காண்’ என்பதை ஈற்றடியாகக் கொண்டு இவர் எழுதிய 108 கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டார். பல நூல்களை எழுதி வெளியிட்டார். அவற்றில் நூற்றுக்கணக்கான சித்திரக்கவிகளைக் கொண்ட ‘சித்திரச் செய்யுள்’ நூல், முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பொறுப்புகள்

  • மலாயாப் பல்கலைக்கழகப் பொதுத்துறை ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர்
  • மலாயா பிராமணர் சங்கச் செயலாளர்
  • மலேசிய வானொலி/தொலைக்காட்சி – செய்தி மொழிபெயர்ப்பாளர்/செய்தி வாசிப்பாளர்
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக அமைப்புச் செயலாளர்/பொருளாளர்
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக வாழ்நாள் உறுப்பினர், ஆலோசகர்
  • சிங்கப்பூர் இந்து சங்க வாழ்நாள் உறுப்பினர்
  • ஜூரோங் அருள்மிகு முருகன் ஆலயம் வாழ்நாள் உறுப்பினர்
  • சிங்கப்பூர் ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத் துணைத் தலைவர்
  • சிங்கப்பூர் இந்து சபை துணைத் தலைவர்

விருதுகள்

  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய தமிழவேள் விருது
  • மலேசியா தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் வழங்கிய தங்கப்பதக்கம்
  • இலங்கைத் தமிழ் எழுத்தாளர் கழகம் அளித்த தகுதிச் சான்றிதழ்
  • கவிமாலை வழங்கிய கணையாழி விருது
  • சிங்கப்பூர் நுண்கலைக் கழகம் வழங்கிய கலாரத்னா விருது
  • பேரறிஞர் அண்ணா விருது
  • பாரதி விருது
  • பாரதிதாசன் விருது
  • அருட்கவிச் செல்வர் பட்டம்
  • வெண்பாச் சிற்பி பட்டம்
  • வெண்பா வேந்தன் பட்டம்
  • சித்திரக் கவிஞர் பட்டம்
  • சித்திரப்பாவலர் பட்டம்
  • அந்தாதி அரசன்பட்டம்
  • அந்தாதி காவலர் பட்டம்

மறைவு

வி. இக்குவனம், செப்டம்பர் 5, 2013 அன்று, தனது 90-ம் வயதில் சிங்கப்பூரில் காலமானார்.

இலக்கிய இடம்

வி. இக்குவனம், சொல் பலிதம் உள்ள கவிஞராக அறியப்பட்டார். வெண்பாப் பாடுவதில் தேர்ந்தவராக இருந்தார். ஆசு கவியாகப் பல கவிதைகள் இயற்றினார். ஆன்மிகவாதியாக இருந்தாலும் நாத்திகச்சிந்தனை கொண்ட ஈ.வெ. ராமசாமி, மு. கருணாநிதி, கி. வீரமணி, வைரமுத்து உள்ளிட்டோரைப் போற்றி கவிதை நூல்களை இயற்றினார்.

கவிஞர் வைரமுத்து, இக்குவனத்தின் கவிதைகள் பற்றி,

”இக்குவனம் தந்திருக்கும் ஈற்றடிகள் எல்லாமே
பக்குவங்கள் தேனின் பலாச்சுளைகள் - சொக்கித்
தளைதட்டிப் போகாத தங்கவெண் பாவிங்கு
களைகட்டு கின்றதே காண்”

- என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வி. இக்குவனம் செய்யுள் நூல்கள்

நூல்கள்

கவிதை நூல்கள்
  • திருமுறை அந்தாதி-1
  • திருமுறை அந்தாதி-2
  • திருமுறை அந்தாதி-3
  • நாமகள் அந்தாதி
  • அன்னையைப் போற்றும் அருந்தமிழ் ஆயிரம் (வடமொழி லலிதா சஹஸ்ரநாம தமிழ்த் தழுவல்)
  • ஆறுமுகன் போற்றி ஆயிரம்
  • ஐங்கரன் போற்றி அருந்தமிழ் ஆயிரம்
  • வேதமும் வேள்வியும் அந்தாதி
  • ஸ்ரீ ருத்ர காளியம்மன் அந்தாதி
  • ஸ்ரீ அழகு செளந்தரி அந்தாதி
  • கவிதைக் கனிகள்
  • கவிதைக் கதம்பம்
  • இராஜீவ் இரங்கல் அந்தாதி
  • வாரியார் இரங்கல் அந்தாதி
  • பைந்தமிழ்த் தேனீ பத்மஸ்ரீ வாலி அந்தாதி
  • தமிழ் நெஞ்சர் என்.ஆர். கோவிந்தன் அந்தாதி
  • வாழும் கவியரசு வைரமுத்து
  • பெரியார் அந்தாதி
  • வீரமணி அந்தாதி
  • இன்பநலக் காடு
  • சித்திரப் பாக்கொத்து
  • சித்திரச் செய்யுள்
  • வெண்பாவில் சிலேடைகள் 108
  • காரம் இனித்திடுமே காண்- ஈற்றடி வெண்பாக்கள்
வி. இக்குவனம் நூல்கள்
கட்டுரை நூல்
  • நான் கண்ட இங்கிலாந்து நாடு
மொழிபெயர்ப்பு நூல்
  • நச்சுக்கண்
ஒலி நாடா
  • வேங்கடவன் பள்ளியெழும் பா

உசாத்துணை


✅Finalised Page