பனம்பாரனார்
பனம்பாரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பனம்பாரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பானம்பாரனாரும் இவரும் வேறானவர்களா அல்லது ஒருவரா என்று அறிய இயலவில்லை.
இலக்கிய வாழ்க்கை
பனம்பாரனார் பாடிய பாடல்கள் குறுந்தொகையில் 52 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியின் காதலை அறிந்த அன்னை அவளை இல்லச்சிறையில் வைத்தும் மலைக்கடவுளின் பூசைக்கும் அழைத்து செல்கிறாள். தலைவியின் மன விருப்பத்தை அவளது அன்னைக்கு உணர்த்திய தோழியால் தலைவனுக்கும் தலைவிக்கும் மணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இம்மகிழ்ச்சிக்குரிய செய்தியை தலைவியிடம் தோழி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- காதல் கொண்டு தனித்திருக்கும் மகளிரை மனம் தெளிவிக்க மலையில் யானையின் பாதங்கள் அழுந்தி உருவான நீர்ச்சுனை பக்கத்தில் இருக்கும் சூர் என்னும் தெய்வத்தின் முன் நிறுத்தி வழிபாடு செய்வார்கள். அதனை கண்டு மகளிர் பயந்து நடுங்குவர்.
- உவமை: தலைவியின் கூந்தல் நரந்தம் பூவின் மணம் கொண்டது என சிறப்பித்து கூறப்பட்டது.
பாடல் நடை
குறுந்தொகை - 52
- திணை: குறிஞ்சி
- கூற்று: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது.
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- குறுந்தொகை - 52:nallakurunthokai
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.