under review

விஷ்ணு சாஹராஜ விலாசம்

From Tamil Wiki
Revision as of 18:33, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
விலாசம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: விலாசம் (பெயர் பட்டியல்)
Vishnu Saharaja Vilasam.jpg

விஷ்ணு சாஹராஜ விலாசம் தஞ்சையில் மராட்டியர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட நாடக நூல்.

பார்க்க: மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

பதிப்பு

இந்நூல் ‘ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்கள்’ என்ற பெயரில் சரஸ்வதி மகால் வெளியீடாக வந்த நூலில் ‘விஷ்ணு சாஹராஜ விலாசம்’ எனும் பெயரில் அச்சாகியுள்ளது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

காலம்

இந்நூல் தஞ்சையை ஆண்ட சாகேஜி மன்னனை பாட்டுடைத்தலைவனாக வைத்து அமைந்ததால் இந்நூலின் காலம் 17-ம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சாகேஜி மன்னரின் காலம் பொ.யு. 1684 - 1712.

நூல் அமைப்பு

திருவீழிமிழலையில் கோவில் கொண்டுள்ள சிவனை திருமால் ஆயிரம் மலர்களால் தினமும் பூஜை செய்தார். ஒரு நாள் பூஜையில் ஒரு மலர் குறைந்தது கண்ட திருமால் தனது விழியை ஒரு மலராக எடுத்து பூஜை செய்தார். இதனை கண்ட சிவன் திருமாலை தஞ்சை சாகேஜி மன்னராகப் பிறந்து அங்குள்ள தலங்கள் அனைத்தையும் வழிபட்டு வருமாறு வாழ்த்தினார். திருமால் சாகேஜி மன்னராகப் பிறந்தார். கலிங்கராஜாவின் மகள்களாக திருமகளும், மண்மகளும் பிறந்து சாகேஜியை மணந்து தஞ்சையில் வாழ்ந்ததாக நூல் பாடுகிறது.

கதை மாந்தர்கள்

  • சூத்திரதாரன்: நாடகத்தை அறிமுகம் செய்து விளக்கம் கொடுப்பவன்.
  • கட்டியக்காரன்: நாடகத்தைத் தொடங்கி வைப்பவன்
  • மகாவிஷ்ணு
  • திருவீழநாத மகாலிங்க சுவாமி: சிவன்
  • சாகேஜி மன்னன்
  • கலிங்க நாட்டு அரசன், அவன் இரு புதல்விகள் (சாகேஜி மன்னரால் மணக்கப்பட்டவர்கள்)
  • சாரசாக்ஷி: கலிங்க மன்னரின் மனைவி
  • திரிகால ஞானி: சாகேஜி மன்னனைப் பற்றி கலிங்க அரசனுக்கு விவரம் சொல்பவர்
  • சின்னப்பண்டாரம்: திரிகால ஞானியின் சீடன்
  • சகி: கலிங்க இளவரசிகளின் தோழி

நிகழ்விடம்

  • கதை நிகழும் இடம்: தஞ்சை, திருவீழமிழலை.
  • நாடகம் நிகழ்ந்த இடம்: சாகேஜி மன்னரின் நாட்டிய சாலை

புராணக் குறிப்புகள்

விஷ்ணு சாஹராஜ விலாசம் நூலில் திருமால் கண்ணை மலராகப் படைக்கும் நிகழ்வு பெரியபுராணத்திலுள்ள கண்ணப்ப நாயனார் கதையோடு ஒத்துள்ளது. மேலும் நூலில் சிவன் சிறுத்தொண்ட நாயனாரின் இல்லத்தில் பிள்ளைக்கறியை உண்டது, சுந்தரருக்காக பரவையார்க்குத் தூது சென்றது முதலான புராணச் செய்திகள் இடம்பெற்றுள்ளன்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2023, 11:29:56 IST