under review

ந. ஜயபாஸ்கரன்

From Tamil Wiki
Revision as of 13:52, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்)
ந. ஜயபாஸ்கரன்

ந. ஜயபாஸ்கரன் (பிறப்பு: மார்ச் 16, 1947) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். தமிழ் இலக்கிய, புராணங்களின் தொடர்ச்சியைத் தனது கவிதைகளில் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

ஜயபாஸ்கரன் மதுரையில் ப.ரா நடராஜன், ருக்மணி இணையருக்கு மார்ச் 16, 1947-ல் பிறந்தார். எம்.ஏ.(தமிழ்) மதுரை தியாகராஜா கல்லூரியில் பயின்றார். எம்.ஏ. (ஆங்கிலம்) அறிஞர் எஸ்.ராமகிருஷ்ணன் இவருடைய ஆசிரியராக இருந்தார். அவரிடமிருந்து எமிலி டிக்கன்ஸன் பற்றிய அறிமுகத்தை அடைந்ததாகவும் அது தன் கவிதைக்கான தொடக்கமாக அமைந்ததாகவும் சொல்கிறார்.

தனி வாழ்க்கை

ஜயபாஸ்கரன் 2020 வரை பித்தளை, வெண்கலப் பாத்திர வியாபாரம் செய்தார். ஜூலை 14, 1975-ல் மங்களம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மகன்கள் பிரபு, ராகேஷ் நடராஜ். மகள் வைஷ்ணவி.

இலக்கிய வாழ்க்கை

1967-ல் ஜயபாஸ்கரனின் முதல் கவிதையான 'மெளனம்’ எழுத்து இதழில் வெளியானது. ’அர்த்தநாரி’ முதல் கவிதைத் தொகுப்பு. எமிலி டிக்கின்சன், ஜி.எம். ஹாப்கின்ஸ், கு.ப.ரா, லா.ச.ரா, கு. அழகிரிசாமி, நகுலன், சுந்தர ராமசாமி, ஆர். ஷண்முகசுந்தரம், அசோகமித்திரன் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலக் கவிதைகளில் பரிச்சயம் கொண்டவர்.

மரபை நவீனக்கவிதைகளுடன் இணைக்கும் புள்ளிகள் கொண்டவை ஜயபாஸ்கரன் கவிதைகள். மரபை ஒரு தனிமனிதனாக நின்று எதிர்கொள்பவை. ’மரபும் மரபு மீறலும் இங்கே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மரபைச் சுமையாகத் தூக்கிக்கொண்டு திரியாமல் அதன் சாரத்தை மட்டும் செரித்துக்கொண்டு பயணப்பட்டால் நீண்ட கவிதைப் பயணம் சாத்தியமாகக்கூடும்’ என தன் அழகியல் பற்றிச் சொல்கிறார்.

இலக்கிய இடம்

ந.ஜயபாஸ்கரனின் கவிதைகள் தனிமனிதன் அக அலைக்கழிவுகள் என தோன்றினாலும் தனிமனிதன் என்னும் சிறுதுளிக்குள் காலம், வெளி, கலாச்சாரம், வரலாறு ஆகியவை திகழ்வதையும் அலைகொள்வதையும் சித்தரிப்பவை. மிகக்குறைவாக எழுதியவர் என்றாலும் தமிழ்க்கவிதையில் மிக அரிய சில கவிதைகளை எழுதியவர் என மதிப்பிடப்படுகிறார்.

"இவரின் கவிதைகள் சமய இலக்கியங்கள், புராணங்களின் நினைவுகளை அழுத்தமாகக் கொண்டவை எனவும், அன்பின் நிராகரிப்பு, நிராசையின் வலி உணர்வு இவரின் கவிதைகளின் பாடுபொருளாக உள்ளது" என கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதைத்தொகுப்பு
  • அர்த்தநாரி (1987)
  • அவன் (1989)
  • அவள் (1999)
  • சிறுவழி வியாபாரியின் ஒரு வழிப்பயணம் (2013)
  • பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் (2018)
  • அறுந்த காதின் தனிமை (2021)
  • சாய்மான வெளிச்சம் - மொழிபெயர்ப்பு கவிதை - (2022)
  • இல்லாத இன்னொரு பயணம் (2023)

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Aug-2023, 20:13:02 IST