first review completed

திருவிசைப்பா

From Tamil Wiki
Revision as of 08:56, 29 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )

திருவிசைப்பா சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெரும் இரு நூல்களுல் ஒன்று மற்றொன்று திருப்பல்லாண்டு. ஒன்பது புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவிசைப்பா. முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.

ஆசிரியர்கள்

திருவிசைப்பா திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் என ஒன்பது புலவர்கள் பாடிய பதிகங்களின் தொகுப்பு.

நூல் அமைப்பு

திருவிசைப்பாவில் உள்ள 29 பதிகங்களில் 16 தில்லை அம்பலத்தை(சிதம்பரம்) பாடியவை. மற்ற 13 பதிகங்கள் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோளேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் ஆகிய 13 தலங்களுக்கு தலத்துக்கு ஒரு பதிகமாக அமைந்துள்ளன. 6 பண்களில் இவ்விசைப்பாடல்கள் அமைந்துள்ளன.

ஆசிரியர் பாடப்பட்ட தலங்கள் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை
திருமாளிகைத்தேவர் தில்லை 4 (1-45 )
சேந்தனார் திருவீழிமிழலை,திருவாவடுதுறை,திருவிடைக்கழி 3 (46-79)
கருவூர்த்தேவர் திருக்களந்தை, திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோழபுரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை, திருவிடைமருதூர் 10 (80-182)
பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவாரூர், தில்லை 2 (183-194)
கண்டராதித்தர் தில்லை 1 (195-204)
வேணாட்டடிகள் தில்லை 1 (205-214)
திருவாலி அமுதனார் தில்லை 4 (215-256)
புருடோத்தம நம்பி தில்லை 2 (257-278)
சேதிராயர் தில்லை 1 (279-288)

சிறப்புகள்

திருவிசைப்பா முழுவதும் இசைப்பாடல்களால் ஆனது. தேவாரத்தைப் போன்று இதற்கும் பண் வகுக்கப்பட்டுள்ளது. தேவாரப் பதிகங்களுள் காணப்படாத சாளரபாணி என்ற பண் திருவிசைப்பாவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல் பெறாத கங்கை கொண்ட சோழபுரம், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைக்கழி ஆகிய எட்டுத்தலங்கள் திருவிசைப்பா ஆசிரியர்களால் பாடப்பெற்றுள்ளன. சேந்தனார் பாடிய திருவிடைக்கழிப் பதிகம் முருகன் மீது பாடப்பட்டுள்ளது. பஞ்சமம் என்ற பண்ணில் அமைந்த இப்பதிகத்தில் பதினொரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்பதாம் திருமுறையில் இப்பதிகம் இணைக்கப் பெற்றமை, பின் வந்த பதினொராம் திருமுறையுள் விநாயகர் மற்றும் சிவன் அடியார்கள் மீது பாடப்பட்ட பாடல்களும், பனுவல்களும் இணைக்கப்படுவதற்கு வழிகோலியதாகக் கருதப்படுகிறது.

பாடல் நடை

திருமாளிகைத் தேவர்

இடர்கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள்
  இருட்பிழம்பு அறஎறிந்து எழுந்த
சுடரமணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
  தூயநற்சோதியுள்சோதீ!
அடல்விடைப் பாகா! அம்பலக் கூத்தா!
  அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின்றாயைத்
  தொண்டனேன் பணியுமா பணியே. 2

சேந்தனார்

மாலுலா மனம்தந்து என்கையில் சங்கம்
    வௌவினான் மலைமகள் மதலை
சேல்உலாம் தேவர்குலம் முழுது ஆளும்
    குமரவேள் வள்ளி தன் மணாளன்
சேல்உலாம் கழனித் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழல்கீழ் நின்ற
வேல்உலாம் தடக்கை வேந்தன் என்சேந்தன்
    என்னும் என் மெல்லியல் இவளே

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.