first review completed

மானக்கஞ்சாற நாயனார்

From Tamil Wiki
Revision as of 01:12, 17 August 2023 by Tamizhkalai (talk | contribs)
மானக்கஞ்சாற நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

மானக்கஞ்சாற நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சோழ நாட்டில் உள்ள கஞ்சாறூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் மானக்கஞ்சாறர். வழிவழியாக அரசருக்குச் சேனை நாயகராக விளங்கும் குடும்பத்தில் தோன்றியவர். சிவனடியார்கள் கேளாமலேயே அவர்கள் தம் உள்ளத்தில் நினைப்பதை உணர்ந்து குறிப்பறிந்து கொடுக்கும் தன்மை மிக்கவர். அவருக்கு சிவனுடைய திருவருளினால் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பெற்றோர் அதனை அன்புடன் வளர்த்து வந்தனர்.

தொன்மம்/சிவனின் ஆடல்

பெண் வளர்ந்து திருமணப்பருவம் எய்தினார். சான்றோர்களும் முதியவர்களுமான சிலர் மானக்கஞ்சாற நாயனார் இல்லம் வந்து, ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு அப்பெண்ணைத் திருமணம் செய்து தருமாறு கேட்டனர். மானக்கஞ்சாறரும் மகிழ்வுடன் ஒப்புக் கொண்டார்.

குறித்த முகூர்த்த நாளில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் கஞ்சாறூருக்கு வந்தார். ஆனால், அவர் வருவதற்கு முன்பாக, முனிவர் உருவத்தில், சிவபெருமான் மானக்கஞ்சாற நாயனாரின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். மானக்கஞ்சாறர், முனிவரை அன்புடன் வரவேற்று தக்க ஆசனம் அளித்து வணங்கினார்.

முனிவர் உருவில் இருந்த சிவபெருமான், ஏதுமறியாதவர் போல், மானக்கஞ்சாற நாயனாரிடம், “இங்கே என்ன மங்கலச் செயல் நடக்க இருக்கின்றது?” என்று கேட்டார்.

தனது பெண்ணின் திருமண நிகழ்ச்சி பற்றிச் சொன்னார் மானக்கஞ்சாறர். முனிவரும் வாழ்த்தினார்.

மனம் மகிழ்ந்த மானக்கஞ்சாறர், திருமணக்கோலம் பூண்டிருந்த தன் மகளை அழைத்து வந்து முனிவரை வணங்கச் செய்தார். மகளும் வணங்கினாள். அடர்ந்து வளர்ந்திருந்த அவளது கூந்தலைப் பார்த்த முனிவர், “இது நமது பஞ்சவடிக்கு ஆகும்” என்றார். (பஞ்சவடி என்பது தவமுனிவர்கள் தம் மார்பில் அணிவதற்காக, தலைமுடியினால் அகலமாகப் பின்னப்பட்டு, பூணூலைப் போன்று தரிக்கப்படும் ஒருவகைக் கயிறு)

முனிவர் சொன்னதைக் கேட்ட மானக்கஞ்சாற நாயனார், “இவர் இது கேட்டதற்குச் சிறியேன் என்ன புண்ணியம் செய்தேனோ” என்று எண்ணியவராய் இல்லத்தின் உள்ளே சென்றார். வாளை எடுத்து வந்து மகளின் கூந்தலை அரிந்து முனிவரின் கையில் கொடுத்தார். முனிவரும் அதை வாங்குவார் போல் வாங்கி உடன் காணாமல் போனார்.

மானக்கஞ்சாறர் திகைத்து நிற்கும் வேளையில், வானில், இடப வாகனத்தில், பார்வதி தேவியுடன் சிவபெருமான் காட்சி அளித்தார். மானக்கஞ்சாற நாயனார், இறைவனை இரு கரம் கூப்பித் தொழுதார். உடனே சிவபெருமான், “அன்பனே, உமது மெய்யன்பை உலகெல்லாம் விளங்கச் செய்யவே இவ்வாறு வந்தோம்” என்று சொல்லி அருள் செய்து மறைந்தார்.

அப்போது இல்லத்தில் நுழைந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார் நடந்த நிகழ்வுகளை அறிந்தார். “ஆகா அந்த அற்புதக் காட்சியைக் காண நான் இங்கு இல்லாமல் போனேனே!” என்று மனம் தளர்ந்தார். இறைவன் மங்கலமாகச் சொன்ன அருள் வார்த்தைகளை மற்றவர்களிடமிருந்து கேட்டறிந்து மகிழ்வுற்றார்.

சிவபெருமானின் அருளால் மணப்பெண்ணின் கூந்தல் முன்புபோல் வளர்ந்தது. ஏயர்கோன் கலிக்காம நாயனார், அம்மங்கையை மணம் செய்து கொண்டு, தம் ஊரை அடைந்து, சிவத்தொண்டுகள் புரிந்து வாழ்ந்தார்.

மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறனுக்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

மானக்கஞ்சாற நாயனாரின் சிவத் தொண்டு

மாறு இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம்
ஆறு உலவும் சடைக் கற்றை அந்தணர் தம் அடியாராம்
ஈறு இல் பெருந்திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர்
கூறுவதன்முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார்

மானக்கஞ்சாற நாயனாரின் மகளுக்கு ஏயர்கோன் கலிக்காம நாயனருடன் திருமண நிச்சயம் செய்தல்

சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்பக்
குன்று அனைய புயத்து ஏயர் கோனாரும் மிக விரும்பி
நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார்

மானக்கஞ்சாற நாயனாரின் இல்லத்திற்கு சிவபிரான் முனிவர் வடிவில் வந்தது

வள்ளலார் மணம் அவ் ஊர் மருங்கு அணையா முன் மலர்க்கண்
ஒள் இழையைப் பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே
தெள்ளுதிரை நீர் உலகம் உய்வதற்கு மற்று அவர்தம்
உள்ள நிலைப் பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார்.

சிவ முனிவர் மானக்கஞ்சாற நாயனாரது மகளின் திருமுடியைக் கேட்டது

தம் சரணத்து இடைப் பணிந்து தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன்
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர்க் கூந்தல் புறம் நோக்கி
அஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து `அணங்கு இவள் தன் மயிர் நமக்குப்
பஞ்ச வடிக்கு ஆம்' என்றார் பரவ அடித் தலம் கொடுப்பார்

மானக்கஞ்சாற நாயனாரின் செயலும் சிவனின் அருளும்

அருள் செய்த மொழி கேளா அடல் சுரிகைதனை உருவிப்
பொருள் செய்தாம் எனப் பெற்றேன் எனக் கொண்டு, பூங்கொடி தன்
இருள் செய்த கரும் கூந்தல் அடியில் அரிந்து எதிர் நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர்க் கரத்தின் இடை நீட்ட
வாங்குவார் போல் நின்ற மறைப் பொருளாம் அவர் மறைந்து
பாங்கின் மலை வல்லியுடன் பழைய மழவிடை யேறி
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலம் நெருங்கத்
தூங்கிய பொன் மலர் மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார்

குரு பூஜை

மானக்கஞ்சாற நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், மார்கழி மாதம், சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.